Thursday 6 December 2012

எது இலக்கியம்?

அன்மையில் ஒரு திருமண விருந்தில் சில தமிழாசிரியர்களோடு கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது இதுவென பேசத்தொடங்கி பின்பு தமிழ் இலக்கியம் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எங்கு போய்க் கொண்டிருக்கிறது என்னும் ஆய்வில் தொடர்ந்தது.

கட்டுரைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, இணையத்தள பதிவுகளின் தொகுப்பு எனவே இப்போது அதிகம் வந்து கொண்டிருப்பதாகவும், இவற்றை அடுத்து புகழ் பெற்ற கதாசிரியர்களின் நாவல்கள் வழக்கம் போல பிரசுரமாவதாகவும் குறிப்பிட்டனர்.

'இன்றைய எழுத்தே நாளைய இலக்கியம் என ஆகும்போது  பலருக்கும் பயனுள்ளதான கருத்துக்களை மையமாக வைத்து இப்படி வெளிவருபவை ஆரோக்கியமானது தானே...' என மனதுக்குள் நினைத்துக்கொண்டிருக்கும் போதே,

" அதெப்படிங்க...? இதிகாசங்களையும், நமது பண்டையப் புலவர்களின் எழுத்தோவியங்களையும் வெளிக்கொணரும் விமர்சனங்களே இலக்கியப் படைப்புகள் என ஒரு சாரார் எண்ணிக்கொண்டிருக்கும் போது, இந்த கட்டுரை, சிறுகதை வெளியீடுகள் எப்படி இலக்கியத்தில் சேரும்" என்றார்  முதலாமவர்.

'என்ன இவங்க .... பக்தியையும், புராணத்தையும் மட்டுமே இலக்கியமா நினைக்கிறாங்களோ...' மனதில் எண்ண அலைகள்.

மற்றவர் தொடர்ந்தார், "அதாவது தம்பி, மு. வரதராசனார் தன்னுடைய புத்தகத்தில் இலக்கியம் பற்றி எழுதி இருக்கார். இலக்கியம் என்பது முக்காலத்தையும் சேர்ந்ததுன்னு சொல்லி இருக்கார். பழங்காலம், இடைக்காலம், இக்காலம். ஆரம்பத்திலே சங்க இலக்கியமும், நீதி இலக்கியமும் இருந்துச்சாம்... இடைக்காலத்திலே காப்பியங்களும், புராணங்களும் அந்த இடத்தைப் பிடிச்சிகிச்சாம், தற்போது போய்க்கொண்டிருக்கும் காலத்துலே மட்டும் சிறுகதைகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும், கவிதைகளுமா வந்துகிட்டு இருக்குங்கிறார்..." .

இதுலே என்ன தவறு இருக்கு...? என்னமோ எனக்கு ஒன்னும் விளங்கலே...
'எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு.....'

No comments:

Post a Comment