Monday 31 December 2012

2013 புத்தாண்டு வாழ்த்துகள். . .

2012ல் சிறப்பு பெற்ற சில...

 நமது பதிவுகளில் இடம்பெற்ற பல புகைப்படங்களில் இருந்து சிறப்பு பெற்ற சில என தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே பார்க்கலாம்...








இன்னும் வரும்...
 

புத்தாண்டு பிறக்கிறது. . .

ஒவ்வொரு ஆண்டினையும்  போல இவ்வருடமும் நடக்கவிருக்கும் அனைத்தும் நன்மையாகவே இருக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்.

முடிகின்ற ஆண்டின் தொடக்கம் சற்று மந்தமாகவே இருந்தது. இரண்டாவது மாதத்தில் எனது இனிய நண்பரின் மரணம் பெரிய சோகத்தைத் தந்தாலும், தொடர்ந்து வந்த மாதங்களில் நிலைமை சீர் படத் தொடங்கிவிட்டது. ஆனாலும், நோயின் அறிகுறிகள் ஏதுமின்றி அவர் திடீரென மறைந்தது நம் வாழ்வு நிலையற்ற ஒன்று என மீண்டும் நிரூபித்திருக்கிறது.

புது வருடம் நம் எல்லோரையும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவுகலத்தின் பயணத்தை தொடர்வோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் இங்கு விஜயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இது ஜாலியாக பொழுது போக்கும் இடம். பிரசினைகளில் இருந்து விடுபடும் இடம். அப்படித்தான் நான் இதை துவங்கினேன்.

ஸ்ட்ரெஸ், டென்ஷன்  என்பதில் இருந்து விடுபட  பதிவுகள் எழுதத் தொடங்கினேன். மற்றவர்களுக்காக அல்ல, எனக்கு நானே எழுதிக்கொண்டவை.  எடுக்கும் புகைப்படங்களை பத்திரப்படுத்தும் ஒரு ஆல்பமாக இது முன்பு இருந்தது.

வந்து சேர்ந்த நண்பர்கள் விரும்பிக் கேட்டதினால் என் மனதில் தோன்றியதையும் அவ்வப்போது பதிவில் சேர்த்துக்கொண்டேன். குறையும் நிறையும் நண்பர்களிடம் இருந்து வர வர மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது ஏதொ ஒரு வழியாக சில பாராட்டுக்களும் வரத் தொடங்கி இருக்கின்றன. ஆயினும் ஒன்றை இங்கு சொல்ல விரும்புகிறேன். இது அறிவுரை களம் அல்ல. என் மனதில் தோன்றுவதை சொல்கிறேன், அவ்வளவுதான்.

இரட்டை வேட படங்கள் எடுப்பது எப்படியென மின்னஞ்சல் வழி கற்றுக் கொண்டவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், புதுப் புது கோணங்கள் தெரிய வரும். நீங்கள் முப்பது நிமிடங்களில் கற்றுக்கொள்ளும் இது, முப்பது வருடங்களாக நான் மெள்ள மெள்ள   செய்து பழகியதாகும். "அப்பியாச வித்தைக்கு அழிவில்லை" என்பார்கள். எனவே, தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருப்பது நல்லது.

புளொக்ஸ்பொட் பதிவுகளை தொடங்குவது மிக எளிது. தமிழில் எழுதுவது கூடத்தான். ஆனால், சட்டத்துக்குட்பட்டு இருப்பது நலம். " டோன்ட் கோ டு
  பெட் வித் ப்ரைஸ் ஒன் யுர் ஹெட்" என்று சும்மாவா சொன்னார்கள்...? அறை குறையாக கற்பனை செய்துவிட்டு பதிவுலகில் காலெடுத்து வைத்தால் கல்லடிக்கு பதில் சொல்லடி வந்து விழும் என்பதை நினைவில் கொள்ளவும். 

எனவே சில மணி நேரங்களை செலவிட்டு மற்றவர்களின் பதிவுகளை படியுங்கள். ஒரு அடிப்படை 'கான்செப்ட்' உங்களுக்கு தெரியவரும். உங்கள் பாணியில் பின்பு நீங்களே ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதத் தொடங்குங்கள்.
பொதுவாக அமைதியான சூழ் நிலைகளிலேயே நாம் பதிவுகள் எழுதுவதால், மனமும் அதற்கேற்றார்போல் அமைதியாகிவிடும்.  அப்புறம் என்ன.... வெற்றி நிச்சயம் உங்களை ஆதரித்து அணைத்துக் கொள்ளும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2012ல் மறக்க முடியாதவை. . .

அருமை நண்பரின் இழப்பு.. . .


 1978ல் இருந்து எங்களின் நட்பு தொடர்ந்து வந்ததென்றாலும், கடந்த பத்தாண்டுகளாக தினமும் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் இருவரும் எதையாவது கலந்து பேசிக்கொண்டிருப்போம்.  கம்ப்யூட்டர் சம்பந்தமான விசயங்களைத் தெரிந்து கொள்வதில் ரொம்பவும் ஆர்வம் காட்டினார். அந்த ஆர்வமிகுதியால் தனியே வலைப்பூ ஒன்றும் தொடங்கி எழுதி வந்தார்.

இலக்கியத்தில் அதுவும் இதிகாசத்தில் அவருக்கு சந்தேகங்கள் அதிகம். ஒவ்வொரு நாளும் எதையாவது கேட்டுக்கொண்டோ அல்லது அவர் காதில் விழுந்தவைகளை விவாதித்துக்கொண்டோ இருப்பார். ராம பிரானும் ராவணனும் அவர்கள் முன் பிறவிப் பயனாகவே ராமாயனத்தில் தோன்றினர் என்றார் ஒரு நாள். அடுத்தனாள், உறவுகள் பாசத்தால் பிணைக்கப் பட்டிருக்கின்றன. பசம் போயின் இவ்வுலகுக்கு வந்த பலன் கிட்டும் என்று சொல்லி ஆச்சரியப் பட வைத்தார். இதுபோல அவர் சொன்ன இன்னும் எவ்வளவோ நுணுக்கமான விசயங்கள் அவருடன் நெருக்கமாகப் பழகியோருக்குத் தெரியும்.


 பல இடங்களுக்கும் ஒன்றாகவே சென்று வந்தோம். பசியைத் தாங்கமாட்டார். எல்லா வகை உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவார். உணவுகளில் பிடிக்காதது குறைவு. உணவைப்போலவே, அவருக்கு நண்பர்கள் ஏராளம். முன் பின் அறிமுகமில்லாதவர்களிடமும் கலகலப்பாக பேசி அவர்களின் நட்பை சம்பாதிக்கும் குணம் இவரிடம் இருந்தது. முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பு.

"அதெப்படி செல்வம்? எப்படி உங்களால என்ன நடந்தாலும் இப்படி முகத்தை வச்சிக்க முடியுது? " என ஒரு நாள் வினவினேன்.

 " அட, எல்லாம் உன்னிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் ..." எனச் சொல்லி சிரித்தார்.



ஓய்வு நேரங்களில் சினிமாவிற்கு செல்வதை வழக்கத்தில் கொண்டிருந்தோம். பொதுவாக ஆங்கில படங்களுக்கு புதன் கிழமைகளில் செல்வோம். அவரிடமிருந்த பிளாஸ்டிக் அட்டைக்கு  ஒரு விலையில் இரு டிக்கட்டுகள் கிடைக்கும். அப்படி பல படங்கள் பார்த்திருக்கிறோம். ஒரு நாள், வேறு யாரும் இல்லாததனால், எங்கள் இருவருக்காகவே ஒரு ஆங்கிலப் படம் திரையிடப்பட்டது. அந்த நாளை நினைவில் நிறுத்த நான் அவரையும், அவர் என்னையும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலிருப்பது அதில் ஒன்று.



ஆபத்து அவசரங்களின் போது ஓடோடி வந்து உதவுவதில் அவருக்கு நிகர் அவரேதான். அப்படி அவருடைய உதவிகளைப் பெற்றோர் ஆயிரத்துக்கும் அதிகமானோர். சில நேரங்களில் அவரிடமிருந்து அழைப்பு வரும், " நீ ரெடியா இரு. நாம ஒரு இடத்துக்கு போறோம்... ". இதன் பொருள், யாருக்கோ உதவி தேவைப் படுகிறது, போகும் போது என்னையும் அழைத்துப் போகிறார் என்பதே.


மின்சாரம், இலெக்ட்ரோனிக், தண்ணீர் பம்புகள், வாகன பழுதுகள் இன்னும் இது போன்ற பலவற்றிலும் இவர் சிறந்தவராக மின்னினார். மற்ற சமூக பிரசினைகளுக்கு என்னிடம் கலந்து கொள்வார். உண்மையில் இவர் பல திறமைகளை தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு
தமிழ்  'மெகாய்வர்' என்பது போலத்தான் இருந்தார். " ஒன்று முடியாவிட்டால் இன்னொன்றை செய்துபார். அதுவும் முடியவில்லை என்றால் அடுத்ததுக்குப் போ..." என்பது அவருடைய கொள்கை. 


இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் அவர் அரசியல் கட்சியொன்றில் சேர எண்ணம் கொண்டிருந்தார். எவ்வளவு தடுத்தும் அவர் அதை மற்றவர்களுக்கு செய்யும் சேவை என திடமாக கூறி ஒரு கிளைத்தலைவராகவும் ஆனார். சேவைகள் தொடங்கின. பல வேலைகள் அவரைத் தேடிவந்தன. பலரும் அவரை எதிர்பார்த்திருந்தனர். புகழ் அவரை அனுகத்தொடங்கியது. அரசியலிலும் அவர் வெற்றி பெற்றார். ஆனால், தொடர்ந்து பணியாற்ற காலம் இடந்தரவில்லை. 56வது வயதில் காலமானார். 34 வருடங்கள் தினமும் நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பில் இருந்த ஒருவர் திடீரென மறைந்து விட்டது ஒரு பேரிழப்பு எனக்கு. 

 ( Selvam @ Kumar @ Salivakumar... 22 days before his death... )


உலகில் எதுவும் நிலையல்ல, 
யாரும் நிலைப்பதில்லை
தெரிந்ததுதான்....
என்றாலும், 
மனம் ஏற்றுக்கொள்ள 
சிரமப்படுகிறது
 சில நேரங்களில்....

நீரிழிவு நோய் . . .

“ ஒரு டாக்டர் எனக்கு ( டயபிட்டீஸ் மெலிட்டஸ் ) சர்க்கரை வியாதி இருக்குன்னார். இன்னொருவரிடம் பரிசோதித்தேன், அவர் இல்லை என்கிறார். யார் சொல்வதை நம்புவதென்று தெரியவில்லை” என நம்மைச் சுற்றி உள்ளவர்களில் சிலர் சொல்லக் கேட்டிருப்போம்.

" இருக்கு ....ஆனா  இல்ல..."  நல்ல 'காமிடி பீஸ்' போல தோன்றினாலும் உண்மையில் இது ஒரு கவனிக்க வேண்டிய நிலை. இப்படியும் சில விசயங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கவே செய்கின்றன. 

ஆனால், இங்கே ஒன்றை கூர்ந்து கவனிக்க வேன்டும். மாரடைப்பு, வாதம், விபத்து மற்றும் வைரஸ் தொல்லைகள் போன்றவை நமக்கு ஏற்படும்போது, நம்முடைய தற்காபுக்காக நமதுடல் எட்ரினலினை சுரக்க வைக்கும். இது ஒரு வகை ‘ஹோர்மோன்’. இது தற்காலிகமாக உடலில் உள்ள சர்க்கரை அளவை சீராக இருப்பதிலிருந்து குழப்பி பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு ‘ஸ்ட்ரெஸ் ஹைப்பர்கிளைஸீமியா’ என்று பெயர்.

தற்காலிக அறிகுறிகள் தான் என்றாலும், உடலில் ஒளிந்திருக்கும் இந்நிலையால் சர்க்கரை வியாதி நிரந்தரமாக வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இது மாதிரியான சூழ்நிலைகளில் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை என்கிறார் மருத்துவராக இருக்கும் என்னுடைய நண்பர் ஒருவர்.

 நீரிழிவு நோய் 2006ல் மலேசிய மக்கள் தொடையில் 7ல் ஒருவருக்குத்தான் இருந்தது. இன்று அது 5ல் ஒருவருக்கு என ஆகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இந்த நிலை மோசமடையும் சந்தர்ப்பங்களும் அறிகுறிகளும் நிறையவே உண்டு.

மக்களின் உணவுப்பழக்கத்தில் மாற்றமில்லாததும், உடற்பயிற்சியில் ஆர்வமைன்மையும், விழிப்புணர்வும் இல்லாததுமே இ ந் நோய் அதிகரிக்கக் கூடிய காரணங்களாகும்.


நீரிழிவு நோய் ஆபத்தானது என காட்டவே மேலே சற்று கொடூரமான அறுவை சிகிச்சை படம். )

Sunday 30 December 2012

டபுள்ஸ்: சந்திரா தமிழ்ச்செல்வம் . . .

திருமதி. சந்திரா தமிழ்ச்செல்வம் எடுத்த சில 'டபுள்ஸ்' படங்கள் இங்கே...










கேமராக்களில் மட்டுமல்ல, கைபேசிகளிலும் இப்படி மற்றவர் ஆச்சரியப் படும் வண்ணம் புகைப்படங்களை எடுக்கலாம். ஆர்வம் இருந்தால் அனைத்தும்  சாத்தியமே...

திருமதி. சந்திரா தமிழ்ச்செல்வத்திற்கு பாராட்டுக்கள்.
  

மற்றவர்களோடு நம்மை ஒப்பிடலாமா?

சிறு குழந்தைகள் போல் குதூகலமாக ஆடிப் பாடி களித்திருப்பது வாழ்க்கையின் பாதிப் பகுதியை கடந்த சிலருக்கு இயலாமல் போகலாம். ஆனால், அப்படி ஆனந்தமாக, செய்வது எதுவென்றாலும் அதில் மன மகிழ்ச்சியோடு நேரத்தை செலவிடுவது மீதம் சிலருக்கு மிகச் சாதாரண ஒன்று.

எப்படி இவர்களால் இப்படி முடிகிறது  என சில நேரங்களில் நான் ஆச்சரியப் பட்டதுமுண்டு.

படுக்கையில் வந்து விழுந்தவுடனே, இவர்கள் நன்றாக தூங்க ஆரம்பித்து விடுவர். இது எல்லோராலும் முடியாதது. அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டு சதா ஏதாவது சிந்தனையில் உளன்று கொண்டு தூங்கும் நேரத்தை செலவிடுவோரே நம்மில் பலர்.

மனதை இலகுவாக வைத்துக்கொள்வதனாலேயே  இப்படி படுக்கையில் சாய்ந்ததும் தூங்கும் நிலை. இதை உணர்ந்து கொள்ள சில காலம் பிடித்தது எனக்கு.

எல்லா விசயங்களையும் உணர்ச்சி வசமாகப்பேசி முடிவெடுப்பது பலரின் இயல்பான குணம். இதனால் அப்ப்டி எடுக்கும் முடிவுகள் மிகச்சரியானதாக அமைவதில்லை பல சந்தர்ப்பங்களில்.

சிலர் என்னிடம் வந்து மற்றவர்களின் குறைகளை சொல்லி முறையிடும் போது, அவர்களுக்கு ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்வென்.

" உங்களை அளவு கோளாக வைத்து மற்றவர்களை எடை போடாதீர்கள் "

எல்லோரும் நம்மைப் போல் இருப்பதில்லை. அப்படி இருந்துவிட்டால் இவ்வுலகில் எந்தப் பிரசினையும் தோன்றி இருக்காது. அதேபோல நாமும் மற்றவர்களைப் போல் ஆகமுடியாது என்று உணரும்போது அடுத்தவரின் செயலில் இருக்கும் குறைகள் நமக்கு பெரிதாக தெரியாது.

அன்பு மகளே...

படித்தால் புத்தி வரும் என்கிறோம். ஓரு சிலருக்கு என்னதான் படித்தாலும் புத்தி வருவதே இல்லை.  அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

எனக்குத் தெரிந்த எழுபது வயது பெரியவர் ஒருவர்.  ஓரு தனியார் நிறுவனத்தில்  பாதுகாவளராக பணியாற்றி வருகிறார்.  ஆவரின் மனைவியும் அவருமாக  இருவரும் தனியே வாழ்ந்து வருகின்றனர். 

உறவுக்கார்கள் சிலர் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுப்போவது உண்டு.
அவர்களுக்கு ஒரு மகள். அவரின் மேல் படிப்புக்காக எல்லா செலவுகளையும் செய்தனர். தங்களின் புராவிடன் பணத்தையும் தங்களின் ஒரே  பெண் குழந்தைக்காக செலவிட்டு படிக்க வைத்தனர்.

பெண் படித்து பட்டதாரியானார்.  சற்று தொலைவில் வேலையும் கிடைத்தது. வீட்டுக்கு வருவது மாதத்திற்கு ஒன்றாக மாறியது. சில மாதங்களுக்குப் பின் சுத்தமாக வருவதே இல்லை. பல்கலைகழத்தின் போதிருந்தே தனித்து வாழ்ந்து பழகிவிட்ட தங்களின் மகள் இப்போதும் அப்படியே தனியாக வாழ்கிறார்  என அவர்கள் நம்பிக் கொண்டிருக்கையில் ,  திருமணம் செய்து கொண்டு  குடித்தனம் நடத்தி வருவதாக உறவினர் மூலம் தெரிய வர வேதனையில் வாடி வருகின்றனர் இந்த வயதான இருவரும். 

“அவளுக்கு என்ன நடந்துச்சின்னு தெரியலையே…. எங்கள பார்க்கவும் வருவதில்ல….” என தங்களின் செல்ல மகளின் மனமாற்றத்திற்கு காரணம் புரியாமல் கண்ணீர் சிந்துகின்றனர். 

 நேரே சென்று மகளைப் பார்க்கும் முயற்சிகளும் தோல்வியடைந்ததனால், இப்போது தங்களைப் பார்க்க வரும் உறவுக்கார்களிடமும் நண்பர்களிடமும்,
“ எங்க மகள பார்த்தா கொஞ்சம் இந்தப் பக்கம் வந்துட்டு போகச் சொல்லுங்க…” என கெஞ்சுகின்றனர் இருவரும்.

கையிலிருந்த பணத்தையெல்லாம் பிள்ளையின் படிப்புக்கு செலவழித்துவிட்டு, தங்களின் வயிற்றைக் கழுவ இந்த தள்ளாத வயதிலும் வேலைக்குப் போகும் அந்த பெரியவரின் நிலையைப் பார்த்தால் மனம் வருந்துகிறது.

எது எப்படி இருந்தாலும், பெற்றோரை பார்த்து தான் அப்படி நடந்துகொள்வதற்கான காரணத்தை சொல்லியிருந்தால், இரு தரப்பினருக்கும் நல்லதாக போயிருக்கும்.

பிள்ளைகளின்றி தனியே விடப்படும் பெரியோரின் நிலை நமக்கு விளங்குகிறது. ஆனால்,  ஒரு மகள் உயிரோடிருந்தும், வயதான காலத்தில்  தங்களை எந்த ஆதரவுமின்றி தனியே தவிக்க விட்டுப் போன  அந்த மகளை என்ன சொல்வது…?

இப்படியும் நடக்குமா…?

தமிழில் பேச முயற்சிக்கும் குழந்தைகள். . .

“உனக்கு தமிழில் பேச வரவில்லை. எனவே உனக்குத் தெரியாத தமிழில் நீ பேச முயல வேண்டாம். ஆங்கிலத்திலேயே பேசு..” என சிலர் குழந்தைகளிடம் சொல்கின்றனர்.

 இது தவறென்று எனக்குப் படுகிறது.

சரிவர பேசத்தெரியாவிட்டாலும், பேச முயற்சிக்கும் குழந்தைகளை இப்படிச் சொல்லி, அவர்களின் ஆர்வத்தை முலையிலேயே கிள்ளி விடுவது எந்த விதத்தில் சரி?

இப்படிச் சொல்பவர்கள் மூலமா தமிழ் வளரப் போகிறது? என்னவோ இவர்களால்தான் தமிழ் வாழ்வது போல அல்லவா அலட்டிக்கொள்கிறார்கள்.

தமிழில் பேச முயற்சிக்கும் அனைவரையும் வரவேற்று, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை பெரிது படுத்தாது அவர்களின் தமிழார்வத்தை ஊக்குவிப்பதே சிறந்தது. இப்படித்தானே நாமும் ஆங்கிலம் கற்றுக்கொண்டோம். 

"அன்பில் விளைந்த ஆரமுதே
ஆழியில் கண்டெடுத்த நல் முத்தே"
என  பெரியோர்கள்  கவிதைகள்  புனைவதில் பயனில்லை.

காலத்தாலும் அழிக்க முடியா தமிழ்க் கல்வி எனும் அருஞ்செல்வத்தை பிள்ளைகள் பெறச்செய்வதே ஒவ்வொரு தமிழ்ப் பெற்றோரின் இலக்காக இருக்கவேண்டும். 

ஒரு காலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமாக தமிழ்ப் பள்ளிகள்  இருந்ததாக கேள்விப் படுகிறேன்.  ஆனால், தற்சமயம்  சுமார் 523 பள்ளிகள் மட்டுமே மலேசியாவில் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.  இந்தச் சரிவு தொடர்ந்தால், சில வருடங்களில் இன்னும் பல பள்ளிகள் காணாமல் போகும் என யூகிப்பதில் தவறொன்றும் இருக்கமுடியாது. அதுவும் ஆரம்ப பள்ளி எண்ணிக்கை அவை. 

இடை நிலைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி கற்பிக்கும் வகுப்புக்கு போதிய தமிழ் மாணவர்கள் வருவதில்லை என்றொரு தகவலும் வெளிப்படையாக தெரிய வருகிறது.  

 நம் நாட்டில் இப்படி கவலைக்கிடமான ஒரு சூழ்நிலையில் தமிழ் மொழி இருந்து கொண்டிருக்கிறது.


பெற்றோர்களை பிரிக்கும் பிள்ளைகள். . .

குடும்பத்தில் கணவர் மனைவினிடையே இருக்கும் பரஸ்பர அன்பு   காலமெல்லாம் தொடர்கின்ற ஒரு பந்தம் என்பார்கள்.  முதுமையின் போது ஒருவருக்கொருவர் துணையாக ஆயுள் முழுவதும் ஒன்றாக இருக்கவே இந்த பந்தம். 

ஆனால், பிள்ளைகளுக்கு திருமணமானவுடன் என்ன செய்கிறார்கள்?  பெற்றவர் இருவரையும் ஆளுக்கொருவராக தங்கள் பிள்ளைகளை கவனிக்க  தனித்தனியே பிரித்து அழைத்துச் சென்றுவிடுகின்றனர். 

பல குடும்பங்களில் நடக்கும் உண்மை இது.

வயதானோர் பிள்ளைகளை வருந்த விடமாட்டார்கள். எல்லாவற்றையும் தங்களுக்குள்ளேயே தேக்கி வைத்து சோகமும் வேதனையும் ஒன்று சேர வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பிள்ளைகள் தாம் அவர்கள் மனதறிந்து அவர்களுக்கேற்றவற்றை செய்து,  அந்திம காலத்தில் அவர்களின் நிலை சோக கீதமாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

எல்லோரும் இன்புற்றிருக்க . . .

இறைவனிடம் நமது வேண்டுகோளின் முழுப் பயன் கிடைக்கவேண்டுமானால், வேண்டுவதில் " நான் / எனது " என எதையும் முதல் கோரிக்கையாக வைக்கக்கூடாது என்பார்கள். உலகம் செழிக்க வேண்டும், அனைத்து ஜீவராசிகளும் நலம் பெறவேண்டும் என்பதோடு நம்மைச் சுற்றி உள்ளோர் நலத்தையும் நாம் நமது வேண்டுதலில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பது பெரியோர் சொன்ன பலவற்றில் ஒன்று.

எண்ணிப்பார்க்கையில் அதுவும் நல்லதென்றே படுகிறது. அதுபோல சுயநல போக்கு இல்லாது,  இவ்வுலகில் வாழும் அனைவரும் அரோக்கியமாக சீரும் சிறப்போடும் வாழவேண்டும் என நினைப்பது  நம்மை நல்வழிப் படுத்தி நன்மைகளை பெருக்கிக்கொள்வதாகும்.

"எல்லோரும்  இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபமே “
என்று பராபரக் கண்ணி எனும் பாடலில் தாயுமானவர் பாடியுள்ளார்.

சுயநலம் தோன்றாத போது தவறுகளும் பாவங்களும் தோன்றுவதில்லை.  பாவங்கள் இல்லையேல் இறைவனின் அன்பு முழுமையாக நம்மை வந்தடைய எவ்வித தடைகளும் இல்லை. எனவே மற்றவர் நலனை நினைக்கும் நேரம் நம் வாழ்வும் சிறப்படைகிறது என்று முன்னோர் சொன்னது ஞாயமானதுதானே...

மலரும் வான் நிலவும் . . .

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரிக்கின்றாய்  நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனவில் தோன்றி சிரிக்கின்றாய்  நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்

கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?
மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?

தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க - என்
தலைவா உனக்கிது வேடிக்கையோ?
தலைவா உனக்கிது வேடிக்கையோ?

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கார்ட்டூன்கள். . .



தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சிறியோர் முதல் பெரியோர் வரை அதிகம் பார்த்து ரசிக்கும் ஒரே நிகழ்ச்சி 'கார்டூன்களாகும்'.  குழந்தைகளுக்கானவை என முத்திரை குத்தப்பட்டாலும், பெரியோரும் தங்களிடம் மிச்சம் இருக்கும் அந்த குழந்தை போன்ற மென்மையான மனதை குதூகலப்படுத்த கார்டூன் பார்க்கிறார்கள்.



எத்தனை முறை பார்த்தாலும் நகைச்சுவை மிகுந்த கார்ட்டூன்கள் நம்மை சிரிக்கவைக்க தவறுவதில்லை. இறுக்கமான மன நிலையில் இருந்து வெளிவர கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பெரிதும் உதவி செய்கின்றன. மனது லேசாகும் போது  புத்துணர்ச்சி பிறக்கின்றது, செயல்களில் புதுப்பொலிவும் தெரிகின்றது.

சிவாஜியின் சிகரெட் பிடிக்கும் அழகு. . .

சிவாஜியின் நடிப்பு பல படங்களில் நெஞ்சைத் தொடுவது போல் இருக்கும். எனக்கு அவரின் நடிப்பில் பிடித்தது..... புதிய பறவை என்னும் படத்தில் "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடலின் முன் அவர் சிகரெட் பிடிக்கும் அழகு.

அவர் பற்ற வைக்க அதே நேரம் பாடலும் துவங்க, நல்ல 'டைமிங்கோடு' விறுவிறுப்பாக இருந்தது அந்த இனிய பாடல்.


ஆனால், அவரின்  ரசிகர்கள் அந்த இயற்கையான நடிப்பையும் அழகிய காட்சி அமைப்புகளையும் ரசித்ததோடு  நிறுத்திக் கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்.  அதையும் தொடர்ந்து அவர்போல புகைபிடிக்க முயன்றிருந்தால் அனேகமாக அவர்கள் இப்போது நோயோடு பாயில் தான் கிடப்பார்கள்.

ஆபத்தும் ஒரு அழகு என்பது இதுதானோ?

மொணி மொழிகள்.. 1

 நமக்கு சாதகமாக அமையாத சூழ் நிலைகளை எப்படி சமாளிப்பது அல்லது எதிர்கொள்ளுவது எனும் வகுப்பில் படிக்க பலரும் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். அது மட்டும் தெரிந்து விட்டால் அனைத்தையும் கடந்து செல்லக்கூடிய மகொன்னத நிலையை நாம் அடந்து விடுவோம்.

Friday 28 December 2012

ஜுக்ரா மலையில் ஈப்போ அருள் . . . 2






ஜுக்ரா மலையில் ஈப்போ அருள் . . . 1

19வது நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது இந்த ஜுக்ரா மலையில் உள்ள கலங்கரை விளக்கு. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண பாதுகாப்பு விளக்காகவே கருதப்பட்டது. மலாக்கா நீரிணையை பயன் படுத்துவோரின் நன்மைக்காக ஏற்படுத்தப் பட்டதென்றாலும் பின்பு இது அன்றைய சிலாங்கூரின் மாட்சிமை தங்கிய 5ம் சுல்தான் அலாவுடின் சுலைமான் ஆட்சியில் விரிதுபடுத்தப்பட்டு அரசின் முக்கிய இடமாக புகழ் பெறத்தொடங்கியது. இந்த மலையின் அடிவாரத்தில் தான் சிலாங்கூர் சுல்தானின் சரித்திர புகழ் வாய்ந்த மாளிகை இருந்தது. இங்கிருந்தே சுல்தான் தனது சுபிட்சமான ஆட்சியை நடத்தி வந்தார்.

அதிகாலை நேரத்தில், மேகக் கூட்டத்தினூடே சூரியனுதிக்கும் காட்சியும், அந்தி நேரத்தில் சூரிய அஸ்தமனமும் மனதைக் கொள்ளை கொள்ளும் விதம் பிரமாதமானதாக இருக்கும்.

மற்ற நேரங்களில் 'ஜுக்ரா' என்று எழுத்து நிறுத்தப்பட்டிருக்கும் உயர்ந்த இடத்திலிருந்து கீழே பார்த்தால், மலாக்கா நீரிணை நன்கு தெரியும். இந்தோனேசியாவின் சுமாத்திரா  தீவிற்கும் மலேசியாவுக்குமிடையில் உள்ளது இந்த மலாக்கா  நீரிணை.  சுமார் 805 கி.மீ நீளமானதாகும் இது. பசுபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் இதில் ஆண்டுதோறும் சுமார் ஐம்பதாயிரம்   கப்பல்கள் பயணிப்பதாகக் கூறப்படுகிறது.


மேலிருந்து பார்க்க சுமார் 15 அல்லது 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள மலாக்கா நீரிணையும், இடையே சில கட்டிடங்களும்,  ஒரு கிராமமும், அருகில் லங்காட் ஆறும் கண்களைக் கவரும்  காட்சிகளாகும்.

லங்காட் ஆறு கடலில் சென்றடையும் எல்லையில் சில சரக்குக் கப்பல்கள் நிற்பதையும் நாம் பார்க்கலாம். இதுபோன்ற கப்பல்களில் இருந்து 'பார்ஜ்' எனப்படும் அகன்ற  தளத்தில் பொருட்கள் இறக்கப்பட்டு, அவை பின் மோட்டார் படகுகள் துணைகொண்டு கிள்ளான் துறைமுகத்துக்கு லங்காட் ஆற்றின் வழி அனுப்பப்படுவதும்  பார்க்க சுவாரஸ்யமான அம்சமாகும்.

கடந்த சில வருடங்களாக ஜுக்ரா மலை 'கிளைடிங்'  என்றழைக்கப்படும் பாரசூட்டில் பறக்கும் விளையாட்டிற்கு மலேசிய அளவில் முக்கிய இடமாக விளங்குகிறது.  பல நாடுகளில் இருந்தும் விளையாட்டாளர்கள் இங்கு வந்து, பந்திங்கில் உயரமான இடமான இந்த ஜுக்ரா மலையிலிருந்து பறக்கிறார்கள்.

1976ல்  25 மீட்டர் உயரத்தில் நவீன ஒளி வீசும் சாதனங்களுடன் புதுப்பிக்கப்பட்டது இந்த கலங்கரை விளக்கு. கடல் நீர் மட்டத்தைவிட 146மீட்டர் உயரத்தில் இது இருக்கிறது.


கார்களில் கீழிருந்து மேலே பத்து நிமிடங்களில்  போய்விடலாம் என்றாலும், பொதுவாக அவ்விதம் போவது மலையின் உயரம் கருதி பாதுகாப்பான பயணத்திற்கு உகந்ததல்ல  என்பதால் கீழே அடிவாரத்திலேயே கார்களை அனைவரும் நிறுத்திவிட்டு நடந்தே செல்கின்றனர்.

பலர் நடை பயிற்சிக்காக இங்கே வருகின்றனர். கணவன் மனைவி, பெற்றோர்களோடு பிள்ளைகள் என பல குடும்பங்கள் இங்கே நடக்க வருவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர்.


கைகளில் தண்ணீர் பாட்டில்களோடு அவர்கள் கதை பேசியபடி மலை மேலே நடந்து போவதும், அங்கே சென்று அங்கிருக்கும் நீண்ட 'பென்ச்சில்' அமர்ந்த படி இயற்கை அழகை பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுத்த பின் கீழே நடந்து வருவதும் குடும்ப நல்லுறவை வளர்க்கும் செயல் என்றால் அது மிகையில்லை. மகிழ்ச்சியை நிலை நிறுத்த அருகாமையில் இருக்கும் குடும்பங்களின் தலைவர்கள் கடைபிடிக்கும் யுக்தி இது. மாதம் ஒரு முறை உணவுப் பண்டங்களோடு இங்கே வந்து பிக்னிக் போல கலகலப்பாக நேரத்தை செலவிடுகிறார்கள்.

இவ்வளவு நல்ல விசயங்கள் ஜுக்ரா மலையைப்பற்றி சொல்லப்பட்டாலும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு போகும் பாதையின் இடையே சீனர்களின் இடுகாடு இருப்பதனால் இருட்டும்  முன்னரே கீழே வந்துவிடுவது நல்லது என்கின்றனர் இங்கே பல வருடங்களாய்  வந்து போய்க்கொண்டிருப்போர். 


ஈப்போ அருள் டபுள்ஸ். . .

ஈப்போ அருள் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மோரிப் கடற்கரைக்கு சுற்றிப்பார்க்க வந்திருந்தார். அவரையும், அவர்தம் குடும்பத்தினரையும்  பந்திங் நகரில் புகழ் பெற்ற இடமான ஜுக்ரா மலைக்கு அழைத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை...











  

இவற்றைப் போல படம் எடுக்க உங்களுக்கு டிஜிட்டல் கேமாரா தேவை இல்லை. சாதாரண கைபேசிகளில் கூட புதுப்புது யுக்திகளில் புகைப்படங்கள் எடுத்து மகிழலாம்.

ஒன்லைனில் பழக: rajpow2011@yahoo.com