Monday 31 March 2014

படித்ததில் பிடித்தது : சாவித்ரி-8

சாவித்ரி- 8. தென்றலும் புயலும்

First Published : 27 June 2015 10:00 AM IST

1964.  சாவித்ரி உச்ச நட்சத்திரமாக இரண்டரை இலட்சம் சம்பளம் வாங்கிய வருடம். அவரது வாழ்வில் மறக்க முடியாத ஓர் ஆண்டாக ஆகிப் போனது. வேட்டைக்காரனின் விஸ்வரூப வெற்றியோடு தொடங்கி, ‘ஆயிரம் ரூபாயில்’ அட்டகாச நடிப்போடு பூர்த்தியானது. ஆனால்  டிசம்பரில்  ஜெமினி-சாவித்ரி ஜோடிக்கு ஏற்பட்ட இயற்கை பேரிடர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இடையில் சாவித்ரி எல்லாரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் திடீரென்று மேடைப் பிரவேசமும் செய்தார். ஓய்.ஜி. மகேந்திரனின் தாயார், ‘திருமதி. ராஜலட்சுமி’யுடன், ‘பாவம் பலராமன்’ என்ற அமெச்சூர்  நாடகத்தில்  பங்கேற்றார். அதில் நடிப்பதற்காக சாவித்ரி காட்டிய அக்கறையும், ஆர்வமும், இன்முகமும், ஈடுபாடும்  நடிகையர் திலகத்துக்கே உரியவை.  இன்றைக்கு வாசித்தாலும் பாவம் பலராமனில் சாவித்ரி மடிசார் மாமியாக கூடு விட்டு கூடு பாய்ந்தது மிக சுவாரஸ்யம்! 
‘எழும்பூர் பொழுதுபோக்கு சங்கத்தின் 50 வது ஆண்டு விழாவில் ‘பாவம் பலராமன்’ என்ற நாடகம் நடைபெற்றது. அதில் திருமதி ராஜலட்சுமிக்கு  பலராமன் எனும் ஆண் வேடம். அன்றைய சிறப்பு விருந்தினர்கள் ஜெமினி கணேஷ் - சாவித்ரி. பின்னர் அவர்களிருவரும் ராஜலட்சுமி என்கிற ராஷ்மியை எங்கே  பார்த்தாலும், ஜோடி நாயணமாகி
‘என்ன பலராமன் சார் சவுக்கியமா?’ என்று அமர்க்களமாகக்  கிண்டல் செய்தார்கள்.
பாவம் பலராமனில் துடுக்கு வெடுக்கு ‘அம்மாமி ரேவதி’. அந்த வேடம் சாவித்ரிக்கு மிகவும் பிடித்து விட்டது. கஸ்தூரி பாய் நிலையத்தின் நிதி உதவிக்காக பாவம் பலராமன் நடக்க இருந்தது. சாவித்ரியை அதில்  நடிக்கச் சொன்னார் ராஷ்மி. தட்டாமல், தயங்காமல் சட்டென்று  சரி என்றார் சாவித்ரி.
ஓர் அரிதார மோகத்தில், ஒப்பனை தாகத்தில் மடிசாரோடு மேடையில் தோன்ற  சம்மதித்து விட்டாரே தவிர,  சாவித்ரிக்கு எங்கே  ட்ராமாவில் தலை காட்ட நேரம் இருக்கப் போகிறது என நினைத்தார்கள் ஒய்.ஜி.பி. தம்பதியினர்.
ஆனால் நடிகையர் திலகம் சொன்ன சொல் தட்டாதவர். அவரது வீட்டிலேயே முதல் ஒத்திகை தொடங்கியது. பாவம் பலராமனின் டைரக்டர் ராஷ்மியின் கணவர் ஒய்.ஜி.பார்த்தசாரதி.
‘நடிகையர் திலகமாயிற்றே... நாம் போய் அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பதா...  என்கிறத் தயக்கத்தில் மவுனம் சாதித்தார். சாவித்ரி விடவில்லை.
‘இந்த நாடகத்தில் நடிக்க எல்லாரை விடவும் நான் தான் அதிகம் பயப்படுகிறேன். நான் சரியாகச் செய்யா விட்டால், மக்கள்  ‘பாவம் சாவித்ரி!’ என்பார்கள். கூச்சப்படாமல் அவ்வப்போது திருத்தம் சொல்லுங்கள்.’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் தான் செய்தது சரியா எனக் கேட்டு கேட்டு நடித்தார். யானைக்கும் அடி சறுக்கி விடக் கூடாது என்கிற அச்சம்  ஆழ் மனத்தில் அரித்தது. டைரக்டரை நடித்துக் காட்டச் சொல்லியும் சில  இடங்களில் மெருகேற்றிக் கொண்டார்.
இன்ன மாதிரியாக நடித்தால் இன்னும் காமெடியாக இருக்கும் என்றால்,  மகிழ்ச்சியுடன் தலையாட்டினார். அமெச்சூர் ட்ராமா தானே... என்கிற அலட்சியம் அறவே இல்லை.  இரண்டே நாள்களில்  வசனம் அனைத்தும் அத்துபடி ஆகி விட்டது.
நடிகையர் திலகம் தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து, மாறி மாறி ஜொலி ஜொலித்த நெருக்கடியான பொழுது.
சாவித்ரி சினிமா ஷூட்டிங் முடிந்ததும், இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ரிகர்சலில் பங்கேற்றார். ஒரே நாளில் ஏற்கனவே இரண்டு மூன்று  படங்களில் நடித்த களைப்பே இருக்காது. உற்சாகமாக ஒத்திகையில் ஒத்துழைத்தார்.  
மிகச் சாதாரண  புதுமுக ஹீரோயின்கள் கூட, மிகச் சில நாள்களிலேயே அலட்டிக் கொள்ள ஆரம்பிப்பார்கள்.
‘இன்னிக்கு நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும், என் போர்ஷனை முதலில் பார்த்துடலாம்.’ என்ற நச்சரிப்பு தாங்காது.
சாவித்ரி மிகுந்த பொறுமையோடு எல்லாரும் நடித்து முடிக்கும் வரை  காத்து நின்றார். ‘முதல்ல நான் நடிச்சிட்டுக் கிளம்பறேனே...’ என்று அடம் பிடித்தது கிடையாது. மற்றவர்கள் நடிக்க வேண்டிய கேரக்டர்களையும் அவர்களுக்கு நடித்துக் காட்டினார். அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் தானே என்று எவரையும் அவமதித்தவர் அல்ல.
பாவம் பலராமனில் பிராமணத் தமிழ் அதிகம். சாவித்ரி மூன்று முறை ஒரு டயலாகை சொல்லிப் பார்த்து,  டைரக்டர் ஓகே செய்த பிறகே, அடுத்த வசனம் பேச ஆரம்பிப்பார்.
தன்னையும் அறியாமல் தப்பும் தவறுமாக ஏதாவது உளறினால், ‘கை கொடுத்த தெய்வம் - கோகிலாவாகி’  வயிறு குலுங்கக் குலுங்க   வாய் விட்டுச் சிரித்தார். அவரால் சிரிப்பை அடக்கவே முடியாது. நள்ளிரவு தாண்டியும் ஒத்திகை  தொடர்ந்தது.
ரிகர்சலுக்குப் பிறகு  சாவித்ரி மட்டும்  தனியே  திரும்ப மாட்டார். வழியில் யாராவது  இறங்க வேண்டுமென்றால் அவர்களையும் ஏற்றிக் கொண்டு கார் பறக்கும்.
‘அன்னிக்கு என்னை சாவித்ரி, அவங்க வண்டியிலேயே ட்ராப் செஞ்சாங்களே..!’ என  உடன் நடித்தவர்கள்  பெருமைப்பட்டுக்கொண்டார்கள். நள்ளிரவில் ஒரு திரை தேவதையோடு, தங்களின் கனவுக்கன்னியோடு  பயணித்ததை காலமெல்லாம் எண்ணிப் பரவசம்  அடைந்தார்கள்.
ஒத்திகையைப் பார்க்க ஜெமினி கணேஷ், ஏ. நாகேஸ்வரராவ்  போய் இருக்கிறார்கள். ஆலோசனை... அது இது என்று மூச்சு விட மாட்டார்கள். நடிப்பு நெருப்பிடம் நெருங்க பயம்!
சாவித்ரிக்கு  இரண்டு வாரம் ஹைதராபாத்தில் தெலுங்கு ஷூட்டிங் வேறு. அதற்குள் அதிகமாக  காமெடி சீன்களைப் புதிதாகச் சேர்த்து விட்டார் ஒய்.ஜி.பி. சாவித்ரி சென்னை திரும்பிய போது நாடகத்துக்கு இரண்டு நாள்கள் மட்டுமே இருந்தன. வேலைப் பளு பற்றி அலட்டிக் கொள்ளாமல், சாவித்ரி விரைவாக கூடுதல் வசனங்களையும் கற்றுக் கொண்டு பிரமாதப் படுத்தினார்.
தமிழ் நாடகத்தில்  நடிக்க முதன் முதலாக சபை ஏறிய தினம். பூஜை சமயத்தில் சாவித்ரிக்கு உள்ளூறப் பதற்றம். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். மணி அடித்தார்கள். மடிசார் மாமி வேஷத்துக்காக 400 ரூபாய் மதிப்பில் நீல நிறத்தில், ஒன்பது கெஜம் பட்டுச் சேலையைக்  கட்டிக் கொண்டு நடித்தார் சாவித்ரி.
‘கோயில் வாசல்லயும் கிணத்தடியிலும் எனக்காக வந்து பல்லை இளிச்சிண்டு நின்னப்ப, தோணலையா இதெல்லாம்...?’
‘ஆண்டி பெத்தது அஞ்சும்  குரங்கும்பாங்க... சரியாய்த்தான் இருக்கு.’
‘நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு. விஜயனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு. அதைக் கேட்டவுடனே எலக்ட்ரிக் பில்லை பார்த்த மாதிரி ஷாக் அடிச்சி குதிக்கிறார்...’
என்றெல்லாம் மிகச் சரளமாக பிராமணத் தமிழில் அசத்தினார் சாவித்ரி. ஓர் இடத்தில் வசனத்தை மறந்து விட்டார். ராஷ்மி மெள்ள எடுத்துக் கொடுத்தார். சட்டென்று சுதாரித்து சாவித்ரி சரியாகப்  பேசி விட,  பலத்தக் கைத்தட்டல்கள்.
அமெச்சூர் நடிகைகள் மேடைகளில்  எப்போதும் தங்களது தடுமாற்றங்களை இலேசில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  டயலாக் எடுத்துக் கொடுப்பதை அவர்கள் விரும்பியதும் கிடையாது. ஆனால் சாவித்ரி கள்ளங் கபடம் அற்றவர். அந்த சீன் முடிந்ததும் ராஷ்மியிடம் சென்று, மிக்கப் பெருந்தண்மையுடன்
‘நீங்க அந்த வசனத்தை எனக்காக எடுத்துச் சொன்னீங்க. ரொம்ப நல்லதாப் போச்சு. இல்லாவிட்டால் மறந்து போய் இருப்பேன். உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்’ என்றார்.
-------------------------
காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!
ஜெமினி மிகவும் வெளிப்படையானவர். தன் வாரிசுகள் குறித்து  பூரிப்பும் பெருமிதமும் பொங்கப் பொங்கப் பேசுவதில் ஆர்வமுள்ளவர். அவரது முதல் குடும்பத்தில் பாப்ஜிக்கு நான்கும் பெண்கள். அவர்களில்  கணேசன் ஜெமினியில் சேருவதற்கு முன்பே பிறந்தவர் டாக்டர் ரேவதி. மற்றவர்கள்  டாக்டர் கமலா செல்வராஜ், நாராயணி, எய்ட்ஸ் நிவாரணத்தில் உலகப் புகழ் பெற்ற டாக்டர் ஜெயஸ்ரீ ஸ்ரீதர். ஆகியோர்.
 
ஜெயஸ்ரீ, கார்த்திக்குடன் ஸ்ரீதரின்  ’நினைவெல்லாம் நித்யா’ படத்தில் ஜோடியாக  நடித்துள்ளார். அவருடைய நிஜப் பெயர் ஜெயலஷ்மி. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தின் டைரக்டர் -  அறிமுக இயக்குநராக தேசிய விருது பெற்ற  ஸ்ரீதர்ராஜன். ஜெயஸ்ரீயின் கணவர்.
இரண்டாவது பந்தத்தில் 1953ல் சாவித்ரி, ஜெமினியின் வாழ்க்கையில் நுழைந்த பிறகு, புஷ்பவல்லி-ஜெமினி  இருவருக்கும் பிறந்தவர்கள் நடிகை ரேகா, மற்றும் அவரது தங்கை ராதா.
மூன்றாவதாக சாவித்ரிக்கு விஜயசாமுண்டேஸ்வரி. ஒரே குழந்தை! ஆக  ஏழு பெண்களைப் பெற்றும்,  காதல் சாம்ராஜ்யத்தின் ஏகபோகச் சக்கரவர்த்தியாக சந்தோஷ நடை போட்டவர் நடிக மன்னன்.
திருவிளையாடல் ஷூட்டிங்கில் நிகழ்ந்தவை... நடிகையர் திலகத்தின்  பக்திச் சொற்களில் :
‘சிவாஜி என்னை அம்மாடி என்று அழைப்பது வழக்கம். நான் முருகனை மடியில் வைத்துக் கொண்டேன். ‘முருகனை மடியில் வெச்சிட்டு இருக்கே. அம்மாடிக்குப் பையன் தான் பொறக்கப் போறான்’ என்றார் சிவாஜி. நாங்களும் ஆவலாகவே காத்திருந்தோம். அதற்குள் எங்களுக்கு ஏற்பட்ட பயங்கர சோதனை...?
ஒரு மகன் பிறக்க வேண்டும் என்பது ஜெமினி கணேசனின் ஆவல்.  நண்பர் வித்வான் லட்சுமணன் அவரிடம், ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறான்’ என ஜோசியம் சொல்லி இருந்தார்.
வேறு சில நண்பர்களும் ராமேஸ்வரம் போய் வந்தால் நல்லது என்று கூறினர்.  அதனால் நான், ஜெமினி கணேசன், டாக்டர் லீலாவதி, அவருடைய கணவர் டாக்டர் ராமகிருஷ்ணன், என் தாயார், மகள் விஜி எல்லாரும் கொடைக்கானலில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்டுப் போனோம். ஒரே நாளில் சென்று விட்டுத் திரும்புவதாகத் திட்டம்.
ரயில் பாம்பன் பாலத்தின் மீது மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. காற்று அதிகமாக இருந்தது. அப்போது நான்  ‘இந்தப் பாலம் காற்று அதிகமாக அடித்தால் அசைந்து கொடுக்குமோ என்னவோ... இரும்பு உத்தரங்கள் விழுந்து விடுமோ?” என்றேன். ‘நான் சொன்னவாறே ஆயிற்று!’
‘ராமேஸ்வரத்தில் என்ன நடந்தது...? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
சென்னை வானொலி நிலையத்தின் வானிலை அறிக்கையில்-
‘நாகப்பட்டினத்தில் மீண்டும் புயல் சின்னம்’ மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ஐந்தாம் எண் கொடி ஏற்றப்பட்டுள்ளது’ என்கிறச் செய்திகள்  இயல்பானவை.
1964. டிசம்பர் 21ஆம் தேதி அன்றும் ‘புயல் மெதுவாக நகர்ந்து நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும்’ என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது.
சென்னைத் தமிழர்கள் உல்லாசமாக மிட்லண்டில் நவராத்திரியும், பிளாசாவில் படகோட்டியும்,  சித்ராவில் தாயின் மடியிலும் பார்த்து ரசித்தார்கள். அதே நேரத்தில் புயல் நாகப்பட்டினத்தை நட்டாற்றில் விட்டு விட்டு தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்தது. ராமேஸ்வரத்தில் காற்றின் ரகளை ஆரம்பமானது.
ராமேஸ்வரம் - மண்டபம் இடையே மிக அதிசயமானது பாம்பன் பாலம். கடல் மீது கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் மீது ரயில் போகும். அதே சமயத்தில் கடலில் அந்த வழியாக கப்பல் ஏதும் வந்தால், கப்பல் செல்வதற்கு வசதியாக பாலம் இரண்டாகப் பிரிந்து வழி விடும். 
தனுஷ்கோடியை வெள்ளம் சூழ்ந்த நேரத்தில், பாம்பன் பாலத்தில் பிரயாணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. ஆவேசமான சுனாமி அலைகள்  பாலத்தோடு ரயிலையும் சேர்த்து அருந்திச் சுவைத்தன.  வெள்ளம் வடிந்த பின்பு பாலமும் அதன் மீது ஓடிய ரயிலும், தடங்களின்றி தண்ணீரில் தொலைந்து போய் இருந்தன. ரயில் பயணிகள் அனைவருமே கடலுக்கு பலி ஆனார்கள். 
தனுஷ்கோடிக்குள் கடல் புகுந்ததால் அடையாளம் தெரியாமல் மொத்த ஊரும் அழிந்தது. கடற்கரையில் மணலுக்குப் பதிலாக பிணங்களின் குவியல். அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். நாளிதழ்களில் அதிர்ச்சி தரும்  செய்திகளை வாசித்த மக்கள் நடுநடுங்கிப் போனார்கள்.
‘ஜெமினி கணேசன் - சாவித்ரி என்ன ஆனார்கள்...?’ என்று டிசம்பர் 24 - காலையில் தினசரிகள் கொட்டை எழுத்துக்களில்  கேள்வி எழுப்பின. சாதனைக் கலைஞர்களைக் காணாமல்  தமிழ்நாடு ஒட்டு மொத்தமாகப் பதறியது. 
ஜெமினி - சாவித்ரி உயிர் தப்பியது அதிசயத்திலும் அதிசயம்! அவை  அவர்களது அவஸ்தை வார்த்தைகளில்  இனி:
‘ராமேஸ்வரத்தில் சுவாமி கும்பிட்டு விட்டு தனுஷ்கோடி சென்றோம். அங்கு கடலில் குளித்தோம். அன்று டிசம்பர் 22 ஆம் தேதி. குளித்ததும் ராமேஸ்வரத்துக்குத் திரும்பி விடலாம் என்றேன் சாவித்ரியிடம்.மேலும் ஒரு நாள் இங்கேயே தங்கி விட்டுப் போகலாம் என்றாள்.
நான் பிடிவாதமாக எல்லாரையும் புறப்படச் செய்தேன். மாலை நாலரை மணிக்கெல்லாம் ரயிலில் ராமேஸ்வரம் திரும்பி விட்டோம். ரயில் நிலையம் அருகிலேயே பயணிகள் குடிலில் தங்கினோம். இரவு எட்டு மணிக்கு நான் படுத்துத் தூங்கிவிட்டேன்.’  ஜெமினியை மேலே பேச விடாமல், சாவித்ரி குறுக்கிட்டுத் தொடர்ந்து கூறியவை.   
 ‘எட்டரை மணிக்குப் புயல் அடிக்க ஆரம்பித்து விட்டது. நள்ளிரவு நேரத்தில் சூறாவளி. ஓ! என்ற சத்தத்துடன் காற்று சுழன்று சுழன்று அடித்தது. காற்று இவ்வளவு பலமாக இருக்கிறதே, என்ன ஆகுமோ...!’என்று நானும் டாக்டர்களும் கவலையோடு பேசிக் கொண்டோம். இரவு முழுவதும் நான் தூங்கவில்லை.  நரிகளின் ஊளைச் சத்தம்... எங்களை நடுநடுங்கச் செய்தன. வர வர புயல் அதிகமாகியது. அவர் விழித்துக் கொண்டார். சினிமாவில் வருவது போன்ற பயங்கர சம்பவம், வாழ்க்கையிலும் நடக்கிறதே என்று எண்ணினேன்.
அதிகாலை மூன்றரை மணி முதல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோரப் புயல் உச்சக்கட்டத்தை அடைந்தது. எங்கள் விடுதியின் கூரைகள் பறந்து விட்டன. விடிந்ததும் எங்கும் வெள்ளக்காடாக இருந்தது.
‘என்னம்மா... ரோட்டில் ஆறு மாதிரி தண்ணி ஓடுது...!’ என்று என் மகள் விஜயா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
 கோயிலுக்குப் போகிற வழியெல்லாம் மரங்கள் வேரோடு விழுந்து கிடந்தன.  வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. 
‘இவ்வளவு பயங்கர புயல்  வீசி இருக்கிறதே... நாங்கள் திரும்பிச் செல்ல ரயில் கிடைக்குமா?’ என்று கேட்டோம்.’ரயிலா ? பாம்பன் பாலத்தையே கடல் அடித்துப் போய் விட்டதே! தனுஷ் கோடி கடலில் மூழ்கி விட்டது என்றார் கோயில் அதிகாரி.
அன்று முழுவதும் ராமேஸ்வரத்தில் தங்கினோம். நாங்கள் ஆயிரம் ரூபாய் கொண்டு போய் இருந்தோம். அதை அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தோம். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க உதவினோம்.
25 ஆம் தேதி காலை எழுந்ததும், எப்படி ஊர் திரும்புவது என்ற கவலை ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் ஒரு ரயில் என்ஜின்  மட்டும் நின்று கொண்டிருந்தது.அதில் ஒரே ஒரு பெட்டியை மட்டும் இணைத்து  எங்களை பாம்பனில் கொண்டு விடச் சொன்னோம்.
டிரைவர், ‘ரயிலை ஓட்டுவதற்கு  நிலக்கரி இல்லை.  நான் போய் எடுத்து வருகிறேன்.’ என்றார். போனவர் திரும்பவே இல்லை.
மாலை  நாலு மணிக்கு பாம்பனில் இருந்து வந்தது ரயில். புயல் நிவாரணப் பணிகளை கவனிக்க மந்திரி கக்கன் இறங்கினார். விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்கள் விழுந்தன. அவற்றை அதிசயமாகப் பார்த்த என் மகள், ஆறு வயது சிறுமி விஜி அதை ஒன்று இரண்டு என்று எண்ணினாள்.
26 ஆம் தேதி. காலை. அமைச்சர் கக்கன் சென்ற ரயிலிலிலேயே  நாங்கள் பாம்பன் போனோம். அங்கிருந்து மோட்டார் படகில் ஏறி மண்டபத்தை அடைந்தோம். அங்கு எங்களுக்காக கார் காத்திருந்தது. மாலையில் மதுரை விமானத்தில் கிளம்பி சென்னை திரும்பினோம். தனுஷ்கோடி புயல் நிவாரண நிதிக்காக   செஞ்சிலுவை சங்கத்திடம் பத்தாயிரம் ரூபாயும், முதல்வர் காமராஜரிடம் ஐயாயிரம் ரூபாயும் வழங்கினோம்.
 
1965. ஜூலை 31. ‘திருவிளையாடல்’ ரிலிசானது. ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி மகன் சதீஷ் பிறந்தான். எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. ஈஸ்வரனின் திருவிளையாடல்களைப் பற்றிய சினிமாவில் நடிக்க நேர்ந்தது. ஈஸ்வரனை, ராமர் பூஜித்த ஸ்தலத்துக்குப் போய் வந்தது.  இப்படியெல்லாம் எங்கள் ஆசை பலிதமாவதற்கு ஒரு சம்பந்தம் இருக்க வேண்டும் என்று  மனம் நினைத்து  நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டது.
சென்னை விமான நிலையத்தில் எங்களைப் பார்த்ததும்,  மாலை அணிவித்து ‘வந்திட்டீங்களா...’ என்று கட்டிப்பிடித்து கதறி அழுதார் மனோரமா.  நண்பர் கே. பாலாஜி, டைரக்டர் ஏ.பி. நாகராஜன்,  ஆகியோரும் வரவேற்க வந்திருந்தார்கள்.’- ஜெமினிகணேசன் -சாவித்ரி. 
ஜெமினி நேராக பாப்ஜியின் இல்லத்துக்கு விரைந்தார். மறுபிறவி எடுத்த அன்புள்ள அப்பாவைப் பார்க்க அவரது மகள்கள் துடித்துக் கொண்டிருந்தனர். பாப்ஜி பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
‘கணவனே கண் கண்ட தெய்வம்- மனாளனே மங்கையின் பாக்கியம்’ என வாழ்ந்த மாதர் குல மாணிக்கம். குணசுந்தரி.கற்புக்கரசி! அவர் காதல் மன்னனுக்கு ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

எங்கள் வீட்டு செல்லத்தின் லேட்டஸ்ட்...









Thursday 27 March 2014

நாமும் நமது பிரச்சினைகளும்...


சில நேரங்களில் நாமும் இந்த மீனைப்போல நமது எதிரிகளிடமே போய் மாட்டிக்கொள்கிறோம், சற்றும் எதிர்பார்க்காமல்...
இது நேஷனல் ஜொக்கிராஃபிக் போட்டோ! 

புதிய பறவைகள்...

















 


டிவ்யா சைக்கிள் ஓட்டும் படங்கள்...







Sunday 16 March 2014

பழைய பாடல்கள்...

பழைய பாடல்களிலிருந்து இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் போன்றோரின் இசைக்கு மாறுவதற்கு சில காலம் பிடித்தது எனக்கு. எம் எஸ் விஸ்வநாதன் இசையிலே அவருடைய மெல்லிசை மெட்டுக்களை ரசித்தபடி ஆனந்தமாய் இருந்த நேரத்தில் அவரின் புதுப்படங்கள் இல்லாத போது கூட, அவர் இசையமைத்த பழைய படங்களின் பாடல்களில் மெய்மறந்து இருந்த  காலம் அது.

பி.சுசீலா, எஸ். ஜானகி மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களின் இனிமை வேறு
யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது எனும் எண்ணத்தில் இருந்த போதுதான்,
" தம் தன் தம் தன் தாளம் வரும்..."
எனும் அந்த குரலைக் கேட்டேன். " அட, இந்தப் பெண்ணும் நல்லா பாடுறாங்களே..." என அவரின் குரலில் வந்த பாடல்களை தேடிய போதுதான், புதிய பாடல்களில் மனம் லயிக்கத் தொடங்கியது.

என் வானிலே, ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள், கவிதை தாரகை ஊர்வலம்

ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

அதிலும் அவர் பாடியவற்றுள், இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகியது....

brb

Saturday 15 March 2014

படித்ததில் பிடித்தது : சாவித்ரி-7

சாவித்ரி-7. மஞ்சள் முகமே வருக!

First Published : 20 June 2015 10:00 AM IST
சா
வித்ரி ஆபத்பாந்தவி என்பதை முன்னமே சொல்லி இருக்கிறேன். அது எல்லா கட்டங்களிலும் நிருபணமானது. 1964ல் அதிலும் ஒரு புது அனுபவம். உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொண்ட உணர்வை சாவித்ரிக்கு ஏற்படுத்தியது தேவர் பிலிம்ஸ்.
சின்னப்பாதேவர்  சினிமாவில் சிகரம் தொட்ட உன்னத தமிழன்! 2015 ஜூன் 28ல் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. திரைக் கலைக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் ஆற்றிய சேவைகள் வேறு எவராலும் நெருங்க இயலாதவை. தமிழர்களும் அனைவரும் பெருமைப்படவேண்டிய சாதனையாளர். எவராலும் எளிதில்  கட்டுப்படுத்த  முடியாத எம்.ஜி.ஆர். என்கிற யானையை, தோழமை அங்குசத்தால் ஆண்டவர்.
பத்மினிக்கு திருமணம் ஆகிவிட்டது. சாவித்ரி பருமனானார். விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆரின் மனைவி என்பதால் மூவேந்தர்களும், அவருடன் ஜோடியாக நடிக்க ஆர்வம் காட்டவில்லை. மிச்சம் இருந்தவர்கள் சரோவும் தேவிகாவும். அதில் தேவிகாவை விட சரோவுக்கு விநியோகஸ்தர்கள், ரசிகர்களின் ஆதரவு அதிகம்.        
சரோஜாதேவி என்கிற மொழி தெரியாத குருப் டான்சருக்கு, தேவர்  எட்டுப் படங்களில் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு  அளித்தார். அதில் குறுகிய காலத்தில்  எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஐந்து வெற்றிச் சித்திரங்கள். கன்னடத்துப் பைங்கிளியாகவும், கை தொடாத ரோஜாவாகவும் மக்களின் மனத்தில் நிலை நிறுத்தி சரோஜாவை  உச்சம் தொட வைத்தவர் தேவர்.
அதை மறந்து சரோவின் தாயார் ருத்ரம்மா, தேவரிடமே நன்றிக் கெட்டத்தனமாக நடந்து கொண்டார்.
 
இந்தியாவிலேயே வெற்றுக் காசோலைகள் வழங்காத ஒரே தயாரிப்பாளர் தேவர். கலைஞர்களுக்கான  முழு சம்பளத்தையும்  பணக்கட்டுகளாக மேஜையில் அடுக்கியவர். அதற்கேற்ப  ஒட்டு மொத்தமாக கால்ஷீட்டையும் பெற்று, குறித்தத் தேதியில் படத்தை ரிலீஸ் செய்தவர்.
1963  விடுதலை நாள் வெளியீடு ‘நீதிக்குப் பின் பாசம்.  பாதிக்குப் பின் மோசம் எனப் பத்திரிகைகள் கிண்டல் அடித்தாலும் வசூலை அள்ளியது. அடுத்து வேட்டைக்காரனில் சரோவை ஒப்பந்தம் செய்யச் சென்றார் தேவர். ருத்ரம்மா நடந்து கொண்ட விதம், தேவரின் சந்தனம் பூசிய மேனியில் அனலை வாரி இறைத்தது.
‘முன்ன மாதிரி ஒரேயடியா கால்ஷீட் கொடுக்க முடியாதுங்க. பாப்பா டே அன்ட் நைட் வேல செஞ்சாலும் போதல.’
‘வர்ற பொங்கலுக்கு வேட்டைக்காரன் ரிலீஸ். எம்.ஜி.ஆர். நான் கேட்டபடி கால்ஷீட் கொடுத்திட்டார். அதை வீணாக்க முடியாதே. அதுக்கேத்த மாதிரி சரோஜா வந்து நடிக்குமா இல்லையா...?’
‘இப்படிப் பேசினா எம்பொண்ணு உங்க சினிமால நடிக்காது.’
‘உங்க மக என் படத்துல நடிக்கறதா வேண்டாமான்னு நீங்க முடிவு செய்யக் கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான்!’
மறத்தமிழன் சாண்டோ சின்னப்பா தேவர் சீற்றம் அடங்காமல் வெளியேறினார்.
சரோவை இழப்பதில் எம்.ஜி.ஆருக்குச் சம்மதமில்லை. சிநேகிதரை சமாதானம் செய்தார். இனியும் தன் கம்பெனியில் சரோவுக்கு வேலை கிடையாது என்று தேவர்  திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். வேட்டைக்காரனில் இனி யார் ஹீரோயின் என்பது அன்றைய மில்லியன் டாலர் கேள்வி. தேவருக்கு கவுரவப் பிரச்சனை. எப்பாடு பட்டாவது 1964 பொங்கலுக்குப் படம் வந்தாக வேண்டும்.
 
‘ஆனந்த ஜோதியில்’ எம்.ஜி.ஆரும் தேவிகாவும் ஜோடி. நன்றாகவே ஓடி வசூலித்தது. தேவிகா, சரோ கிடையாது என்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். வாத்தியாருடன் தேவிகா நடிப்பதாக இருந்த அத்தனைப் படங்களும் கேன்சல் ஆனது.
சரோவின் இடத்தை நிரப்புவது அத்தனைச் சுலபமல்ல. தேவர் பிலிம்ஸ்- எம்.ஜி.ஆர். கூட்டணி வெற்றிகளைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத தருணம்.
புதிதாக யார் கிடைப்பார்கள்...? எம்.ஜி.ஆரும் சாவித்ரியும் இணைந்து நடித்த ‘பரிசு’ தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
கனமான தோற்றத்தைத் தவிர, நடிகையர்திலகத்திடம் குறை ஒன்றுமில்லை. தேவரின் கார் சாவித்ரி வீட்டை நோக்கிச் சென்றது.எப்போதும் போல்  சாவித்ரிக்குத் தெலுங்கிலும் தொடர்ந்தது வெற்றித் தேரோட்டம். அவரை  உடனடியாக வேட்டைக்காரனில்  நடிக்க வைப்பதில் ‘தேவர் பார்முலா’ பயன் அளித்தது.
இரண்டு படங்களில் சாவித்ரியை ஒப்பந்தம் செய்து, அதற்கான முழு ஊதியமும் கையோடு வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்.- சரோவுக்காக எழுதப்பட்ட உல்லாசமான சம்பவங்கள் நடிகையர் திலகம் நடிப்பதற்காக உருக்கமாகத் திருத்தி எழுதப்பட்டன. எம்.ஜி.ஆர். சினிமாவில், ஒரு ஹீரோயினுக்காக முதலும் கடைசியுமாகத்  திரைக்கதை மாறியது வேட்டைக்காரனில் மட்டுமே. அது சாவித்ரியின் நடிப்பாற்றலுக்குக் கிடைத்த 1964-ன் ஆஸ்கார்.
எம்.ஜி.ஆரும்  தாய்க்குலங்களைக் கவரும் வகையில், ஏழு வயதுச் சிறுவனைத்  தூக்கி வளர்க்கும் பொறுப்புள்ளத் தந்தையாக, ‘வெள்ளி நிலா முற்றத்திலே’ பாடினார்.
 
தமிழில் முதன் முதலாக ‘கவ்பாய்’ காஸ்ட்யூமில் வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர். ‘வெற்றி! வெற்றி!’ என்று ஓடி வர, புரட்சி நடிகரின் தோள்களை அணைத்து சாவித்ரி தாராளமாகக் கொஞ்ச,  ‘மஞ்சள் முகமே வருக!  மங்கல விளக்கே வருக!’ பாடலோடு வாகினியில்  நிச்சயித்த தேதியில் படம் சரியாகத்  தொடங்கியது.
வேட்டைக்காரனில் நடிக்க ஏன் ஒப்புக் கொண்டோம் என்ற கடுப்பு சாவித்ரிக்கு உண்டானது.
மென்மையான அணுகு முறையோடு எப்போதும் பீம்பாயின் இயக்கத்தில் தென்றல் வீசும். அதனாலேயே பீம்சிங் - சாவித்ரி இருவரும் மிகச் சில ஆண்டுகளில் ஒன்பது படங்களில் இணைந்து பணியாற்ற முடிந்தது. அது ஓர் அபூர்வ சாதனை. தமிழில் சாவித்ரி நடித்து அதிகப் படங்களை இயக்கிய பெருமை பீம்சிங்கையே சேரும்.
தேவர் பீம்சிங்கிங்கிற்கு நேர் எதிர். வாகினியில் வேட்டைக்காரன் படப்பிடிப்பு காட்டு தர்பாராகக் காட்சியளித்தது. எம்.ஜிஆர். வர தாமதம் ஆகும். அப்போது எம்.ஜி.ஆரைக் காணாமல் டீ கொடுக்கும் பையன்களைக் கண்ட மாதிரி ஏசி அடிக்கவும் செய்வார் தேவர்.  
வேட்டைக்காரனில் வேண்டா வெறுப்பாக நடித்த போது, அன்றாடம் சாவித்ரி சந்தித்த சங்கடங்கள் ஏராளம். அவற்றைச் சுடச்சுட ஆரூர்தாஸிடம், கொட்டித் தீர்த்தார்.
‘இதென்ன ஷூட்டிங்கா இல்லே. யுத்த களமா?  ஒரே சத்தம். அடிதடி கலாட்டாவாயிருக்கு. எங்க வீட்டுக்காரரு அப்பவே சொன்னாரு. உனக்கும் தேவருக்கும் சரிப்பட்டு வராதுன்னு.    
தேவர் வேட்டிய மடிச்சிக்கட்டிக்கிட்டு ப்ரொடக்ஷன் ஆளுங்களை வெரட்டி வெரட்டி  அடிக்கிறாரு. ஹீரோ என்னன்னா எதையுமே கண்டுக்காம இருக்கிறாரு. இப்படியொரு ஷூட்டிங்கில் நான் இதுவரை நடிச்சது கிடையாது. ஏன்... பார்த்தது கூட இல்ல.
ஒக்காரவே விட மாட்டேங்கிறாரு தேவர்.  ரிகர்சல் பாக்குறதுக்குள்ளே டேக் டேக்னு அலறுறாரு. எனக்கு ரொம்ப நெர்வஸா இருக்கு.  இப்படின்னு முந்தியே தெரிஞ்சிருந்தா, நான் ஒத்துக்கிட்டு இருக்கவே மாட்டேன். மொத்தப் பணத்தையும் செட்டில் பண்ணி கால்ஷீட் வாங்கிட்டு கூத்தடிக்கிறீங்க.
இனியும் நான் இங்க நடிக்க மாட்டேன். இந்த ஒரு படமே எனக்குப் போதும் சாமி. இதோட என்னை விட்டுடுங்க. அப்படிப் பதற்றத்தோட பணம் சம்பாதிக்கணும்ங்கிற அவசியம் எனக்கு இல்லை. என் டைப்புக்கு இது சரி வராது. ஏன் தேவர் பிலிம்ஸ்ல நடிக்க ஒத்துக்கிட்டேன்னு எல்லாரும் கேக்குறாங்க.’
ஆனால் வேட்டைக்காரனில் சாவித்ரி  சலிப்போடா தெரிகிறார்? அதுவே அவரது நடிப்பின் சாகஸம். சாவித்ரி அதுவரையில்  வன விலங்குகளுடன் நடித்தவர் அல்ல. காட்டு மிருகங்களுடன் அவர் நடிக்க, சாவித்ரிக்குப் பிரத்யேக வழி காட்டியவர் வாத்தியார். அதை சாவித்ரியும் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
‘மகாதேவியில் முதன் முதலாக  எம்.ஜி.ஆருடன் நடித்தேன்.  அப்போது, தாய்க்குப் பின் தாரம் அமோக வெற்றி அடைந்திருந்தது. அதில் வந்த மாட்டுச் சண்டைக் காட்சி தமிழ்ப்பட உலகில் புதிய திருப்பம். தமிழ்ப் படங்களில் சிருங்காரம், வீரம்  இரண்டிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. இந்தப் புதுமையே அவருடைய படங்களைச் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்க்கச் செய்தது. 
அந்தந்த சீனுக்குத் தகுந்தபடி நம்மை நடிக்கத் தயார் செய்து விடுவார்  எம்.ஜி.ஆர். காட்சிகளுக்கேற்றவாறு நம்முடைய நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொடுப்பார். ஆனால் நடிக்கும் போது மட்டும் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று வற்புறுத்திச் சொல்லுவார்.  
‘நன்றாக நடிக்க வேண்டியதுதான். ஆனால் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.  பட முதலாளிகள் நம்மை நம்பி நிறையப் பணம் போட்டுப் படம் எடுக்கிறார்கள்.  நாம் கவனமாக நம்முடைய காட்சிகளை  முடித்துக் கொடுக்க வேண்டும். நம்மால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும்படி செய்து விடக்கூடாது.’ என்பார் எம்.ஜி.ஆர்.’
1963 தீபாவளிக்கு சாவித்ரி நடித்து பரிசு, கற்பகம் என இரண்டு வெற்றிப் படங்கள் வெளியாயின. ஆனால் அதைக் கொண்டாட சாவித்ரி சென்னையில் இல்லை. வேட்டைக்காரன் ஷூட்டிங்கிற்காக ஊட்டி அவுட்டோரில் இருந்தார்.
‘ஒரு கதாநாயகன் கதை சொன்னான்’ என்று கல்லட்டி நீர்வீழ்ச்சியில்  எம்.ஜி.ஆருடன் ஆடிப் பாடினார்.
மறு நாள் தீபாவளி. எம்.ஜி.ஆர். வள்ளல். யூனிட் மொத்தத்துக்கும் வேட்டி சட்டையோடு, கைச்செலவுக்கு இருநூறு ரூபாய் பணமும் வழங்கினார். மக்கள் திலகத்துக்குத் தான் ஒன்றும் சளைத்தவர் கிடையாது என்று சாவித்ரியும் நிரூபித்தார்.
அவரும் டைரக்டர் திருமுகம் உள்படத் தொழிலாளர் அனைவருக்கும் இருநூறு ரூபாய் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 1963ல் அதன் மதிப்பு ஒரு பவுனை விடவும் அதிகம். அப்படியெல்லாம் தீபாவளியின் போதும் வீடு திரும்பாமல் கூட, அருமையாக நடித்துக் கொடுத்த சாவித்ரிக்கு நடந்தது அவமானம் மட்டுமே.
வாகினியில் வி.ஐ.பி.களுக்கான வேட்டைக்காரன் சிறப்புக் காட்சி. எம்.ஜி.ஆரும்-வி.என். ஜானகியும் வந்து விடவே விரைந்து மணி அடித்து விட்டார் தேவர். டைட்டில் தொடங்கிய ஒலியைக் கேட்டதும், சாவித்ரியின்  முகம் சிவந்தது. உள்ளே நுழையப் பிடிக்காமல் சட்டென்று, வேகமாக காரைத் திருப்பி  கோபத்துடன் வெளியேறினார். அவரை வரவேற்று அழைத்துச் செல்லக் காத்திருந்த ஆரூர்தாஸ் அதிர்ந்து நின்றார்.
சாவித்ரியின் கூடவே பிறந்தவை முன் கோபமும்  சுயமரியாதையும். மறுநாள் காலை. மனக் கொதிப்பு அடங்காமல் தொலைபேசியில் ஆரூர்தாஸிடம் நியாயம் கேட்டார் சாவித்ரி.
‘நேத்து ராத்திரி நான் ப்ரொஜெக்ஷனுக்கு வந்தது எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் தெரியுமா?’
‘நான் சொல்லல.’
‘எதுக்குப் பயம்? சொல்ல வேண்டியதுதானே. விரட்டி விரட்டி வேல மட்டும் வாங்கத் தெரியுது. நாள் தவறாம கரெக்டான டயத்துக்கு வந்து எவ்வளவு ஒத்துழைச்சி நடிச்சேன். எனக்காகக் கொஞ்சம் காத்திருக்கக் கூடாதா? குடியா முழுகிடும்?’
ஆண் ஆதிக்கம் மிக்க கோலிவுட்டில் ஒரு நடிகை அனைத்துத் தருணங்களிலும் அடங்கி நடக்க வேண்டும். இல்லாவிடின் அவர் தூக்கி வீசப்படுவார். அத்தகைய விதிகளை அநாயாசமானத் தன் நடிப்பாற்றலால் அன்றே வீழ்த்தி எறிந்தவர்  சாவித்ரி. அதன் விளைவு விரைவில் தெரிந்தது.
 
யோகானந்த் மதுரை வீரன், காவேரி, ராஜாதேசிங்கு, பார்த்திபன் கனவு, போன்ற முத்திரைச் சித்திரங்களின் டைரக்டர். பின்னாளில் ‘தாய்,  நான் வாழ வைப்பேன், வா கண்ணா வா’ உள்ளிட்ட  சிவாஜியின்  மிக அதிகமான சினிமாக்களை இயக்கியவர்.
பாசமலர்  கதையை எழுதிய கொட்டாரக்கராவோடு இணைந்து  ‘பரிசு’  படத்தைத் தயாரிக்கத் தொடங்கினார். எம்.ஜி.ஆர். ஹீரோ. அப்போது நடந்த அவலம் டைரக்டரின் வார்த்தைகளில்: 
‘எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.  எனது இயக்கத்தில் சரோ கால்ஷீட் குளறுபடிகள் செய்ததால், அவரை எங்களது தயாரிப்பில் போடத் தயங்கினேன்.
‘பரவாயில்லை. நான் உங்களை அனுப்பியதாக, சரோஜாவிடம் கூறுங்கள். கால்ஷீட் தருவார்.’ என்று எம்.ஜி.ஆர்.  சொன்னதும், எனது சுயகவுரவத்தையும் பாராமல் அட்வான்ஸ் பணத்தை எடுத்துக் கொண்டு சரோஜாதேவியின் வீட்டுக்குப் போனோம்.
சரோவின் அம்மாவும், சரோவும் எங்களிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசி விட்டு, ‘மற்ற விஷயங்களை எங்கள் மேனேஜரிடம் பேசிக் கொள்ளுங்கள்.’ என்று முகத்தில் அடித்தாற்போல்  கூறியதுடன் வீட்டினுள்ளே சென்று விட்டனர். 
எனக்கு வந்ததே ஆத்திரம். இனி சரோஜாதேவியே வேண்டாம் என்று நடந்ததை எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
‘சரி, அவருக்குப் பதிலாக யாரைப் போடப் போறீங்க?’ என்றார்.
சாவித்ரியை என்றேன். ஓகே சொன்னார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர்.- சாவித்ரி நடித்த பரிசு நன்றாக ஓடியது. தொடர்ந்து அவர்களையே ஜோடியாக வைத்து ‘வாழ்வே வா’ என்ற படத்தை ஆரம்பித்தேன்.
பூஜை போட்டு இரண்டு நாள்கள் மாத்திரம் படப்பிடிப்பு நடைபெற்றது. எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்துத்  தருவார் என நம்பி,  தி.நகர். ஜி.என். செட்டித் தெருவில் மூன்றரை வருடம் ஆபிஸ் வைத்திருந்தேன். ஷூட்டிங் நடக்காமல் வெறும் அலுவலக நிர்வாகம் நடந்ததில் எனக்கு  நாலு லட்சம் நஷ்டமானது. அதை என் வீட்டை விற்று சரி செய்தேன்.
நான் எம்.ஜி.ஆர். சொல்படி சரோஜாதேவியை நாயகியாகப் போடாமல், சாவித்ரியைப் போட்டு  எடுத்ததால்  ‘வாழ்வே வா’  படம் ‘வாழ்வே போ’என்று என்னை அழ வைத்தது.’   
1964 தைத் திருநாளில் வெளியானது பத்மினி பிக்சர்ஸ் ‘கர்ணன்’ வண்ணச் சித்திரம்!  பந்தலுவின் பிரம்மாண்டம் உண்டாக்கிய எதிர்பார்ப்பு, நடிகர் திலகம் - நடிகையர் திலகம்- என்.டி.ராமாராவ் கூட்டணியின் அற்புத நடிப்பு அத்தனைக்கும் முன் வேட்டைக்காரன் சராசரி என்றே எம்.ஜி.ஆரும் சாவித்ரியும் நினைத்தார்கள். ஒட்டு மொத்தத் தமிழர்களின் எண்ணமும் அதுவே.
வாத்தியாரே எதிர்பாராத வண்ணம்  அதிக செலவின்றி கருப்பு வெள்ளையில் தயாரான வேட்டைக்காரன் வசூலில் முரசு கொட்டியது.
‘மெதுவா மெதுவா தொடலாமா... என் மேனியில் உன் கை படலாமா...’
உள்ளிட்ட லவ் டூயட்டுகளில் சரோவுக்கும் கூடுதலாகவே எம்.ஜி.ஆரை கட்டிப் பிடித்து நெருங்கி நடித்தார் சாவித்ரி. தமிழகமெங்கும் அன்றைய கார்த்திகை ராத்திரிகளில் இன்பத் தத்தளிப்பு!
சாவித்ரியின் உற்சாக உத்சவத்தை அப்பட்டமாகப் பதிவு செய்திருக்கிறார் கலாப்ரியா.
‘அது வேட்டைக்காரன் பார்த்துவிட்டு வந்த முன்னிரவு. சாவித்ரி என்னமா நெருங்கி நடிச்சிருக்கா. பரிசு படத்தை விட ஓவர்.   ஜெமினி பார்த்தார்னா செத்தார். எனத் தெருவில் ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருந்தன.
இன்னக்கி ராத்திரி கனவுலே சாவித்ரி அத்தை வரப்போறாலே... எங்க வீடுதான் முதல்ல இருக்கு. முதல்ல என் கனவுலதாம்லே வருவா.’ என்று சொல்லிவிட்டு மஞ்சள் முகமே வருக என்று பாடினான்.
‘ஏல,  ஒரு கதாநாயகன் கதை சொன்னான் இந்தக் கண்ணுக்குள்ளும் அந்த நெஞ்சுக்குள்ளும்...’  பாட்டு இப்ப வரும்லே போய்க் கேட்போமா’.   
‘சொல்லப் பொறுக்குமா... தியேட்டரை நோக்கி ஓடினோம்.’ - கலாப்ரியா
இன்னமும் சின்னத்திரைகளில் வாரம் தவறாமல் வேட்டைக்காரன் ஒளிபரப்பாகிறது. 
வேட்டைக்காரன் வெற்றியடைந்தும், அதோடு தேவர் பிலிம்ஸூக்கு சாவித்ரி டாட்டா காட்டிவிட்டார். சொல்லையும் செயலையும் ஒன்றாக பாவிக்கும் உயர்ந்த குணம் சாவித்ரிக்கு. இரட்டை நாக்கு அவருக்கு   இல்லை.

Thursday 6 March 2014

சோமட்டைசேஷன் டிஸ்ஸோடர்...


காப்புறுதி தொழிலில் ஈடுபடும் போது நாம் இப்படியும் ஒரு சிலரை சந்திக்கவேண்டிய சந்தர்ப்பம் கிட்டுவதுண்டு.  மருத்துவர்களிடம் அழைத்துச்சென்று காட்டினாலும் இந்நிலையில் உள்ளோரை சாந்தப்படுத்த முடியாது.

அன்மையில் நண்பர் ஒருவர் தனது மனைவியின் உடல் நிலை குறித்து பல மருத்துவர்களை கலந்தாலோசித்து விட்டலும் இன்னும் திருப்தியாக படவில்லை என்றார்.

" எல்லா ஸ்பெஷலிஸ்ட்டுகளையும் பார்த்துட்டோம் சார். ஆனா, என் மனைவிக்கு அப்படி ஒன்னுமில்லென்னுதான் சொல்றாங்க...." என்றார்.

"அப்படி உங்கள் மனைவி என்ன பிரச்சினையில தான் இருக்காங்க ? "

 " என்ன சார்,
சில நேரங்கள்ல கழுத்து வலிக்குதுங்கறாங்க,
நாக்கு மருத்து போகுதுங்கறாங்க,
இருதயம் படபடக்குதுங்கறாங்க...
இன்னும் தலை சுத்துது,
மயக்கம்மா வருதுன்னு இப்படி பல..."
அவர் சொல்லும்போது முகத்தில் வருத்தம் தெரிந்தது....

" ஆனா பாருங்க சார்,  மருத்துவ பரிசோதனைகளும் அவருக்கு ஒன்னுமில்லன்னுதான் வருது சார்.  "ஐ.ஜே. என்"  இருதய சிகிச்சை மருத்துவமனையில அவங்களுக்கு இருதயம் நல்லாவே இருக்குன்னு சொல்றாங்க. நாக்கு உணர்வற்றுப்போவது பத்தியும் தெளிவா ஒன்னும் கண்டுபிடிக்க முடியலன்னு சொல்றாங்க... கால் வலி, கை வலி இன்னும் தலை வலி எல்லாம் சாதாரணம்னும் சொல்றாங்க....  எந்த நோயும் இல்லன்னா அப்போ இந்த அறிகுறிகள் என்ன...அவங்களுக்கு உண்மையில என்னதான் நடக்குது?"

இரண்டொரு அனுபவத்திற்கு பின்னர் தான் இதைப்பற்றிய சில உண்மைகள் லேசாக விளங்கத்தொடங்கின எனக்கு.... ஆக மருத்துவத்தில் மருந்தில்லாத போது மனோதத்துவத்தில் நம்பிக்கை செல்வது இயற்கைதானே. அதைப்பற்றியும் என்னுடைய நெருங்கிய நண்பரும் மருத்துவருமானவரிடம் பேசிப்பார்த்தேன்.

'இதற்கு மருத்துவ உலகில் " சோமட்டைசேஷன் டிஸ்ஸோடர் " என்று பெயர். மனதின் உணர்வலைகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும் இதனைக்கொள்ளலாம்.'

வெளி இடங்களுக்குச் செல்வதன் மூலமும், மற்றவர்களோடு கலந்து பேசி மகிழ்ச்சியாக இருப்பதன் மூலமும், சக குடும்ப உறுப்பினர்களின் அன்பான கவனிப்பினாலும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணலாம்.

"அன்பு ஒன்றே அனைத்தையும் தகர்த்தெரியும் சக்தியினைக் கொண்டது!!!" எனபது மருத்துவரீதியாக எனக்கு தெரியவந்தது.

Tuesday 4 March 2014

ஜுக்ரா மலை...









பந்திங் நகரின் உயர்ந்த இடமாக சொல்லப்படுவது, ஜுக்ரா மலை. இங்கு செல்வோருக்கு பலவித இனிமையான அனுபவங்கள். அடித்தளத்தில் இருந்து நடந்து சென்றால் சுமார் 30 நிமிடங்கள் பிடிக்கிறது. பலரும் உடற்பயிற்சிக்காக நடந்தே சென்றாலும், வெளியூர் சுற்றுப்பயணிகள் நேராக தங்களின் வாகனங்களில் மலை மேலே சென்றடையவும் முடியும்.

இடையில் தெரியும் காட்சிகளை ரசித்தபடி பலரும் இந்த ஜுக்ரா மலைக்குச் சென்று அங்கிருந்து தெரியும் மலாக்கா நீரிணையின் அழகினை கண்டு களிக்கின்றனர்.

இப்படித்தான் ஒரு நாள், ஈப்போ நகரில் இருந்து  வந்திருந்த விருந்தினர் சிலரை அங்கு அழைத்துச் சென்றேன். அனைவரும் அங்கிருந்த காட்சியினை ரசித்தார்கள். கார்மேகத்தின் சுழற்சியில் வானம் அன்று ஒரு புதிய அழகில் தெரிந்தது... உடன் வந்த நண்பர், மகிழ்ச்சி வெள்ளத்தில் தனது புகைப்படக் கருவியில் தொடர்ந்து படங்களை எடுத்த வண்ணம் இருந்தார். " இது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு அழகு சார்.. அங்க பாருங்க அந்த மேகத் திரட்சியை... என்ன அழகு..." என ரம்மியமான அதன் அழகை ரசித்தபடி கவிதை எழுதவும் தொடங்கி விட்டார்....

இங்கு புகைப்படங்களில் இருப்பதைவிட பல மடங்கு அழகுடன் இருந்தது ஜுக்ரா மலையில் இருந்து நாங்கள் கண்ட அன்றைய காட்சிகள்...