Wednesday 17 August 2011

எம்ஜிஆர் பற்றி கண்ணதாசன்.... 6

 ‘என்னதான் நடக்கும்! நடக்கட்டுமே!’ அடடா! இது கவிஞர் எழுதியபணத்தோட்டம்படப் பாடலல்லவா?

 அதையும் பார்த்து விடுவோம்!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
 இருட்டினில் நீதி மறையட்டுமே
 தன்னாலே வெளிவரும் தயங்காதேஒரு
 தலைவன் இருக்கிறான் மயங்காதே!
 பின்னாலே தெரிவது அடிச்சுவடு
 முன்னாலே இருப்பது அவன்வீடு
 நடுவினிலே நீ விளையாடு
 நல்லதை நினைத்தே போராடு!”

 ‘நீதி இருட்டினில் மறையட்டும்! என்னதான் நடக்கும் நடக்கட்டும்! – நீ ஏன் பயப்படுகிறாய்? எல்லாமே தன்னாலே வெளிவரும்! தயக்கம் கொள்ளாதே! ஒரு தலைவன் இருக்கிறான்அதனால் மயக்கம் கொள்ளாதே!

அவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே!
 அவனது வீடு இருப்பது முன்னாலே!
 நடுவினிலே நீ விளையாடு!
 தினமும் நல்லதை நினைத்தே போராடு!
 விளைவுகள்! நல்லனவாய் விளைந்திடும்!

 எப்படி?

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
 ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
 கலகத்தில் பிறப்பதுதான் நீதிமனம்
 கலங்காதே! மதி மயங்காதே!
 மனதுக்கு மட்டும் பயந்துவிடு
 மானத்தை உடலில் கலந்துவிடு
 இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
 இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

 இப்படித்தான்….!

 உலகினிலே திருடர்கள் சரிபாதியாய்; ஊமையராய், குருடர்களாய், ஆமைச் சமூகத்தில் ஊமை முயல்களாய் சரிபாதியினரும் இருக்கின்றனர்.

 இங்கே நீதி எப்படிக் கிட்டும்? ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்!’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி!’ என்றே புரட்சித்தலைவரைக் கவிஞரின் கவிதைவரிகள் உரைக்க வைத்தது.

 ‘மனம் கலங்காதே! மதி மயங்காதே!’ என்று ஊருக்கு உபதேசம் செய்தபடியேதானே எம்.ஜி.ஆரும் இறுதிவரையிலும் இருந்தார்.

 தன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, தன்மானத்தை உறுதியாகக் கொண்டு; வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வகையில் கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று, இரட்டை வரல்களைக் காட்டி, இரட்டைஇலைச் சின்னத்தால் வென்றுதானே, இருக்கின்ற வரையில் அவர் புகழோடு வாழ்ந்தார்.

 இவற்றிலெல்லாம் கண்ணதாசன் சொன்ன வாக்குஆமாம் நம் கவிஞர் வாக்கு…. எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையில் பாடிய வாக்கு…. எல்லாமே தானே பலித்துள்ளன.
நீ ஆள வந்தாய்!

 .வி.ஆர். பிக்சர்ஸ் தயாரித்து, . நீலகண்டன் இயக்கத்தில் புரட்சி நடிகரோடு, .வி. சரோஜா, எல். விஜயலட்சுமி ஆகிய இருவரும் இணைந்து நடித்தகொடுத்து வைத்தவள்படம் 9.2.63 அன்று வெளியிடப்பட்டது.

 இப்படத்தில் கவியரசர் எழுதிய முத்தான மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

ஆண்: “பாலாற்றில் சேலாடுதுஇரண்டு
 வேலாடுதுஇடையில் நூலாடுதுமேனிப்
 பாலாற்றில் சேலாடுது!

 பெண்: தேனாற்றில் நீராடுதுஅழகுத்
 தேரோடுது மனது போராடுதுகாதல்
 தேனாற்றில் நீராடுது!

 ஆண்: ஆறேழு வயதினிலே
 அம்புலியாய்ப் பார்த்த நிலா!
 ஈறேழு வயதில் மாறுதுஅது
 ஏதேதோ கதைகள் கூறுது!”

என்றே தொடரும், கேட்போர் இதயத்தைத் தழுவி இன்பம் பாய்ச்சும் டாக்டர், சீர்காழி கோவிந்தராஜனும், கே. ஜமுனா ராணியும் இணைந்து பாடிய பாடல் அவற்றில் ஒன்று.

 அடுத்து,

ஆண்: “என்னம்மா சௌக்கியமா?
 எப்படி இருக்குது மனசு!

 பெண்: ஏதோ உளக ஞாபகத்தாலே
 பொழைச்சுக்கிடக்குது உசுரு!”

இப்படித் தொடங்கி, இளைஞர் இதயங்களை ஈர்த்திட்ட டி.எம்.எஸ்; பி.சுசீலா பாடிய பாடலும் ஒன்றாகும்.

 இப்பாடலில்,

பெண்: “அறுபது நாழிகை முழுவதும் உன்னிடம்
 அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்!
 நீ ஆள வந்தாய்! நான் வாழ வந்தேன்! – இதில்
 ஆனந்தம் இனி என்ன பஞ்சம்!”

என்ற கவிதை வரிகளைக் கவனித்தீர்களா? எம்.ஜி.ஆரின் புகழை எடுத்து முழங்குவதுபோல் உள்ளது அல்லவா?

 அடுத்து,
நான் யார்?
 நான் யார்?

என்றே எதிரொலித்துத் தொடங்கும் பாடல்,

நான் யார் தெரியுமா? – என்
 நிலைமை என்ன புரியுமா?”

என்று தொடங்கும், எதார்த்தமான தத்துவப்பாடல்.

 இப்பாடல் மனநிலை பிறழ்ந்த கதாநாயகன், மனம் தெளிவுற்ற நிலையில் பாடுவதாக அமைந்த பாடல்.

 இப்படத்தி இசையமைப்பாளர்திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன்எனும் இமயப் பெரும் இசையமைப்பாளரே!

மனது வேறு மனிதன் வேறு ஆக முடியுமா?”

என்ற கவிதை வரிகளைக் கேட்டு, இந்தத் தமிழகம் செய்த தனிப் பெரும் தவத்தால்தான், இப்படியெல்லாம் தத்துவத்தைப் பாமரரும் புரியும் வகையில் எழுதும் கண்ணதாசன் என்றகவிக்கடவுள்திரையுலகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று பாராட்டினாராம்.

 இதனையெல்லாம் இன்றைய திரைப்படப்பாடல் எழுதும் இளங்கவிஞர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!
தர்மம் தலைகாக்கும்!

 தேவர் பிலிம்ஸாரின்தர்மம் தலைகாக்கும்திரைப்படம், 22.2.63 அன்று வெளியிடப்பட்ட வெற்றிப்படமாகும்.

 இப்படத்தில் இசையமைப்பாளரும்திரையிசைத் திலகம்கே.வி. மகாதேவனே! படத்தின் பாடல்கள் முழுவதையும் படைத்தவர் கண்ணதாசனே!

 இப்படத்தில் எம்.ஜி.ஆரைக் கவிஞர் பார்க்கும் பார்வையில் தன்மையே தனித்துவமானது. புரட்சி நடிகர்சந்திரன்என்ற பெயரில் டாக்டராக இப்படத்தில் நடிக்கிறார். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!’ என்ற வாக்கின்படி செயல்படும் அவரது கதாபாத்திரத்தின் இயல்பையும், அவரது செயல்படும் அவரது கதாபாத்திரத்தின் இயல்பையும், அவரது உண்மையான இயல்பையும் ஒன்றாக்கிப் பார்க்கும் கவிஞர், அதற்கேற்பவே பாடல்களை அமைத்தார்.

ஆண்: “மூடுபனிக் குளிரெடுத்து
 முல்லை மலர்த் தேனெடுத்து
 மனதில் வளர்
 மோகமதை……
 தீர்த்திடவா…. இன்பம்
 சேர்த்திடா…..

என ஆரம்பமாகும் அருமையான பாடலொன்று

 இப்பாடலில்,

பெண்: “காதலெனும் தேர்தலுக்கோர்
 காலமில்லை ஒரு நேரமில்லை!

 ஆண்: தேர்தலிலே தோற்றவர்கள்
 திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு!

 பெண்: காதலிலே தோல்வி கண்டால்
 ஜெயிப்பதில்லை! என்றும் ஜெயிப்பதில்லை!”

இப்படிப்பட்ட அர்த்தபுஷ்டியுள்ள வரிகள் அந்தக் காலத்தில் அமர்க்களமான ஆதரவைப் பெற்றன.

 குறிப்பாக, 1957 தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோற்ற பலர், 1962 தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்கள். அதன் அடிப்படையிலேயே இப்பாடல் அமைந்ததாக்க் கருதிப் பலரும் இப்பாடலைப் பெரிதும் வரவேற்றார்கள்.

 இன்னும், இன்றைய தேனி மாவட்டத்தில், தேனித் தொகுதியில் 1957 – ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்; 1962 – ஆம் ஆண்டுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார்.

 அவரை நினைத்தே, அவருக்காக 1962 – ஆம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்த அவரது அன்புக்குப் பாத்திரமான, அவரது அண்ணன் புரட்சிநடிகர் பாடுவதாக இப்பாடலை வரவேற்று, அப்பகுதித் திரையரங்குகளில் இப்பாடல் ஒலித்தபோது எழுந்த பெரும் ஆரவாரங்களை நானும் கண்டு களித்ததுண்டு.

 இவ்வாறு காதல் பாடல்களிலும், எம்.ஜி.ஆரின் எண்ணங்களைப் பார்த்து, பக்குவமாய்ப் பாடல் வரிகளைப் பதித்திட்ட பார் போற்றும் கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பது உண்மைதானே!
இரண்டு தத்துவப் பாடல்கள்!

 மக்கள் திலகத்தின் மனதைச் சரியாக எடைபோட்ட மகோன்னதக் கவிஞர் எழுதிய தத்துவப்பாடல் ஒன்றை இப்போது நாம் காண்போமே!

ஒருவன் மனது ஒன்பதடாஅதில்
 ஒளிந்து கிடப்பது எண்பதடா!
 உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா! – அதில்
 உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா!
 ஏறும்போது எரிகின்றான்!
 இறங்கும்போது சிரிக்கின்றான்!
 வாழும் நேரத்தில் வருகின்றான்!
 வறுமை வந்தால் பிரிகின்றான்!

 தாயின் பெருமை மறக்கின்றான்!
 தன்னலச் சேற்றில் விழுகின்றான்!
 பேய்போல் பணத்தைக் காக்கின்றான்!
 பெரியவர் தம்மைப் பழிக்கின்றான்!
 பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
 பண்புடையோராய் ஆவாரா?
 பள்ளிப்படிப்பு இல்லாத மனிதர்
 பகுத்தறிவின்றிப் போவாரா?”

 நாம் கண்ட இப்பாடலில் உள்ள எந்தக் கருத்தைத் தவறென்பது?

 ‘ஒருவன் மனதில் ஒளந்து கிடக்கும் எண்ணங்கள் எத்தனையோ? அவை எண்பதையும் தாண்டுமே?

 உருவத்தைப் பார்த்தே எடைபோடும் மனிதர் உலகில்; எவனொருவன் உள்ளத்தைப் பார்த்து எடைபோடுகிறானோ அவன் இறைவன்தானே!’

 ஒருவனது உயர்வைக் கண்டு எரிச்சலும்; தாழ்வைக் கண்டு மகிழ்ச்சியும் காணும் மனித சமுதாயத்தை இன்றளவும் காண்கின்றோமே! வசதியாக வாழும்போது சொந்தம் கொண்டாடிட தூரதேத்தவரும் வருகின்றாரே! வறுமை வந்துவிட்டால் பக்கத்துச் சொந்தமும் பாராமுகமாய்ப் பிரிந்து போவதைப் பார்க்கின்றோமே!

 பெற்ற தாயையும் மறந்து, தன் பெருமை பேசும் சுயநலவாதிகள்! பேயைப் போல் பணத்தைக் காக்கும் திமிங்கலங்கள்! பெரியோர் தம்மைப் பழித்துப் பேசும் பண்பற்றவர்! எல்லோரையுந்தான் எங்கும் பார்க்கின்றோமே!

 பட்டம் பதவிகள் பெற்றவர் எல்லோரும் பண்புடையோராய் இருக்கின்றார்களா? அவர்கள்தானே இலஞ்சலாவண்யக் காரியங்களின் கதை மாந்தர்களாய் உலவுகின்றனர்! பள்ளிப்படிப்பு இல்லாத பாமர மக்கள் தானே சேற்றிலே கால் பதித்து, பாரிலுள்ளோர் சோற்றுக்கு வழிவகுத்து, பண்போடு நடக்கும் பகுத்தறிவு மனிதர்களாய் வாழுகின்றனர்!’

 மக்கள் மத்தியில் இத்தகு மகத்துவத் தத்துவங்களை, மக்கள் திலகம்தானே கூறவேண்டும். அதற்கான பாடலைக் கவியரசர் தானே ஆக்கித் தரவேண்டும்.

 அப்படி அமையும்போது அப்பாடல் ஆன்றோர் அவையிலும், பாமரர் நாவிலும் அற்புதமாய் நடமாடத்தானே செய்யும்!

 அடுத்து,

 தர்மம்! என்ன செய்யும்?

 தலை காக்கும்எப்படி?

 இதோ…….பார்ப்போமே!

தர்மம் தலைகாக்கும்!
 தக்க சமயத்தில் உயிர்காக்கும்!
 கூட இருந்தே குழிபறித்தாலும்
 கொடுத்தது காத்து நிற்கும்! – செய்த
 தர்மம் தலைகாக்கும்!

 மலைபோல வரும் சோதனை யாவும்
 பனிபோல் நீங்கிவடும்! – நம்மை
 வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
 வணங்கிட வைத்துவிடும்செய்த
 தர்மம் தலைகாக்கும்!

 அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
 ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
 நல்லவர் என்றும் கெடுவதில்லைஇது
 நான்குமறைத் தீர்ப்பு!”

 இப்பாடல் வரிகளைப் பார்த்தோம்!

 எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக, எந்தக் கவிஞர் இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்தார்கள்?

 எண்ணிப் பாருங்கள்!

 எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டு பெரும் வெற்றி பெற்றது.

 1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; தி.மு.கழகம் எனும் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அவரால் உருவாயிற்று.

 திண்டுக்கல் பாராளுமன்ற இதைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் மகத்தான வெற்றி கண்டது.

 இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.

 ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!

 அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார்.

 இந்தப் பாடலில்,

தர்மம் தலைகாக்கும்!
 தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”

என்ற வரிகள்,

 எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தைனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?

 கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….

 இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!

கூட இருந்தே குழி பறித்தாலும்
 கொடுத்தது காத்து நிற்கும்!”

 இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!

 மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டதுஅதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!

 அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.

 அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்லஎந்த நல்லவரும் கெடுவதில்லை.

 இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்தேவ வாக்காகும்.

 இதுவரையிலும் நாம் பார்த்த, கண்ணதாசன் பாடல்கள் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த, பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே சமயத்தில் சென்னை மாநகரத்தில் ஒன்பது திரையரங்குகளில், சென்னை நகரில் சிறந்த படங்கள்என்ற தலைப்பில், ‘எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடுஎனும் பெயரில் ஓடி வசூலைக் குவித்த சாதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இம்மூன்று படங்களும் ஒரே நேரத்தில் ஓடி ஒப்பற்ற சாதனைகள்படைத்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

 இன்றைய நிலையில், தமிழ்க் திரையுலக வரலாற்றை, நடிகர்களின் நிலைமைகளை நினைத்து பார்த்தால்தான், வசூல் சக்கரவர்த்தி, நிருந்திய சக்கரவர்த்தி என்ற பெயர் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமே என்ற உண்மைகளை உணரமுடியும்.
பரிசு! கலையரசி!!

 மூன்று படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, 15.3.63 – ஆம் நாளில் எம்.ஜி.ஆரும் சாவித்திரியும் நடித்த, கௌரி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கியபரிசுதிரைப்படம் வெளியாயிற்று. 19.4.63 – ஆம் நாளில் சரோடி பிரதர்ஸ் வெளியீடான எம்.ஜி.ஆருடன் பானுமதி, ராஜஸ்ரீ இணைந்து நடித்த, . காசிலிங்கம் இயக்கியகலையரசிபடம் வெளியானது. இரண்டு படங்களில்பரிசுபடத்தில் கவியரசரே அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார்.

பட்டு வண்ணச் சிட்டு
 படகு துறை விட்டு
 பார்ப்பதுவும் யாரையடி
 அன்னநடை போட்டு?”

 “பொன்னுலகம் நோக்கிப் போகின்றோம்
 புத்தம் புதிய சுகம் காணுகின்றோம்!”

 “காலமென்னும் ந்தியினிலே
 காதலென்னும் படகு விட்டேன்!”

 “எண்ண எண்ண இனிக்குது
 ஏதேதோ நினைக்குது

 வண்ண வண்ணத் தோற்றங்கள்
 அஞ்சு ரூபாகண்ண
 வட்டமிட்டு மயக்குது அஞ்சுரூபா!”

 “ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து
 ஆசை வைக்காதே!”

என்றெல்லாம் ஆரம்பமாகும் அனைத்துப் பாடல்களும் அமுத மழை பொழியும் பாடல்களே!

 ‘கலையரசிபடத்தில், சீர்காழி கோவிந்தராஜனும், பி. பானுமதியும் இணைந்து பாடும்.

ஆண்: “கலையே உன் எழில்மேனி கலையாவதேன்?
 காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்?

 பெண்: உறவாடும் இவ்வேள் பிரிவென்பதேன்? – நம்
 உயிரோடு உயிர்சேர்ந்து பெறும் இன்பத்தேன்!

 ஆண்: இருவேறு பொருள் கூறும் கண் பார்வை ஏன்?
 ஒன்று நோய் தந்ததேன்? ஒன்று மருந்தானதேன்?”

என்று தொடரும் கருத்துமிக்க, சுவைமிக்க, வள்ளுவரின் குறள் கருத்தை வீரியிறைக்கும் கண்ணதாசன் பாடலை, இன்று கேட்டாலும் எல்லோர்க்கும் பொங்கும் இன்பமே.

No comments:

Post a Comment