Thursday 18 August 2011

எம்ஜிஆர் & கண்ணதாசன் - 7


ஆனந்தஜோதி

 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோடு, நடிகை தேவிகா இணைந்து நடித்த ஒரே படம் ஆனந்தஜோதி! கதாநாயகியின் தம்பியாக கமல்ஹாசன், எம்.ஜி.ரோடு நடித்த படமே ஆன்ந்தஜோதி. இப்படத்தில் எம்.ஜி.ஆரை, ‘மாஸ்டர்! மாஸ்டர்!’ என்று மழலை மொழியில் கமல்ஹாசன் அழைக்கும் குரல் நயம் அருமையோ அருமை.

 ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரிப்பில், வி.என். ரெட்டி, .எஸ்.. சாமி இயக்கத்தில், விசுவநாதன்ராமமூர்த்தி இசையமைப்பில், கண்ணதாசன் பாடல்கள் நிறைந்த இப்படம் 5.7.1963 அன்று வெளியானது.

 படத்தில் எம்.ஜி.ஆர் உடற்கல்வி ஆசிரியராக, ‘ஆனந்த்என்ற பெயரில் நடித்துள்ளார்.

 ஆனந்தஜோதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவையே என்றால் உண்மையே.

 இப்படத்தில்,

காலமகள் கண்திறப்பாள் சின்னையாநாம்
 கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?”

 “நினைக்கத் தெரிந்த மனமேஉனக்கு
 மறக்கத் தெரியாதா?”

 இவ்வாறு பி. சுசீலாவின் குரலில் சோகமழை பொழியும் பாடல்களும், பலரது ஆதங்கங்களுக்கு ஆறுதல் தரும் பாடல்களே!
தர்மத்தின்சாவி!

பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டுஅது
 பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
 கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டுநான்
 கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”

 கேட்டீர்களா …. பாட்டு?

 பகுத்தறிவு எனும் சாவியால்இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!

 இனி அவர் என்ன சொல்கிறார்?

அடக்கமில்லாம சபையில் ஏறி
 அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
 அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
 அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
 பூட்டு!”

 சரிதானே!

 வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….

 இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.

 அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!

அறிவிருந்தாலும் வழி தடுமாறி
 அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
 வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
 வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
 தங்க மக்கள் உள்ளத்திலே
 அன்பு மிக்க எண்ணத்திலே
 தடை இருந்தா உடைத்துப் போடும்
 தர்மத்தின் சாவி!”

என்னே அதிசயம்!

 அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!

 வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு

 தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
 அன்புமிக்க எண்ணங்கள்!
 இவைகளுக்குள் தடையா?
 உடைத்துவிடும்! – எது?
 அதுதான்தர்மத்தின் சாவி!….”

 இங்கே எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்ன பகுத்தறிச் சாவி, தம்மத்தின் சாவி இரண்டைனையும் பார்த்தோம்.

 யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பதை அறிந்தே, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். படங்களில் இப்பாடல்களைத் தந்து சொல்ல வைத்தார்.

 யார் இந்தப் படத்திற்குப் பாடல்கள் தந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்தே, எம்.ஜி.ஆர். தகுந்த படங்களில் கண்ணதாசனைப் பாடல்கள் எழுத வைத்தார்.

 இருவர் பார்வையிலும், இருவரும் எபுபோதுமே இலக்கிய இரசனையில் வேறுபட்டு நின்றவரல்லர்.
கடவுள் இருக்கின்றான்!

 கவியரசர், புரட்சிநடிகர் மூலம் புகட்டும் தத்துவம் கேளீர்!….

கடவுள் இருக்கின்றார்அது உன்
 கண்ணுக்குத் தெரிகின்றதா?
 ……………..
 இசையை ரசிக்கின்றாய்இசையின்
 உருவம் வருகின்றதா?”

 என்றெல்லாம் வினாக்களை எழுப்பி, எங்கும் இருக்கும் இறைவனை, இதயத்தால் உணரவைப்பதைக் கேட்டீர்கள்.

 இன்னும்…..

புத்தன் மறைந்தவிட்டான்அவன் தன்
 போதனை மறைகின்றதா?
 சத்தியம் தோற்றதுண்டா? – உலகில்
 தருமம் அழிந்ததுண்டா? – இதை

 சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
 சஞ்சலம் வருகின்றதா? -
 தேடியும் கிடைக்காதுநீதி
 தெருவினில் இருக்காது!

 சாட்டைக்கு அடங்காதுநீதி
 சட்டத்தில் மயங்காது!
 காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
 காக்கவும் தயங்காது!”

 காலங்கள் உருண்டோடினாலும், கலங்கும் மனிதருக்கும், கண்ணீர் சிந்தும் மனிதருக்கும், தைரியம் ஊட்டி, சத்தியம் தோற்காது; தருமம் அழியாது; சஞ்சலம் கொள்ளாதீர் என்று கூறி, நீதி மயங்காது; காக்கவும் தயங்காது என்று பெரும் ஆறுதல்களைக் கூறும் இந்தத் தத்துவப் பாடலைத் தரணியில் உள்ளோர் உள்ளங்களால் மறக்க முடியுமா?… முடியவே முடியாது.

 அடுத்து,

 ஆனந்தஜோதியை கவியரசரும், புவியரசரும் ஏற்றிவைத்துப் புகழ்கொண்ட வித்த்தைப் போர்ப்போமே!

 புரட்சித்தலைவராம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களில் நாட்டுப்பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டிப் புரட்சி கீதம் எழுப்பியவரே கவியரசர். அந்த வகையில்தான்,

ஒருதாய் மக்கள் நாமென்போம்!
 ஒன்றே எங்கள் குலமென்போம்!
 தலைவன் ஒருவன் தான் என்போம்!
 சமரசம் எங்கள் வாழ்வென்போம்!”

 என்று தொடங்கும் பாடலைக் கவியரசர் எழுதினார்.

 உடற்கல்வி ஆசிரியராய்த் தோன்றி, மக்கள்திலகம் மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றிவைக்கும் விதத்திலேயே இப்பாடல் காட்சியில் நடிப்பார்.

 அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமாம், ‘ஒன்றேகுலம்! ஒருவனே தேவன்!’ என்ற திருமூலர் செப்பிய ஒப்புயர்வற்றவாக்கும்; ‘தலைவன் ஒருவனே!’ என்ற வாக்குறுதியும்; வள்ளலாரின் சமரச நோக்கும் இப்பாடல் வரிகளிலே நினைவுறுத்தப் பெற்றன.

 பாடல் எழுதிய கண்ணதாசனுக்கும்; எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆருக்கும்; பாடிய டி.எம். சௌந்தர்ராஜனுக்கும் இன்றும் இப்பாடல் நற்புகழினையே நல்கி வருகிறது.

 தொடர்ந்து வரும் பாடல் வரிகளில், தமிழன்னையின் தனித்ததோர் புகழ் கூறப்படுகிறது.

 எங்ஙனம்…..?

பொதிகை மலையில் பிறந்தவளாம்!
 பூவைப் பருவம் அடைந்தவளாம்!
 கருணை ந்தியில் குளித்தவளாம்!
 காவிரிக் கரையில் களித்தவளாம்!”

 இப்படித்தான்…!

 இவற்றின் விளக்கங்களையெல்லாம், நான்கண்ணதாசனின் புரட்சிப் பூக்கள்என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

 எனவே, இப்பாடலின் பெருமையை அறிய விரும்புவோர் அந்நூலை நுகர்வீர்களாக!

 ஆயிரம் இருந்தாலும்,

தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்! – தமிழ்த்
 தாயின் மலரடி வணங்கிடுவோம்!
 அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்!
 ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்!”

என்ற அர்த்தமுள்ள கருத்துகளை, உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் செல்ல என்னால் எப்படி முடியும்?

 ‘தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்!’ என்ற கருத்தை எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆரே தர்மத்தின் தலைவனாக நின்றார்.

 ‘தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்!’ என்று, எடுத்துரைத்த அவர்தான், தஞ்சைத் தரணியிலேதமிழ்ப் பல்கலைக்கழகம்அமைத்தார். உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மகத்தான முறையில் நடத்திக் காட்டினார்.

 அளவிற்கு அடங்காத அக்கிரமங்கள், அடக்குமுறைகள் விளைந்தபோதும்; அமைதியை நெஞ்சினில் தேக்கி, ஆனந்த ஜோதியை ஏற்றிப் புகழ்கண்ட ஒளிவிளக்கே எம்.ஜி.ஆர். தானே!

 ‘கோட்டையை எட்ட முடியுமா?’ என்ற கேள்வி எழுந்தபோதும்; சூழ்ச்சியின் ஆட்சியின் தளபதிகளாக இருந்தவர்களையும், அதற்குத் துணைபுரிந்த துரியோதன வம்சத்துக் கும்பல்களையும்; மக்கள் சக்தியால் மண்டியிட வைத்து, மாமகுடம் தரித்த மாபெரும் தலைவராய் விளங்கியவரும் எம்.ஜி.ஆர். அல்லவா?

 இங்கேதான், கண்ணதாசன் கவிதைகளைப் பற்றி எம்.ஜி.ஆர் ஏற்றமுடன் புகழ்ந்துரைந்தார். அந்தப் புகழுரைகளை நாமும் பூரிப்புடன் பார்ப்போமாக.
புரட்சித்தலைவரின் புகழுரைகள்!

 கவிஞர் கண்ணதாசன் பற்றி உங்கள் கருத்தென்ன?

 என்ற வினா, சென்னை வானொலி நிலையசினிமா நேரம்ஒலிபரப்புப் பேட்டியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்டது.

 அதற்கு எம்.ஜி.ஆர் கூறிய பதில்:

 “கவி அரசு என்றும், அரசு கவி என்றும் புகழோடு மக்கள் மனதிலே தனக்கென்று, தனியிடம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள், உலக மக்களுக்கும், எல்லாத் தரப்பினருக்கும் தேவையான தத்துவங்களை மிக எளிமையாக, ஆனால் உறுதியாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

 இந்த நூற்றாண்டில் கவிஞர் கண்ணதாசனைப் போல், பல்லாயிரக்கணக்கான பாடல்களை, உரைநடை இலக்கியங்களை, கவிதைகளைப் படைத்த கவிஞர்கள் வேறு யாருமே இல்லை.

 காப்பியங்களைப் படைத்த கம்பனாக, இளங்கோவாக, ஞானத்தையும், விஞ்ஞானதைத்தையும், இணைத்த வள்ளலாராக, புதுமைக்கவி, படைத்த பாரதியாக, புரட்சிக்கவி படைத்த பாரதிதாசனாக; தேவாரம், திருவாசகம், திருப்பாசுரம் என்ற ஆன்மீக நெறிகளைப் பாடிய அரும்பெரும் புலவர்களாக; இப்படிப் பல கோணங்களில் பலரும் வியக்கும் வண்ணம் தமிழ்க்கவிதைகளைப் படைத்தவர் என்ற பெருமை கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கே உண்டு.”

 கவியரசரை இப்படி இதயத்துள் வைத்துக் கள்ளங்கபடமின்றி உண்மையாகப் புகழ்ந்துரைத்த புரட்சித்தலைவரை நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?

 நாமே பாராட்டவேண்டும் என்று தோன்றுகின்றபோது, கவியரசர் பாராட்டியிருக்க மாட்டாரா? பாராட்டியுள்ளார்! எப்படி?

நீ தொட்டது துலங்கும்!
 நின்கை கொடுத்தது விளங்கும்!
 நின்கண் பட்டது தழைக்கும்!
 நின்கால் படிந்தது செழிக்கும்!
 நின்வாய் இட்டது சட்டம்!
 அன்பிலும் குறைவிலாது
 அறத்திலும் முடிவிலாது
 பண்பிலும் இடைவிடாது
 பழகிடும் புரட்சிசெல்வா!
 வாழ்க! வாழ்க!”

என்று, பல்லாண்டுகளுக்கு முன்னரே கவியரசர், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிப் பெருமிதப்படுத்தியுள்ளார்.

 இவ்வளவுதானா கண்ணதாசன், எம்.ஜி.ஆரைப் பாராட்டிக் கூறியன என்று எவரும் நினைத்து விடாதீர்கள்! இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றைப் படப்பாடல்கள் சிலவற்றைத்தொட்டுவிட்டுத் தொடரலாம்.
அவனுக்கென்ன தூங்கிவிட்டான்!

 1963 – ஆம் ஆண்டு படங்களில், நாம் பார்க்கவேண்டியன இன்னும் இரண்டே படங்கள்தான்.

 ஒன்று…………………….’நீதிக்குப்பின் பாசம்!’
 மற்றொன்று……………’பெரிய இடத்துப் பெண்!’

 இரண்டும் நன்றாக ஓடிய நல்ல திரைப்படங்ளே! இதில் தேவர் பிலிம்ஸார் தயாரித்து 15.8.63 அன்று வெளிவந்தநீதிக்குப்பின் பாசம்ஆரூர்தாஸின் அருமையான நீதிமன்றக் காட்சி வசனங்கள், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். சரோஜாதேவி, எஸ்.வி. ரங்கராவ், பி. கண்ணாம்பா, எம்.ஆர். ராதா, எஸ்.. அசோகன் போன்றோரின் பண்பட்ட நடிப்புத் திறன்களோடு கே.வி. மகாதேவன் இசையில் ஒலித்த, கவியரசரின் இனிமையான காதல் கீதங்களாலும் சிறப்புடன் வெற்றி கண்டது.

 இப்படப் பாடல் ஒன்று,

ஆண்: “மானல்லவோ கண்கள் தந்தது!
 மயிலல்லவோ சாயல் தந்தது!”

என்று தொடங்கும்………..

அடுத்து,
பெண்: “தேக்கு மரம் உடலைத் தந்தது!
 சின்ன யானை நடையைத் தந்தது!
 பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது!
 பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது!”

என்று, கதையின் நாயகி, நாயகன் எம்.ஜி.ஆரைப் புகழ்வதுபோல், கவியரசர் படைத்த பாடல் பி. சுசீலாவின் குரலில் ஒலிக்கும்போது, திரையரங்குகளில் ஏற்பட்ட குதூகலங்களை நினைத்தால் இன்றும் நெஞ்சம் குதூகலிக்கிறது.

 பொன்மனச் செம்மலை தனது பார்வையில் இப்படியெல்லாம் படம்பிடித்துக் காட்டி மகிழ்ந்தவரே கவியரசர் கண்ணதாசன்.

 ‘பெரிய இட்த்துப்பெண்படம் முழுவதும் கண்ணதாசனின் பாடல் முழக்கங்களே!

 ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்து, டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் 10.11.63 அன்று வெளிவந்து அபார வெற்றிகண்ட இப்படத்தின் இசையமைப்பாளர்கள் மெல்லிசை மன்னர்களே!

 இப்படத்தில் வரும்,

பாரப்பா பழனியப்பா
 பட்டணமாம் பட்டணமாம்
 ஊரப்பா பெரியதப்பா
 உள்ளந்தான் சிறியதப்பா!”

 “கட்டோடு குழலாட ஆடஆட
 கண்ணென்ற மீனாட ஆடஆட!” –

 “அன்று வந்ததும் இதே நிலா!
 இன்று வந்ததும் அதே நிலா!
 என்றும் உள்ளதும் ஒரே நிலா!” -

 “பட்டணம் பாத்த மாப்பிள்ளையே
 பாக்க வந்த கிளிப்பிள்ளே!”

இப்படியெல்லாம் தொடங்கும் எந்தப் பாடலை நாம் தொடுவது!… அல்லது விடுவது! எல்லாமே என்றும் இனிமை தரும் கீதங்களே!

 இவற்றிற்கெல்லாம் மேலாக டி.எம்.எஸ். குரலில் ஓங்கி ஒலிக்கும் தத்துவப் பாடல் ஒன்றும் உண்டு. புரட்சி நடிகர் நாட்டிற்குக் கூறும் வகையில், கவிஞர் ஈந்த அப்பாடலை இங்கே காண்போம்.

அவனுக்கென்ன தூங்கிவிட்டன்
 அகப்பட்டவன் நானல்லவா!
 ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டுவிட்டான்!
 கைகளிலே போட்டுவிட்டான்!

 இவனுக்கென்று எதைக் கொடுத்தான்?
 எலும்புடனே சதை கொடுத்தான்!
 இதயத்தையும் கொடுத்துவிட்டு
 இறக்கும்வரை துடிக்கவிட்டான்!”

 இந்தப் பாடலைக் கேட்காதோர் யாரும் அந்தக் காலத்தில் இருந்திருக்க முடியாது! இருப்பினும் நாற்பது ஆண்டுகள் கழித்தும், இந்த சோக ரசப் பாடலை இப்போதும் இரசிக்க முடிகிறதே! அதுதான் கண்ணதாசன் பாடலில் உள்ள மேலான மேதமைத்தன்மை எனலாம்.

 கதையின் நாயகன் முருகப்பன். அவனோ ஏழ்மையானவன்; தனது முறைப்பெண்ணை (தில்லை) மணக்க விரும்புகிறான். பணக்காரப் பெண் புனிதத்தின் சூழ்ச்சியால், தில்லை புனிதத்தின் அண்ணன் சபாபதிக்கு மனைவியாகி விடுகிறாள்.

 தனது முறைப்பெண்ணை, அடைய முடியாமல் செய்த பணக்காரி, படித்தவள் புனிதத்தையே தான் மணப்பேன் என்று முருகப்பன் சபதம் செய்கிறான். அவளோ ஏளனமாகச் சிரிக்கிறாள்.

 சபதத்தை நிறைவேற்றப் பாடுபடும் முருகப்பன் பல்வேறு தொல்லைகளில் அகப்பட்டு, சிறையிலும் அடைக்கப்படுகிறான். அப்போதுதான் இந்த சோககீதம் அவனால் இசைக்கப்படுகிறது.

 முருகப்பனாக வருபவரே மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.

 “ஆண்டவனுக்கென்ன? அவன் தூங்கிவிட்டான்! அகப்பட்டவன் அப்பாவியல்லவா! பத்து மாதங்களுக்குள் கைகளிலே விலங்கை மாட்டிவிட்டான்.

 அந்த ஆண்டவன் என்ன கொடுத்தான்? இந்த உடல் எனும் எலும்பையும் சதையையும் கொடுத்தான்! அத்தோடு நின்றானா? பாழாய்ப் போன இதயத்தைஉம் கொடுத்துவிட்டு, மனிதன் இறக்கும்வரைதுடியடா! துடி!’ என்றல்லவா துடிக்க வைத்துவிட்டான்!”

 அவ்வளவு துடிப்பா? இன்னும் அந்த ஆண்டவன் செய்த கொடுமைகள்….இதோ!

யானையிடம் நன்றி வைத்தான்
 காக்கையிடம் உறவு வைத்தான்
 மான்களுக்கும் மானம் வைத்தான்
 மனிதனுக்கு என்ன வைத்தான்
 மனிதனுக்கு என்ன வைத்தான்?”

கேள்விகளில் நியாயம் உள்ளனவோ?

யானைகளுக்கோநன்றி!
 காக்கையினத்திறகோஉறவு!
 மான்களுக்கோமானம்!

என்ற குணங்களைத் தந்த ஆண்டவன், மனிதயினத்திற்கு என்று என்ன குணத்தை வைத்தான்?

 மனிதனின் கோபத்தில் மாட்டிக் கொள்ளும் இறைவனின் பாடும் சோகந்தானோ!

 அந்த இறைவனாம் ஆண்டவன் என்ன நியாயவான்? பாருங்களேன்!

வானிலுள்ள தேவர்களை
 வாழவைக்க விஷம் குடித்தான்!
 நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம்
 நான் குடிக்க விட்டுவிட்டான்
 நான் குடிக்க விட்டுவிட்டான்!”
 இது அநியாயந்தானே!

 ‘வானகத்தில் உள்ள தேவர்களை வாழவைத்திட, அவர்களெல்லாம் தேவாமிர்தம் பருகிட, பாற்கடலில் பொங்கி வந்த விஷத்தை ஈசனாம் இறைவன் குடித்தான்.

 ஆனால் அதே ஈசனாம் இறைவன், ஏழ்மைப்பட்ட என்னை மட்டும் நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் மொத்தமாகக் குடிக்குமாறு விட்டுவிட்டானே!’ -

 என்று, ஏழை முருகப்பன் கேட்கும் கேள்வியில் நியாயந்தானே உள்ளது. நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் குடிக்கும் அளவுக்குத் துயரம் சூழ்ந்தது என்பதே பாடலின் பொருள்.

 இப்படியோர் சோகச்சூழலில் எழும் பாடல், சோகம் சூழ்ந்தோர் நெஞ்சங்களுக்குத் தேறுதல் அளிக்கும் தேன்சுவைப் பாடலல்லவா?

 அதுவும் எம்.ஜி.ஆர், தேறுதல் கூறுதல் மற்றவர்களுக்கு நிச்சயம் ஆறுதல் அளிக்கும் அல்லவா?

 இத்தகு கீதங்களை இன்றைய படங்களில் யார் எழுத; எம்.ஜி.ஆர் போன்று யார் தோன்றி ஆறுதல் தர…..ஹூம்! எல்லாம் காலவோட்டத்தின் புலம்பல் என்பார்….யார்?

 இன்றைய இளைய தலைமுறையினர் தான்!

உன்னையறிந்தால்…?…..!

No comments:

Post a Comment