Friday 30 November 2012

குமுதம் அட்டைப் படங்கள்... நவம்பர் 12









மலரும் நினைவுகள் :பாம் கார்டன் கோல்ப் கிளப். . .

ஒரு பழைய படம்... என்னுடைய மலரும் நினைவுகளில் இருந்து.
இடம் : பாம்  கார்டன்  கோல்ப் கிளப்.


படத்தில் இருப்பவர்கள் :
வலப்பக்கம் நின்று பாம் கார்டன் அலுவலக அதிகாரி 'ரஞ்சிட் கவுர்' அவர்களை கவனிப்பது, சிதம்பரம்.
எனக்குப் பின்னால் உட்கார்ந்தவாறு புகைப்படம் எடுப்பவரைப் பார்த்துக்கொண்டிருப்பவர், காலம் சென்ற  'கலை'. 
அதே மேஜையில் இடதுபுறம் இருக்கும் இருவர் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருப்பவர், கோல்ப் பற்றிய தொழில் நுணுக்கங்களையும், ரகசியங்களையும் எனக்குச் சொல்லித்தந்த 'திரு. முனுசாமி' அவர்கள்.
இடது பக்கம் பேசிக்கொண்டிருப்பவர்கள், 'திரு. பெரியண்ணனும', 'பழனியும்'. 
இதில் இன்னொரு முக்கியமானவரும் உண்டு. நான் வேலை மாற்றலாகி இரண்டு இடங்களுக்குப் போகும் போது என்னுடனே என்னைத் தொடர்ந்து வந்த, என்னுடைய "ஏ" டீமின் ஐந்து பேரில் ஒருவரான, 'சீஃப் மெக்கானிக்' 'சுஹைமி', திரு. கலைக்குப் பின்னால் வெள்ளை நிற முழுக்கை சட்டையில் அமர்ந்திருக்கிறார்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் எடுத்தப் புகைப்படம் இது. வேலை நேரத்தின் ஊடே 'காவல் தெய்வமான' முனீஸ்வரருக்கான பூஜையில், ஆடு வெட்டி விருந்தும் வைப்பது வழக்கம். அப்படி ஒரு விருந்தில் கலந்து கொண்டபோது எடுக்கப் பட்ட படமே இது.


Thursday 29 November 2012

மாறாதது மாற்றங்கள் மட்டுமே...

காலத்துக்கேற்ற மாற்றங்கள் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குற்றவியலில் இருந்து சமூகவியல் வரை முன்பிருந்த குறிப்பிட்ட பிரிவினருக்காக இருந்து இப்போது பலருக்கும் பொருந்துவது போல சட்டங்கள் மாற்றம் கண்டு வருகின்றன.

நம் சமூகத்திலும், மதத்திலும்கூட அப்படியே. உடன்கட்டை ஏறுவது இப்போதில்லை. இரண்டு பேரைத் திருமணம் செய்வது கொள்வது இப்போது குற்றம். கணவனை இழந்து கஷ்டப்படும் பெண்கள் மறுமணம் பற்றி முன்பு நினைக்கக்கூட முடியாது. ஆனால், இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஒட்டு மொத்தமான பலரின் கருத்தே மாற்றத்திற்கு வித்திடுகிறது. அனைவரும் ஒன்றுகூடி காலத்துக்கு ஒவ்வாத மூடப் பழக்கங்களை வேண்டாம் என தவிர்க்கும் போது அதுவே நாளடைவில் சட்டமாகிறது, அல்லது இருக்கும் சட்டங்களில் மற்றத்தைச் செய்கிறது.

கருத்துச் சுதந்திரம் பெருகப் பெருக இன்னும் பல மாற்றங்களை நாம் எதிர் பார்க்கலாம். இந்த 'ஃபைன் டியூனிங்" என்றும் மாறாத ஒன்றாக மாற்றங்களைத் தந்துகொண்டே இருக்கும்.

ஆனால் ஒன்று, எல்லோருக்கும் பொதுவாக மதச் சட்டங்கள் வேண்டும் என யாரும் உறுதியாக கேட்க முடியாது. தங்களின் நம்பிக்கைகள் வேறு படும் போது, இது சாத்தியமில்லை. அடிப்படையில் அவரவர் சூழ்நிலைக்கேற்ப செய்து கொள்ளும் மாற்றங்களை மற்றவர் ஏற்றுக்கொண்டு அவற்றை மதித்து வாழ்வதே சிறப்பாகும்.


அதி நவீன வளர்ச்சி அடைந்துவிட்டவற்றுள் சினிமாவும் ஒன்று. மேலுள்ள படம் முக்கோணங்களில் எடுக்கப்பட்ட ஒன்று. இதைப் பார்க்க 3D கண்ணாடி தேவை.

நம் நாடும் நாமும்...

மாஸ்மீடியா, கம்யூனிகேஷன், தகவல் பரிமாற்றம், சுகாதாரம், தொழில் வளர்ச்சி என நம் நாடு மற்ற நாடுகளிடம் போட்டியிட்டவாறு முன்னேறி போய்க்கொண்டிருக்கும் காலம் இது.

இந்த நேரத்தில், சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நமது பங்களிப்பை எண்ணி நாம் பெருமை கொள்ளத்தான் வேண்டும். இந்த தேசத்தின் ஆணிவேர்களில் நாமும் பிண்ணி  பிணைந்திருக்கிறோம்.

இப்போதுள்ள சரித்திரப் பாட புத்தகங்களில் நம்மைப்பற்றிய உண்மைச் செய்திகள் அவ்வளவாகக் காணோம். இது எப்படி நேர்ந்தது என தெரியாவிட்டாலும்,  கொடிய மிருகங்களோடு வாழ்ந்து வந்த அதே நேரம் நாட்டின் வளத்திற்கு நாம் ஆற்றிய தொண்டினை சில எழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.

ஜப்பான், கொரியா போன்ற நாடுகளின் நிறுவனங்கள் இங்கு வருவதற்கு முன் நாம் நம்பி இருந்தது இரப்பர் மரங்களையே.   ஈயமும், ஈச்சமரமும் இதர இயற்கை வளங்களாக நாட்டுக்கு சொற்ப வருமானத்தை ஈட்டித் தந்தன. ஆயினும் அன்றைய நம் நாடு மேம்பாடடைய முதற்காரணம் இரப்பர்தான்.

இரப்பர் மரங்கள் இருந்த தோட்டப்புறங்களில் தான் நாமும்  வாழ்ந்து வந்தோம்.  அன்றைய நம் நாடு, 'இக்னிஷனில்' ஸ்டார்ட் ஆகி கிடு கிடு வேகத்தில் உயர்வை நோக்கிச் செல்லக்  காரணம் நம் பங்களிப்பும் தான்.

இதில் இன்னொமொரு சந்தோஷப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், பல்லின மக்களைக் கொண்ட இந்த நாட்டில் நாம் அனைவரும் ஐக்கியமாகவும்  மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என்பதே.

அதுவே நம் பிரார்த்தனையும்கூட.  இனி வரும் காலங்களிலும் இந்த நல்லிணக்கம் தொடரவேண்டும்.   நம்மைப்பற்றிய நாலு நல்ல விசயங்கள் மறைக்கப்படாமல் வெளிப்படையாக பேசப்படவேண்டும்.

Wednesday 28 November 2012

தங்கத்தில் ஏமாற்றுகிறார்கள்...

பொதுவான சில விசயங்கள் பெண்களுக்குத் தெரியும். அதுவும் நகை வாங்கும் பெண்களுக்கு கடையில் நடக்கும் ஏமாற்று வேலைகள் நிச்சயம் தெரியும்.

சேதாரம், செய்கூலி எனச் சொல்லி ஒரு குறிப்பிட்ட தொகையை தங்க்ளுக்கு நஷ்டமில்லாமல் பார்த்துக்கொள்ளும் இவர்கள் நகைகளின் எடையில் எப்படி எப்படியோ ஏமாற்றுகிறார்கள்.

எனது நண்பரின் மனைவி ஒரு கடையில் நகை வாங்கினார். மகளுக்கு அவர் வாங்கிய நகியின் 'ஃபேஷன்' பிடிக்காததால் அதே கடைக்குச் சென்று வேறொன்றை மாற்றிக்கொள்ள நினைத்தார்.

என்ன ஆச்சரியம்... ஒரு வாரத்தில் நகையின் எடை சற்று குறைந்திருந்தது.

தன் கையில் வைத்திருந்த நகைக்கான விலைச் சீட்டை காட்டி மாறுபடும் நகையின் எடையை எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். கடைக்காரர்கள் கைவிரித்து விட்டனர்.

ஒரு நகைக்கே இவ்வளவென்றால், தான் வாங்கிய மற்ற நகைகளின் நிலையை எண்ணி ஆதங்கப் படுகிறார் இப்போது.
இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அருகாமையில் இருந்த இன்னொரு நபர் அதிர்சி தரும் தகவல் ஒன்றைச் சொன்னார்.
அடமானமாக வைக்கப்படும் நகைகளில் இருந்து எப்படி சிறுகச் சிறுக சுரண்டிக் கொள்கிறார்கள் என்று.

"என் நண்பரின் அவசரத்துக்கு என்னிடம் இருந்த ஒரு மோதிரத்தை அவருக்காக அடமானம் வைத்தேன்.   சில நாட்கள் சென்றபின் அதற்கான கட்டனத்தை செலுத்தி திரும்ப பெற்றுக்கொண்டேன். இந்த விசயத்தை என் நண்பர் ஒருவர் சொல்லும்போதுதான் நானே என் கண்ணால் பார்த்தேன். நான் அடமானம் வைத்து திரும்பப் பெற்ற அந்த நகையில் இரு முறை அடமானம் வைக்கப்பட்டதின் அடையாளமாக இரண்டு இடங்களில்  ஒரு சிறு அளவு சுரண்டப்பட்டு இருந்தது...."

அவருடன் சென்று அந்த மோதிரத்தை படம் பிடித்த பின்னர்தான் அவர் சொல்வது உண்மை என என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. நான் பார்த்ததை நீங்களும் பார்க்க இங்கே அந்தப் படத்தைத் தந்துள்ளேன்.







வாழ்வின் அஸ்திவாரம் இளமையே...

நம் அனைவருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சிந்தனை இருக்கும். நாமிருக்கும் இன்றைய நிலை ஐந்து வருடங்களுக்கு, பத்து வருடங்களுக்கு அல்லது அதற்குப் பின்னரோ எப்படி இருக்கும் என எண்ணத்தில் அவ்வப்போது தோன்றி மறையும். ஆக்கபூர்வமான இது போன்ற பார்வைகளே நம் வாழ்வின் வெற்றிப் பயணத்தை தீர்மானிக்கின்றன.

'இளமையில் முடியாதது' ஏதுமில்லை என்பார்கள். ஒளிமயமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் அமைப்பது இளமையில்தான். சுக போகங்களில் இருந்து தன்னை  விடுவித்துக் கொண்டு சுய கட்டுப்பாட்டுடன் கல்வி ஞானங்களில் ஈடுபாடு காட்டுவோரே, வாலிப வயதில் பொருள் தேடுவதிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள், முதுமையில் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்.

தம் வாழ்வு சென்றடைய வேண்டிய இலக்கு எதுவென அறியாதவர்கள் வெற்றியடைவதில்லை. வாகனத்தில் தொற்றிக்கொண்டு பயணிப்போர் போல வெற்றி பெரும் யாருடனாவது தன்னை இணைத்துக்கொண்டால் ஒரு வேளை இது சாத்தியப் படலாம்... 

பழக்க வழக்கங்கள்...

நமக்கு சரிபட்டு வராது என பல விசயங்கள் இருக்கும். ஆனால் தொடர்ந்து அவற்றைச் செய்துகொண்டுதான் இருப்போம். ஏனென்று கேட்டால், " பழகிட்டேன், விட முடியல..." என்போம். ஆக, பழக்க வழக்கங்களே பல செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றன.

நல்லவற்றை மட்டுமே நாம் பழகிக்கொள்ள தெரிந்து விட்டால் அவையே நம் அன்றாட வழக்கத்திற்கு வந்து விடும்.

Monday 26 November 2012

பதிவுலகில் ஆசிரியர்கள். . .

சோசியல் மீடியா என்றழைக்கப்படும் சமூக கருத்துப் பரிமாற்ற ஊடகங்களில்
ஒன்றாகவே  'புளொக்ஸ்பொட்'  எனும் பதிவுலகமும் இருக்கிறது.

உலகில் பலரும் இதில்  பங்கெடுத்துப் பதிவிடுகிறார்கள். ஆயினும் நமது மலேசிய ஆசிரியப்பெருமக்கள் இன்னும் இது போன்ற வலைத்தளங்களில்  குறிப்பிடும் அளவு கலந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.

பலரும் வலைத்தளத்திற்கு வராமல் போவதற்கு தமிழ் இலக்கணத்தில் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களே காரணம். எல்லோரும் தமிழ் மொழியைப் பேசுகிறோம். ஆனால் எழுத்துலகம் என வரும் போது இலக்கணப் பிழையின்றி எழுதுவோரே நம்பிக்கையுடன் துணிந்து எழுத வருகிறார்கள். தமிழ் நாட்டில் அனேகமாக எல்லோரும் தமிழ் கற்றிருப்பதால் பலர் பதிவுலகில் தங்கள் பங்களிப்பைத் தருகிறார்கள் ஆனால், மலேசிய நாட்டில் நிலைமை வேறு. பிழையின்றி எழுதுவோரில் அனேகர் ஆசிரியத் தொழிலே செய்வதால், அவர்கள் சேவையை அதிகம் எதிர்பார்க்கிறோம்.

மற்ற மாநிலங்களுக்கு நான் பயணம் செல்லும் போது சந்திக்கும் ஆசிரியர்களிடம் இதைப் பற்றி வினவினால், எல்லோரும் ஒட்டு மொத்தமாக ஒரே பதிலையே சொல்கிறார்கள்....  "நேரமில்லை.." என்பதே அது.  நேரம் என்பதை நாம் தானே ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.  அவர்களின் இதயபூர்வமான பங்களிப்பினால் தமிழும் வளர்கிறது, மற்றவர்களும் பயனடைகிறார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.  அதை அவர்கள் உணர்ந்துவிட்டால், நேரம் என்பது அவர்களிடம் நிறையவே இருக்கும், தமிழுக்கு சேவை செய்ய....

சில ஆசிரியர்கள் மிகப் பிரமாதமாக தங்களது வலைத்தளங்களை நடத்திவருகின்றனர். தாங்கள் கற்றுத்தரும் பள்ளிப்பாடங்களும் கூட அவர்களின் 'புளொக்ஸ்பொட்டில்' இடம்பெற்றிருக்கின்றன. வீட்டுப் பாடங்களும் அப்படியே. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே அந்தப் பாடங்களை செய்து பள்ளிக்கு மறுநாள் கொண்டுவரலாம்.

விடுமுறைக்கு வெளியே போகும் ஆசிரியர்கள் தாங்கள் கண்டவற்றை கட்டுரை வடிவில் பதிவிடும் போது மாணவர்கள் அவற்றை கிரஹித்துக் கொண்டு சந்தர்ப்பம் கிட்டும் போது அதை மாதிரியாக வைத்து பரீட்சைக்கும் எழுத உதவியாக இருக்கிறது.

ஆசிரியர்கள் தங்களின் அனுபவங்களையும், ஆய்வுகளையும், விமர்சனங்களையும் பதிவுலகில் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. ஏனோ  இன்னும் ஆசிரியர்கள் பலர் இது போன்ற ஆரோக்கியமான பதிவுலக பகிர்தலில் தங்களை உட்படுத்துவதில்லை.

பள்ளிப்பிள்ளைகளின்  முன்னேற்றத்திற்கும், சமூக குறை நிறைகளுக்கும் அவர்களின் சேவை தேவைப்படுகிறது. கண்ணில் படும் குறைபாடுகளை அன்போடு அழகாக சுட்டிக்காட்டலாம். சரியான முறையான வெற்றியடையும் பாதை எதுவென தங்களின் ஆசிரிய அறிவூட்டலை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். ஆசிரியர்கள் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் இதனால் பன்மடங்கு பெருகும்.

இதைவிடுத்து, தனிப்பெரும் சிறப்புடன் செயல் படும் ஆசிரியர்கள் தனித்து, ஒதுங்கி நிற்பது நன்றாகுமா...?

Sunday 25 November 2012

எனக்கென்ன என நகர்வது சரியா?

'எதையும் காணதது போல போய் வா" என வெளியில் போகும் நமது பிள்ளைகளுக்கு சொல்லி அனுப்புவோம்.

வீட்டினுள் இருக்கும் வரை அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆனால் வெளியில் நடப்பதை நாம் உறுதியாக கூற முடியாது. நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். நாம் தான் புத்திசாளித்தனமாக தெரிந்து நடந்து கொள்ளவேண்டும். முன்பெல்லாம் வெளியில் போகும்போது 'சந்தர்ப்ப சூழ் நிலையை பார்த்து நடந்து கொள்" என்பார்கள். இப்போது அப்படிச் சொல்வது குறைந்துவிட்டது. காரணம் அப்படிச் சொல்வதில் நமக்கு ஒரு  நஷ்டமும் உண்டு. உதவும் நேரத்தில் உதவி செய்தாக  வேண்டியதிருக்கும்.

அன்றைய காலத்தில் உதவிக்குப் போவோருக்கு கொஞ்சம் மரியாதை கிட்டியது. இப்போது என்ன கிடைக்கிறது என்பதை நான் சொல்லியா தெரிந்து கொள்ளவேண்டும்...?
பொதுவாக கெட்டதே நடப்பதால் இப்பொதெல்லாம் வீட்டில் உள்ளோர் கூட சற்று மாறுதலுடன் " எதையும் காணாதது போல " என சிறப்பாக சொல்லி அனுப்புகிறோம். இதனால் தெரியப்படுத்துவது என்னவென்றால், "எது நடந்தாலும் நீ ஒன்றும் நடவாதது போல உன் வேலையை மட்டும் பார்த்துவிட்டு வந்து சேர்" என்பதே.

மற்றவர்களுக்கு உதவப் போய் வம்பில் மாட்டிக்கொள்வோர் எண்ணிக்கை கொஞ்சமா என்ன?

ஆனால் இதையும் இரு பிரிவுகளாக சிந்திக்க வேண்டி உள்ளது. எல்லாவற்றுக்கும் இந்த "எனக்கென்ன " எனும் தோரணையில் நழுவுவது பொருந்துமா? ஒரு வேளை நமக்கே எதாவது நேர்ந்தால்...மற்றவர்கள் ஒன்றும் நடவாதது போல அப்பால்  நகர்வதை  நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஒரு சராசரி மனிதன் "டென்ஷன்" ஆகக்கூடிய பல சந்தர்ப்பங்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இனம், மதம், மொழி எனும் பேதமின்றி அனைவருக்கும் இதே பிரசினைதான. எது சரியான முடிவு என யோசிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிடுகின்றன இப்போது.... 

Thursday 22 November 2012

வாசிக்கும் பழக்கம்...

வாசித்தல், எழுதுதல், கண்டறிதல், பார்த்தல், கிரஹித்தல், செவிமெடுத்தல் என்பது போன்றவை கல்வியில் சிறந்து விளங்க வரையறுக்கப்பட்ட விதிமுறைகளாகும்.

பல்லின மக்கள் வாழுகின்ற நம் நாட்டில் பல கோணங்களில் இருந்தும் போட்டிகள் நம்மை எதிர்த்து வரக்கூடும். அவற்றை சமாளிக்க நமக்குத் தேவைப்படும் ஆயுதம், "கல்வி" ஒன்றே.

கல்வியில் சிறந்து விளங்குவோருக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்கள்  வந்தமையும். பொருளாதார ரீதியில் பலம் பெரும் நாம், இதனால் பிரகாசமான எதிர்காலத்தை பெறக்கூடிய வாய்ப்புக்களும் அதிகம். இவை அனைத்திற்கும் அடிப்படையாக வருவது 'வாசிக்கும்' பழக்கம்.

புத்தகங்கள் வாசிப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கும் மாணவர்கள் மற்ற இதர விசயங்களில் சிறந்து விளங்குகிறார்கள்  என்பதை பல ஆய்வுகளின் மூலம் தெரிந்து கொள்கிறோம். வாசிக்கும் பழக்கத்தினை மையமாகக் கொண்டே மற்ற பள்ளிப்பாடங்களும் இருக்கின்றன. பூகோளம், சரித்திரம், அறிவியல், தமிழ், ஆங்கிலம், மலாய் என இருக்கும் பாடங்கள்,வழக்கமாக  புத்தகம் வாசிப்போருக்கு பெரிய பிரசினையாக இருக்காது.

மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பிடும் பெற்றோரும், ஆசிரியர்களும் பிள்ளைகளின் வாசிக்கும் திறனை கண்காணிப்பது  அவசியம். பொறுப்புள்ள ஆசிரியர்கள் இப்படி தனிக் கவனம் செலுத்தி தங்கள் வகுப்பு மாணவர்களை மேல் நிலைக்கு கொண்டு வருவதை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். வாசிப்பில் சற்று மந்தமான மாணவர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதம் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்களைக் கொடுக்கலாம். பிள்ளைகள் தாங்கள் வாசித்த புத்தகங்கள் பற்றி பேசும்போது அதைப் பாரட்டுவதும், மேலும் சில நல்ல புத்தகங்களை அவர்களுக்கு முன்மொழிவதும் நல்ல விசயங்கள் ஆகும்.

வாசிப்பது ஆர்வத்தை அதிகரிக்கும் ஒரு செயல். மூளையின் 'செல்' வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது். வாசிக்க வாசிக்க மூளையின் செல்களோடு அறிவும் வளர்கிறது.

ஆனால், எந்த நேரத்திலும் புத்தகங்களை படிக்கச் சொல்லி பலவந்தமாக பிள்ளைகளை பெற்றோர்கள் ஈடுபடுத்தக்கூடாது.  இது அவர்களுக்கு புத்தகங்களின் மேல் மட்டும் அல்ல, பள்ளிப்படிப்பிலும் வெறுப்பு ஏற்பட காரணமாகிவிடும்.

புத்தகம் வாசிப்பதை விரும்பி ஏற்றுக்கொள்ளும்போது ஏற்படும் பலன்கள் பல.  எப்போதும் சுவைபட ரசித்து படிப்பதையே பிள்ளைகள் விரும்புவார்கள். அதுவே நல்லதும் கூட. இந்த இனிமையான சூழ்நிலைக்கு பிள்ளைகளை உட்படுத்தும் யுக்திகளை கண்டறிவதே பெற்றோரின் கடமை.

ஆசிரியர்கள் ஒரு சில நேரங்களில் கண்டிப்போடு நடந்து கொண்டாலும், மற்ற நேரங்களில் அன்பாக, அனுசரணையாக வாசிப்புக்கென ஒரு பாடத்தை ஒதுக்கி பிள்ளைகளை ஊக்குவிக்கவேண்டும். பள்ளி நூலகத்தில்  இருக்கும்  சிறந்த புத்தகங்களை மாணவர்களின் தரத்துக்கேற்ப சுவாரஸ்யமாக விமர்சிக்கலாம். இதனால் மாணவர்கள்  அது போன்ற புத்தகங்களை தேடிப் படிப்பதில் ஆர்வம் கொள்வர். அவர்கள் படித்த புத்தகங்களைப் பற்றி சக மாணவர்களோடு கலந்து பேச வாய்ப்பு தருவது மற்ற மாணவர்களையும் இந்த நல்ல பயனுள்ள பழக்கத்தில் ஆர்வம் கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் .. .

மூளை இருக்கா...?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புதிய சவால்களைச் சந்தித்து வருகிறோம் இப்போது. காலையில் துயில் நீங்கி எழும் நேரம் தொடங்கி அன்றைய சவால்களைச் சந்திப்பதற்கும் அவற்றை வெற்றிகரமாக கடந்து வாழ்வை மகிழ்ச்சியாக தொடர்வதற்கும் '   நம்மால் முடியும்' எனும் மாபெரும் உந்துதல் சக்தி நமக்குத் தேவைப்படுகிறது. இவ்விடத்தில் நமக்கு பக்கபலமாக துணைக்கு வருவது நமது மூளையின் பங்களிப்பான 'அறிவும் ஆற்றலுமே'.

பல மாதிரியான தொடர் பயிற்சிகள் மூலம் சோம்பிக் கிடக்கும் நமது மூளையினை மொத்த பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிடலாம். 'மூளையின் வளர்ச்சி நாம் அதற்களிக்கும் பயிற்ச்சியிலே' என பொதுவாகச் சொல்வது உண்டு. இதிலிருந்து பயிற்ச்சி பெறாத மூளை வளர்ச்சியடைவதில் சுணக்கம் காட்டுவது தெரிகிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றனர் பெரியோர். இங்கே 'எண்' எனப்படுவது "கணிதத்தையும்", எழுத்து எனப்படுவது மொழியையும் குறிக்கும். நாம் தமிழர்களாக இருப்பதால் 'தமிழ் கற்பது அவசியம் எனக் கொள்ளலாம'. இவை இரண்டும் நமது மூளையின் வெளிப்பாடான அறிவை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

அந்த இரண்டோடு, தோப்புக்கரணம் போடுவதும் மூளை அபாரமாக செயல்பட நல்ல பயிற்சியாம். பூஜையின் முதல் அங்கமாக பிள்ளையாருக்குப் போடும் தோப்புக்கரணம் மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என இப்போது மேலை நாட்டினரும் புகழ்ந்து தள்ளத் தொடங்கிவிட்டனர். தலைக்குப் போகும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, நினைவாற்றலை வளப்படுத்துவதோடு சிந்திக்கும் திறனை பண்மடங்கு உயர்த்துகிறதாம்.

மருத்துவ உலகம் உட்கார்ந்து எழும் உடற்பயிற்ச்சியை தலைக்குச் சிறந்ததாக குறிப்பிடும்போது, அது நமது முன்னோர்கள் காலங்காலமாக பிள்ளையாருக்கு கொடுக்கும் முதல் மரியாதை என நினைக்கையில் உண்மையிலேயே உள்ளம் மகிழ்கிறது.  ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பதென்பது இதுதானோ..?       பிள்ளையாரை
 கும்பிட்டது போலவும் ஆகிறது, மூளை வளர்ச்சியும் சுறுசுறுப்பும் அடைகிறது.

பள்ளிப்பிள்ளைகள் இதை சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. காரணம், மூளையில் 'ஹிப்போகெம்பஸ்' எனும் இடத்தில் தான் படிக்கும் பாடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின் தேவைக்கு ஏற்ப நினைவு படுத்தப்படுகின்றன. இங்குதான் இறந்த மூளையின் உயிரணுக்களுக்குப் பதிலாக புதிய உயிரணுக்கள் பிறக்கின்றன. ஆக, பள்ளி மாணவர்கள் இதற்காகவும் தோப்புக்கரணம் போடுவதை வழக்கத்தில் கொள்ளவேண்டும். பரீட்சை நேரத்தில் தாங்கள் படித்த அனைத்தும் 'டான் டான்' என பதில் எழுத வரவேண்டாமா...

உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களுக்கு மூளை அறிவுப்பூர்வமான செயல் வடிவங்களைக் கொடுக்கிறது. வளர்ச்சியடைந்த மூளையால் செயல் திட்டங்கள் சிறக்கின்றன. ஆக, நல்ல எண்ணங்களோடு, நமது மூளை வளர்ச்சிக்கு நாமும் சில பயிற்ச்சிகளை ஒவ்வொரு நாளும் மேற்கொள்வோம்.

Tuesday 20 November 2012

இதுவும் வேண்டுமடா, எனக்கு . . .

நம் வாழ்வில் நடந்து விட்ட கசப்பான சம்பவங்களை இனி நினைக்கவே கூடாது என்றுதான் முயலுகிறோம். ஆனால் அப்படி முயற்சிப்பதே அச்சம்பவங்கள் ஆணி அடித்தாற் போல் நம் ஆழ்மனதில் பதிந்து விடக் காரணமாகி விடுகிறது.

பல வருடங்கள் நெருங்கிப் பழகிய நண்பர்கள் செய்த துரோகத்தினால் துவண்டு போனேன் ஒரு நாள்.

'இப்படியும் நடக்குமா....?' என்பதுவே  தினமும் நான் கேட்டுக் கொள்ளும் கேள்வி். இனிக்க இனிக்க பேசிய அந்தச் சில முகங்களை இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன்.  அவர்கள் சிரிக்க, இன்புற்றிருக்க நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் அன்று.... அட..அவை நிஜங்களா....? பொருள் இன்று போகும் நாளை வரும், உண்மை அன்பே நிலைத்து நிற்கும் என கூறிய அந்த முகங்களா பின்னர் அப்படி நடந்து கொண்டன...?

சுய நல நோக்கே இலக்காகக்கொண்ட அவர்களோடா நான் அத்தனை நாள் இருந்திருக்கிறேன்?  இன்று வெட்கித் தலை குனியும்  எனக்கு அன்று ஏன் புத்தி சரியாக வேலை செய்யவில்லை...???

சிந்தனையின் பின்னனியில்  என்னையே நான் கேட்டுக்கொள்ளும் கேள்விகள் இவை....


Sunday 18 November 2012

Deepavali photos....


இவ்வருட தீபாவளி கொண்டாட்டங்கள் எங்கள் இல்லத்தில் அமர்க்களமாக நடைபெற்று முடிந்தது. அப்போது வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்தான் இவர்...           திரு & திருமதி ராம் விக்கி தம்பதியரின் செல்வப் புதல்வி.