Thursday 23 July 2015

முதியோருக்கு எதிரான கொடுமை ...

நம் சமூகத்து மூத்த குடிமக்கள் பெரும்பாலோனோர் மருமகள்களின் கொடுமைக்கு ஆளாகின்றனர் என்று அவ்வப்போது எடுக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆய்வுகளில் தெரியவருகிறது.
தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளின் வாழ்விற்காக எண்ணற்ற தியாகங்களை செய்து அவர்களை ஆளாக்கி விட்டு கடைசி காலத்தில் அந்த பிள்ளைகளின் தயவினை எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர் முதியவர்கள். இவ்விசயத்தில், தங்களின் அந்திமகால சேமிப்பும் அடங்கும். பொருளை இழந்துவிடும் பெரியோர், சில நேரம் தங்களின் சொந்த பிள்ளைகளாலும், பல நேரம் அவர்களுக்கு வாய்க்கும் மருமகன் அல்லது மருமகள்களாலும் துன்பத்துக்கு ஆளாகிறார்கள்.
60, 70, 80 என அதிக வயது என்பது ஈவிரக்கம் இல்லாத பிள்ளைகளுக்கு வெறும் எண்மட்டுமே.
ஒரு சில குடும்பங்களில், வீட்டிலிருக்கும் பெரியவர்களின் நிலம், வீடு மற்றும் ப்ரோவிடண்ட் பண்ட் பணத்தை கைபற்ற ஆர்வம் காட்டும் மகன்கள், அவர்களை கடைசி வரை தங்களுடன் வைத்துப் பார்க்க எண்ணம் கொள்வதில்லை. இந்த சொத்து சுகங்கள் கிடைக்கப் பெறாத பெண் பிள்ளைகளே வயதான தாய் தந்தையரை கவனிக்கும் பொறுப்பை ஏற்று கவனித்துக்கொள்கிறார்கள். அது ஏனோ மகன்களை மருமகள்கள் கொடுமைக்காரர்களாக ஆக்குவதிலேயே காலமுழுவதும் அமைந்து விடுகிறார்கள். அநாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் மாமன், மாமியார்களை அனுப்ப நினைக்கும் மருமகள்கள், தங்களின் பெற்றொருக்கு அந்த நிலை வந்தால் என்ன செய்வார்களோ?
முதியோருக்கு எதிரான கொடுமை என்பது அவர்களின் மனதைக் காயப்படுத்தும் செயல் என்பதனால், இதனை கண்முன்னே காணும் அனைவரும் முடிந்தவரை சம்பந்தப் பட்டவரிடம் தங்களின் கண்டனக் கருத்தை பகிர்ந்துகொள்வது நல்லது என நினைக்கிறேன். இதனால், மற்றவர்கள் தங்களை இழிவாக நினைக்காது இருக்கவாவது, பிள்ளைகள் சற்று அடங்கிப் போகலாம்.
சட்டத்திலும் ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட வேண்டும். பெற்றோர்களின் பொருளாதாரத்தை பலவந்தமாக பிடுங்கிக்கொண்டு அவர்களை வீட்டை வீடு வெளியேற்றும் பிள்ளைகளை கடுமையாக தண்டிக்கவேண்டும். அவர்களிடம் இருந்து பறிக்கப்படும் பணம், பத்து மடங்காக அவர்கள் பெயரில் சேமிப்பில் திரும்ப சேர்க்கப்படவேண்டும். பிள்ளைகள் தங்களது கடைசி காலத்தில் தங்களை கவனித்துக்கொள்வார்கள் என்றே பெற்றோர் தங்கள் கைவசம் இருக்கும் பணத்தை அவர்களுக்குத் தருகிறார்கள். இது நடக்காத போது, சட்டப்படி பிள்ளைகளை தண்டிப்பது ஞாயமே. தங்களின் தார்மீக கடமையினை செய்யத் தவறும் பிள்ளைகளுக்கு இறைவன் காட்டும் தண்டனையும் கண்முன்னே நடந்துவிட்டால், இது போல நடப்பது நின்று விடும்.

Tuesday 21 July 2015

படித்ததில் பிடித்தது: சாவித்ரி-18


சாவித்ரி-18. ஏமாற்றத்தின் பள்ளத்தாக்குகளில்!

First Published : 05 September 2015 10:00 AM IST

தன் சறுக்கல்களுக்கும் சரிவுகளுக்கும் சாவித்ரி யார் மீதும் பழி போட விரும்பவில்லை. தனக்காக இரக்கப்பட்ட ரசிகர்களிடம் மனம் விட்டுப் பேசினார். அவரது பேட்டியில் ஒளிவு மறைவு கிடையாது. அது   ஓர் ஓபன் ஸ்டேட்மென்ட். தவறுகளுக்கானத் தன்னிச்சையான வாக்குமூலம். அதில் கண்ணியத்தின் மாண்பைக் காணலாம்.
‘யாருடைய கருணையும், பரிதாபமும் எனக்குத் தேவை இல்லை. மீண்டும் உயிர்த்தெழுவேன்! ’  என்கிற வைராக்கியத்தின் விலாசமாக வெளிப்பட்டது.
‘பிராப்தம் தெலுங்கு படத்தை எடுக்கும் போதே அதன் தயாரிப்பாளர்கள் என்னை மிகவும் வற்புறுத்தி நடிக்கச் செய்தார்கள். அதில் ஏ. நாகேஸ்வர ராவ் அப்பாவியான படகோட்டி. அவரை நான் வாடா போடா  என்று பேசி நடிக்க வேண்டும்.  எனக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. அதனாலேயே அதில் நடிக்க ரொம்பத் தயங்கினேன்.
ஆனால் கதை மிகவும் பிடித்திருந்ததால் கடைசியில் ஒப்புக் கொண்டேன். படம் அபாரமான வெற்றி அடைந்தது. அதுவே என்னைத் தமிழிலும் தயாரிக்கத் தூண்டியது. தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதன் தமிழ் உரிமையையும் நானே வாங்கிக் கொண்டேன்.
எம்.எஸ்.வி. அருமையாக இசை அமைத்தார். ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’,   ‘சந்தனத்தில் நல்ல’,  ’தாலாட்டு பாடி’, ‘நேத்துப் பறிச்ச ரோஜா’ என அத்தனைப்  பாடல்களும் சூப்பர்ஹிட். ஆனால் படம் வெற்றி பெறவில்லை.  எனக்குப் பெரிய நஷ்டம்.
 
‘சாவித்ரி ஒவ்வொரு சிச்சுவேஷனையும் உணர்ச்சி பூர்வமாக எனக்கு சொல்லிக் காட்டிய விதம் மறக்க முடியாதது. மிகச் சிறந்த நடிகையாக இருந்ததால், பாடலின் உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் காட்டுவதை விட,  நடித்தே காட்ட அவரால் முடிந்தது. சில காட்சிகளை  சாவித்ரி விளக்கிய போது அழுது விட்டார். என்னையும் அழ வைத்தார். ’ 
-மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி.
பிராப்தம் பார்த்தவர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கவா இரண்டரை ஆண்டுகள் என்றார்களாம். இடையில் ஏற்பட்ட இன்னல்கள், இடையூறுகள், உண்டாக்கி விடப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் எத்தனை?
 டாக்டர் பட்டம் பெற முதலில் ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு, ஸ்பெஷல் கோர்ஸ், பயிற்சி மருத்துவராக ப்ராக்டிஸ் என்று படிப்படியாகப் போய், ஆபரேஷன் செய்ய ஏழு வருஷங்கள் ஆகி விடும்.  மூன்று மணி நேரம் ஆபரேஷன் செய்ய இத்தனை கால விரயம் செய்து படிப்பார்களா..., என யாராவது கேட்பார்களா?
எதனாலேயோ பிராப்தம் ஷூட்டிங் முழுவதுமே  எனக்குப் பெரிய கலக்கமாகத்தான் போய்விட்டது. கோதாவரியில் பெரிய செட் போட்டு வைத்திருந்தோம்.  மார்ச் முதல் தேதி அங்கு புறப்படும் வேளையில் என் தாயார் இறந்து விட்டார்.
அது எனக்குத் தாங்க முடியாத இடி. பத்து நாள்கள் காரியம் முடியாமல் எங்கேயும் போக முடியாது என்ற நிலை. மனவருத்தம், வேதனையோடு மீண்டும்  சுதாரித்து எழும் போது, எனக்கு மஞ்சள் காமாலை நோய் வேறு வந்து விட்டது. மறுபடியும் ஷூட்டிங் ரத்தானாது.
பிராப்தம் தயாரிப்பில் இருந்த போதே தெலுங்கில் வியட்நாம் வீடு படத்தையும் தயாரித்து இயக்கி, பத்மினி ரோலில் நடித்தும் வந்தேன். எனக்கு வந்த காமாலை நோய் ஒரு புதுவகை.  முகம் புஸூபுஸுவென்று ஊதி விட்டது.
நான் சுபாவமாகக் கருப்பு  நிறம். இந்த நிறத்தையும் பளபளப்பையும் பார்த்தவர்கள் எல்லாம், உங்களுக்கு என்ன உடம்பு என்று கேட்க ஆரம்பித்தார்கள். கடைசியில் தான் காமாலை என்பது தெரிந்தது.
பிராப்தம் ரிலீசில் என்னால் மிகவும் தாமதம் ஏற்பட்டு விட்டது. பிராப்தம் தோல்விக்கு நானே காரணம்!  யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை. காலம் கடந்த தயாரிப்பு. என் உடல் நிலைக் கோளாறு. இவையே முக்கிய காரணம்.
நான் மிகவும் ஆசையாக உருவாக்கிய ஓர் உன்னதமான கோட்டை நொறுங்கிப் போனது. பண நஷ்டம் மட்டும் அல்ல. நல்ல கதை. புகழ் பெற்ற நல்ல நடிகர் நடிகையர். நல்ல இசை. இவ்வளவு அம்சங்களும் இருந்தும் பிராப்தம் ஏன் வெற்றி பெறவில்லை? தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றம்.
கோதாவரி நதியும் படகுப் பயணமும் தமிழர் வாழ்க்கை முறைக்குப் பழக்கம் இல்லாதவை என்பதனாலா?
 
என்னை மங்கலம் இழந்த கோலத்தில் காண ரசிகர்களுக்குப் பிடிக்காததனாலா? புரியாத மர்மமாகவே இருக்கிறது.
நான் நடிக்காமல் வாணிஸ்ரீ நடித்திருக்கலாம் என்றார்கள். நான் ஏற்று நடித்த பாத்திரம் சாதாரணமானதல்ல. மிக அனுபவமிக்க சிறந்த நடிகை ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
நான் செய்தது சரி இல்லை என்றால் எனக்குப் பதில், அதை செய்யக்கூடிய நடிகை சவுகார் ஜானகி ஒருவரே. அவரால் அதைச் சிறப்பாகச் செய்திருக்க முடியும்.
சந்திரகலாவுக்குப் பதில் வாணிஸ்ரீயைப் போட்டு இருக்கலாம் என்று முதலிலும் முடிவிலும் சொன்னார்கள். அதை வேண்டுமானால் செய்திருக்கலாம் என்று எனக்கு  தோன்றுகிறது.
தாய் போன துக்கம். குழந்தைகளைப் பற்றிய கவலை. ஏகப்பட்டப் பண நஷ்டம். எல்லாமாக சேர்ந்து என்னை உலுக்கி விட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருந்த போது ஜூரத்தில் ஓயாமல் புலம்புவேன். சாவித்ரிக்கு சித்தம் கலங்கி விட்டது என்று கூடச் சிலர், புரளியைக் கிளப்பி விட்டுப் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.
நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு சிரமம் வரக் கூடாது. வந்தால் உடனே கதை கட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஹபிபுல்லா சாலையில் நான் இருந்த வீட்டை மாற்ற நேர்ந்த போதும்  அப்படித்தான் ஆயிற்று. அவ்வளவு ஆசையாகக் கட்டிய பெரிய வீட்டில், நான் தனியாகக் குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அதனால் சிறிய வீட்டுக்குப் போனேன்.
உடனே எல்லாரும் ஆளாளுக்கு ஒரு விதமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ‘பாவம் சாவித்ரி நொடித்துப் போய் விட்டாள். ’ என்று என் காதுபடவே பேசத் தொடங்கினார்கள்.
பிராப்தத்துக்குப் பிறகு  சாவித்ரி படமெடுக்க மாட்டாள் என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் படமெடுக்க மாட்டேன் என்று எப்போது சொன்னேன்?  இன்றைய சூழலில் தயாரிப்புத் துறை அவ்வளவு லாபகரமானது அல்ல.
பிற தொழில்களைப் போல பயபக்தியோடு, புனிதத் தன்மையோடு இந்தத் தொழிலை என்று நடத்துகிறோமோ அன்று தான் இதில் லாபம் காண முடியும்.
நாம் ஒன்றை நினைத்துப் படமெடுப்போம். விநியோகஸ்தர்கள் தாங்கள் நினைத்ததைப் படமெடுக்கச் சொல்வார்கள். கதையை மாற்றச் சொல்வார்கள். கதையின் கரு மாறி படம் ஏதோ ஒன்றாகி விடும்.
எனது அடுத்தப் படத்தில் நர்ஸாக நடிக்கிறேன். என்னுடன் ரவிச்சந்திரன், மேஜர் சுந்தர்ராஜன் நடிக்கிறார்கள். ஒரு புதுமுகத்தை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஆனால் இதை நான் டைரக்ட் செய்யப் போவதில்லை. தயாரிப்பு மட்டுமே. ‘புகுந்த வீடு’ வெற்றிச்சித்திரத்தை இயக்கிய  பட்டுவிடம் அப்பொறுப்பைத் ஒப்படைத்து விட்டேன்.
நான் இயக்கிய பிராப்தம், குழந்தை உள்ளம் இரண்டிலும்  நான் ஏற்று நடித்த பாத்திரம் படங்களில் ஓரளவுதான். எனக்கு ஓய்வு அதிகம். எனவே டைரக்ஷனைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. இப்போது நான் தயாரிக்கப் போகும் படத்தில் என் வேடம் முழுமையானது. நான் டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் நடிப்பில் அதிக பாதிப்பு ஏற்படும்.
நாற்பது நாள்களில் இந்தப் ப்ராஜெக்டை முடித்து விடுவேன். 1972  தமிழ்ப் புத்தாண்டில் ரிலீஸாகும். இனி நான் நடிக்க மாட்டேன் என்று யாரிடமும் மறுத்ததில்லை. என்னால் இனி மேல் காதல், ஆடல், பாடல் காட்சிகளில் நடிக்க முடியாது. வயதாகி விட்டதல்லவா!  தாயாக, சகோதரியாக, அண்ணியாக நடிக்கலாம்.
அன்று முதல் இன்று வரை நானாக யாரிடமும் போய் சான்ஸ் கொடுங்கள் என்று கேட்டதில்லை. எனது ஒரே ஆசை  சாகும் வரையில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். நடிக்கும் போதே சாக வேண்டும். ’
மேற்கண்ட சாவித்ரியின் நேர் காணலில் ஊன்றி கவனித்தால் அவர் குழம்பிப் போய் இருப்பது புரியும். அப்படியும் தன்னை நிரூபித்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் அதற்கான முயற்சிகளும் விளங்கும். வாசகர்களின் மனத்தில் எழுந்த ஒரே கேள்வி.
ஏற்கனவே யானைப் பள்ளத்தில் வீழ்ந்து அவதியுறும் நடிகையர் திலகம்,  தமிழ் சினிமாவின் சூழல் சரியில்லை என்று தெளிவாகக்  கூறும் சாவித்ரி, மீண்டும் படம் தயாரிக்க வருவானேன்! தொடர்ந்து அழிவைத் தேடிக் கொள்வானேன்!
நல்ல வேளை! அவ்வாறு நடக்காமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தியவர் சாட்சாத் ஜெமினி கணேசன்! சாவித்ரியை அதல பாதாளத்திலிருந்து ஓரளவு காப்பாற்றிய பெருமை அவருக்கே உண்டு.
‘என் மனம்  அறிஞ்சி நானாக  எந்தத் தப்பும் பண்ணல. யானை தன் தலையில் மண் எடுத்துப் போட்டுக்குற மாதிரி, அவா அவா கெட்டுப் போனா நான் என்ன பண்ண முடியும்? ’
மத்தவங்க ஆண்டவன் கிட்டே பாவ மன்னிப்பு கேட்கணும். எனக்கு அந்த அவசியம் இல்லை. ஏன்னா எனக்கு ஏதாவது கெடுதல் வந்தால், கடவுள் தான் இத்தனை நல்ல ஆத்மாவை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று வருந்த வேண்டும்.’ - ஜெமினி கணேசன்.
 
தன் மணாளனின் வாக்கியங்கள் உண்மையானவை என்பதை மனைவி உடனடியாக நிருபித்தார்.
தன்னை நன்கு அறிந்த சகக் கலைஞர்களிடம் சாவித்ரி அடிக்கடி மனம் விட்டுக் கூறிய வாசகம்!
‘என் நிலைமையைப் பார்த்தீங்களா...! எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்! ’
ஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.
பிராப்தம்  உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில்  இருந்தது.
1968-ல் வெளியான கே.எஸ். கோபால கிருஷ்ணனின்  ’பணமா பாசமா’ வசூலில் சுனாமி!  தமிழகமெங்கும் வெற்றி விழா கொண்டாடியது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தியேட்டரான மதுரை தங்கத்தில் அபூர்வமாக  25  வாரங்கள் ஓடியது.
அதே கால கட்டத்தில் சவுகார் ஜானகியும், தேவிகாவும் தங்களின் சொந்தத் தயாரிப்புகளில் ஜெமினி கணேசனையே நாயகனாக நடிக்கச் செய்தார்கள். சவுகாரின் ’காவியத்தலைவி’ 100  நாள்கள் ஓடி விழா கொண்டாடியது.ஜெமினிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் பரிசைப் பெற்றுத் தந்தது.
தேவிகாவின் ‘வெகுளிப் பெண்’ நூறு நாள் படம். அது மாத்திரம் அல்ல. 1971ன்  சிறந்த மாநில மொழிப் படம் என்கிற தேசிய விருதைத் தட்டிச் சென்றது. சாவித்ரியால் புறக்கணிக்கப்பட்ட ஜெமினியின் கவுரவத்தை அத்தகைய பெருமைகள்   உயர்த்தின.
1969, 1970,1971, 1972 ஆகிய வருடங்களில்  ஆண்டுக்கு ஒரு டஜன் படங்களுக்கு மேல் ஜெமினி, தொடர்ந்து புயல் வேகத்தில் நடித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அவரது படப் பட்டியலைப் பாருங்கள். இரு கோடுகளாகி  கே.பாலசந்தரும் -ஜெமினியும் தொடர்ந்து முத்திரைச் சித்திரங்களை வழங்கினர்.
சாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது!
காதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர்  சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.
சவுகார் ஜானகிக்கும், எஸ். வரலட்சுமிக்கும், பண்டரிபாய்க்கும், சுகுமாரிக்கும்  வழங்கிய அம்மா வேடங்களை ஏனோ சாவித்ரிக்கும் தராமல் போனார்.
--------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.
பொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்?
‘ஒரு தாய் மக்கள்’ படப்பிடிப்பு. சண்டைக் காட்சியில்  ஸ்டன்ட் நடிகர் கே.பி. ராமகிருஷ்ணன் கால் ஒடிந்து விட்டது. கே.ஜே. நர்சிங் ஹோமில் உடனடியாக அனுமதித்தார்கள். அவரைப் பார்க்கச் சென்றார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
அங்கேயே  மஞ்சள் காமாலையால்  உடல் நலம் பாதிக்கப்பட்டு, சாவித்ரி ஆதரவின்றி கிடப்பதைக் கேள்விப் பட்டார். சகலரையும் போல் சும்மா நலம் விசாரித்து விட்டு வந்திருக்கலாம். ஆனால் வாத்தியார் என்ன செய்தார் தெரியுமா?
சாவித்ரிக்கான முழு சிகிச்சை செலவையும் வள்ளலே ஏற்றுக் கொண்டார்.
அது மட்டுமல்ல. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கால கட்டம்.
மிகவும் நிராதராவான நிலையில், புரட்சித்தலைவரின் ஆற்காடு அலுவலகத்துக்கு வந்து காத்து நின்றார் சாவித்ரி. எப்படியாவது  முதல் அமைச்சரை நேரில் சந்தித்து பேசியாக வேண்டிய நிர்ப்பந்தம். சுற்றிலும்  மன்னாதி மன்னனின் ராஜாங்கம் கண்களில் தெரிந்தது.
மந்திரிகள். அரசு உயர் அதிகாரிகள். மாவட்ட ஆட்சியர்கள். தினந்தோறும் நாளிதழ்களில் வாத்தியாரோடு ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுக்கும் முக்கியப் பிரமுகர்கள். எம்.எல். ஏ.க்கள். எம்.பி.க்கள்...
அத்தனை பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில், களையிழந்த நேற்றுப் பூவாக, மாலைகள் கூட கொண்டு வராமல்,  வெறுங்கையோடு தோன்றும் மாஜி நடிகையை முதல்வர் அழைப்பாரா...?  அல்லது ஆட்சி நடத்தும்  பரபரப்பில் பாராமலே சென்று விடுவாரா?
ஒவ்வொரு விநாடியையும் வாழ்வின் புதைகுழியில் செலவிடும் தன்னை, எம்.ஜி.ஆரும் கை விட்டு விட்டால்...?
 
நினைக்கவே பயங்கரமாக இருந்தது சாவித்ரிக்கு.
திருப்பதி பெருமாளே! உனக்கு நிம்மதியாக தேங்காய் உடைக்கக் கூட எனக்கு இப்போது வக்கில்லை. இக்கட்டான இத்தருணத்திலிருந்து எப்படியாவது என்னைக் காப்பாற்று. எம்.ஜி.ஆரின் மனத்தில் புகுந்து, என்னைச் சீக்கிரம்  கூப்பிடச் சொல்...
தேவைகளின் நெருக்கடியில் நெருடும் மனதோடு, கவுரவர் சபையில் திரெளபதியாக கை கூப்பி நிற்கும் தனக்கு,  இரண்டு மதில் சுவர்களையாவது  ஓடோடி வந்து,  ஒதுக்கித் தர மாட்டாரா மக்கள் திலகம்...?
யாரையும் ஏறிட்டுப் பார்க்கவும் இயலாத துக்கத்தின் சாஹரம். நிமிர்ந்து பதில் வணக்கம் கூடச் சொல்ல முடியாத சங்கடம். ஆனால் இன்னமும் சாவித்ரியின் ஆணவம் அடங்கவில்லை. திமிராகவே இருக்கிறாள் என நினைக்கும் சமூகம்!  நேரம் ஓடியது.
மக்கள் திலகம் அழைத்ததும்,
மழைக்கு ஒதுங்கவும் ஒரு வீடு இல்லாத தன் வாழ்வின் நிர்வாண அவலத்தை, அப்பட்டமாக பொன்மனச் செம்மலிடம் எடுத்துச் சொல்லிக் கதறி அழுதார்.
உடனடியாகத் தமிழக முதல்வர்  வீட்டு வசதி வாரியம் மூலம், சாவித்ரிக்காக ஒரு குடிலை வழங்கி நடிகையர் திலகத்தின் துயரைப் போக்கினார்.
மகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு!  பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்!

Sunday 19 July 2015

மெட்ரோ கோல்ட்வின் மேயர் சிங்கம்...

மெட்ரோ கோல்ட்வின் மேயர் சிங்கம் உறுமுவதை ஆங்கில பட தொடக்கத்தில் பார்த்திருப்போம்.


இப்படி திரையில் நாம் காணும் இந்த சிங்க அறிமுகத்தை எப்படி எடுத்திருப்பார்கள்? 



ஒருவேளை இப்படி கீழுள்ளது போல்  இருக்குமோ?


Saturday 18 July 2015

மாரான் மரத்தாண்டவர் ஆலயம்

மலேசியாவின் முக்கிய முருகனின் கோயில்களில், மாரான் மரத்தாண்டவர் கோயிலும் ஒன்று. வழக்கமாக பத்துமலை கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்து வந்த என் குடும்பத்தினரும் நானும், சில நாட்களுக்கு முன்னர், 'மாரான் மரத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று வந்தால் என்ன' எனும் சிந்தனையில் இந்த நோன்புப் பெருநாள் விடுமுறைக்கு அங்கு செல்வதென முடிவு செய்தோம்.
கடைசியாக சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அங்கு சென்று வந்ததால், வலைத்தளத்தில் மரத்தாண்டாவர் ஆலயம் பற்றி விவரங்களை சேகரிக்க எண்ணினேன்.
ஆயினும் பாருங்கள், எதிர்பார்த்த அளவுக்கு இங்கு தகவல்கள் போதுமானதாக இல்லை. உதாரணத்துக்கு, அங்கு எப்படிச் செல்வது என்பதில் சரிவர விளக்கம் இல்லை. மற்றவர்களை ஒரளவுக்கு கேட்கலாம், அவர்கள் சொல்வதும் விளங்கவேண்டுமே.... இருந்தாலும், 'வேஸ்' எனும் வழிகாட்டும் கருவியுடன் நேற்று காலை 6 மணிக்கு பந்திங்கில் உள்ள எங்கள் வீட்டில் இருந்து கிளம்பினோம்.
சுமார் ஒரு மணி நேரத்தில், கோம்பாக் டோல் இடத்தை அடைந்துவிட்டோம். இரண்டு மணி நேர பயணத்துக்குப் பின், காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சிறிது ஓய்வெடுக்க 'லஞ்சாங்' எனும் இடத்தில் 30 நிமிடங்கள் காரை நிறுத்தினோம்.நோன்புப் பெருநாளாகையால், பல கடைகள் மூடியே இருந்தன.
எங்களைப் போல மாரான் மரத்தாண்டவர் கோயிலுக்குச் செல்ல எண்ணம் கொண்ட பலர் சிறப்பு பஸ்களில் வந்து அங்கு ஓய்வெடுப்பதை பார்க்கும் போது, மனதுக்கு ஆறுதலாக இருந்தது... ஹிந்து மதம் நிலைத்து நிற்கும் என மனதில் தோன்றியது.
பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். சுமார் பத்து நிமிடங்களில், செனோர் / ஜெங்கா டோல் சாவடி வந்தது. அதில் கட்டணம் கட்டி வெளியேறி, ஒரு முச்சந்திக்கு வந்தோம். எங்களின் கைவசம் இருந்த 'வேஸ்', வலது பக்கம் திரும்புக என உத்தரவு போட்டது. அதே போல அங்கிருந்த அறிவிப்புப் பலகைகளை பார்வையிடும் போது, நமது மரத்தாண்டவர் ஆலயம் சுமார் 41கிமீ தொலைவில் என இருந்ததும் கண்ணில் பட்டது.
அட, சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் என தொடர்ந்தோம். சுமார் 24கிமீ தொலைவில், மாரான் பட்டனதுக்கான அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கு வலது பக்கம் திரும்பினோம். எங்களைப் போலவே அக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களை ஏற்றிவந்த சில பஸ்களும் முன்னே சென்றுகொண்டிருந்தன.
இன்னும் 17 கிமீ தூரத்தில் மரத்தாண்டவர் கோயில் எனத் தெரிந்த அடையாள பலகையின் துணைகொண்டு, இருபது நிமிடங்களில் அகில மலேசிய புகழ் பெற்ற மாரான் மரத்தாண்டவர் கோயிலை வந்தடைந்தோம்.
கோலாலம்பூரிலிருந்து 2 1/2 மணி நேரங்கள், இருந்தாலும், அதிக களைப்பில்லாத பயணம்தான். ஜெங்கா பெல்டா நிலத்திட்டத்திற்கு நடுவே பயணிக்கும் போது, வழிநெடுக இரு பக்கங்களிலும் ஈச்சமரங்க்களும், ரப்பர் மரங்களுமாய் கண்களுக்கு பச்சைபசேல் என குளுமையை தந்தது.
சுற்றிலும் பெரும்பான்மையாக மலாய்க்காரர்களே இருந்தாலும், இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானின் பெருமையை உணர்ந்தோர் வந்து பூஜிப்பதற்கு இடையூறாக இருந்ததில்லை.
இக்கோயிலின் வரலாறு 1870ம் ஆண்டுகளுக்குச் செல்கின்றது. இந்தியாவில் இருந்து மலேசியக் காடுகளை அழித்து நாட்டை வளப்படுத்த தருவிக்கப்பட்ட இந்தியர்கள் சாலை அமைக்க முயலும் போது, இங்கிருந்த மரத்தை அகற்ற முயன்றிருக்கின்றனர். அதில் இருந்து பிசின் போல ரத்த வண்ணத்தில் கசிய அதை மேலும் வெட்டாது விட்டிருக்கின்றனர். வெட்ட முயற்சித்த மற்றவர்களின் உடல் ஆரோக்கியமும் பாதித்த நிலையில், அதன் சக்தியைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கின்றனர். இதன் பிறகு, ஒரு முருக பக்தர் வேல் ஒன்றை அங்கே நிறுத்தி வழி பட்டு வர, பிறரும் அவ்வழக்கத்தை தொடர்ந்திருக்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிட, இங்கு வீற்றிருக்கும் முருகனின் அருள் எட்டுத்திக்கும் எட்டத் தொடங்கிவிட்டது.
இரண்டு மரங்களுக்கு நடுவே முன்பிருந்த சாலையை பஹாங் மாநில அரசு, கோயிலைச் சுற்றி சீரமைக்க ஒப்புக்கொண்டதை குறிப்பிட வேண்டும். அதனால் இன்று, முக்கிய மரமிருந்த இடத்தில் கோயில் கருவறையும் அதனைச் சுற்றி அழகிய கோயிலும் அமைந்திருக்கிறது. இன்னுமொரு மகிழ்ச்சியான கருத்து என்னவென்றால், கோயிலைச் சுற்றி பக்தர்கள் நடந்துவர விஸ்தாரமான இடம் இருப்பது தான். விழாக்காலங்களில் இதன் சிறப்பை உணரமுடியும்.
கொடிமரத்துக்குக் கீழ் பலிபீடம், அதற்கு அருகில் பக்தர்களின் மனக்குறைகளை தாங்கி நிற்கும் மரம். மஞ்சள் துண்டுகளிலும், துணிகளிலும் ஐய்யன் முருகனுக்கு பக்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள். வெளிச்சம் உள்ளே வர, பலிபீடத்தின் மேல் கண்ணாடிகளினால் அமைந்த கூறை, எவ்வளவு செயல்களானாலும், நடவடிக்கைகளானாலும் கொஞ்சமும் தயக்கமின்றி அழகிய அந்த கட்டிடத்தின் ஊடே பறந்து திரியும் பறவைகள்..... இப்படி எல்லாமுமே வருவோர் மனத்தைக் கவர்தாகவே உள்ளது. அதிலும் அண்மையில் நடந்துமுடிந்த கும்பாபிஷேகத்துக்காக பூசப்பட்ட மஞ்சள் வர்ணக்கலவையும் அழகுக்கு அழகு சேர்க்கின்றது.
அதிகாலை நான்கு மணிக்கு விஷேச பூஜை, பிறகு காலை பத்து மணி வரை அர்ச்சனைகள், அதன் பின் முருகனுக்கான அபிஷேகமும் உபயக்காரர்களின் பூஜையும் மற்றும் மதியம் சிறப்புப் பூஜைக்குப் பின் தொடர்ந்து அர்ச்சனைகளும், அன்னதானமும் என களைகட்டியது முருக பக்தர்களின் மனங்கவர்ந்த மரத்தாண்டவர் கோயில்.
நிம்மதியான பூஜைக்கு வார நாட்களில் வருவதே சிறப்பு என அங்கு பல காலம் வந்துகொண்டிருப்போர் சிலர் கருத்துரைத்தனர். பொதுவிடுமுறைகளிலும், விஷேச தினக்களிலும் வருவோர் எண்ணிக்கை சற்று அதிகமிருக்கும் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
இவ்வளவு சிறப்புகளைக்கொண்ட இக்கோயில் நடைமுறைகளில் ஒரே ஒரு குறைதான். அன்னதானம் என இங்கு பரிமாறப்படும் உணவு தரம் இல்லாததாகவும், கோயில் நிர்வாகத்தினரின் அக்கரையற்ற, பொறுப்பில்லாத, வேண்டா வெறுப்பாக செயல்படுவதைப் போன்ற தோற்றம் இருப்பதாகவும் பட்டது. இதையே பலரும் தங்கள் கருத்துக்களாக நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.
மனமில்லாத சாம்பார், கசக்கும் பொடலங்காய் கூட்டு, அப்பளம், பரங்கிக்காய் எப்படி சிலவற்றை வந்திருந்தோருக்கு படைத்துவிட்டு, அன்னதான கட்டிடத்தின் பல இடங்களில் பெரிய பெரிய அளவிலான உண்டியல்பெட்டிகள் வைத்திருந்தது மனதை என்னவோ செய்தது. பசி ருசியறியாது என்பது போல உண்டவர்களையே நான் அங்கு நேற்று பார்த்தேன்.
ஒவ்வொரு ஆலய நிர்வாகத்தினராலும், வந்திருப்போருக்கு மதியநேர மகேஸ்வர பூஜைக்கு பின் வழங்கப்படும் அன்னதானத்தினை பெருமைப்படும் வண்ணம் வழங்கி பக்தர்தர்கள் அருள் பசியை மட்டுமல்லாது, வயிற்றுப்பசியையும் போக்கிட எடுக்கும் முயற்சிகளை பாராட்டுவது இன்றியமையாத நற்குணம்தான். அதே நேரம், இவ் அன்னதானப் பணிக்குத் தங்களால் இயன்றளவு நிதியுதவியும் பொருளுதவியும் பக்தர்கள் செய்தே வருகின்றனர். இங்கு மட்டுமல்ல, எல்லாக் கோயில்களிலும். ஆலய நிர்வாகத்தினருக்கு உறுதுணையாகவே நாம் இருக்கிறோம்.
இருந்தும் ஒரு சில கோயில்களில், வருமானத்தை பெரிதெனக் கருதி இப்படி பக்தர்களுக்கு அரைகுறையாக அன்னதானம் என ஏனோ தானோ என செய்வதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதிலும், மாரான் மரத்தாண்டவர் கோயிலில் இப்படி நடப்பது என்பது ஆச்சரியப் படவைக்கிறது.
நாம் சாப்பாட்டுப்பிரியர்களாயிருந்தாலும், கோயிலில் பொதுவாக அடக்க ஒடுக்கமாகவே இதுநாள் வரையில் இருந்துவருகிறோம். அப்படி இருக்க, ஏதோ மக்களுக்கு உணவைப்படைத்தால் சரி... எனும் நிர்வாகத்தினரின் 'அலட்சியப் போக்கு கவலையூட்டுகிறது' என பலரும் பேசிக்கொள்வது என் காதுகளில் விழுந்தது. அங்கு உணவருந்திய அனைவரும் கணிசமான தொகையை உண்டியல்களில் இட்டதை நானும் கவனிக்கத் தவறவில்லை.
அதுமட்டுமல்ல, திரும்பிவரும்போது,'லஞ்சாங்' எனும் நகருக்கு காருக்கு பெட்ரோல் இட செல்லும்படி இருந்தது. அங்கிருந்த பெரியவர் எனது உடையை பார்த்து தெரிந்துகொண்டு,
" மரத்தாண்டவர் கோயிலில் இருந்து வரீங்களா....?
பூஜைகள் சிறப்பா இருந்துச்சா...
இடம் உங்களை கவர்ந்திருக்குமே....
உம், சாப்பாடுதான் சொதப்பி இருக்கும்..."
என்றார் பாருங்கள்....
ஆச்சரியப்பட்ட்டோம்.
நாங்கள் காரில் பேசிக்கொண்டது இந்த பெரியவருக்கேப்படி தெரிந்தது என்று. ஒருவேளை இதுதான் முன்னேற்றம் ஏதுமின்றி தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் ஒன்றா....?
நம்மில் பலர் கோயில் பூஜைகளுக்கு போவது அங்கு படைக்கப்படும் உணவுக்காகவும்தான். இறைவனின் அருள் பெற்ற அந்த உணவு நமக்கு கிடைத்தால் அது பெரும் பாக்கியம் என நம்மில் பலரும் நம்புகிறோம். அப்புனிதமான உணவை அதே புனிதத்துடன் படைத்து, வரும் மெய்யன்பர்களுக்கு வழங்குவது, கோயில் நிர்வாகத்தினரின் தார்மீகக் கடமையாகும். இதை அவர்கள் உணரும் காலம் கூடிய சீக்கிரம் வரும் என எதிர்பார்ப்போம்.




செனோர் / ஜெங்கா டோல் சாவடி 


மரத்தாண்டவர் ஆலயம் சுமார் 41கிமீ தொலைவில்