Wednesday 31 July 2013

தங்கவேலு இரண்டு வேடங்களில்...

வாழ்க்கை வாதற்கே எனும் பழைய தமிழ்ப்படத்தில் தங்கவேலு இரண்டு வேடங்களில் நடித்திருந்தது பலருக்குத் தெரிந்திருக்கும். அதே போல, சாபாஷ் மீனாவில் சந்திரபாபு இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். ஒரே தோற்றம் கொண்ட இருவர் என்றாலே கலகலப்புதானே... படம் சலிப்புத்தட்டாமல் போக இப்படி சில யுக்திகளை அன்றைய படங்களில் பார்த்திருக்கலாம்.



நாசி லெமாக்...

காலைச் சிற்றுண்டி என வரும்போது மலேசியர்களாகிய நம்மில் 80 விழுக்காட்டினரின் தேர்வு அ நேகமாக "னாசி லெமாக்"வாகத்தான் இருக்கும். கடைகளில் இதற்கு இருக்கும் வரவேற்பினை வைத்தே இதைச் சொல்லிவிட முடியும்.


கொஞ்சம் வெள்ளைச் சோறு, பாதியாக வெட்டப்பட்ட அவித்த முட்டை, நறுக்கப்பட்ட வெள்ளரிக்காயில் சில துண்டுகள், சிறிதளவு வறுத்த நிலக்கடலை, கொஞ்சமாக நெத்திலி மீன் சம்பள்...ஆகியவையே நாசி லெமாக்வில் இருக்கும் முக்கிய ஐட்டங்கள். ஆயினும் இதன் புகழ் உலகெங்கிலும் பரவிக்கிடக்கிறது.

 சம்பள் என்பது, மசாலாவால் தயாரிக்கப்பட்ட உறைப்பான சாஸ். கோழித்துண்டுகள், நெத்திலி,முட்டை,மீன் போன்றவற்றை அதனுள் போடும் போது அந்த சாஸ் அதன் காரணப்பெயருடன் உண்ணுவோரை அசத்துகிறது. உ.ம்- முட்டைசம்பள், மீன்சம்பல், நெத்திலிசம்பள.



ஒரு காலத்தில் காலைச் சிற்றுண்டியாக மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த நாசி லெமாக், தற்போது எல்லா நேரங்களிலும் கிடைக்கும் முக்கிய மலேசிய உணவாக உருமாறிவிட்டது. நாசி லெமாக் இல்லாத உணவகங்கள் இல்லையென்று துணிந்து சொல்லலாம். அவ்வளவு புகழ் பெற்ற உணவு இது.

 விமானங்களில் பயணத்தின் போதும், வெளியூர்களில் முக்கிய நகரங்களிலும் பலர் சமைத்துச் சாப்பிடும் ருசி மிகுந்த உணவாக இது கிடைக்கிறது.


 இரண்டு விதங்களில் நாம் இதை கடைகளில் இருந்து வாங்கலாம். தயார் நிலையில் பாக்கெட்டுகளில் மடித்து வைக்கப்பட்டிருபது ஒரு வகை. மற்றது, பாத்திரங்களில் தனித் தனியே தேவையான ஐட்டங்கள் வைத்திருக்க, நாம் நமக்கு வேண்டியவற்றை நமது ருசிக்குத் தகுந்த படி தேர்ந்தெடுத்து போட்டுக்கொண்டு உண்ணலாம்.


 உணவகங்களில் மட்டுமல்லாது இரவுச்சந்தையிலும், நமது தேசிய நெடுஞ்சாலையில் இருமடங்கிலும் இப்போது கிடைக்கிறது.

கம்பங்களில் வாழை இலையில் மடித்து விற்கப்படுவதே எனது தேர்வாகும். விலையும் குறைவு ருசியும் அதிகம். அதோடு அதிக அளவு கொலெஸ்ட்ரோல் பிரச்சினையும் இருக்காது.



பொதுவாக, வைக்கப்படுகின்ற கோழித்துண்டு, இறைச்சி, மீன் அல்லது இரால் போன்ற உபரி உணவுகளுக்குட்பட்டு இதன் விலையும் இருக்கும் ( ரி.ம 1.00லிருந்து 18.00 வரை ).


சாண்ட்விச் ரொட்டி...


அனுதினமும் சோறு மட்டுமே உணவெனக் கொள்ளாமல், இதுபோன்ற ரொட்டித் துண்டின் இடையே சமைத்த பலவகைக் காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். ஆரோக்கியத்துக்கு பங்கமில்லாத உணவு இது. பழங்களையும் நம் உணவில் முக்கிய ஒன்றாக எண்ணுதல் அவசியம்.

பந்திங்

( சரியாக பகல் ஒரு மணிக்கு எடுக்கப்பட்ட படம் இது. சூரியனைப் பாருங்கள். நிற்கும் நேர்க்கோட்டில் இருந்து ஒரு மணிக்கு தள்ளி நிற்பது போலில்லை?)

ஒரு காலத்தில்  கௌபோய் டவுன் என வர்ணிக்கப்பட்ட பந்திங்  பட்டணம்  இப்போது ரொம்பவும் நவீனமாக மாறிவருகின்றது. மேலே உள்ள படத்தில்  நகரினுள் செல்லும் முன் "பந்திங் " எனும் அறிமுகத்தோடு இந்த முன்னேறிவரும் நகரம் உங்களை வரவேற்கிறது.

நம்ம வீட்டு மலர்கள்...




என்னதான் இருந்தாலும் நம்ம வீட்டுல மலர்கின்ற மலர்கள்னா அதுல இரு தனி பிரியம்தான்.
(  " நம்ம " என்பது ஒருகாலத்தில் மிகவும் மரியாதையான வார்த்தையாக கருதப்பட்டது. இப்போது அது இடத்தையும், தருகின்ற பொருளையும் பார்த்தே உபயோகப்படுத்தப்படுகிறது.  )

Tuesday 30 July 2013

நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்...

நோயுற்று இருப்போருக்கு சிகிச்சைஅளிக்க   நாள்  நட்சத்திரம் பார்த்துக்கொண்டிருந்தால் என்னவாகும்? நோய் முற்றி உடல் இன்னும் மோசமடையாதா?

சிகிச்சை செய்வதில் அலட்சியம் காட்டினால் பின்பு அவருக்கு சங்கு ஊதவேண்டிய நிலை வந்தாலும் வரலாம். 3, 8, 16, 30ம் நாட்களில் பூஜைபோடவேண்டிய சூழ்நிலை உருவாகலாம்..

 நம்மில் சிலர் தெரிந்தோ தெரியாமலேயோ இந்த  மனப்பான்மையிலேயே வாழ்கிறோம்.
" அதுவாக சரியாகிவிடும்" என நோயாளி சொல்வதைக் கேட்டுக்கொண்டு,
 " அவரே சொல்கிறார்..." என்று அசட்டையாக இருந்துவிடுகிறோம். 
அல்லது "இது என் வேலையா?" என்கிறோம்.

எல்லோரும் அறிவாளியாக இருந்திட முடியாதுதான். இந்த உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எல்லோரும் புத்திசாலிகளாக இருந்திட முடியுமா?  ஆனால், நம் குடும்பங்களில் உள்ள நோயாளிகளையோ அல்லது திடீரென நோயில் வீழ்பவர்களையோ கவனிக்காது அலட்சியப் படுத்தும்படியான அறிவிலியாக  நாம் இருந்திட முடியுமா? நமது இந்த மானிடப் பிறப்பு அதற்கு இடம் தருகிறதா?

நோயாளியை மருத்துவரிடம் காண்பித்து அவருடைய உடல் நிலையைப் பற்றி தெரிந்துகொண்டு, அவருக்கு தேவையான சிகிச்சைக்கு உட்படுத்துவதே நோயுற்றவர்களுக்கு நாம் செய்யும் மனிதாபிமான சேவை. இதில் மாமியார் மருமகள் என்றோ மருமகன் மாப்பிள்ளை என்றோ பாகுபாடுகள் எதுவும் கிடையாது. அப்படி இருக்கவும் கூடாது.


ஒரு சில நேரங்களில், ஒரு சில குடும்பங்களில் நடக்கின்ற இதுபோன்ற எதிர்மறை நிகழ்வுகள் என்னைப்போல் பலரையும் திகைக்க வைக்கிறது.

அன்மையில் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், வயதான மூதாட்டி ஒருவர் இதய நோயால் துன்புறுவதை  கண்டும் அதன் தாக்கம் புரியாமல் வெறுமனே விட்டுவிட்ட அவ்வீட்டின் குடும்பத்தினர் செய்கையானது பலவித எண்ண ஓட்டத்தினை எனக்குள் ஏற்படுத்தியது.

சரியான நேரத்தில் மருத்துவர் கவனிப்பு பலரது உயிரைக் காத்து அவர்களை பழையபடி இயல்பான வாழ்க்கைக்கு மீட்டு வந்திருக்கிறது.

கண் திறப்போம், உடன் இருப்போரை கவனிப்போம்.

Monday 29 July 2013

இதையும் தெரிஞ்சுக்குவோம்....

1   உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர்
"முஹம்மது"

2   உடலின் மிக வலிமையான சதைப்பகுதி
"நாக்கு"

3   ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள்பயபடுத்தப்படும் ஒரு சொல்
'typewriter'

4   அதே போன்று இடது கைய மட்டும் டைப் செய்யப்படும் நீண்ட வார்த்தை
'Stewardesses"

5   வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு
"பன்றி"

6   ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "tonguetwister -
Sixth Sick Sheik's Sixth Sheep's Sick

7   111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 ௯ 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8   எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு
"தேன்"

9   தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப­ட்டது

10   உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு -
கொசு

11   தும்மும் போது 'நன்றாய் இரு", "இறைவனுக்கு நன்றி"என்ற லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம்
ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்....!!


காதில் விழுந்த கதைகள் ...2

பார்வை தெரியாத ஒருவன் தன் நண்பன் வீட்டுக்குப் போயிருந்தான். நேரமாகிவிட்டபடியால் வீடு திரும்பும் போது அவனுக்கு அவனது நண்பன் ஒரு விளக்கை கையில் கொடுத்து அதை ஏந்தியபடி போகச் சொன்னான்.

" நண்பா, எனக்குத்தான் பார்வை இல்லையே. இது எதற்கு? " என்றான் பார்வையற்றவன்.

" உனக்கிது தேவைப்படாதென்று என்று எனக்கும் தெரியும். ஆனால் உன்மேல் வேறு யாரும் வந்து மோதிடாமல் இருக்க இது தேவைப்படும்" என்றான் நண்பன்.

'அதுவும் சரிதான்' எனப்பட, விளக்கினை ஏந்தியபடி பார்வையற்றவன் திரும்பிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே எதிரே வந்தவன் ஒருவன் இவன்மேல் மோத இருவரும் கீழே வீழ்ந்தனர்..

" என்ன சார் நீங்க, முகத்துக்கு முன்னால் விளக்கினை தூக்கிப்பிடித்தாவாறு வருகிறேனே, இதுகூடவா உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை....?என்று கடிந்து கொண்டான் பார்வையற்றவன்.

" ஐயா உங்க விளக்கு அணைந்து வெகு நேரமாகிவிட்டது போலிருக்கிறது...." என்றபடி மோதியவன் அவ்விடம் இருந்து அகன்றுவிட்டான் .

ஒரு சிலர் அறிவுரைகள் ஒரு சில நேரமே நம்மை தாங்கிப் பிடிக்கும். விழிப்படைதலே நமக்கு நிரந்தர தீர்வாகும்.

காதில் விழுந்த கதைகள் ...1

மூன்று சாமியார்கள் சேர்ந்து ஒரு வாரத்துக்கு மௌனவிரதம் கடைபிடிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். பூஜைக்கு சில மெழுகுவர்த்திகளை வைத்துக்கொண்டு பூஜையை தொடங்கினார்கள்.

முதல் நாள் ஒன்றும் சிறமமாகத் தெரியவில்லை. இரண்டாம் நாள், பலத்த காற்றினால் மெழுகுவர்த்திகள் ஒவ்வொன்றாக அணையத் தொடங்கின.

ஒரு சாமியார், " என்ன இந்த காற்று மெழுகுவர்த்திகளை அணைத்திடும் போலிருக்கிறதே...?" என்று சொல்ல, அவர் தியானம் கலைந்தது.

அடுத்தவர், " சாமி நாம பேசக்கூடாது என்றல்லவா முடிவெடுத்து விரதம் கொண்டோம்" என்று தன்னையுமறியாது முதல் நண்பருக்காக வருந்தினார். அவரும் தியானத்தில் இருந்து வெளியேறும்படி ஆயிற்று.

அவ்விருவரின் தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மூன்றாவது சாமியார், "நாந்தான் கடைசிவரைக்கும் பேசலே" என்றார்.

மற்ற இருவரும், "சாமி இன்னும் 5 நாட்கள் இருப்பதை மறந்துவிட்டு நீங்களும் பேசிவிட்டீர்களே..." என்றனர்.

அடுத்தவர் தவறுகள் நமக்கு மலைபோல தெரியும். அப்படி அவற்றை சுட்டிக்காட்டுகையில், நாமும் அத்தவற்றை செய்யக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

விளங்காத வாழ்க்கை...

இளம் வயதில் பல நிகழ்வுகள் மறக்க முடியாததாக இருந்திருக்கும். எனக்கும் அப்படி சில உண்டு.  அவற்றுள் ஒன்றுதான் பின்வருவது.

5ம் படிவ பள்ளிப் பரிட்சை முடிந்ததும் வீட்டில் அப்பா திட்டுகிறாரே என்று வேலைத்தேடத் தொடங்கினேன். என்னோடு எனது இன்னும் மூன்று நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டனர். அவர்களது வீட்டிலும் இதே கதைதான்....சோகக்கதை. 

ஒவ்வொரு தனியார் நிறுவனமாக ஏறி இறங்கி வந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் ஒரு காவலாளி எங்களை அழைத்தார். பார்த்ததுமே நாங்கள் வேலை தேடித்தான் அழைகிறோம் என அவருக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.

"உள்ளே போங்க. ஒரு பரிட்சை வைப்பாங்க, பார்த்து எழுதுங்க..." என்று சொல்ல, அவசர அவசரமாக அந்த அலுவளகத்தின்  உள்ளே சென்றோம்.

100 கேள்விகள் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டது.
"இதில் 'செலெக்ட்' ஆகிறவங்களத்தான் இன்டெர்வியூவிற்கு கூப்பிடுவோம்" என ஒரு அதிகாரி விளக்கினார்.

பல கேள்விகளுக்கு விளக்கம் தேவைப்பட்டது. ஆனால் அப்படி விளக்கம் பெற முனைந்தால்  'நமக்கு ஒன்றும் தெரியவில்லை' என நினைத்துவிட்டால்...? 'தெரிந்ததை எழுதுவோம்' என முடிவு பண்ணி, ஒன்றறை மணி நேரத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு வெளியே வந்தேன்.

எனது நண்பர்கள் எனக்காக வெளியில் காத்திருந்தனர்.
"ஏன்டா இவ்வளவு நேரம்?" என வினவினான் ஒருவன்.

"ஏன், நீங்க மொதல்லேயே வந்துட்டிங்களா? எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சிருந்தது? எத்தனை பதில் எழுதினீங்க? " என ஆர்வம் பொங்கக் கேட்டேன்.

ஒருவன் 28 என்றான். மற்றவன் 29 என்றான். மூன்றாமவன் 30 என்றான். அனைவரும் என்னைப் பார்த்தார்கள். நான் பெருமையாக,
" என்னடா நீங்க... நான் நூறு கேள்விகளுக்கும் பதில் எழுதினேனே..." என்றேன்.

"அவ்வளவுதான் நீ ... போ..." என்றார்கள், அனைவரும் ஒரே குரலில்.

 "30 கேள்விகள் எழுதினால் போதுமாம். சரியான பதிலுக்கு மூன்று புள்ளிகள். பதில் தவறாக இருந்தால் ஒரு புள்ளி வெட்டப்படும். கேள்வித்தாளின் அடியே சிறு எழுத்துக்களில் கொடுத்திருந்ததை நீ கவனிக்கவில்லையா?"

"ஐயோ...." என்றேன். வேறென்ன சொல்ல முடியும்....?

வாழ்க்கையிலும் இதுதான் நடக்கிறது. அன்பைப் பரிமாறிக்கொள்ளும் அமைதியான வாழ்விற்கு பதிலாக, கோபம், களவு, ஆடம்பரம், அடிதடி என புரியாது போட்டியிடுகிறோம், புலம்புகிறோம்.

முடிவு?

 சுற்றிச் சுற்றி ஒரே இடத்திலேயே நிற்கிறோம்.  வீணாக நேரத்தை செலவிட்டதுதான் மிச்சம்.




Sunday 28 July 2013

மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி?

பிரச்சினை என வரும்போது, எவ்வித விருப்பு வெறுப்புமின்றி அறிவின் துணைகொண்டு ஆராய்ந்தறிவோர் என்றென்றும் வாழ்வில் மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார்கள்.

சுடு சொற்களும், கடும் தண்டனைகளும் இவர்களிடம் இருந்து வராது. வாழ்க்கை அனைவருக்கும் சமமென நினைப்பவர்கள் இவர்கள்.  வாழ்க்கை வாழ்வதற்கே என வாழ்பவர்கள். அதனால் "வாழு, வாழவிடு" என்பதே இவர்களின் ரகசிய கடவுச் சொல்லாக இருக்கும்.

மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி என்போரைப்பற்றியே நாம் இங்கு  பேசிக்கொண்டிருக்கிறோம்.

அப்படியொரு தனிப்பிரிவாக யாரும் இல்லையென்றாலும் தாங்கள் கடந்து செல்லும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் சாதகமாக மாற்றுந் திறன் கொண்டோர் இந்த பட்டியலில் சேர்கிறார்கள்.

மற்றவர்கள் கையாளும் முறைகளைப்பற்றி அவ்வளவு தெரியாத நிலையில், நான் பொதுவில் எந்தெந்த வழிகளில் மகிழ்ச்சியாக இருக்க முனைகிறேன் என்பதனை பகிர்ந்து கொள்வதில் எனக்கெந்த ஆட்சேபனையும் இல்லை.

எப்போதுமே மற்றவர்களோடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. நான் நானாகத்தான் வாழமுடியும். என்னைவிட பல நற்குணங்கள் பலருக்கு இருக்கலாம், என்னைவிட மேல் நிலையில் அவர்கள் சுகமாக வாழலாம், ஆயினும் என்னிலும் வசதியற்றோரும், குணப்பண்புகள் குறைந்ததோரும் இந்த உலகில்  இருப்பதனால் நான் கவலைப்பட ஒன்றுமில்லை. எனவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  அடுத்தவர் மெச்சும்படியாக நான் எதையும் செய்வதில்லை. அதனால் பெரியளவில் பாதிப்பும் எதுவுமில்லை.

எல்லோருக்கும் குறைகள் உண்டு. அப்படி எனக்கும் உண்டு. ஆனால் என் குறைகளில் நான் என்றும் மிரண்டு போனதில்லை. அவ்வளவு குறைகள் என்னிடம் இல்லை என்றெண்ணுவதால், நல்ல அதிர்வுகளில் எண்ணங்கள் எனக்கு மகிழ்வைத் தருகின்றன.

இருதய நோய்க்கான அறுவை சிகிச்சை முடிந்த நேரம் அது. என்னைப்பார்க்க வந்திருந்தோரில் சிலர், " புது வாழ்வைத் தொடங்குகிறீர்கள், வாழ்த்துக்கள்" என்றனர். பலவீனமாக இருந்த இதயம் அறுவைசிகிச்சைக்குப் பின் பலம் பெற்று புத்துணர்வுடன் செயல் பட தொடங்குவதை பாராட்டியே அப்படி சில வாழ்த்துக்கள். அவர்களுள் ஒருவர், " உங்களுக்கு இது இரண்டாம் பிறப்பு. வாழ்க்கையை எஞ்சோய் பண்ணுங்க..." என்றார். பார்வையாளர்கள் ஏதாவதொன்றை சொல்லியவண்ணம் இருந்தனர். "இனி வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள் உங்களுக்கு. ஆயினும், இன்றே உங்கள் கடைசி நாளென வாழுங்கள்", என்றார் மற்றவர் ஒருவர். அந்த 'கடைசியாக' என அவர் சொன்னது அவ்வப்போது மனதில் தோன்றி மறையும்.

இதுவே என்னுடைய இறுதி நாளாக இருந்தால், எனக்கேன் பேராசை...? நான் ஏன் மற்றவர்களுடன் பகைமை பாராட்டவேண்டும்... ?அடுத்தவர் குறைகளையோ, குற்றங்களையோ காண எனக்கு நேரமிருக்குமா என்ன...? பகைமையும் குதர்க்கமும் மனதில் இல்லாதபோது மகிழ்ச்சி அங்கே, தானே நிறைந்திருக்கும்.

சற்று நிதானமாக எண்ணிப்பார்த்தால் சில உண்மைகள் விளங்கும். நமது குறிக்கோள் மகிழ்ச்சிதான் என்றால், வீண் கவலைகள் எதற்கு? ஆகவே, எதைச்செய்தாலும் மகிழ்வுடன் முடியும்படியாக அவற்றைப் பார்த்துக்கொள்வேன். கலகலப்பானவர்களோடு பழகுவது, புன்னகை தவழும் முகத்தினரை நண்பர்களாக்கிக்கொள்வது எனும் சில செயல்கள் எனக்கு நன்மைகள் தருவதாக நினைக்கிறேன்.

 நமக்கு முன்னால் வாழ்ந்தோர் சொன்னவற்றில் 80 விழுக்காடு நன்மைகளே அதிகம். அதில் நேர்மறை எண்ணங்களை மனதில் பதியவைப்பதன்வழி நாம் இனிமையாக வாழ்ந்திட முடியும். யாருக்கு இல்லை பிரச்சினைகள்? பிரச்சினை ஒன்றே நம் கண்ணுக்குத் தெரிந்தால் நாம் நம் இலக்கைவிட்டு நகர்கிறோம் என்று பொருள். எதிலும் முன்னேற்றம் தரும் நேரான சிந்தனைகளை தூண்டிவிடுவதன் மூலம் நம் மகிழ்ச்சியை நாம் இரண்டு மடங்காக்கலாம்.

மற்றவர் சொல்வதை கேட்பதில் தவறில்லை. ஆனால், அதற்கொரு எல்லையை வகுத்திடுவது எனது வழக்கம்.  அறிவுரைகள் சொல்ல பலரும் உண்டு. அது இனாம்தானே என கேட்பதற்கு, எனக்குத்தான் நேரமில்லை.  பெரியோர் சொல் வேதவாக்கு எனச் சொல்லி வந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை திரும்பச்சொல்லி அவர்களோடு  நான் தர்க்கம் புரிவதில்லை. எனவே பெரியோர் நட்பும் பாசமும் எனக்கு நிறையவே உண்டு. அப்புறம் மகிழ்ச்சிக்கு என்னங்க குறை....?

இன்னொரு முக்கிய காரணத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். என்னைப்பற்றி தீவிரமான எதையும் நான் என் மனதில் அலைபாய விடுவதில்லை. " அடடா, இப்படிச் செய்துவிட்டேனே..." என வருந்தி என்னையே நான் நொந்து கொள்வதில்லை. " பரவாயில்லை, அடுத்த முறை சரியாய்ச் செய்வோம்." என்றே மனதை வழக்கப் படுத்தி வைத்திருக்கிறேன். இதற்கு அதிக நாட்கள் பிடித்ததென்பது உண்மைதான். சின்னச் சின்னதாக எனது தவறுகளை மலைபோல எண்ணி வருந்தி உடல் நலத்தைக் கெடுத்துக்கொண்டதுண்டு முன்பு. அனுபத்தின் காரணமாக இப்படி என்னை நானே குறைபட்டுக்கொள்வதில் இருந்தும், சுய அனுதாபத்தில் இருந்தும் மீண்டுவிட்டேன். சரியானவற்றை நாம் சிந்திக்கவும் செயல்படவும் துணியும்போது, இயற்கையாகவே மகிழ்ச்சி நம்மை ஓடோடி வந்து அணைத்துக்கொள்ளும். 

எல்லாப் பிரச்சினைகளிலும் ஏதாவதொரு நல்லது இருக்கும் என நினைப்பவன் நான். ஆக்வே நிரந்தர துயர் என நான் எதிலும் என் காலத்தை கழிப்பதில்லை.  உடல் நோய்வாய்ப்பட்ட போத்குகூட, " அடுத்து என்ன செய்திட வேண்டும் " என சிந்தித்தது உண்டே தவிர, "ஐயோ அடுத்து என்னாகுமோ..?" என பயந்தது இல்லை. பொருளாதாரத்திலும், குடும்ப நிலவரங்களிலும் ஏற்படும் பிரச்சினைகள் சமாளிக்கும் படியாகவே இருந்துவந்திருக்கின்றன இதுவரை. என் குடும்பத்தினரின் வற்றாத அன்பும் புரிந்துணர்வுமே என்னை மீண்டும் மீண்டும் எழுந்துவர பேருதவி புரிந்திருக்கிறது. அதை எண்ணுகையில், மகிழ்ச்சியின் ரேகைகள் என் முகத்தில் ஓடக் காண்கிறேன். ஆக, மகிழ்ச்சியாக வாழ குடும்பத்தினர் உங்கள் பக்கம் இருப்பது மிகவும் அவசியம்.

 நல்ல நண்பர்களின் சேர்க்கை நமக்குத் தேவைதான். அவர்களே நம் சுதந்திர உணர்வுக்கு பக்க பலமாக இருப்பார்கள். நம்மோடு அவர்கள் இருக்கும் துணிவு பல நேரங்களில் நமக்கு நிம்மதியையும் தருகின்றதாக இருக்கும். ஆயினும், " உனது சிறந்த நண்பனே, உன்னுடைய மிகப்பெரிய எதிரியாவான்..." என யாரோ சொன்ன ஒரு கருத்தையும் மனதில் ஒரு ஓரத்தில் வைத்திருப்பது அவசியம். இதனால் பெரிதாக நாம் அவர்களிடம் இருத்து எதையும் எதிர்பார்த்து ஏமாற்றம் கொள்ளாமல் இருக்க உதவும். நட்பும் நிரந்தரமாகும். இவற்றையும் மீறிய சந்தர்ப்பங்களில், சில நண்பர்களை அந்த பட்டியலில் இருந்து அகற்றிவிடுவது இன்னும் சிறந்ததாகும். உறவினர்களும் இதன் படியே நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஒத்துவராத உறவு நமக்கு வீண் மனவேதனையைத்தான் தரும். ஒன்றுக்கு பத்துமுறை யோசித்தே இந்த முடிவை நான் எடுக்கிறேன். அதனால் எனக்கு, உறவினர்களும் குறைவு, நண்பர்களும் குறைவு. அவற்றோடு பல பிரச்சினைகளும் குறைவென்பதையும் இங்கு சொல்லவேண்டி இருக்கிறது. அமைதியான வாழ்விற்கு வேறென்ன வேண்டும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, எந் நேரமும் ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருக்கும் பழக்கம் நமக்கு வரவேண்டும். சோம்பலில், நோயுற்றவனைப் போல் காட்சித் தருவது நமது இலக்கினை வெகு தூரம் கொண்டு செல்லும் செயலாகும். மகிழ்ச்சியே நமது குறிக்கோள் என முடிவெடுத்தால், ஒன்றும் செய்யாமல் நேரத்தைச் செலவிடுவது சரியல்ல. பலனை எதிர்பார்த்து செய்யாவிட்டாலும், நமது செயல்களில் ஒரு நேர்மையும், பிறருக்கு பயன் தரும்படியும் இருக்கப் பார்த்துக்கொள்ளவேண்டும். நான் பகுதி நேர மருத்துவ அட்டை விற்பனையில் இருப்பதனால், பலரிடம் பேசவேண்டியதிருக்கிறது. பலர் பல காரணங்களுக்காக "வேண்டாம்" எனச் சொல்வதுண்டு. ஆயினும், மருத்துவ அட்டையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்வதே எனது கடமை என நான் நினைப்பதால், வருமானம் பற்றி நான் வருந்துவதில்லை. ஆனால், பலரையும் நான் பார்க்கவேண்டியதிருப்பதால், கருத்துப் பரிமாற்றத்தில் நான் மகிழ்வடைகிறேன். என்னிடமிருந்து அவர்களும், அவர்களிடமிருந்து நானும் பலவற்றைக் கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு மன நிறைவை தருகிறது. 
மற்ற நேரங்களில், குழந்தைகளுக்குத் தேவையானவற்றை செய்வதிலும், படிப்பதிலும், வலைப்பூ எழுதுவதிலும் மற்றும் மனைவியோடு ஸ்கிரபள் எனும் வார்த்தை விளையாட்டு என பலவித வேலைகளில் நான் மூழ்கிவிடுகிறேன்.  அமைதியாக ஏதும் செய்யாமல்  ஒரே இடத்தில் இருக்கிறேன் என்றால், அன்று எனக்கு உடல் நலம் சரியில்லை என்று பொருள்.

இதுவரையில் நாம் பார்த்தது, நாம் மகிழ்ச்சியாக வாழ நமக்கிருக்கும் வாய்ப்புக்கள். ஆனால், நாம் உடல் நலம் கருதி மகிழ்ச்சியாக வாழ்ந்தாகவேண்டியதும் இருக்கிறது. மருத்துவ சூழலில் இதை நாம் காணவேண்டும்.

பொதுவாக உணவருந்தும் போது, நாம் எவ்வித சலனமுமின்றி மகிழ்வோடு உணவருந்தவேண்டும். உணவின் ஜீரணத்திற்கு நம்மிடம் உள்ள சுரப்பிகளின் பங்கும்  உதவுகிறது.  தேவையான ஜீரண "என்ஸைம்ஸ்" உணவை முறையாக ஜீரணிக்கச் செய்து உடலில் பல பாகங்கள் சரிவர இயங்க உதவுகின்றது. வாயிலிருந்து உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குப்போய், அங்கிருந்து சிறு குடல், பெருங்குடல் என போகும் வரை இந்த ஜீரண என்ஸைம்ஸ் ( டைஜெஸ்டிவ் என்ஸைம்ஸ் ) தனது பங்கினை சிறப்பாக செயல்படுத்துகின்றன. இதற்கு நாம் மகிழ்ச்சியாக இருப்பதென்பது அவசியம். ஜீரணக்கோளாறு வயிற்று வலியினைத்தரும். நெஞ்சிலும் களுத்திலும் வலி பரவுதல் என சில வேலைகளில் இருதய நோய்க்கான  போலியான காரணிகளை காண்பிக்கக் கூடும். அதுமட்டுமல்ல. குடலில் சரியான அளவு பித்த நீரைச் சுரக்கச்செய்து மலச்சிக்கலையும் தவிர்க்கிறது.இவை அனைத்தும் முடங்கி பலவித நோய்களை தருவித்துவிடும் நாம் மகிழ்வாக இல்லாத சூழ் நிலைகள் தோன்றும் போது.


ஆக, மகிழ்ச்சியாக வாழ்வதென்பது ஒன்றுபட்ட பலவற்றின் கூட்டு முடிவு. அதன் அஸ்திவாரம் மெல்ல மெல்ல சரியான முறையில் இருந்திடல் நமக்கு நீண்ட நாள் பயனைத் தரும்.


தெய்வத் தமிழ்...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது நம் தமிழ் மொழி.  தமிழறிஞர்கள் இதனை மீண்டும் மீண்டும் நம் நினைவில் நிறுத்த எவ்வளவோ பாடுபடுகின்றனர். தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவுதல் வேண்டும் என்பதற்கொப்ப பலவாறும் தமிழ் உணர்வை நிலை நாட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள். கற்றறிந்த தூய உள்ளம் கொண்ட பெரியோர்களின் வேண்டுதலை ஏற்று தமிழ் மொழியை  நடைமுறையில் பின்பற்றிட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

இன்றைய தமிழ், அடுத்த தலைமுறையில்  காலெடுத்து வக்கும்போது என்ன ஆகுமோ எனும் பயம் இப்போது நமக்கு வருகிறது. கல்வியில் வளர்ச்சி காணும் குடும்பங்களும் இதற்கொரு காரணம். பல்கலைக்கழகங்களுக்கு போகும் நம் பிள்ளைகளின் தொடர்பு மொழி ஆங்கிலமாக மாறிவருகிறது இப்போது.  பயிற்சிக்காகவும் படிப்புக்காகவும் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறில்லை. வீட்டில் உரையாடும் மொழியாக தமிழ் இருந்ததென்றால் மெத்த  மகிழ்ச்சி. பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லித்தாருங்கள். ஆனால், தமிழ்மொழிக்கடுத்து அது இருக்குமேயானால், நம்மொழிபால் நமக்கிருக்கும் கடமை உணர்வை நிலை நாட்டுபவர்களாகிறோம்.

நாம் ஆங்கிலத்துக்கு எதிரியல்ல. ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் எனச்சொல்லியும் வருகிறோம். ஆங்கிலம் கற்றுக்கொள்வது பலவகைகளில் நமக்கு உறுதுணையாகவும் இருக்கிறதென்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே ஆங்கிலத்தை ஆதரிப்பது  தவறெனவும் தோன்றவில்லை. ஆங்கிலம் நமக்கு இரண்டாம் மொழியாக அவசியம் தேவை. ஆயினும் தமிழ் மொழியினை வாழவைக்க நாம் தமிழில் எழுதவும், படிக்கவும், பேசவும் வேண்டும். அதே நேரம், நமக்குத்தெரிந்த மற்றவர்களையும்  நம் மொழியில் ஆர்வம் கொள்ளச்செய்வது ஒரு புண்ணியம் சேர்க்கும் செயலாகும்.

 நமக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய தமிழ் நாட்டில் கூட ஆங்கில கலப்பில்தான் தமிழ் உரையாடல்கள் இருக்கின்றன. கல்விகற்றதும் அவர்களின் அடுத்த இலக்கு அமெரிக்கா என இருப்பதால் அந்த மோகமோ....?

தமிழ்த் தலைவரென தமிழகத்தை ஆட்சி புரிந்தோர்கூட தமிழுக்கு வேறெதுவும் செய்திடக் காணோம். தமிழுக்கு உயர்ந்த இடத்தை பெற்றுத்தந்துவிட்ட பெருமை அதற்கு உழைத்த மற்ற அறிஞர்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆட்சியின் போது அப்படி ஏதும் செய்திருந்தால், தமிழ் நாட்டுத் தமிழ் இப்படி "கலப்படத் தமிழ்"ஆகி இருக்காது . இத்தனை வருடங்கள் சென்றபின்தான் சித்திரை மாதத்தில்  வருவது நமது வருடப்பிறப்பல்ல என்றே தெரியவருகிறது சிலருக்கு. வேறென்ன பெரிதாக அவர் போன்றோரிடமிருந்து எதிர்பார்த்துவிட முடியும்....?

உண்மைத் தமிழ் நம் நாட்டில் இன்னும் உயிருடனேயே இருக்கிறது. படிப்பறிவில்லாத பலரும் ஆங்கில கலப்பில்லாத தமிழையே பேசிவருகிறோம். படித்தோரில் சிலர் பழக்கம் காரணமாக அப்படி சற்று இடம் மாறிப்போயிருக்கலாம். அவ்வப்போது அவர்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் அவர்களையும் அணைத்துச் செல்லும் சாத்தியம் இன்னும் நிறையவே இருக்கிறது.

தமிழ் மொழி பல மாறுதல்களுக்குப் பின்தான் இந்த தற்பொதைய நிலையை எட்டியிருக்கிறது என்பதை 1950ம் வருடமுதல் இருக்கும் பழைய புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலம் தவிர இதர பலமொழிகளினால் கவர்ந்திழுக்கப்பட்ட ஒன்றாகவே அன்றைய தமிழ் நூல்கள் இருந்திருக்கின்றன. எழுத்தாளர் வட்டங்களில் சுய தமிழில் எழுதியோர் மிகக் குறைவே. அன்று நம் மொழி பிறரையும் தன் பக்கம் இழுக்கும் காந்தம் போன்றதொரு சக்தியை கொண்டிருந்திருக்கிறது. பல மொழிக்கலப்பென பெருமிதப்பட நம் முன்னோர் தயாராயில்லை. கால ஓட்டத்தில் அவர்களின் சிரத்தையினால், வேண்டாத பிற மொழி வார்த்தைகள் அகற்றப்பட்டு தூய தமிழில் எழுத்துலகம் சிறக்கத் தொடங்கிவிட்டது.

இன்று அப்படிச் சீரியக் குணங்களுடன் இருக்கும் தமிழ் நம் பெருமைக்குறியதாகிறது. தமிழில் பேசுவோர் அதிகரித்தால் மட்டுமே இது நிலைத்து நிற்கும். சுருங்கும் தமிழ்ப் பள்ளிகள் அந்த சந்தேகத்தை நமக்கூட்டுகின்றன. வீட்டில் தமிழ் பேசுவோரும் குறைவது போல் படுகிறது. தமிழ் நாளிதழ்களை வாங்குவோர் எண்ணிக்கையும் அப்படி உயர்வதாக இல்லை. எனவே நமக்கு வரும் பயம் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றே.

" ஐம் சாரி. எனக்கு தமிழ் வராது...." என ஸ்டைலாகச் சொல்வதை நிறுத்தி, தினமும் சில நிமிடங்கள் பேசிப் படிக்க முயன்றாலே  போதும், பல மாறுதல்களை சில நாட்களிலேயே நம் கண்கூடக் காணலாம்.


Thursday 25 July 2013

நம்பிக்கை...

உறவு வலுப்பெற முக்கியத் தேவை நம்பிக்கை.  நம்பிக்கைக்கு பங்கம் வரும்போது உறவு உடைகிறது. எந்த உறவிலும் நம்பிக்கை குறையும் போது சந்தேகம் எழுகிறது. சந்தேகம் பின்னர் கோபத்தை கிளறுகிறது. கோபம் உறவை எதிரியாக எண்ணத் தூண்டுகிறது. இதுவே நம்பிக்கையின் 'பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஃபோர்முலா".

அதனால்தான் சொல்கிறோம், இந்த உலகமே நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்குகிறது என்று. நம்பிக்கைக்கு இதர குணங்களும் உதவிக்கு வருகின்றன. அவற்றில் சகிப்புத்தன்மையும் ஒன்று.
" என் மனைவி எல்லாவற்றையும் தன்னிச்சையாக செய்கிறாள். நான் சொல்வதைக் காது கொடுத்து கேட்பதே இல்லை." என ஸ்வாமிஜியிடம் குறைபட்டார் ஒருவர்.

" உன்னைவிட சிறந்த குணங்களைக் கொண்டிருந்தால், அவளுக்கு உன்னைவிட உயர்ந்தவன் கணவனாக வந்திருப்பான். குறை சொல்லாமல் அவளிடம் உள்ள நன்மைகளைப் பார்" எனச் சொல்லி அனுப்பிவிட்டார் ஸ்வாமிஜி.

முறைகேடாக இல்லாமல் இருக்கும் போது அவள் செயவதை அனுசரித்து, அதன் நன்மைகளை உணர்ந்து வாழக்கற்றுக்கொள்ளவேண்டும். தான் கணவன், எனவே தனக்கு கட்டுப்பட்டே மனைவியானவள் இருக்கவேண்டும் என ஈகோ பார்க்காது அவள்மேல் நம்பிக்கை வைப்பது அவசியம்.

சிறந்த மனைவி என யாரும் இல்லை. பல உபரிக் காரணங்களினால் அப்படி ஒரு சிறந்த நிலையை அடைகிறார்கள் சில பெண்கள். அவ்வளவுதான்.

ஒருவன் திருமண ஏஜென்சிக்கு வந்திருந்தான். தான் திருமணம் செய்துகொள்ள ஒரு பொருத்தமான பெண் வேண்டும் என்றான். நேர்காணலின் போது தனக்கு பிடித்தமான பெண் எப்படி இருக்கவேண்டுமென வினவப்பட்டது.

" நல்ல அழகுடன், மரியாதையான, நகைச்சுவை உணர்வுமிக்க, தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தும் அறிந்தவளாக, பாடும், ஆடும் திறன் கொண்டவளாக, ஓய்வெடுக்க நான் வீட்டிலிருக்கும் போது என்னுடனே வீட்டில் இருக்கும், தேவைப்படும்போது கதைகள் சொல்லி, தேவைப்படாத நேரங்களில் அமைதியாக பேசாதிருப்பது போல் ஒருத்தி வேண்டும்" என்றான்.

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அதிகாரி,
" உங்களுக்கு தேவை ஒரு தொலைகாட்சி பெட்டியே..." எனச் சொல்லிவிட்டார்.

கிடைக்கும் மனைவி எதிர்ப்பார்ப்பதைப் போல இருக்கவேண்டும் என நம்பிக்கை வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது எனச் சொல்கிறார் நண்பர் ஒருவர். 


தாக்கும் முன் சிந்திக்க...

கராத்தே பயிற்சியின் தொடக்கதிலேயே ஒன்றை சொல்லித் தந்துவிடுகிறார்கள். "கராத்தே நி சென் த நாஷி." அதாவது 'கராதேயில் முதல் தாக்குதல் என்று ஒன்றில்லை" என்று அதற்குப் பொருள். அதனால்தான் ஒவ்வொரு 'கதா'வும் ( கராத்தே நுனுக்கங்களின் வடிவங்களும் ) தற்காப்பிலிருந்தே தொடங்குகின்றன.

'ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு'.  இக்கலையில் தேர்வு பெறுவோர் ஆத்திரம் கொண்டு தாக்கத்தொடங்கினால், அழிவு பண்மடங்கு பாதகமாக இருக்கும் என்பதனை மனதில் கொண்டே கராத்தேயினை ஒரு தற்காப்புக்கலையென குறிப்பிடுகிறார்கள். இதனையொட்டியே மற்ற கலைகளும் "தற்காப்பு"க்கென வடிவமைத்தார்கள். முதல் தாக்குதலின் விபரீதம் பல விசயங்களுக்கும் பொருந்தும்.

இந்தக் கொள்கையே எழுத்துக் கலைக்கும் உண்டு. அதுவும் அலுவளகத்தில் பணிபுரிவோர் அதிகம் கவனிக்க வேண்டியது இது. சினமுடன் எழுதத் தொடங்கினால் சீண்டிப்பார்க்கும் வார்த்தைகளுக்கு பஞ்சம் இருக்காது.

" என்னால் நம்பமுடியவில்லை. உயர்பதவிக்கு பரிந்துரைக்கும் போது 'என்னோடு பணிபுரிபவர்களில் நானே எல்லா தகுதிகளும் கொண்டுள்ளேன்' என என்னைப் பாராட்டிப் பேசி, பொய்யாக என்னை நம்ப வைத்து, இப்போது அந்த உயர்பதவியை வேறொருவருக்கு வழங்கி விட்டீர்கள். 'நீங்கள் ஒரு பாரபட்சமானவர்' என இதனால் தெளிவாகத் தெரிகிறது' என தனது மேலாளருக்கு சுடச் சுட ஒரு மின்னஞ்சல் அனுப்பினார் சியூ மெங்.

" மிக்க நல்லது. உடனடியாக உங்கள் பணியிடத்தை காலி செய்துவிட்டு பாரபட்சம் இல்லாதவரைத் தேடி பணியில் சேரவும். நன்றி."  என பதில் வந்தது.

சியூ மெங்கின் கோபம் ஞாயமானதாகப் படலாம்.  ஒருவேளை அவர்தான் அந்த உயர் பதவிக்கு தகுதியானவராகவும் இருந்திருக்கலாம். ஆனால், தனது 'பாஸ்'ஸை இப்படி விமசித்து எழுதிருப்பதானது அவருக்கு தனது வேலையை இழக்கும் சூழ் நிலையை தந்து விட்டது.

அப்படியானால் சியூ மெங் தனது கோபத்தை எப்படித்தான் தீர்த்துக் கொண்டிருக்கலாம்....?

"அலுவளக அறையை விட்டு வெளியே வந்து, ஒரு காகிதத்தில் தனக்கு எழும் கோபத்துக்கான காரணங்களை எழுதிவிட்டு மீண்டும் அலுவலகத்தின் உள்ளே சென்று எழுதிய அந்தக் காகிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவதுதான் சிறந்தது."

படிக்க பைத்தியக்காரத்தனமாகத் தெரியும் இதுவே மன நல மருத்துவர்களும், நிபுணர்களும் ஒட்டு மொத்தமாக வழங்குகின்ற தீர்வு. இதனால் சியூ மெங்கிற்கு சினமாக எழுந்த எதிர்மறை எண்ணங்கள் வெளிக்கொணரப்பட்டு அழிக்கப்படுகின்றன என்கிறார்கள் அவர்கள்.

சியூ மெங் எழுதியிருக்கவேண்டிய மின்னஞ்சல் ஏறக்குறைய இதைப்போல இருந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்....

" ஐயா, என்மேல் நம்பிக்கை வைத்து உயர்பதவிக்கு என்ன பரிந்துரைக்கப் போவதாக தாங்கள் சொன்னது எனக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தருகிறது. ஆனாலும், அப்பதவி எனக்குக்கிட்டாததை அறிந்து வருந்துகிறேன். அதன் காரணங்களை தங்களை சந்தித்து தெரிந்துகொள்ள விழைகிறேன். இன்றைய ஏமாற்றம் அடுத்தமுறை நடவாமல் தடுக்க இதுவே சிறந்த வழி என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். நன்றி. - சியூ மெங்"

 "சியூ மெங், உங்கள் மின்னஞ்சலைப் பார்த்தேன். கூடிய விரைவில் வேறொரு உயர்பதவிக்கான ஊர்ஜிதக்கடிதம் உங்களைத் தேடி வர என்னால் ஆன அனைத்தையும் செய்வேன் என இங்கு  சொல்லிக்கொள்வதில் மகிழ்கிறேன். - பாவ், உங்கள் பணியிட மேலாளர்.


 இதையே ஒரு ஹைக்கூவாக பார்ப்போமா....?
" தாக்கும் முன் சிந்திக்க
சிந்திக்காதோர்
சின்னாபின்னமாவர் சிறந்தவர் கையில் சிக்கி"

Wednesday 24 July 2013

கோயிலும் நூல் நிலையமும்...

மலேசிய தமிழர்களின் குறையாகவும், ஆதங்கமாகவும் இருப்பது, மானியம் எனும் பெயரில் கோயில்களுக்குக் கொடுக்கப்படும் கணிசமான தொகையினை சரியான, முறையான வகையில் சமூக முன்னேற்றத்திற்கு உபயோகப்படுத்தாததே ஆகும்.

இருக்கும் கோயிலை உடைத்துவிட்டு ( அது எவ்வளவு பெரியதாகவும் சிறப்பாகவும் இருந்தாலும்கூட ) இன்னும் பெரியதொரு அமைப்பில் கட்டுவதற்கே அனைத்து ஆலய நிர்வாகங்களும் முனைப்பு காட்டுகின்றதே தவிர மக்களின் சமய விழிப்புணர்வை தூண்டும் செயல்களில் சிந்திக்கவும் காணோம், சமூகம் சீர்படவும் காணோம்.

" கோயில் இல்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம் " என்பது நம் முன்னோர் சொன்னது. அதுமட்டுமா சொன்னார்கள், "கோபுர தரிசனம் கோடி புண்ணியம் " என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால்  'இருக்கும் கோயில்களை இடித்துவிட்டு மேல் மாடி வைத்து இன்னும் கட்டிக்கொண்டு போ' என்றோ, 'ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒவ்வொரு கோயிலைக் கட்டிக்கொள்ளுங்கள்' என்றோ அவர்கள் சொல்லவில்லை..

உண்மையில் பெரியளவில் கோயில்களை நவீனமயமாக்கும் இவர்கள், தங்கள் கோயில்களுக்கு தினம் வரும் பக்தர்களை கணக்கெடுத்தால் சமூகத்துக்கு எவ்வித நன்மைகளையும் அவர்கள் செய்யவில்லை என்பதனை ஒப்புக்கொள்வார்கள்.

ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மூன்று கோயில்களை கொண்டிருக்கிறோம் நாம்.

இங்கே, மதம் என்பது வளர்ந்துவிட்டதாக எண்ணுவோர் மீண்டும் சிந்திக்க வேண்டும். இந்த தனித் தனி கோயில்களுக்கு தினமும் போவோர் பத்து பேர் கூட இல்லை, இருந்தும் இங்கே மூன்று கோயில்கள். நமது மதத்திற்கு விடப்படும் சவால் என்றே இதைக்கூற வேண்டும். மக்கள் வராத இடத்துக்கு ஏன் இத்தனை கோயில்கள்....? அல்லது மக்கள் வரும்படியான உபரித்திட்டங்கள் ஏதும் இல்லையா....? பொறுப்பில் இருப்போர் இதை அலசி ஆராய வேண்டும்.  எல்லாக் கோயில்களும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு நிதி உதவி பெற்றதன் பயனாக வெளிப்புற தோற்றம் மாறி இருக்கிறதே தவிர வேறு ஏதும் விசேசமாக மாற்றம் காணவில்லை. அப்படியானால் இவை நமக்குச் சொல்வதுதான் என்ன.....? நம்மிடையே உள்ள பிரிவினையையும் ஒற்றுமையின்மையையுமே இத்தனைக் கோயில்களும் காட்டுகின்றன. இல்லையேல், அருகருகே இதனை கோயில்கள் இருக்கவேண்டியதன் அவசியம்தான் என்ன....?

தமிழ் நாட்டில் துண்டைப்போட்டு ஓடும் பஸ்ஸில் இடம்பிடிப்பது போல இப்போதே எதிர்காலத்துக்கான இடத்தை பாதுகாத்து வைக்கிறார்களோ...?

சம்பந்தப்பட்டவர்கள் பல காரணங்களை கையில் வைத்திருக்கூடும். அவற்றைக் கேட்குமுன்னரே அவை நமது நேரத்தை வீணடிக்கும் ஒன்று என நாமே யூகித்துவிடலாம்.

இதில் குருபூஜை எனவும் அதற்கொரு ரத ஊர்வலம் எனவும் புதுமையைப் புகுத்துவதும் நாம் நிஜத்தில் எத்திசையில் பயணிக்கிறோம் எனும் சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.  "குறைந்த நேரத்தில் நிறைந்த இலாபம்" எனும் கருப்பொருளில் சில பிரிவுகள் நமது இயலாமையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்கள். சமய சன்மார்க்கத்தில் ஆர்வமுள்ளோர் கசடற கற்றுத் தெளிந்த பின் தங்கள் மதச்சேவையை தொடரவேண்டும். தவறுகள் குறைய இதுவே வழி. அறிவுச் சார்ந்த ஒன்றை அவர்கள் தங்களுக்கு பின்னால் வருவோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது அவர்களின் புகழை மங்கா ஒளியுடன் இரட்டிப்பாக்கும்.

தற்சமயம், வசதி உள்ளோரும், நிதியுதவி பெருவோரும் சமயத்தலைவர்களாக தங்களைக் அடையாளம் காட்டிக்கொண்டு செய்யக்கூடாத மாற்றங்களை மதரீதியில் செய்து வருகின்றனர். இது நல்லதல்ல. சங்கமும், மாமன்றமும் நாட்டுப் புறத்தில் நடப்பதை கண்டும் காணாதது போல இருப்பதும் சரியல்ல. அப்படி இதுபோன்றவை அவர்களின் கவனத்திற்கு எட்டவில்லை என்றால் அவர்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் செயல்பாடுகளை ஆராயவேண்டும். அவர்களின் பிரதி நிதிகளை இன்னும் அதிகரித்து தேவை ஏற்படுமானால் உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும். காரணம் காட்டும் கடிதம் ஒன்று அனுப்பினாலே பலர் தங்களை திருத்திக்கொள்வார்கள் என்பது பலரின் நம்பிக்கையாகும்.

கோயில்கள் வருடாந்திர திருவிழாக்களுக்கும் திருமணங்களுக்கும் மட்டுமே உபயோகத்தில் இருக்கின்றன. சங்கத்திலும் மன்றத்திலும் இருப்போர் நிருபர்கள் தேடிவந்தால் தான் வாயே திறக்கிறார்கள். அவர்களாக நாடு முழுவதும் பயணம் சென்று செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என பிரச்சாரம் செய்வதில்லை. பல நேரங்களில் இந்த சங்கமும் மன்றமும் எதற்கென்றே நினைக்கத் தோன்றுகிறது. எங்களூரில் அனாதைப் பிணங்களின் இறுதிச் சடங்குகளை இவர்கள்  மேற்கொள்வதை சில நேரங்களில் பார்திருக்கிறேன். அவ்வளவுதான். கோயில்களிலும் பிற இடங்களிலும் நடைபெறும் தவறுகளை தட்டிக்கேட்கும் நிலைக்கு அவர்கள் தயாராக இல்லை. " ஏன் இந்த வீண் வம்பு...?" என்றிருக்கிறார்கள். 

ஆனால், யாரும் எவரும் நமது சமூகம் விழிப்புணர்வு அடைவதற்கான அடிப்படைகளை எண்ணிப்பார்க்க நேரத்தை ஒதுக்குவதாக தெரியவில்லை.
தலைவர்கள் நாளிதழ்களில் அறிக்கைகள் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். பெற்றோர் தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்க்கிடக்கிறார்கள்.

இதனிடையே, வளரும் சமுதாயத்தை நல்வழி நடத்த எவ்வித புதுத்திட்டங்களையும் யாரும் அறிமுகப்படுத்தக்காணோம். நிதி சார்ந்த பல திட்டங்களே அவர்கள் கண்ணுக்குத் தெரியுமோ என்னவோ... அதற்கான போட்டிகளை பார்க்கும் போது நமக்கு பல சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. ஒரு சில கோயில்களில் அங்கத்தினர்களாக சேர்வதற்கு ஆயிரம் ரிங்கிட் கட்டனமாக வசூலிக்கப்படுகிறதாம். இவ்வளவும் கட்டி சிலர் அங்கு சேருகிறார்கள் என்றால் 'அவர்கள் சிறந்த சேவையாளர்கள்' என் கிறார்கள் சிலர். 'உண்மையாகவா? ' என கண் சிமிட்டுகிறார்கள் சிலர்.

இதற்கு தீர்வுதான் என்ன.....?



திரு,ரகு சரித்திரப்பாடத்தை போதிக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். தனது 30வது வருட அனுபவத்தில் சரித்திரச் சம்பவங்களை பள்ளிப் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் அதே நேரம் தன்முனைப்புப் பயிற்சியரங்கங்களையும், பட்டறைகளையும் நடத்தி மாணவர்களின் எதிர்காலத் தேவையறிந்து சேவை செய்து வருபவர், சரித்திரப் பாட 'ஸ்பெஷலிஸ்ட்'.

மாற்றி யோசிக்கும் தன்மையினால் சக ஆசிரியப் பெருமக்களாலும், பெற்றோர்களாலும் வரவேற்கப்படுபவர்.

தற்கால பிரச்சினைகளைப் பற்றி தன் சிந்தனையில் உதித்த கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இங்கு...

" நமக்கு இப்போ இருக்கிற பிரச்சினைகள் ரெண்டுதான் சார். கோயில்கள் புதிய வடிவில் நிர்மானிக்கும் அளவுக்கு அங்கே மத போதனைகள் இல்லை.  இறையான்மையை வெளிக்கொணர்ந்து கோயிலுக்கு வரவழைக்கும் வழிகளை பல இடங்களில் பின்பற்றவில்லை. தேவார வகுப்புக்களும் பரத நாட்டிய பயிற்சிகளும் ஆங்காங்கே  ஒரு சில இடங்களில்தான். மற்ற நேரங்களில் கோயில் ஒரு வெற்றிடம்.

தொலைக்காட்சி உள்ளவரை பெற்றோர்களையோ சீரியல்களையோ கட்டுப்படுத்த ஒருகாலமும் முடியாது. அதோடு பல வீடுகளில் பெரியோர்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு சீரியல்கள்தான்.  அதை தடுக்கும் நிலை நல்லதும் அல்ல...."

" மிஸ்டர் ரகு, அப்போ இதுக்கு வழிதான்  என்ன....?"

"இருக்கு சார்! நல்ல திட்டம் ஒண்ணு கையிலெ இருக்கு. சொல்றேன் கேளுங்க... ஒவ்வொரு கோயில் மண்டபத்திலும் ஒரு நூல் நிலையம் அமையனும். அங்கே இரவு 7ல் இருந்து 10வரை மாணவர்கள் வந்து அமர்ந்து அமைதியாக படிக்கும் வசதிகள் செய்துதரப்படனும்.  நூல் நிலையம் எனும்போது புத்தகங்கள் வாங்க செலவாகுமோன்னு சிலர் பயப்படலாம்.  நல்ல நெஞ்சங்கள் பல இதுபோன்ற சேவைகளுக்கு உதவ முன்வருவாங்க. இதுபோன்ற நூல் நிலையங்களை பராமரிக்கும்  பொறுப்பை கோயில் நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களில் தினம் இருவராக பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள கோயிலால் ஏற்பாடு செய்யப்படனும்.. அதுமட்டுமல்ல, போதுமான இடவசதி இருந்தா, நல்லுள்ளங்கொண்ட ஆசிரியர்கள் தங்கள் நேரத்தை இதுபோன்ற பயனுள்ள இடங்களில் செலவிட முன் வருவார்கள். இதை அருகில் இருக்கும் பள்ளியாசிரியர்களிடமோ அல்லது சுற்றுவட்டார தமிழ் ஆசிரியர்களிடமோ கலந்து பேசி உதவி கேட்கலாம். ஆனால், பிள்ளைகளின் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொறுப்பு கோயில் நிர்வாகத்தினுடையதாக இருக்கவெண்டும். காரணம் ஒவ்வொரு நாளும் பள்ளியில் பணிபுரிவதால் இந்த கூடுதல் பொறுப்பினையும் அவர்கள் மேல் சுமத்துவது சரியல்ல. அவர்கள் தங்கள் நேரத்தையும்  அறிவையும் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ள முன்வருகிறார்கள், அவ்வளவுதான்.

ஆனா,இது கோயில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நூலகமானதால், வெளியாட்களும் இங்கே வர முனைவார்கள், " நூலகம் பொதுவானது" எனும் கருத்தில். ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளும் சூழ் நிலை இருப்பதால், ஒழுக்கத்தினை பணையம் வைக்காது, முன் பதிவு பெற்றவர்களையே உள்ளே அனுமதிக்கவேண்டும். அப்படி பதிவு செய்துகொள்வோர் முறைகேடாக நடந்துகொள்ளும் போது, கோயில் பொறுப்பாளர்கள் அவர்களை கண்டிக்கவோ அல்லது காவல் துறையிடம் ஒப்படைக்கவோ வழிபிறக்கும். எதுக்கும் போலிசாரிடம் கோயில் சார்பாக நடக்கும் இது போன்ற வகுப்புக்களைப் பற்றி தகவல் தெரிவித்துவிடுவது இன்னும் நல்லது. அவர்களும் அவ்வப்போது இங்கு வந்து பார்வையிட ஏதுவாக இருக்கும். நாம் இங்கு பேசுவது முழுக்க முழுக்க பள்ளிப்பிளைகளுக்கான ஏற்பாடாகையால் பொதுமக்கள் இங்கே தலையிடாமல் இருப்பது நல்லது."

" நல்ல அருமையான ஐடியா, மிஸ்டர் ரகு. அப்புறம்..?"

" அதாவது சார், இதுல இன்னொரு சிறப்பும் இருக்கு.  இந்த நூல் நிலையத்தினுள் செல்லுமுன், கோயிலில் இறைவனை பூஜித்து விட்டுத்தான் வரனும்னு  கண்டிப்பா சொல்லிட்டோம்னா, இளம் வயதில் இறைநம்பிக்கையை சிறுகச் சிறுக அவர்களின் அறிவுக்கு புகுத்துகிறோம்னு இருக்கும். பிள்ளைகளை இங்கே விட வரும்போது, பெற்றோர்களும் கோயில் பூஜைகளில் கலந்து கொள்ள்வது ஏதுவாகும். 

கோயில்களில் அதிக ஆட்கள் வந்து பூஜிக்கும்போது அதன் பாசிடிவ் அதிர்வுகளினால் பல நன்மைகளை உடனிருப்போரும் பெறும்படி அமையும். இதனால்,  தங்களின் மனதை கண்டபடி அலைபாய விடமாட்டாங்க. அரசாங்கத்துக்கும், சமுதாயத்துக்கும் புறம்பான சீழறுப்பு வேலைகளில் ஈடுபட மாட்டாங்க. செய்வதறியாம வெளியிலே சுற்றித் திரியும் மாணவர்களின் போக்கு மாறவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.  அதே நேரத்தில் படிப்பதாக சாக்கு போக்கு சொல்லி கம்ப்யூட்டர் கேம்ஸ், ஃபேஸ் புக் என அடிமைப்பட்டுக்கிடக்கும் பிள்ளைகளுக்கான மாற்று இடமாக இந்த நூலகம் அமையும். நல்வழி, நல்லொழுக்கம் போன்ற சீரிய சிந்தனைகள் அவர்களிடம் குடிகொள்ள ஆரம்பிக்கும்.  பழக்கங்களே வழக்கங்கள் ஆகின்றன. ஒரு மாணவன் தொடர்ந்து பூஜையின் போது கோயிலும், அதன் பின் நூலகத்திலும் இருக்கும் செய்கையானது, நாளடைவில் அவனுள் எழும் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பு. அப்போது இவ்விடங்கள் இருப்பதை ஞாயப்படுத்தவே அவன் முனைவான். இது இய/ர்கை. எதிமறையாக தோன்றுகின்றவற்றாஇ கோயிலில் கிடைக்கும் பக்கிதியின் மூலமும்ம் நூலகத்தில் கிடைக்கும் பகுத்தறிவின் மூலமும் எதிர்கொள்கிறான். விளைவு.... அவன் எதிர்காளம் பிரகாசிக்கத்தொடங்கும் என்பதே...

சரித்திரம் இதைத்தான் கூறுகிறது. இறையருளோடு அறிவை விறுத்திசெய்துகொள்ளும் போது மேன்மக்கள் தோன்றுகிறார்கள்."

"பிரமாதமான கருத்துக்கள் மிஸ்டர் ரகு. அதிக செலவில்லாமல், பொதுச்சேவை செய்ய விரும்புகிறவர்கள் ஆர்வமோடு கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும். ஹ்ம்ம் மேல சொல்லுங்க சார்..."

"..ஹ்ம் ..சுருங்கச் சொன்னா...
   -  எப்போதும் காலியாக இருக்கும் கோயில் கல்வியில் முன்னேற    நினைக்கும் பிள்ளைகளுக்கு நல்ல இடமாகிறது.
   -  அரசாங்க மானியம் சரியான இலக்குக்குச் சென்றடைகிறது.
   -  பெற்றோர் நிம்மதி அடைகிறார்கள்
   -  சமூகம் மேம்பட அருமையான வாய்ப்புக்களை இங்கே நாம் பார்க்கிறோம்."

" சரித்திரப் பாடத்தை 30 வருடங்களுக்கும் மேலாக சொல்லித்தருவதனால, கொஞ்சம் பின்னோக்கிப் போய் பார்த்தா, இதுபோன்ற மாற்றங்கள் பொதுவில் நல்ல பலன்களையே தந்திருக்கின்றன. அதை சில இடங்களில் நான் கவனித்திருக்கிறேன். சுமார் நூறு வருடங்களுக்கு முன் உலகம் எப்படி இருந்தது, உலகமக்கள் எப்படி இருந்தனர் என்பதனை அலசும் போது சமூக சீர்திருத்தங்களின் பங்கினை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

மாற்றம் கொணர்ந்த 'தமடுன்கள்", மத, இன, மக்களை மாற்றிய 'ரிஃபோர்மேஷன்' என சிறிய அளவில் தொடங்கி அறிவுப்பட்டறைகளாக மக்களை உணரச்செய்தது நூல் நிலையங்களே. சில இடங்களில் அமல்படுத்தப்பட்டு அதன் வெற்றி தெரியவரும் போதுதான் பலரும் இதில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்."

" ஆமா மிஸ்டர் ரகு, உங்க கருத்து நிச்சயமாக வரவேற்கப்படவேண்டிய, போற்றப்படவேண்டிய ஒன்று.

"ஐடியாவ நாம சொல்லிட்டோம். நடைமுறைப்படுத்த வேண்டியது சம்பந்தப் பட்டவர்களின் பொறுப்பு."

எவ்வளவு நிஜமான வார்த்தைகள். பலரும் எதிர்பார்க்கும் மாற்றங்கள் கோயில் தர்மகர்த்தாக்களிடம் வருமா? திருமண மண்டபம் என வருமானத்தை ஈட்டும் இடமாக இருக்கும் அதே நேரம், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கும் அவ்விடத்தை சில மணி நேரங்கள் விட்டுக்கொடுக்க முன்வருவார்களா...?

 நாலடியார் இப்படிக்கூறுகிறது....

" நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ் நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று..."

பலருக்கும் பயன்படும் அறங்களை உடனே செய்துவிட எண்ணம் வேண்டும், காரணம் அவன் வருகிறான், விரைந்து வருகிறான். அதற்குமுன் செய்து புண்ணியம் தேடிக்கொள்.

Sunday 21 July 2013

வீட்டினுள் நுழையுமுன்...

வெளியில் சென்று திரும்பும் போது, பேய் தொடருகிறதோ இல்லையோ,  நோய் நம்மைத் தொடராமல் இருக்க கை கால் சுத்தம் செய்துகொண்டு வீட்டினுள் நுழைவது நல்லது.

புதிதாக குழந்தைகள் பிறக்கும் போது இதுபோல் பல வீடுகளில் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளும் இப்படி கை கால் கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் போகப் போக இவ்வழக்கம் கைவிடப்படுகிறது.

வெளியில் தினம் தினம் பலரையும் நாம் சந்திக்கிறோம். அவர்களுடன் கைகுலுக்குகிறோம். அவர்களின் பொருட்களையும் கையாளுகிறோம், சில நேரங்களில் பொது இடங்களில் உள்ள பொருட்களைக்கூடத்தான். பொது பேருந்துகளிலும், வாடகைக் கார்களிலும் பயணிக்கிறோம். இதுபோன்றவை எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறதென்று நமக்குத் தெரியாது. இதற்கு முன் என்னமாதிரியான ஆட்கள் இதுபோன்ற பொது இடங்களிலும் பொது வாகனங்களிலும் வந்து போனார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. எந்த மாதிரியான நோய்க்கிருமிகள் இங்கெல்லாம் இருக்குமென்பதும் நாம் யூகிக்க முடியாத ஒன்று.

 நம்மைத் தொற்றிக்கொண்டு நம் இல்லங்களில் உட்புகுந்து ஒன்றுமறியா நம் குடும்ப உறுபினர்களை தாக்காதிருக்க,  முதற்கட்ட பாதுகாப்பாக அமைவது இப்படி நாம் கை கால் முகம் கழுவிக் கொண்டு வீட்டினுள் அடியெடுத்து வைப்பதே.

"வாய் கழுவாராயினும் கை கழுவ
கழுவாக்கால் நோயாவர் கையழுக்குப் பட்டு"
என்பது நகைச்சுவைக்காக சொல்லப்படும் புதுக்குறள். ஆனல் அதன் முக்கியத்தை எண்ணிப்பாருங்கள். 

ஆரோக்கியம் பேணுவோர் அனுசரிக்கும் முறை இது. நாமும் பின்பற்றுவோமே...

சாலையில் வேண்டாம் வேகம்...

மெதுவாக போயிருந்தால் விலகிப் போயிருப்பேன்,
விரைவாகப் போனதால் விரட்டிப் பிடித்தேன்.."

என மரணம் சொன்னதாக, விபத்தின்போது மரணமுற்றவர்களில் சிலர் இறக்கும் முன் முனுமுனுத்ததாக முதலுதவிக்குப் போயிருந்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விபத்தில் இறப்பது ஒரு பயங்கரம். உடல் பாகங்கள் துண்டு துண்டாக அங்கும் இங்கும் சிதறிக்கிடக்க உயிர் சில நிமிடங்கள் இழுத்துக்கொண்டு,  துடி துடித்து இவ்வுலகை விட்டுப் போவது மிகக் கொடூரமானது. எதிர்பாரா விபத்து என்பது ஒரு புறமிருக்க, வேகக் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாவது தேவையில்லா விபரீதமாகும்.

10.10.10 அன்று, மாலை ஆறு மணிக்கு மலாக்கா பேருந்து நிலையத்தில் இருந்து கோலாலும்பூர் நோக்கி புறப்பட்ட விரைவு பேருந்து, 223கி.மீ சிம்பாங் அம்பாட் வடக்கு தெற்கு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. வேகத்தை கட்டுப்படுத்த இயலாது, பக்கத்தில் இருந்த தடுப்புக்கம்பிகளை மீறி எதிர் திசையில் வந்துகொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது அந்த பேருந்து.  ஒரு மைவி ரக காரின் மீது தலைகீழாக அது நின்றது பார்க்க பயத்தை தந்தது. சுமார் 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.




 ( என் குடும்பத்தினரோடு நானும் மலாக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது எங்கள் கண்களுக்கு முன்னர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்த விபத்து நடந்தது. சாலையில் அங்கும் இங்குமாக உயிரற்ற உடல்கள் கிடப்பதை பார்த்துக்கொண்டே கடந்து சென்ற அந்த காட்சி பயங்கரமான ஒன்றாகும்) 



அடுத்த சில நாட்கள் நாளிதழ்களில் பல கோணங்களிலும் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அதில் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. விசாரனையின் போது சக பேருந்து ஓட்டுனர்கள், வேகமாக பேருந்துகளை ஓட்டிவரும் நேரங்களில் சாலையின் ஒருபுறமிருந்து மறுபுறம் ஏதோ கருப்பாக ஒன்று கடந்து செல்வதை  கண்டாதகச் அதிகாரிகளிடம் சொல்லியிருந்தனர்.

 நமக்கு எழும் சந்தேகம் இதனால் இன்னும் வலுக்கிறது. வேகம் இருக்கும் இடங்களில் எமன் வந்துபோகும் சாயல் இருப்பது போலல்லவா ஆகிறது இவர்கள் சொல்வது.

சாலை, நாம் சவாரி போவதற்காகத்தான், சாகசம் புரிய அல்ல. அதுவும் பக்கத்தில் இருப்போர் மெச்சிக்கொள்ள காரை வேகமாக ஓட்டுவோரும் நம்மிடையே உண்டு. யோசிக்கும் தன்மை உடையோர் இப்படி அநாவசிய, அபாய கணிப்பீடுகளை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். 'ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போல' என தங்கள் திறனை சாலையில் காட்டி பிதற்றியோரில் பலரை இப்போது காணோம்.

அவசரம் + வேகம் = மரணம்.

இந்த புது ஃபோர்முலாவை மனதில் வைப்போம்.
அதிவேகம் மரணத்திற்கு  பிடித்த அம்சம். எமன் அங்கே பல் இளிக்கிறான்.

சாலையில் வேண்டாம் வேகம், அங்கே விவேகமே போதும்.

சிரிக்கத் தெரிந்தால் போதும்...

வாய்விட்டுச் சிரியுங்கள்.  மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சி பொங்க கள்ளம் கபடமில்லா சிரிப்பே சரியான வழி.

வயதாக ஆக சிரிப்பதை குறைத்துக் கொள்கிறோம் நாம்.  கடந்து வந்த அனுபவங்களும் இனி கடக்கவிருக்கும் பயணங்களும் தெளிவில்லா ஒரு நிலையை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தலாம். இதையொரு பின்னடைவாக பார்க்காமல் காலத்தால் நாம் அடையும் மனமுதிர்ச்சியையும், பக்குவத்தினையும் உபயோகத்திற்கு கொணர்ந்து கல கலவென சிரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். இந்த மனப்பாங்கினையுடைய பலர் எல்லாவித சூழ்நிலைகளிலும் இன்முகத்துடன் வாழ்வினை எதிர்கொள்கிறார்கள்.

சிரிப்பதென்பது நோய் தடுக்கும் மருந்து. வந்த பின் அல்ல, வரும் முன்னரே....

மருத்துவர்கள் சிலர் நண்பர்களாக எனக்கிருப்பதால், அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். உங்கள் வாழ்வில் ஆரோக்கியம் பெருக நிறைய சிரியுங்கள். இதுவே மருத்துவ உலகம் அறிவுரையாகச் சொல்லும் ரகசியம்.

கள்ளமற்ற சிரிப்பினில் ஆரோக்கியம் அடங்கியுள்ளது என்பதை உணர்வோம். கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சிரிக்கப் பழகுவோம்.

பின் குறிப்பு: ஒரு சில மருத்துவர்கள் சிரிப்பதன் அவசியத்தை வெளியில் அவ்வளவாக சொல்வதில்லை என்றும் காதில் விழுகிறது. " உங்கள் நோயும் தொடரட்டும் எனது வருமானமும் பெருகட்டும்" என இன்னமும் ஒரு பிரிவினர் நினைக்கிறார்கள் போலும். அதற்கென்ன, பரவாயில்லை... அவர்களை விட்டுவிடுவோம். இப்போதுதான் அந்த ரகசியம் நமக்கு தெரிந்துவிட்டதே... வாய்விட்டுச் சிரிப்போம், வளமாக வாழ்வோம்.


நல்ல மனம் வாழ்க...

அடுத்தடுத்து ஐந்து பரம்பரைக்கு சொத்து இருந்தாலும், இன்னமும் அதே வழியில் சென்று கொண்டிருப்போர் நம்மிடையே அனேகர் இருக்கிறார்கள்.

பொருளீட்டும் யுக்தி தெரிந்தவர்கள் என இவர்களை  ஒரு வகையில் பாராட்ட வேண்டியது அவசியம் தான் என்றாலும், இவர்கள் மனது வைத்தால் ஏழைகளில் ஒரு சிலரின் தலைவிதியை மாற்றிட முடியும் என்பதும் ஒரு நிதர்சனமான உண்மை.

இந்த நற்குணங்களை மனம்தான் நிர்ணயிக்கிறது. சரி என்பதும் இல்லையென்பதும், முடியுமென்பதும் முடியாதென்பதும் ஒரு மெல்லிய நூலிழையில் மனம் எடுக்கும் முடிவினைப் பொறுத்தே அமைகிறது.

'பணம் இருக்கும் இடத்தினிலே மனம் இருப்பதில்லை' எனும் பொய்யான கருத்தினை இவர்கள் உடைத்தெரிய முன் வருவார்கள் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு.

 நம் கண்முன்னே நடக்கும் பல தொண்டுள்ளம் கொண்டவர்களின் திருப்பணியினைப் பார்க்கும் போது இப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது.

நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க!!!

Saturday 20 July 2013

கவிஞர் வாலியின் நினைவுகள்...

கவிஞர் வாலி திரைப்படல்கள் எழுத வரும் முன்பே டி.எம்.சௌந்தரராஜனுக்கு முருகனைப் பற்றிய பக்திப்பாடல் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார். சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் நம்மை உருகவைத்த அந்தப் பாட்டு,
 " கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உன்னை மறவேன்..." என்பதாகும். எத்தனை முறை கேட்டாலும் புத்துயிர் தரும் பக்திக்கு இப்பாடல் ஒரு உதாரணம்.

சினிமாவுக்கு முதன் முதலில் அவர் எழுதிய பாடலும் இனிமையான ஒன்று தான்.
" நிலவும் தரையும் நீயம்மா,
உலகம் ஒரு நாள் உனதம்மா? "
எனும் மனதைக் கவரும் மெல்லிசையாகும். 1958ல் அழகர் மலை கள்வன் எனும் திரையில் இடம்பெற்ற பாடல் இது.

அடுத்தது அற்புதமான பாடல்களைக்கொண்ட "கற்பகம்" திரைப்படம்.
1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம், 'கற்பகமாகும்'. கே. எஸ். கோபாலாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர்.ராதா என பலரும் திறம்பட நடித்திருந்தனர். 1964 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - இரண்டாவது சிறந்த படத்துக்கான தகுதிச் சான்றிதழ் பெற்ற படம் இது. இத்திரைப்படத்தின் மூலம் கே. ஆர். விஜயா தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அவர் மட்டுமல்ல தமிழ் நல்லுலகத்தை ஆளப்போகும் ஒரு மிகச் சிறந்த கவிஞரும் அன்று பலர் கண்களுக்கு தெரியத்தொடங்கினார்.

'பக்கத்து வீட்டு பருவ மச்சான், பார்வையிலே படம் புடிச்சான்....'
'அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா,
ஆடும்வரை ஆடிவிட்டு அல்லி மலர் மூடம்மா...'
'மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா'
'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு'

எனும் பாடல்கள் சிறந்த கதைக்கும் நடிப்புக்கும் ஈடு கொடுத்து படத்தை வெற்றி பெறவைத்தன.

ஆயினும் கவியரசு கண்ணதாசனின் முரணான போக்கினால் எம்.ஜி.ஆர் தனக்காக பாட்டெழுத ஒருவரை தேடிக்கொண்டிருந்த போது கவிஞர் வாலியின் திறமையக் கேள்விப்பட்டு தனக்கு பாட்டெழுதும்படி அழைக்க, எம்.ஜி. ஆரின் கொள்கைகளை பிரதிபலிக்கும் பாடல்கள் நிறைய வெளிவந்து வெற்றியடையத் தொடங்கின. அதுபோன்ற மிக அருமையான பாடல்களின் மூலம் எம்ஜிஆருடைய பேரன்பை பெற்றவர் வாலி.

சில காலத்திலேயே பலரும் தேடும் கவிஞராகவும்  உருவானார்.

இசைத்தட்டுக்கள், டேப்புகள், சிடிக்கள் மற்றும் வீடியோக்கள் விற்பனையில் உள்ளோர், " வாலி எம்ஜிஆர் ஹிட்ஸ்" சிடிக்கள் தொடர்ந்து அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதை  பத்திரிக்கைகளில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சாதனையாக கருதப்படும் இந்த சிடி விற்பனை இன்னும் தொடர்கிறது. எம்ஜிஆர், டி.எம்.எஸ் அவர்களுக்கு அடுத்து அதிகமாக விற்பனையாவது கவிஞர் வாலியின் ஆல்பங்களாகும்.

" நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்..."
" ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..."
" கண் போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா.."
போன்றவை அவற்றுள் சில.

அவரின்  இனிமையான பாடல்களில் சில...

-  வெற்றிவேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல்
-  அந்த நாள் ஞாபகம் நெஞிலே வந்ததே நண்பனே ....
-  சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
-  மல்லிகை என் மன்னன் மயங்கும்
-  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே....

இப்படி அவரின் திறமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்த பாடல்கள் இன்னும் எத்தனையெத்தனையோ...

ஒரு முறை, கலங்கரை விளக்கம் திரைப்படத்தின் போது எம்ஜிஆர் அவர்கள் 15 நிமிடத்தில் ஒரு பாடலை இயற்றித்தந்தால் தனது கைக்கடிகாரத்தை பரிசளிப்பதாக கூற, அப்போது உருவானதே " காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் " எனும் பாடல்.

நம் நாட்டில் மலாய்க்காரர்களும் சீனர்களும் அன்றைய எஸ்டேட் திரையீடுகளின் போது இந்த பாடலை பாடி மகிழ்ந்ததை நானே நேரில் கண்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடலாக அது அன்று இருந்தது.

ஆயினும் எம்ஜிஆரின் கருத்துக்களுக்கு எதிரானவர்களோடு  கடந்த சில வருடங்களாக  இவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டதால், இவரின் உண்மை அபிமானிகள் சற்று வருத்தத்தில் இருந்தது வெள்ளிடை மலை.

Thursday 18 July 2013

கவிஞர் வாலி காலமானார்...

கவிஞர் வாலி தனது 82வது வயதில் நோயின் காரணமாக  காலமானார்.



எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய பல பாடல்கள் அவருக்கு பேரும் புகழும் வாங்கித்தந்தன.  பின்னர் பல கவிதைத்தொகுப்புகளையும் புத்தகங்களையும் எழுதி வந்தார். திரைப்படங்கள் சிலவற்றுக்கு திரைக்கதையையும் அமைந்திருந்தார். கலியுக கண்ணன் அவற்றில் எனக்குப் பிடித்த ஒன்று. திரையில் முகம் காட்டத் தொடங்கிய போது நடிப்பிலும் முத்திரை பதித்தார். ராதிகாவின் அண்ணாமலை தொடரில் கடைசி சில காட்சிகளில் வந்து மனதில் இடம் பிடித்தார்.

கண்ணதாசனுக்குப் பின் கவியரசாக உலா வந்த கவிஞர் வாலிக்கு ஏனோ அத்தனைத் திறமையிருந்தும் 'கவியரசு" என்னும் பட்டம் கிடைக்காமல் போனது. அதிலும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவருக்கு அது கிடைத்ததில் பலருக்கு இன்னமும் ஆச்சரியம்.

இளம் வயது நடிகர்களுக்கும் காதல் பாடல்களை எழுதி ரசிகர்களை பரவசத்தில் அசத்தியதால் அவர் இளமைக் கவிஞர் எனவும் புகழப்பட்டார். எம்.ஜி. ஆர் முதல் தனுஷ் வரை நான்கு தலைமுறைக் கவிஞராக நிலைத்து நின்றவர் கவிஞர் வாலி அவர்கள்.

மத்திய மா நில அரசுகளால் பல பரிசுகளும் பட்டங்களும் கொடுத்து கௌரவிக்கப்பட்டாலும், மக்களின் மனதில் அவரின் கவித்திறன் என்றென்றும் நிலைத்து நிற்கும். 50 வருடங்களில் சுமார் 12 ஆயிரம் பாடல்களை இயற்றி இருக்கும் அவரின் சில புகழ் பெற்ற பாடல்கள் அடுத்த சில பதிவுகளில் இங்கே இடம் பெறும்.

Sunday 14 July 2013

Saturday 13 July 2013

அஸ்ட்ரோவில் மழை...


அஸ்ட்ரோ மழையின் போது சரிவர வேலை செய்யாது. அதற்கான அதிகப் படியான கட்டனமாக அவர்கள் பெற்றுக்கொண்டாலும் மழை நேரங்களில்  நிகழ்சிகள் கிடைக்காது நாம் கஷ்டப்படுவது அவர்களுக்கு தெரிந்ததாக தெரியவில்லை. எனவே சிலர் இப்படியும் யோசித்து முயற்சி செய்கிறார்கள்.

நகைச்சுவைக்காக போடப்பட்டதே இப்படம். உண்மையில் தேவையற்ற செலவுகளில் ஆஸ்ட்ரோவும் ஒன்று. இதை மீண்டும் ஒருமுறை சொல்ல இப்படத்தை இங்கே பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.

சற்று சிந்தித்தோமானால், குறைந்த கட்டனம் எனச்சொல்லி நாம் பார்க்காத அலைவரிசைகளையும் நம்மேல் சுமத்துவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் இந்த தனியார் தொலைக்காட்சியின் ஏஜென்ட்டுகள்.

மாதம் ரிம.145 மட்டுமே என்பார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்ட அலைவரிசைகளை நாம் ஒருமுறைகூட திறந்திருக்க மாட்டோம். இதில், சேவைக்கட்டனம் வேறு நம்மிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டிருக்கும்.

ஆக, மீண்டும் ஒருமுறை யோசியுங்கள். நீங்கள் மாதா மாதம் கட்டும் தொகை நீங்கள் பார்த்துப்பயனடையும் அலைவரிசைகளுக்கா அல்லது வேண்டாதவற்றுக்கும் சேர்த்துத்தானா என மனதில் எண்ணிப்பாருங்கள்.

ஆஸ்ட்ரோவிற்காக மாதா மாதம் செலவிடப் படும் தொகை ஞாயமானதா, அல்லது இன்னும் சற்று குறைக்கப்பட்டிருக்கலாமா?

தண்ணீரை மிச்சப்படுத்துவதைப்போல, மின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது போல தேவையற்ற ஆஸ்ட்ரோ சானல்களையும் நிறுத்திவிடலாமே...

'எண்ணங்கள் ஆயிரம்' இதுவரை...

இணையம் என்பது ஒரு சமுத்திரம். எல்லோருக்கும் எல்லாமும் மலைபோல புதைந்து கிடக்கின்றது இங்கு.  ஆனால், எந்த அளவு நண்மைகள் உண்டோ, அதேயளவு தீமைகளும் எங்கும் பரந்து கிடக்கின்றது  என்பதனை மனதில் நிறுத்தி, சுய கட்டுப்பாட்டுடனும் கட்டொழுங்குடனும் நடந்து கொண்டால், இணையத்தில் நமது பயணம் இனிமையானதாக இருக்கும்.

வாசிக்கும் பழக்கமுள்ளோருக்கு ஒரு வரப்பிரசாதம் போல் இணையத்தில் அறிவுசார்ந்த விசயங்கள் அவ்வளவு உண்டு. தரமான அரிய பலவும் நமக்குப் பயன்படும் வண்ணம் கோப்பில் கிடக்கக் காணலாம்.  'புரோஜெக்ட் மதுரை' போன்ற வலைத்தளங்கள் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும்,  வளமான வாழ்விற்கும் உகந்ததாக பலராலும் முன்மொழியப்படுகின்றது.

அதே நேரம் சுய நலமற்ற சமூகப்பார்வையெனச் சொல்லிக்கொண்டு தங்களின் தனிப்பட்டக் கருத்துக்களை  திணிக்க முயல்வோரும் இங்கு எண்ணிக்கையில் அதிகம்.  நிஜம் எது போலிகள் எது எனப் பிரித்துப்பார்க்கும் மனப்பாங்கு நம்மை காத்து நிற்கும்.இல்லையேல் பார்க்கும் அனைத்தும், படிக்கும் அனைத்தும் நம்மை சலனப்படுத்தும்.

ஒரு நாளின் பல மணி நேரத்தினை வீணடிக்கும் முக நூலும் இங்குண்டு, இவ்வுலகுக்கு மட்டுமல்ல, அவ்வுலகுக்கு தேவையான இறையான்மையும் இங்குண்டு. கழிசடைகளும் இங்குண்டு, கற்பக விருட்சங்களும் இங்குண்டு.

வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு உகந்தவற்றை மட்டுமே மனதில் நிறுத்தினால் இணையம் நமக்கு சேவை செய்யும் ஒரு சிறப்பு மையமாகும். நமது உத்தரவுகளின்படி ஆடும், பாடும், ஓடும், நமக்கென இருக்கும் ஒரு தகவல் களஞ்சியமாகவே மாறிவிடும்.

கணினியில் பல இடங்களுக்கு உலா போவதும், அதிலுள்ளவற்றை படிப்பதுமாக இருப்போரில் இருந்து மாறுபட்டு வலைப்பூவினை அமைத்து இந்த இரண்டாண்டுகள் மனதில் பட்டதை எழுதி வரும் இந்நேரத்தில், எனது பதிவுகளைப்படித்து கருத்துக்களைச் சொன்ன, சொல்லிவரும் முகம் தெரியா அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை இங்கு சொல்லிக்கொள்கிறேன்.
குறைகள் பல இருந்திருக்கலாம் அவற்றை குற்றமெனக் கருதி என்னை தண்டனைக்குட்படுத்தாத வாசகர்களுக்கும் இந்த நன்றிகள்.

தொடங்கும்போது இது ஒரு சாதாரண புகைப்பட ஆல்பம் போலத்தான் இருந்தது. அதிகம் எழுதும் எண்ணம் அப்போது இல்லை. சற்று வித்தியாசமான இரட்டைவேட புகைப்படங்களை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து ரசிக்கவே இங்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டது.  பின்பு, ஒரு சில குடும்ப நிகழ்வுகளும் இடம்பெறத்தொடங்கின.

தொடர்ந்து சில நண்பர்களின் ஆதரவான பேச்சால், என்னைச் சுற்றி நான் காணுகின்றவற்றை விமர்சிக்கத் தொடங்கினேன். அதுவே இப்போது 650 பதிவுகளை தொடும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டது. அதிலும் ஆச்சரியம், பார்க்கும் இடமெங்கும் தமிழில் வலைப்பூக்கள் வாசனையுடன் வலம் வரத்தொடங்கிவிட்டதே. தமிழ்ச் செயலிகள் வரவு நம் மொழிக்கு கிடைத்த வெற்றி என்று துணிந்து சொல்லலாம்.

நான் இங்கெழுதுவதில் ஒரு திருப்தியும் உண்டு. என்னைச்சுற்றி நடக்கும் பலவற்றையே நான் இங்கு பிரதிபலிக்கிறேன். குடும்ப நிகழ்வுகளையும் உள்ளூர் சிறப்புகளையும்,  புகைப்படங்களாக ஒரு ஆல்பம் போல வெளி நாட்டில் இருக்கும் தூரத்து உறவினர்களுக்கு காண்பித்து மகிழும் அதே நேரம், இங்கு நடக்கும் அசௌகரியங்களையும் மற்றவர் மனம் நோகாது சொல்லி வருகிறேன்.

இழிவான எதுவும் இங்கு இடம்பெற்றதில்லை. சொல்லக் கூச்சப்படும் எதையும் நான் எழுதத் துணிந்ததில்லை. அரசியலையும், மற்றவர் மதத்தினையும் நான் ஆழமாக தோண்டிப்பார்க்க எண்ணியதில்லை.  ஆனாலும் ஒரு சில நேரங்களில், மூட நம்பிக்கைகளை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதனை சொல்லியே வந்திருக்கிறேன்.

இரட்டைவேட படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தொடங்கப்பட்ட இவ்வலைத்தளம், இன்று பலரின் ஆதரவில் புதுப்பரிமாணத்துடன் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது. எனது மனசாட்சிக்கும், விருப்பத்துக்கும் ஏற்றது போல இனியும் தொடரும். 

அன்பான சூழலே எனது இலக்கு. இங்கு வரும் அனைவரும் மனதை இலகுவாக வைத்திருக்க உதவுவதே எனது எண்ணம். வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்துவிடக்கூடியது. அதனை ஒவ்வொரு நிமிடமும் மகிழ்வுடன் அனுபவிக்கும் கருத்துப்பரிமாற்றமே இங்கு இனி அதிகம் வரும். சமூக சீர்திருத்தங்கள் என போர் அடிக்கும் விசயங்கள் இங்கு இயன்றவரை இருக்காது.

எந்த பதிவுலக பட்டியலிலும் நான் இதைச் சேர்க்காததால், இந்த வலைப்பூவிற்கு வருகை புரிவோரும் குறைவுதான்.  என்னைத்தெரிந்தோர் மட்டுமே வந்து போகும் தளமாக தற்சமயம் இது இயங்குகிறது.  இதுவரைக்குமான எல்லா பதிவுகளையும் மறு ஆய்வு செய்த பின் மற்ற வலைப்பூக்களின் பட்டியலைத் தாங்கி வரும் மையத் தளம் ஒன்றில் இணைக்க எண்ணம் உண்டு.

அதை பின்னர் பார்ப்போம்.

அன்புடன்,
ராஜ்பாவ்

" ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்..."



Friday 12 July 2013

பாவ்ஸ் டபுள்ஸ்...


-   வேறெங்கும் பார்த்திடாத வித்தியாசமான புகைப்படங்கள்
-   மனதில் பட்டதை மறைக்காமல் எழுதும் தனித்துவமான கருத்துக்களம்
-   படித்ததில் பிடித்தவை
-   பழம்பாடல் நினைவலைகள்
-   மற்றும் பல....

பயனுள்ள விசயங்களை பகிர்ந்துகொள்ளவும் இனிமையாக நேரத்தை செலவிடவும் வந்து பார்க்கவேண்டிய இடம்....

எண்ணங்கள் ஆயிரம்...

Thursday 11 July 2013

இரட்டைக்குழந்தைகள்...

குழந்தைகளில் இரட்டையர்கள் என வந்துவிட்டாலே மனம் அப்படி ஒரு அலாதியான துள்ளலில் பொங்கும். பெற்றோர் தங்களின் புதுவரவைக் கண்டு பூரித்துப் போவார்கள். இருக்காதா பின்னே...? மகிழ்ச்சி இரட்டிப்பாகும் போது முகத்தில் புன்னகை தானாகவே மலர்வது இயற்கைதானே?

முன்பு இரட்டைக்குழந்தைகள் பிறப்பதென்பது அதிசயமாகப் பேசப்பட்டது. ஆனால் இன்றோ, மிகச் சாதாரணமான ஒன்றாக பலருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கக் காண்கிறோம்.

ஒருவருக்கு பதிலாக இருவருக்கான செலவை ஒரே நேரத்தில் செய்யவேண்டிவரும்.  ஆனால் அது பெற்றோருக்கு ஒரு ஆனந்தச் சுமையே.

ஒரு சில நேரங்களில் ஒரே மாதிரியான உருவ அமைப்பில் இருக்கும் இருவரைப் பார்ப்பதில் சில குழப்பங்கள் தோன்றலாம். அச்சு அசலாக, அறிவிலும், நிறத்திலும், வளர்ச்சியிலும்  தோன்றும் இரட்டையர்களைப் பார்க்கும் போது இருவரில் யாருடன் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் எனும் சந்தேகம் நமக்கு எழுவதில் ஆச்சரியமில்லை.  ஆனால் மன நிலையில் அப்படி இல்லாமல் மற்ற  பிற பிள்ளைகளைப் போலவே பல வேறுபாடுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

பிறந்த குழந்தைகள் வளரும்போது பெற்றோர் கையாளும்  வழிகள் அவ்விருவருக்குமான வித்தியாசங்களை கண்டு கொள்ள  உதவுகின்றன. ஒருவருக்கு பொட்டுவைப்பது, தனித்தனியே  அவர்களின் உடையில் வேறுபாட்டைக் காண்பிப்பது மற்றும் பெண் பிள்ளைகளாய் இருந்தால் ஒருவருக்கு நீண்ட முடியும் மற்றவருக்கு பாப் முடியுமாக வைப்பது என அமர்க்களமான வகைகளில் இந்தக் குழந்தைகள் வளர்கிறார்கள்.



அதே நேரம், இரட்டையர்களாகப் பிறந்தாலும், ஒருவருக்கொருவர் எவ்வித சாயலும் இல்லாமல் மற்றவர்களைப்போல இயல்பான தோற்றமளிக்கும் குழந்தைகளும் உண்டு.  அவர்களாகச் சொன்னால் தவிர நமக்கு அவர்கள் இரட்டையர்கள் என சற்றும் எண்ணத்தோன்றாது. 

திரையிலும் தொலைக்காட்சியிலும் இரட்டையர்கள் பற்றிய பல படங்களை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்த ஆச்சரியம் இப்போது இல்லையென்றாலும், இரட்டையர்கள் என வரும்போது அவர்கள் தோன்றும் காட்சிகள் நம் கவனத்தை இன்னமும் கவருகின்றன.

அந்த சுவாரஸ்ய உணர்வை மனதில் வைத்து துவங்கப்பட்டதே இந்த 'பாவ்ஸ்டபுள்ஸ்' எனும் " ஆயிரம் எண்ணங்கள் " வலைத்தளம்.

ஆரம்பம் முதல் இப்பதிவு வரை மலர்களை போல வருடம் முழுவதும் தூவப்பட்டிருக்கும் இரட்டை வேட புகைப்படங்கள் இந்த வலைத்தளத்தில் நூற்றுக்கணக்கில் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.  அவற்றை ரசித்துவரும் வருகையாளர்களுக்கு இனியும் அவற்றைப்போல தொடர்ந்து இங்கு இடம்பெறும் எனக் கூறிக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று, படங்களில் மட்டுமே இரட்டைவேடங்கள்... நிஜத்தில் அல்ல. 


Wednesday 10 July 2013

12வது உலகத் தமிழ் இணைய மாநாடு...

மலாயாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பிரிவு ஏற்று நடத்தும் ஒரு பெரிய நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு.

அன்மையத் தகவல்களின் படி இந்நிகழ்வில் சுமார் 30 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொள்வர் என ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பார்ப்பதாக தெரிகிறது. உண்மையில் 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இங்கு நம் நாட்டில் இடம்பெறும் இம்மாநாட்டினை பலரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இது  தித்தியான் டிஜிட்டல் ஆதரவில் நடைபெறுகிறது. 

கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் எனும் மும்முனைகளில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வானது அனைவருக்கும் பயனுள்ள ஒன்றாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

'கையடக்கக் கணினிகளில் தமிழ் கணிமை" என்பது மையக்கருப்பொருளாக இவ்வாண்டு திகழ்வதால், இதச் சார்ந்த பல சுவாரஸ்யமான ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வாளர்கள் சமர்ப்பிப்பர் என நம்பலாம்.

ஐபேட், ஐபோட் எனப்படும் பலகைக்கணினிகளில் தற்போது தமிழ் தலை நிமிர்ந்தபடி உலா வரத்தொடங்கிவிட்டது. இதன்வழி ஆயிரக்கணக்கில் தமிழில் மின் நூல்கள் நாம் படித்து மகிழக் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து நமது வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ள தமிழ்ச்செயலிகள் இப்போது கைபேசியிலும், பலகைக் கணினிகளிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

பல தரமான மின் நூல்களுக்கு ஒரு சிறு தொகை கட்டனமாக கேட்கப்படுவது அப்படியொன்றும் பெரிய பாதகமான செயலாகப் படவில்லை. இனாமாகவும் பல இருக்கின்றன வாசித்து மகிழ.

தொழில் நுட்பம் வளர்ந்துவரும் இவ்வேளையில் கணினிகளில் தமிழ்ப் பற்றிய பல ஆய்வுகளின் நிலவரங்கள் இந்த மாநாட்டில் நமக்குத் தெரிய வரும். இதுவும் ஆரோக்கியமான ஒரு எதிர்ப்பார்ப்பாகும்.

ஆயினும் இன்னும் ஒரு மாதமே இடையில் இருக்கும் இந்தச் சூழலில்  அதனைப்பற்றிய விளம்பரங்கள் எதுவும் பரவலாக கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டக் காணோம்.


திருமணப்பதிவு...

பெண்கள் பல விதங்களில் பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.  அனுபவமும்  திறமையும் இல்லாதவர்கள் அதுபோன்ற பிரச்சினைகளில்  சிக்கி, திக்கு முக்காடுகிறார்கள். சிலர் மூழ்கியும் விடுகிறார்கள்.

ஒன்றைப்பற்றி தெரியாவிடினும் தெரிந்தோரிடம்  விளக்கம் பெற்ற பின் முடிவெடுப்பது சிறந்த செயலாகும். இதில் ஆண் பெண் பேதம் இல்லை. ஆயினும் ஆண்கள் பொதுவாக கூச்சப்படுவதுமில்லை, எதையும் ரகசியம் என மறைத்துச்   செய்வதுமில்லை. தன்னிச்சையாக முடிவெடுத்து பிரச்சினைகளில் வீழ்வதில் இன்னும் பெண்களே முன்னனியில் இருக்கிறார்கள். மலேசிய இளம் பெண்கள் பிரச்சினை பெரியளவில் சமூகப் பிரச்சினையாக உருவெடுக்க இதுவும் ஒரு முக்கிய காரணம்.

திருமணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவேண்டும் என்பது நம் நாட்டுச் சட்டம். திருமணம் புரிந்து கொள்ள விழைவோர் தங்களின் எண்ணத்தை தேசிய பதிவிலாகாவில் வழங்கப்படும் பாரத்தில் பூர்த்தி செய்து பொதுமக்களின் பார்வைக்கு 21 நாட்கள் வைக்கப்பட்டு, பின்னரே திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்பது அரசாங்க விதிமுறைகளில் ஒன்று.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் இல்லையா?

இல்லை....
இன்னும் பலருக்கு இந்தச் சட்ட விதிகள் தெரிந்திருக்கவில்லை. அல்லது தெரிந்தும் தெரியாததுபோல தங்களின் சுய நலத்துக்காக நடந்து கொள்கின்றனர்.

அன்மையில் மாவட்ட அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு நண்பர் இது பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அவருக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் ஒரு வருடத்துக்குப் பின் தன்னிடம் வந்து அழுது புலம்பியதாக கூறினார்.

"ஏன்?"

நீங்கள் கேட்கும் அதே கேள்வியைத்தான் நானும் அவரிடம் கேட்டேன். 'அர்ச்சனைத் திருமணம்' என செய்துகொண்டு ஒருவருடம் தன்னுடன் வாழ்ந்த அவர் இப்போது வேறு எங்கோ சென்றுவிட்டார்' என வருந்தினாறாம் அந்தப் பெண்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்களின் திருமணம் பதிவு செய்யப்படவில்லையாம்.

இதற்கு யார் பொறுப்பு...?

சாஸ்திர சம்பிரதாயம் பார்ப்போர் ஏன் சட்டம், பாதுகாப்பு என பார்க்க தவறிவிடுகின்றனர்...?

பலரையும் சாட்சிக்கு அழைத்து வீட்டிலுள்ள பெரியோர் ஏற்று நடத்தும் திருமணங்கள் பொதுவில் நல்லவிதமே தொடர்கின்றன. ஏதோ ஒன்றிரண்டு பிழையெனப் படலாம். ஆயினும், இப்படி ஒரு சிலரைக்கொண்டு முடியும் திருமணங்கள் பலவும் தேக்க நிலையில், இப்பவோ அப்பவோ என்பது போல இடித்துக்கொண்டும் முறைத்துக்கொண்டுமே காலத்தை கடத்துகின்றன. "எப்போது முறிந்துவிடுமோ" எனும் ஐயம் உடனிருப்போருக்கு நிச்சயம் இருக்கும். பல சந்தர்ப்பங்களில் நாமும் இப்படிப்பட்ட திருமணங்களைப் பார்த்திருப்போம்.

அதுபோல ஒன்றுதான் நண்பர் சொல்லும் இதுவும்.

முறைபடுத்தப் பட்ட, பதிவு செய்யப்பட்ட கோயில்களில் மட்டுமே திருமண பதிவதிகாரிகள் இருக்கின்றனர். எல்லாக் கோயிலகளிலும் அல்ல.

தமிழ் நாட்டிலிருந்து வரும் அர்ச்சகர்களுக்கு இங்குள்ள சட்டம் சரிவரத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் திருமணச் சான்றிதழ் இருந்தால்தான் திருமணம் செய்து வைப்போம் என அவர்கள் கூறியிருக்க வேண்டும். கோயில் நிர்வாகத்தினர் இதற்கு முன்னுறிமை கொடுத்து சான்றிதழ் இல்லையேல் கோயில் வளாகம் இதுபோன்ற பயன்பாட்டுக்கு தரப்பட மாட்டாது என்றிருக்க வேண்டும். ஆனால் சில கோயில்களில் நடப்பதென்ன?

திருமணச் சான்றிதழை நண்பரிடம் கேட்டு வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் ஒரு கோயில் அர்ச்சகர். நண்பர் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறவர். கோயிலுக்கு அடிக்கடிச் செல்வதால் இவரிடம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்.

 திருமணப் பதிவுகள் தேசிய பதிவிலாகக்களில் மட்டுமே உறுதி செய்யப்படுகின்றன. அவ்விலாகவின் பிரதிநிதிகளாக சில திருமண கவுன்சிலர்களும் ஆலோசகர்களும் நியமிக்கப்படுகின்றனர். வேறு யாரும், அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும்கூட இதுபோல சான்றிதழ்களைக் கொடுத்துவிட முடியாது. இதுவும் அர்ச்சகர் தவறல்ல, நிர்வாகத்தினர் தவறு. தலைமைத்துவத்தின் ஏற்பாட்டில் கோயிலை நிர்வகிக்கும் குழுவில் ஒருவர் இதுபோன்ற செயல்களுக்கென  பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கவேண்டும்.

சமூகப்பிரச்சினைகளைக் களையவும், சீர்கேடுகளைக் தவிர்க்கவும் ஏற்படுத்தப்பட்டதே "திருமணப்பதிவு" எனும் சட்டமாகும். குடும்பப் பாதுகாப்பு மூன்னிறுத்தப்பட்டு, ஆண் பெண் இருவருக்குமான கோட்பாடுகள் முறைபடுத்தப்படுகிறது. இதனால், திருமணம் எனும் புனித பந்தத்தில் இணையும் இருவரும் எந்தவித சந்தேகமுமின்றியும், அச்சமின்றியும் தங்களின் வாழ்வினை மகிழ்ச்சியாக துவங்கலாம்.

இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையிலும் அன்பிலும் மட்டுமல்ல, சட்டப்பூர்வமாகவும் சரி பாதியாகிறார்கள் என்பதே திருமணப் பதிவுகளில் சொல்லப்படுகின்ற கருத்து. இவற்றை மீறிய தவறுகள் கண்டிக்கப்படுகின்றன, தவறுவோர் தண்டிக்கப்படுகிறார்கள்.

தனிப்பட்ட ஒருவருக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் நிறந்ததே இந்த திருமண பதிவுச் சட்டம்.

அர்ச்சனைத் திருமணம் என்பது இப்போது பரவாலாக நடைபெற்று வருகின்றது. நான் பார்த்த ஒரு திருமணம் இது.  மணமகனுக்கு நான்கு பேர், மணமகளுக்கு நான்கு பேர். மொத்தத்தில் எட்டு பேர்தான். இரண்டு கார்களில் வந்தனர். அர்ச்சகர்  மந்திரங்கள் ஓதி மணமுடித்து வைக்க  எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே.

"திருமணம்" எனும் ஒன்று நடந்து முடிந்துவிட்டது.  எந்தச் செலவும் இல்லை.... 'பாக்கேஜ்" எனும்படி இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். காரணம், வந்தவர்கள் "எதுவும் கொண்டுவரவுமில்லை, கொண்டுசெல்லவுமில்லை.

" வாழ்க்கையைத் தொடங்க இப்படியும் ஒரு சுலபான வழி இருப்பதை அன்று தெரிந்துகொண்டேன்.

செலவெனக்கருதினால், அனைத்தும் செலவுதானே....?

பல கேள்விகள் எண்ணத்திரையில் ஓடுவதை உணரமுடிந்தது.

 "திருமணத்தை ஏற்று நடத்தும் கோயில்கள் மலேசிய கோயில்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்டதா...?  திருமணத்தை ஏற்று நடத்த ஒப்புக்கொள்ளுமுன் மணமக்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்ததற்கானப் பதிவுச் சான்றிதழ் காட்டப்பட்டதா...?  கோயிலுக்கான நகல் தரப்பட்டதா...?  அர்ச்சனைத் திருமணம் என ஏற்பாடு செய்வதற்கான அடிப்படைக் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா...?   உற்றார் உறவினர் இல்லாததன் பின்னனி என்ன....?  பதிவுக்கு விண்ணப்பித்தப்பின் காத்திருக்க வேண்டிய 21 நாட்கள் எனும் காலக் கெடு முடிவடைந்ததா..?" இப்படி பல கேள்விகள் மனதில் ஓடி மறைந்தன.

முறைப்படி பதிவு செய்யப்படாத திருமணங்கள் பல வித சந்தேகங்களை எழுப்புகின்றன. இருவரில் ஒருவர் இடையிலேயே விட்டுப் பிரியலாம், ஏற்கனவே திருமணம் ஆனவரா எனத் தெரியாது, பிரச்சினை என வரும்போது, சொத்துக்களை பிரித்துக்கொள்ளும் சிரமங்கள் பூதாகாரமாகிவிடும், பிள்ளைகள் பாதிப்புக்குள்ளாவார்கள்...பள்ளியில் பதிவதிலிருந்து அடையாள அட்டை எடுப்பது வரை பலவித இன்னல்களை எதிர் நோக்க நேரிடும். 

வாழ்க்கை என்பது அவசரத்தில் தொடங்கி ஆர அமர, ஆசுவாசமாக சிறமப்படுவதல்ல. அது அன்பில் துவங்கி, பண்பில் வளர்ந்து, பல பரிமாணங்களை கடந்து செல்வது...


Monday 8 July 2013

கடல்புறா - முன்னுரை

கடல்புறா எனும் சரித்திர நாவலுக்கு  அந்த நூலின் ஆசிரியர் சாண்டில்யன் அவர்களின் முன்னுரையினை இங்கே பதிவிடுவதில் மகிழ்கிறேன். உண்மையில் ஒரு படத்தினைப் பார்ப்பதைவிட அப்படம் எப்படி எடுக்கப்பட்டது என பார்ப்பது இன்னும் சுவையானதாகும். தி மேக்கிங் ஒஃப்,  'எப்படி படம் எடுத்தார்கள்' என ஒரு இணைப்பும் இப்போது படத்துடன் வருவது வழக்கமாகிவிட்டது.

அதே போல, கடல்புறா எனும் நாவலை விட அது உருவாக காரணமாக இருந்த சம்பவங்கள் அதன் முன்னுரையில் ஆசிரியர் அழகுபட விவரித்திருந்தார். பழைய சரித்திர சம்பவங்கள் தான் என்றாலும், பல விசயங்கள் நம்மை ஆச்சரியப் பட வைக்கின்றன. கலிங்கம், கடாரம் போன்ற நமக்குச் சம்பந்தம் உள்ள வார்த்தைகளைக் கண்டு மலேசியர்களாகிய நாம் எவ்வளவு இழந்து விட்டோம் என எண்ணி  நம்மை வியக்க வைக்கிறது அவரின் இந்த முன்னுரை. நாவலை படிக்க இதுவே இன்னும் சுவாரஸ்யத்தையும் ஆர்வத்தையும் தருகிறது.

1974ல் குமுதம் வார இதழில் படித்து மகிழ்ந்த அந்த நாவலுக்கு கதாசிரியர் எழுதிய "முன்னுரை'யினை இனி அப்படியே இங்கே படிக்கலாம் வாருங்கள்.

 கடல்புறா -  
ஆசிரியர் சாண்டில்யன் அவர்களின் முன்னுரை

 இந்தியாவிலேயே இணையற்ற செல்வாக்கையும் செலாவணியையும் பெற்றுள்ள 'குமுதம்' பத்திரிக்கையில் தொடர்கதையாக வந்த 'கடல் புறா' முற்றுப்பெற்றதும் அப்பத்திருக்கைக் காரியாலயத்திற்கு வந்த ஏராளமான கடிதங்க்ளில் ஒன்றை எழுதியவர் அதைக் "காவியப் புறா" என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு விசயத்தில் அது உண்மை. ஒரு பெரும் காவியத்தின் அளவுக்கு நீண்டுவிட்டது "கடல்புறா".  மூன்று ஆண்டுகள் ஒரு வாரம் தொடர்ச்சியாக இக்கதை குமுதத்தில் வெளிவந்தது.  இக்கதையை எழுத ஆரம்பித்தபோது மூன்று வருடம் ஓட்டும் உத்தேசம் இல்லை எனக்கு. ஆசையும் அவசியமும் கதையை நீட்டிவிட்டது.

தமிழர்களைப் பற்றிய வரலாற்று ஆராய்ச்சி நூல்களைப் படித்தபோதும், கல்வெட்டுக்களப் பற்றிய ஏடுகளைப் புரட்டியபோதும், கடல் கடந்த தமிழர்களப் பற்றிய குறிப்புகள் என் மனதில் ஆழப் பதிந்தன.  திரும்பத்திரும்ப அவற்றில் காணப்பட்ட கடாரம் என்ற சொல்லைப் பற்றிப் பல நாட்கள் சிந்தித்தேன். ' நல்ல யந்திர வசதியுள்ள இக்காலத்திலேயே கப்பல் பயணம் கஷ்டமாய் இருக்க, எந்த வசதியுமிள்ளாத காலத்தில் பழந்தமிழர்கள் எப்படி கடல் கடந்து சென்று வாணிபம் செய்தார்கள்?  ராஜேந்திர சோழனும், மற்ற பிற்காலச் சோழர்களும் எங்கோ இருக்கும் கடாரத்துக்கு மரக்கலங்களைக் கொண்டு சென்று எப்படிப் போர் புரிந்தார்கள்?' என்ற கேள்விகளும் அடிக்கடி சிந்தனையில் எழுந்தன, ஆகவே அந்தக் காலத்துக் கடல் வாணிபம், கடல் போர், இவற்றைப்பற்றி ஆராயத் தொடங்கினேன்.

ஆராய்ச்சி சுலபமாயில்லை. தமிழில் கிடத்த விஷயங்கள் சொற்பமாயிருந்தன. 'அந்தக் காலத்தில் எத்தகைய கப்பல்களைக் கட்டினார்கள்? எத்தனை விதக் கப்பல்கலைக் கட்டினார்கள்? அவற்றின் உபயோகம் என்ன?' என்பதற்கெல்லாம் பல ஆங்கில நூல்களையும் வடமொழி நூல்களையும் பார்க்கவேண்டியதாயிற்று.  போஜன் எழுதிய 'யுக்தி கல்பதரு" என்ற மரக்கல அமைப்பு நூல்களைப் பற்றிய குறிப்புக்களைப் பேராசிரியர் ராதாமுகுத் முகர்ஜி தமது 'இந்தியன் ஷிப்பிங்" என்ற நூலில் தந்திருக்கிறார்.  அந்தக் குறிப்புகள் மரக்கல அமைப்பைப் பற்றி எனக்குப் பல சூட்சுமங்களை விளக்கின.  பிறகு கடாரத்தின் சரித்திரம், சைலேந்தர்களின் வம்சாவளி அவர்கள் வரலாறு முதலியவற்றை டாக்டர் மஜும்தாரின் 'ஸ்வர்ணத்வீபம்" என்ற நூலிலிருந்தும், வீரராஜேந்திரன் காலத்தில் ஏற்பட்ட கடாரப் போரப் பற்றிய சில குறிப்புகளை திரு. நீலகண்ட சாஸ்திரியார், டாக்டர் எஸ். கிரிஷ்ணசாமி அய்யங்கார், திரு. பி.டி.ஸ்ரீனிவாச ஐயங்கார் இவர்கள் வரலாற்று நூல்களில்லிருந்தும் எடுத்துக் கொண்டேன்.  

மேல் கூறிய நூல்களிலிருந்து எனக்குக் கிடைத்த தகவல்கள் வருமாறு :

" முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அனபாயன் கி.பி. 1063வது வருஷத்திலிருந்து 1070ம் வருஷம் வரை
ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலை நிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077வது வருஷத்தில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலவன் பெயர் 'தேவகுலோ." இந்த தேவகுலோ என்ற சொற்கள் குலோத்துங்கனைக் குறிக்கும்.

இந்தத் தகவல்களிலிருந்தும் ராஜேந்திர சோழனின் சல்வெட்டுக் குறிப்புகளிலிருந்தும் பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும், அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களிலும் கலந்து கொள்வதும் சர்வசகஜமாக இருந்ததென்பதை அறிந்தேன். ஆகவே அவர்கள் சென்ற கட;ல் மார்க்கங்கள், அவற்றுக்கு உதவிய மரக்கல வகைகள், போர் முறைகள், இவற்றைப் பற்றிய பல நூல்கலைப் படித்தேன். அவற்றைப் படித்த பின்னர் ஏற்பட்ட வியப்பு அல்ப சொல்பமல்ல. தமிழர் பரம்பரை எத்தனை வீர பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றது. எத்தனை அபாயங்களை தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவாகத் தெரிந்தன.  இந்த அறிவையெல்லாம் எனது வாகசர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையின் விளைவுதான் "கடல் புறா."

"கடல் புறா"வின் கதையைப் புனைய என்னைத் தூண்டிய இலக்கியம் ஜயங்கொண்டாரின் 'கலிங்கத்துப் பரணீ'.  அதைப்படித்தபோது கருணாகரத் தொண்டைமானின் வீரம் மட்டுமல்ல, அவன் கலிங்கத்தில் புரிந்த அட்டூழியங்களும் என் சிந்தனையைத்  தூண்டின.  என்னதான் போரிட்டாலும் பாண்பாடு மிக்க தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தளபதி பயிர்களைக் கொளுத்துவதும், அழிவை எங்கும் விளைவிப்பதும் எப்படிச் சாத்தியம் என்று எண்ணிப்பார்த்தேன். அதை முன்னிட்டுக் கலிங்கத்தின் வரலாற்றையும், வீர ராஜேந்திரன் காலத்தில் தமிழ்-கலிங்க எல்லை விவகாரங்களைப் பற்றியும் ஆராய்ந்தேன். பூசல் பலமாயிருந்தது.  அநீதிகளும் சில இழைக்கப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தில் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மீது இழைத்தக் கொடுமைக்கு அவை ஏன் காரணமாயிருக்கக் கூடாது என்று யோசித்தேன். அந்த யோசனையையும் குலோத்துங்கன் ஸ்ரீவிஜயப் பயணத்தையும் இணைத்துப் பார்த்ததில் ' கடல் புறா" பிறந்தது. "கடல் புறா"வை 'கலிங்கத்துப் பரணி"யின் சம்பவங்களுக்கு அடிகோலும் நூல் என்று கொள்ளலாம்.

 'கடல் புறா'வில் கற்பனையைப் பூர்ணமாக ஓட்டியிருக்கிறேன். சுவையான ஒரு கதையை வரலாற்றுக் குறிப்புகளுடன் நுழைத்துச் சலிப்பில்லாமல் மக்கள் படித்து மகிழச் செய்யப்பட்ட பெரு முயற்சியின் விளைவு 'கடல் புறா.' இதன் தரத்தை தமிழ் மக்களும் அரிஞர்களும் மதிப்பிடுவார்கள். ஆகையால் நான் மதிப்பிட முயலவில்லை. முயல்வதும் சரியாகாது.  சமைத்த பதார்த்தத்தின் பெருமையைச் சமைத்தவளே விவரிப்பது ரசமல்ல, பண்பாடுமல்ல.  

ஆனால் மதிப்பீடு செய்வது அத்தனை எளிதும் அல்ல. சிற்றறிவாளரும் பாரபட்சமுள்ளவர்களும் மதிப்பீட்டில் இறங்குவது எத்தனை அசம்பாவிதம் என்பதை சமீபத்தில் வேறொரு சந்தர்ப்பத்தில் கண்டேன்.  இலக்கிய மேதகளென்று சொல்லிக்கொள்ளும் சிலர், "சரித்திரக் கதைகள் இலக்கியமல்ல' என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் 'சரித்திரக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை" என் கிறார்கள்.  இதற்கெல்லாம் காரணம் இலக்கியம் எது என்பதிலுள்ள அறிவுக்குறைவென்பதை சாதாரண மக்கல் கூடப் புரிந்து கொள்வார்கள். 'சரித்திரம்' என்பது ஆகாயத்திலிருந்து குதித்துவிடவில்ல்லையென்பதும் ஆதியில் வாழ்ந்த சமுதாயத்தைப் பற்றிய குறிப்புத் தொகுதிதான் என்பதையும் புரிந்துகொண்டால், 'சரித்திரக் கதைக்கும் சமூகக் கதைக்கும் உடைகளைத் தவிர அதிக வித்தியாசம் எதுவுமில்லை'யென்பது தெரியவரும். அடிப்படை உணர்ச்சிகள், ஆசாபாசங்கள் எல்லாம் ஆதிகால முதல் மனிதனுக்கு ஒரே விதமாகத்தனிருக்கின்றன. சரித்திரக் கதகளில் வீர, காதல் ரசங்கள் காரணமாக அவை இலக்கியமல்லவென்றால் புராணங்களும், இதர பெருங்காவியங்களும் அடிபட்டுப் போகும். இராமாயணம், மகாபாரதம், தமிழிலுள்ள ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாவற்றையுமே தள்ளி விடும்படியாக இருக்கும்.  ஃப்ளுடார்க், ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் காற்றில் பறந்து விடுவார்கள். இவர்களெல்லாம் போய் மீதி ஏதாவது நிற்கவெண்டுமென்றால், சாரமில்லாத, விரசமான கதை எழுதுவதல்லாமல் ' இதுதான் இலக்கியம்" என்று எழுதுபவர்களே சொல்லிக் கொள்ளும் கதைகள் தாம் மிஞ்சும். இந்த நிலை ஏற்பட வேண்டாம் என்று ஆண்டவனைப் பிரார்த்திப்போமா?  தேவையில்லை. சரக்கில்லாத நூல் மக்களிடம் செலாவணியாவதில்லை. தமிழ் மக்கள் உறுதியுள்ளவர்கள். தகுந்தது எது? தாகாதது எது என்பது அவர்களுக்குத் தெரியும்.

 'ஆகவே இலைக்கியம் எது? இலக்கியம் அல்லாதது எது?' என்ற சர்ச்சை இப்போது தேவையில்லை. நூல்கள் பெருகட்டும்.  பிற்காலத்தில் எது இலக்கியம் என்பது தீர்மானிக்கப்படும்.  இப்பொழுது தேவைப்படுவது நூல்கள் பெருக துணை செய்யும் விமர்சனம். அப்படி விமர்சனம் செய்பவர்களும் தமிழ் நாட்டில் நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.

ஆனால் நாம் ஒரு நூலை எழுதும்போது யாரைத் திருப்தி செய்யவும் எழுதக் கூடாது. நல்லதை எழுத வேண்டும். கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எழுத வேண்டும்.  நமது நூல்களைப் படிப்பவர்கள் அலுப்புத் தட்டாமல் படிக்கவும், படித்த பின்பு அவர்கள் எண்ணங்களும் அறிவும் உயரவும் விசாலப்படவும் எழுத வேண்டும். இந்த நோக்கங்களுடன்தான் நான் எழுதுகிறேன். 


இந்தக் கடல் புறா சம்பந்தமாக நான் படித்த வரலாற்று நூல்களின் பட்டியலைப் பின்னால் தந்திருக்கிறேன். அவற்றிலிருந்து நான் அறிந்த பல உண்மைகலை இந்த நவீனத்தைன் ஊடே செலுத்தியிருக்கிறேன். உதாரணமாக "கப்பல்களில் திசை காட்டும் கருவி நவீன காலத்தியது. வெள்ளையர் கண்டு பிடித்தது" என்று எண்ணுகிறோம்.  ஆனால் அதை சீனர் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரத்து முன்னூறு வருஷங்களுக்கு முன்பே அறிந்திருந்தார்களென்ற குறிப்பு இருக்கிறது. இப்படி இன்னும் பல குறிப்புகள் இருக்கின்றன.

'யவனராணி முடிந்து எட்டு மாதங்கள் கழித்துதான் கடல் புறாவைக் குமுதத்தில் துவக்கினேன்.  அந்த எட்டு மாத ஆராய்ச்சியின் பலனைக் 'கடல்புறா"வில் பார்க்கலாம். தவிர நல்லதொரு கதையையும் பார்க்கக்கலாம்.  ''யவன ராணி''யைப் போல் ''கடல் புறா'' வும் மக்களிடம் பேராதரவைப் பெற்றது. அதைத் தொடர் கதையாகப் பிரசுரித்த 'குமுதம்' ஆசிரியருக்கும் பிரசுரத்தாருக்கும் எனது நன்றி உரித்தாகும். அவர்களிருவரும் எனது நண்பர்கள். அவர்களைப் பற்றி அதிகப்படி எழுதுவது முறையாகாது.  இருப்பினும் ஒன்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உன்ரும் தமிழகத்தில் நான் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கிறேனென்றால் அதற்குக் காரணம் "குமுதம்" பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. எஸ். ஏ. பி. அண்ணாமலையும், அதன் பிரசுரகர்த்தர் திரு. பி.வி.பார்த்தசாரதியும் பல வகைகளிலும் எனக்களித்த ஆதரவுதான்.

'கடல் புறா'வுக்கு ஒரு முகவுரை தேவையென்று நினைத்ததும் என் நினைப்பில் வந்தவர் டாக்டர். என். சுப்பிரமணியம் எம். ஏ..பிஎச். ட். அவர்கள்தான். டார்க்டர் சுப்பிரமணியம் அவர்கள்வரலாற்றில் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்தவர். சென்னைப்பல்கலை கழக வரலாற்றுப் பேராசிரியர். முகவுரை எழுதித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டதும் ' பல்கலைக் கழக பேராசிரியர்கள்' வரலாற்று நூல்களுக்கு முகவுரை எழுதுவது விரும்பத்தக்கதல்லவென்று சில எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள்' என்று கூறினார்.  'ஒரு துறையில் சரியாக ஆராய்ச்சி செய்யாதவர்கள் அதைப்பைபற்றி அபிப்பிராரயம் சொல்வதுதான் தவறு. விசயந் தெரிந்தவர்கள் எழுதுவதுதான் விரும்பத்தக்கது.  அப்பொழுதுதான் நல்ல இலக்கியம் வளரமுடியும்.  சென்னைப் பல்கலை கழக வரலாற்றுப் பேராசிரியரான உங்களைப் போன்றவர்கள்தான் வரலாற்றுப் புதினங்களின் குணதோஷங்களைச் சரியானபடி எடுத்துச் சொல்லமுடியும்' என்றேன். பிறகுதான் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் முகவுரை தர இசைந்தார்கள். அப்பெரியாருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.  இதுவரை என் புத்தகங்களுக்கு நல்லறிஞர்களே முகவுரைகள் எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தின் இணையற்ற அரசியல் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி, பேராசிரியர் சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் கே. வி. ரங்கஸ்வாமி ஐயங்கார், 'குமுதம்' ஆசிரியர் எஸ். ஏ. பி. அண்ணாமலை ஆகியவர்கள் எழுதியிருக்கிறார்கள்.  இப்பொழுது பேராசிரியர் டாக்டர் சுப்பிரமணியம் எம்.ஏ, பிஎச்.டி எழுதியிருக்கிறார். இவர் எழுதித் தந்திருப்பதி முகவிரை மட்டுமல்ல, வரலாற்றுப் புதினம் எழுது முறை பற்றுஇ விளக்கும் சிறந்த கட்டுரயுங்கூட என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.

இம்முகவுரையை டாக்டர் சுப்பிரமணியம் எம்.ஏ, பிஎச்.டி, குறுகிய காலத்தில் எழுதிக் கொடுத்தார். 'கடல் புறா' வின் மூன்று பாகங்களையும் மிக விரைவில் படித்து எனக்குத் துரிதமாக முகவுரையும் எழுதி கொடுத்ததற்கு நான் மட்டுமல்ல 'வானதி'  உரிமையாளர் திரு. ஏ. திரு நாவுக்கரசும் கடமைப்பட்டவர். இந்த நாற்பது ரூபாய் ( இப்போது ரூபாய் 100 ) புத்தகத்துக்கு முன்னதாகவே வந்துவிட்ட ஆர்டர்களை நிறைவேற்ற சீக்கிரம் முகவுரை கிடைத்தது எத்தனை உதவி நான் சொல்லத் தேவையில்லை.

'கடல் புறா' கதையை மக்கள் 'குமுத'த்தில் படித்தாகிவிட்டது.  அவர்களை நான் கேட்டுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். எத்தனையோ செலவழிக்கும் நீங்கள் 'கடல் புறா' புத்தகத்தையும் வாங்கி உங்கள் வீட்டில் வையுங்கள். அப்படிச் செய்வது எனக்கும் உதவி, பதிப்பாளருக்கும் உதவி. பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படும் என்று கூறிக்கொண்டு உங்கள் ஆதரவு என்றும் இருக்கவேண்டும்றும் வேண்டிக்கொண்டு என் முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மக்கள்!