Saturday 30 March 2013

கார்ட்டூன்ஸ்...


பொம்மைப் படங்கள் என அழைக்கப்படும் கார்ட்டூன்கள் சிறு குழந்தைகளுக்கானவை மட்டுமா?

Wednesday 27 March 2013

வாழ்ந்தாலும் ஏசும்....


உலகம் பொல்லாதது... நீங்கள் எப்படித்தான் வாழ்ந்தாலும் இந்த உலகம் பொல்லாதது.
மு.வ அவர்களின் கல்லோ காவியமோ...எனும் நாவலின் துவக்க வரிகள் இவை. எப்படி பிரமாதமாக பொருந்துகிறது நாம் வாழ்வினில் இன்று.  நல்லவனாக வாழும்போது பொறாமைப் படுகிறார்கள். வாழும் நிலை தவறி கீழே விழும் போது தூற்றுகிறார்கள்.

ஆக எப்படிப் பார்த்தாலும் நாம் எந்த நிலையில் இருந்தாலும் ஒரு சாரார் குறை சொல்வதை தங்களது கொள்கையாகவே கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

அதை தெரிந்து உணர்ந்து அதனை ஒரு பொருட்டாக மதியாமல் நம் வாழ்வு நம் கையில் எனப் போவதே நாம் வாழ்வின் வெற்றிக்கு நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று.

Pancha's double...

டுசுன் டுரியான் தோட்ட நாடகங்கள்...


(  டிரெக்டர் ஓட்டுனராக  நெடுங்காலம் பணியாற்றி அன்மையில் ஓய்வுபெற்ற திரு ராமசாமி குப்புசாமி அவர்கள்  தனது நாடக அனுபவங்களை  இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். )

மகாபாரதம் ஒரு இதிகாசமென குறிப்பிடுகின்றனர். இதை சமஸ்கிருதத்தில் இயற்றியவர் வியாசர். ஆனால் அதை நம் தமிழுக்கு  மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார்.  இரு பங்காளிகளுக்கு இடையே நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியதும் இதே...

டுசுன் டுரியான் தோட்டத்தில் அன்றைய மகாபாரத நாடகத்தை ஏற்று நடத்தியவர் மரியாதைக்குரிய காலம்சென்ற திரு பொன்னையா அவர்கள்.  அறுபதுகளில் அவரின் மேற்பார்வையில்தான் தோட்டத்தில் பணியாற்றிய, ஆர்வமுள்ள பலர் நடிப்பிலக்கியம் பற்றி தெரிந்து கொண்டனர். பல அரிய திறமைகளை ஒருங்கே கொண்டிருந்தவர்   திரு.பொன்னையா அவர்கள். 

அவர் தலமையில் நடந்தேறிய நாடகங்களில் திரு.சாமிரெட்டி அர்ஜுணனாகவும், திரு சேகரின் தம்பி வேலு பீமனாகவும், டிரெக்டர் கிருஷ்ணன் கிருஷ்ணனாகவும் சிறப்பாக நடித்து எல்லோரையும் அசத்தினர்.

திரு பொன்னையா அவர்கள் பொதுவாக தனது நடிகர்களுக்கு அவர்களின் கதாபாத்திரத்திற்கேற்ப அவர்கள் பேச வேண்டிய வசனத்தை தனித் தனியே எழுதித் தந்துவிடுவார்.  நாடக மாந்தர்கள் அவ்வசனங்களை மனப்பாடம் செய்து ஒத்திகையின் போது ஒப்பிப்பார்கள்.  இந்த ஒத்திகை கள்ளுக்கடை மூடப்பட்ட பின் இரவில் அங்கு நடைபெறும்.  இவ்விடத்தை ஒத்திகைக்கு நாடக ஆசிரியர் தேர்ந்தெடுத்ததிற்கு ஒரு சிறப்பு காரணமும் உண்டு. 

இத்தோட்ட கள்ளுக்கடை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதனை ஒரு பக்கம் கௌரவர்களுக்காகவும் மறுபக்கம் பாண்டவர்களுக்காகவும் திரு பொன்னையா அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார்.  இரு பிரிவினரும் ஒத்திகையின் போது வசனத்திற்கேற்ப மோதிக்கொள்வர். இந்த ஒத்திகையினை காணவே பலரும் அங்கு வந்து குழுமி இருந்தனர் அக்காலத்தில். அவ்வளவு சுறுசுறுப்புடனும் விறுவிறுப்புடனும் நாடக ஒத்திகைகளே இருந்திருந்தன.

பொதுவில் துரியோதணனுக்கும் கிருஷ்ணனுக்குமே அதிக வசனங்கள் இருக்கும். காரணம் இவர் நடத்திச் சென்ற நாடக பார்வை அப்படி இருந்ததும், அந்த பாத்திரங்களில் நடித்திருந்தோரின் அசாத்திய திறமைகளும் இரு பெரும் காரணங்களாகும்.

இவர்களை தவிர்த்து இவர்களுக்கு துணையாகவும், பலர் பின்னனியில் உதவி இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானோர் நடிகர்கள் வசனத்தை மறந்துவிடாமல் இருக்க அவ்வப்போது நடிகர்களின் பகுதிகளை கதவோரம் நின்று எடுத்துக்கொடுக்கும் உதவியாளர்களாகும்.

மைக் எனப்படும் ஒலிவாங்கி மேடையின் நடுவில் இருக்க, வசனத்தை மறந்து விடும் நடிகர்கள் ராஜ நடை நடந்து உதவியாளர்களிடம் வந்து வசனத்தை கேட்டு ஒலிவாங்கியின் முன் வந்து ஒப்பித்த முறையும் மேடை நாடக யுக்தியாக அன்றிருந்திருக்கிறது.  

இப்போது இதை படிக்க சற்று நகைச்சுவையாக பட்டாலும் ஒரு நாடகம் வெற்றிகரமாக நடந்தேற அன்றைய சூழ் நிலையில் இந்தச் சிறு சிறு பங்களிப்பினை கேள்விப்படும்போது நமக்கு பெரும் ஆச்சரியம் மேலிடுகிறது.




ஆயிரக்கணக்கானோர் இரவு முழுவதும் மேடை முன் அமர்ந்து  இதுபோன்ற நாடகங்களை பொறுமையாக ரசித்த காலம் அது.

திரு.பொன்னையாவின் பொறுப்புக்களை அடுத்து எடுத்துக் கொண்டவர் திரு நடராஜா அவர்கள். கிளனாங் பாரு, ஓ.பி.ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்தவர் இவர்.

 நான் பீமனாக நடிக்க வந்தபோது இவரின் மேற்பார்வையில் 1974ம் மற்றும் 1975ம் ஆண்டுகளில் மகாபாரதம் திருவிழாக் கால மேடை நாடகமாக அரங்கேறியது. அப்போது, திரு.முருகேசு ( ஓபிஆர் எஸ்) அர்ஜுணனாகவும், திரு. தேவேந்திரன் ( கில்கீ எஸ்டேட்) துரியோதணனாகவும், திரு. ஜோசெப் (ஓபிஆர் எஸ் )தருமனாகவும் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றனர்.

ஆனால் திரு நடராஜா வேறிடத்திற்கு மாற்றலாகி சென்றதும் புதிய நாடக ஆசிரியர் திரு. கேசவன் தலமையில் 1976ம் ஆண்டு முதல் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு அரங்கேற்றப் பட்டது. இக்கால கட்டத்தில் பீமனாக என்னோடு, போர்மென் சண்முகம் அர்ஜுணனாகவும், எனது தம்பி ராஜு கர்ணனாகவும், திரு.ரெங்கசாமி துரியோதணாகவும், நாடகத்தின் ஆசிரியர் திரு கேசவனே தருமனாகவும் நடித்திருந்தனர்.

அன்றைய காலத்தில் வானொலி தொலைக்காட்சி முழு வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. இது போன்ற நாடங்கள் மக்களின் மத்தியில் பெரும் ஆதரவு பெற்று புகழ் பெற அதுவும் ஒரு காரணம். வயது வேறுபாடின்றி அனைவரும் விரும்பி ரசித்து நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாடகக் கலைக்கு தங்களின் ஒருமித்த ஆதரவை வழங்கினர்.

ராமாயணமும் மகாபாரதமும் வெறும் கற்பனையாக மக்கள் பார்த்திராத காலம் அது. இன்று பலர் சொல்லிக்கொள்வது போல் அவை பிரமாண்டமாக சொல்லப்பட்ட பொய்கள் அல்ல. நமது நல்வாழ்வுக்காக சான்றோர்களால் வகுக்கப்பட்ட நற்பண்புகளின் குறிப்பேடு அவை.  மகாபாரதம் இல்லையேல் கீதை இல்லை. கீதை இல்லையேல் கிருஷ்ணன் இல்லை. ஆக கிருஷ்ணன் இல்லையேல் நமது மதமே இல்லையெனும் நிலையில் பக்திப் பார்வையில் படைக்கப்பட்டு பார்ப்போரின் மனதில் நல்லெண்ணங்களை விதைத்தன இது போன்ற நாடகங்கள்.

அதன் பின் வந்த மேலை நாட்டு கலாச்சார மாற்றங்களினால், மேடை நாடகங்களின் புகழ் மங்கத் தொடங்கி விட்டது. வண்ணத் தொலைக்காட்சி, வீடியோ என அறிவியல் வளர்சியில் மேடை நாடகங்களை பார்ப்போரின் கவனம் திசை திருப்பி விடப்பட்டுவிட்டது.

மலேசிய வானொலியின் புகழ் பெற்ற கலைஞரான திரு.எஸ்.வைரக்கண்ணு 1974/5ம் ஆண்டு வாக்கில் இந்தத் தோட்டத்தில் அவரின் தமக்கையின் வீட்டில் தங்கி இருக்கும்போதுதான் அவரின் முதல் தொடர் நாடகம் சிங்கை வானொலியில் ஒலியேறியது என ஒரு கொசுறுத் தகவலும் உண்டு.

- திரு. கே. ராமசாமி சொல்லக்கேட்டு எழுதியவர் ராஜ்பாவ்

Friday 22 March 2013

திருவிழா கால நாடகங்கள்...

1975ல் டுசுன் டுரியான் தோட்ட துரோபதை அம்மன் ( தொங்கா மோரிப் )  ஆலய  தீமிதி உற்சவத்துக்கு முந்திய நாள் நடைபெற்ற மஹாபாரத நாடகத்தில் துரியோதனாக தேவேந்திரன் ( இடம் ), பீமனாக திரு ராமசாமி ( வலம் ) மற்றும் நடுவில் அர்ஜுனனாக திரு முருகேஸ் ( ஓ. பி. ஆர். எஸ் )ஆகியோர்  தோன்றி நடித்த ஒரு காட்சி.


சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதன்படி மலேசியாவில் ஆங்காங்கே நடத்தப்பட்ட தோட்டப்புற நாடகங்கள் நமது   கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தது நாம் கண்ட உண்மை...

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வந்த தீமிதி திருவிழா, அதற்கு முதல் நாள் இடம்பெற்ற நாடகம் போன்றவை காலத்தாலும்  மறக்கவியலா பசுமை நினைவுகளை கொண்டவைகளாகும்.

 நாடக கலை என்பது இப்படி திருவிழாக் காலங்களில் இடம்பெற்றே வளர்ச்சியடைந்திருக்கிறது. 

1974ம் ஆண்டு முதல் பீமன் வேடத்தில் நடித்து புகழ் பெற்ற திரு ராமசாமி அவர்களை சந்தித்து உரையாடினேன்....

என்றும் இனியவை என அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட தகவல்களை இனி அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்...


Tuesday 19 March 2013

Putrajaya...

"பெட் சோர்" எனப்படும் படுக்கைப்புண் ...

 இது பற்றி பலருக்கு தெரிந்திருக்காது.   எழுந்து அமர முடியாத, எந்த நேரமும் படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகள் யாரேனும் தங்கள் குடும்பத்தில் இருந்தால், அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் இந்த படுக்கைப்புண் பற்றி.

நோயாளியின் முதுகுத்தண்டின் கீழ், பெல்விக் பகுதியில் இருந்தே இந்த புண் ஆரம்பிக்கிறது என்கிறார்கள்.  ஆயினும், பெல்விக் எலும்புப் பகுதியில் மட்டுமல்லாது, முதுகின் பின்புறத்தோளிலும், மற்ற இடங்களிலும்  இந்த புண் ஏற்படலாம்.

இந்நோய்க்கான காரணங்கள் பல இருந்தாலும், முக்கியமானவை இவை:

    -    வயதானவர்களுக்கு கட்டப்படும் நெப்கின் துண்டில் உள்ள சிறுநீர், மலம் போன்றவற்றை  அப்புறப் படுத்துவதில் ஏற்படும் கால தாமதத்தினால் இந்த புண் வரலாம்.

    -    சில நேரங்களில் நோயாளியினை எழுந்து அமரச்செய்யும் செயலின் போது ஏற்படும் உராய்வுகளினாலும் இது ஏற்படலாம்.

    -   உடலில் சற்று புடைத்திருக்கும் பகுதிகள் படுக்கையில் அழுத்தமாக பதிவதால் இங்குள்ள தோளில் புண் தோன்றுகிறது.

    -   எந்நேரமும் படுத்தே இருப்பதனாலும், காற்றோட்டம் குறைவாக இருப்பதனால் ஏற்படும் வியர்வையினாலும்  இந்த படுக்கைப்புண்  சுலபமாக வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மிகச் சாதாரணம் போல தோன்றினாலும் இந்த படுக்கைப்புண்  ஒரு பயங்கர நோயாகும்.  அதிக வேதனை அளிக்கக்கூடையதுமாகும். இதனால் பாதிக்கப்படுவோர் ஒவ்வொரு நொடியும் முனகிக் கொண்டும், வலியின் தாக்கம் தாங்காமல்  ஓலமிட்டவாறும்  தவித்துப்போவர்.

ஆகவே, இந்நோயாளிகளை கவனிப்போர் என்றுமே அலட்சியமாக இருந்து விடக் கூடாது.  ஒரு நாள் கவனக் குறைவாக இருந்துவிட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் உயிர் போகும் விளைவுகளை தோற்றுவித்துவிடும்.

இதை படிக்கும் ஒரு சில நண்பர்கள்  இது உண்மைதானா... படுக்கைப்புண்  உயிரை போக்கும் கொடிய நிலைக்கு இட்டுச் செல்லுமா... என எண்ணலாம். என் அனுபவத்தில் நான் கண்ட, கேள்விப்பட்டவற்றையே இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் அழுத்தப் பட்ட தோள் சிவக்கும்.

பின்பு அங்கு சிறிய புண் போல தோன்றும்.
"அட ஏதோ புண்ணாக இருக்கிறதே ..." என நினைத்தால்,  இந்த புண்ணை ஆற்றுவதற்கே பெரும்பாடாகிவிடும்.  இது ஆரம்பக் கட்டம் மட்டுமே. உடனடி நிவாரணம் தேவை இந்த நேரத்தில்.

 நாம் எல்லோரும் மருத்துவ மனையையே மிகவும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் கொண்டு காட்டிவிட்டால், அடுத்து நம் கடமை தீர்ந்துவிட்டது என்றே மனதில் படுகிறது. படுக்கைப்புண்  இந்த நினைப்புக்கு நேர் எதிரானது. மருத்துவரிடம் காட்டி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாலும், நோயாளியின் நிலை புண் ஆற்றப் படும் வரை நம் கையில் தான் உள்ளது.

தோளில் தொடங்கிய புண், எலும்பினை அடைந்து வெகு ஆழமாக புறையோடிப்போகும். இந்த நேரத்தில், புண்ணை  கவனித்துப் பார்த்தால் அந்த ஆழத்தின் உள்ளே 'மெகட்ஸ்" எனப்படும் புழுக்களும் இருக்கும்.

இந்த நிலைக்கு வந்துவிட்டால், புண் தீவிரம் அடைந்து விட்டது என்று பொருள். அடுத்து நாம் ஏதும் செய்ய இயலாது. மருத்துவர்களின் அறுவை சிகிச்சையே  சிறந்த வழி.  ஆயினும், அதுவும் பலனின்றி உயிரழப்போர் ஏராளம் என்றே அறிகிறேன்.

பொதுவாக வயோதிகர்களையே இந்த படுக்கைப்புண்  வியாதி தாக்குகின்றது.

ஆகவே, நம் வீட்டில் பெரியவர்கள் யாரேனும் இது போன்ற படுக்கையிலேயே இருக்கவேண்டி நேர்ந்தால், ஆரோக்கிய முறைகளின் மூலம் படுக்கைப்புண்  வராமல் பார்த்துக்கொள்வோம். 

அவர்களை பராமரிக்கும் மருத்துவ வசதிகளை இரட்டிப்பாக்கி, காற்றோட்டமான... சுத்தமான... சுகாதாரமான  இடத்தில் படுக்கையிட்டு நம்முடைய நேரடி கண்பார்வையிலேயே அவர்களை வைத்திருப்போம்....


Monday 18 March 2013

தொப்பை...

வயிற்றுத் தொப்பையும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், முதுகுவலி, மூட்டுவலி, மன அழுத்தம் என பல பிரச்சினைகளுக்கு ஒரு காரணமாக இருப்பதாக  மருத்துவ உலகம் குறிப்பிடிகிறது.

இப்போது ஆண் பெண் என இருபாலருக்கும் வயிற்றுத் தொப்பை இருப்பதை பார்க்கிறோம். ஆண்கள் பீர் தொப்பை என கூறிக்கொண்டாலும், பெண்களுக்கு உள்ள தொப்பையை என்ன சொல்லி அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.  சிலர் ஸ்டைலாக "ஹோர்மோன் பிரச்சினை" என சொல்வது காதில் விழுகிறது. ஆயினும் எப்படிப் பார்த்தாலும் தொப்பை நம் எதிரியே...
ஒரு நாளில் ஏற்படுவதல்ல தொப்பை. பல நாட்கள், பல மாதங்களுக்குப் பின்னே பல காரணங்களினால்  தோன்றுவதாகும் இது. ஆனால் இதைக்குறைக்க நினைப்போர் இதை ஒரே நாளில் போக்கிவிட முடியுமா என வழி தேடுகிறார்கள். சுலபத்தில் வரும் எந்த வழியும் சுகாதாரத்துக்கு உகந்ததல்ல என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதற்காக நாம் இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இளைக்கும் முயற்சிகளை ஆராய்ந்து செயல் படுவதே சிறந்தது.

உடற்பயிற்சியினால் நல்ல பலன் கண்டதாக பலர் சொல்லக் கேட்கிறோம். தினமும் 30 நிமிட விரைவு நடை அல்லது 45 நிமிட மெது நடை என ஒரு மாதத்திற்கு நடந்தால் தொப்பை குறைந்துவிடும் சாத்தியம் அதிகமிருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதோடு உணவிலும் கவனம் தேவை. கொழுப்பு, இனிப்பு, எண்ணெய் போன்றவை குறைந்திருக்கும் உணவே நம் ஆரோக்கியதிற்கு உகந்ததாகும். அதிக அளவில் தண்ணீர் குடிக்கலாம். காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். பழங்கள் உடல் இளைக்க நமக்கு பெரிதும் உதவும். சாதம், ரொட்டி இவைகளுக்கு பதிலாக பழங்கள் நமக்கு அதிக நன்மைகளைச் செய்கின்றன.

Sunday 17 March 2013

வீட்டை பராமரிப்பதென்பது. . .

 எல்லா நேரங்களிலும் வீட்டின் சுத்தமும் சுகாதாரமும் சீராக வைத்திருப்பதென்பது குடும்பப் பெண்களுக்கு ஒரு பெரும் சுமையான ஒன்று. கணவரோடு, வீட்டில் உள்ள பெரியோரையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் அதே நேரம், வீட்டின் அகமும் புறமும் எப்போதும் அழகாக இருக்க பல முயற்சிகளை அவர்கள் எடுக்கவேண்டியதிருக்கிறது.
வீடு அழகாகவும் இருக்க வேண்டும்,  ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இதற்கு முதல் நிலை வடிகட்டுதலாக அவர்களுக்கு  உதவி செய்பவை தொங்கும் திரைச்சீலைகள். 

இதற்கு பெண்கள் எடுத்துக்கொள்ளும் ஆரவாரம் சொல்லில் அடங்காது. சுவற்றின்  வரவேற்பறை சோஃபா நாற்காலி மற்றும் அங்குள்ள சுவற்றின் நிறத்திற்கேற்ற வர்ணம் , துணியின் தரம், அதை தைக்க தேர்ந்தெடுக்கும் வடிவமைப்பு என பல அம்சங்களில் கவனிப்பைச் செழுத்தி நமது இல்ல அழகுக்கு அழகு சேர்க்கிறார்கள். பொதுவாக விலைக்கேற்ற படியே இதன் அழகும் தரமும் அமைவதால், அனேக பெண்கள் நடு நிலையில் நிற்பதையே விரும்புகிறார்கள்.

வெளியில் இருந்து வரும் தூசியினை தடுத்து தங்களோடு ஈர்த்துக் கொள்பவை இந்த திரைச்சீலைகள்.  சாலை ஓரங்களில் வசிப்போர் இதை குறைந்தது  வாரத்திற்கு இரு முறையாவது துவைத்து சுத்தம் செய்து விடுவதை வழக்கத்தில் கொண்டிருப்பர்.  கிராமப்புறங்களில் இருப்போர் சிலவாரங்களுக்குப் பின்னும், சிலர் மாதத்திற்கொரு முறை என்றும் சுத்தம் செய்வதுண்டு. 



அடுத்தது வீட்டின் உள்ளேயும், வெளியேயும் நாம் பூசுகின்ற வர்ணங்கள்.

நமக்கு நன்றாக பிடித்திருந்தால்  மட்டும் போதாது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற  வர்ணங்களே சிறந்த தேர்வாகும்.  நம்மைச் சுண்டி இழுக்கும் வர்ணங்களின் நடுவே, மனதை அசௌகரியப் படுத்தும் வர்ணங்களும் உண்டு என்பதை உணர்ந்து அவற்றை தவிர்த்து விடவேண்டும்.

ஆக, புதுமையை புகுத்துகிறேன் என யாரும் உபயோகிக்காத ஒன்றை கையில் எடுப்பதை விட பலருக்கும் பிடிக்கும் வர்ணமே சிறந்தது.

அலுவலக வேலையைவிட வீட்டினை பராமரிப்பதென்பது இன்னும் சிரமான ஒன்று என்கிறார் திருமதி. ராஜேஸ்வரி தியாகராஜன்.  இவர் அன்மையில்தான் தனது இல்லத்தினை மறுசீர் அமைத்து, வீட்டின் உள்ளே வர்ணத்தினையும் மாற்றி அழகு படுத்தி இருக்கிறார்.



தற்போதைய நவீன காலத்தில், அனேகமாக எல்லோர் வீடுகளிலும் தொழில் நுற்பத்தின் வளர்ச்சி தெரிகிறது.  லேட்டஸ்ட் மாடல் தொலைகாட்சி, இணைய இணைப்புடன், வீசிடி, டிவிடி என அதன் சுற்றத்தாருடன் நமது வரவேற்பறையை ஆக்ரமித்துக்கொண்டிருப்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் அவற்றின் மேல் படியும் தூசியைத் தட்டி சுத்தப்படுத்துவது  தாய்க்குலத்தின் அன்றாட வேலையாகிறது.


கணினி இன்றி இணையம் இப்போது நம் இல்லங்களின் வரவேற்பறைக்கு வந்து விட்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், சிறு பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் உள்ளோர் அதன் நன்மை தீமைகளை அளந்து அதன் பயன்பாடு இருப்பதை உறுதி செய்து கொள்வதே நலம் தரும் செயலாகும்.

மேலே படங்களில் : திருமதி. ராஜேஸ்வரி தியாகராஜன்

Tuesday 12 March 2013

பேச்சுத் தமிழ். . .

இயல், இசை, நாடகம் எனும் சங்ககாலத் தமிழில், பேச்சும் ஒரு அங்கமாகும்.  எழுத்திலக்கியம் போல பேச்சிலக்கியமும் முக்கிய ஒன்றாக கருதப்பட்டது.

மனிதனின் கண்டுபிடிப்பான எழுத்தாணியும், ஏடும் வருவதற்கு முன்பே இயல், இசை மற்றும் நாடகக் கலை வாய் வழியாக வந்திருக்க வேண்டும் என்பதை யூகிக்க அதிக சிரமமிருக்காது.

ஆனால், எழுதுவதற்கும் பேசுவதற்கும் அதிக வேறுபாடு  உண்டு.  பேச்சுத் தமிழிலில் பிற மொழிகள் அதிகம் கலந்திருக்கும். அவற்றை பிரித்தெடுத்து தூய தமிழில் பேசுவதென்பது சாதாரண மக்களுக்கு நகைப்பைத் தரும்.

"அன்னையே, பசியோடு வந்திருக்கிறேன் ..அன்னமிடுக.." என மகன் கேட்டால் எந்த தாயும் மிரளவே செய்வார்.... " நல்லாத்தானே இருந்தான், இப்போ என்னாச்சி இவனுக்கு...?" என அவர் தலைக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடும்.

கடந்தாண்டு எனது தமிழ் நாட்டு பயணத்தின் போது நான் சந்தித்த அங்குள்ள பலரும் ஆங்கில கலப்பில் தான்  தமிழ் பேசினார்கள்.

" சார், இந்த காப்பி ரொம்ப டேஸ்ட்டா இருக்கும், குடிச்சிப் பாருங்க..."என்றார் ஒருவர்.

" நம்ம பிரெஸ்லெ தி பெஸ்ட் புக்குன்னு சொன்னா அது இதுதான்..." என்று இன்னொரு இடத்தில் ஒருவர் ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்தார்.

" எங்க போகனுங்க... போஸ்ட் ஆபிஸா...?  இப்படியே ஸ்ட்ரெய்ட்டா போயி லெப்ட்டுலெ திரும்புனா அதுதான் போஸ்ட் ஆபிஸ்" என்று வழிகாட்டினார் ஒருவர்.

இதனால் சுருக்கமாகவும், சட்டென்று புரிந்து கொள்ளவும், சொல்வதை தெளிவு படுத்தவும் ஆங்கில கலப்பிலிருந்தாலும் பேச்சுத் தமிழ் உதவுகிறது என்பது தெரிகிறது.

எழுத்துத் தமிழில் இவ்வித கலப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காண்கிறோம்.  அதுமட்டுமல்ல, எழுதுவதென்பது சர்வதேச அளவில் தரப்படுத்தப் பட்டு நடைமுறையில் இருப்பதனாலும், கற்றோரே எழுதத் துணிவதனாலும் எழுத்திலக்கியம் படைப்பிலக்கியமாகும் போது வேற்று மொழிகளின் சிதைவு சற்று குறைந்தே இருக்கிறது.

ஆனல் அதே நேரம், உச்சரிப்புகளில் கோட்டை விட்டு மொழிச் சிதைவுக்கு வித்திடுவோரும் நம்மிடையே அதிகமானோர் இருக்கின்றனர். 

வாழைப்பழக்கதை நம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.  கிராமங்களில் "வாயப் பயம்" என்றே இன்னமும் அழைக்கிறார்கள். யாரும் உச்சரிப்புக்கு அதன் மரியாதையை தந்து பேசுவதாக காணோம்.  "வாலைப் பலம்" அல்லது "வாலை பளம்" என்று சொல்வோரே அதிகம். ஆசிரியர்களும், தமிழை சரிவர கற்றுத் தேர்ந்தவர்களும் மட்டுமே "வாழைப் பழம் " என முறையாக சொல்கிறார்கள். பேச்சுத் தமிழில் உள்ள பலவீனம் இது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், எழுதும் போது பொதுவாக அனைவரும் "வாழைப் பழம்" என்றே எழுதுகிறோம்.

 நல்ல உச்சரிப்பு என்பது ல, ள, ழ எழுத்துகளின் ஒலியினை சீர் செய்துவிடும் தன்மை கொண்டது.

 நகைச்சுவைக்காக சினிமாவில் காட்டினாலும்,
" இது யார் தைத்த சட்டை
  என் தாத்தா தைத்த சட்டை..."

மற்றும்,
" ஓடுற நரியில ஒரு நரி கிழ நரிதான்,
அந்த கிழ நரி முதுகில ஒரு பிடி நரை முடிதான்.."

போன்ற வாக்கியங்களை வேகமாக விறு விறு நடையில் சொல்லிப் பழகினாலே அதன் வேறுபாடுகள் புரிந்து விடும். நமது உச்சரிப்பு சிறக்க நல்லதொரு பயிற்சியுமாகும் இது.

எனது நண்பரின் குழந்தை கார்மேகங்களைக் கண்டதும்,
"மலை வருது மலை வருது..."
என துள்ளிக் குதிப்பார்.

 நான் நண்பரை பார்த்ததும்,
" அது ஒன்னுமில்ல, பயப்படாதீங்க.  மலை வராது.... ஒருவேளை மழை வேண்டுமானால் வந்தாலும் வரலாம்..." என தனது குழந்தையின் தற்காப்புக்கு போவார்.

மலை வருமா... மழை வருமா...???

 காவியங்கள் நூல் வடிவில் என்றைக்குமே இருக்கும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், பேச்சுத் தமிழை முறையாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்காவிட்டால், 'வல்லினம் மெல்லினம், இடையினம்' என்பன இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள் பெருகிவிடும்.


Friday 8 March 2013

எம்.ஜி.ஆர். . .

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"



படித்ததில் பிடித்தது - சரித்திர குறிப்புகள் 3

அன்று நடந்ததை இன்று தெரிந்து கொள்ள வயதானோரின் நினைவாற்றலும், அன்றைய எழுத்தாளர்களின் பதிவுகளுமே நமக்கு உதவுகின்றன. பலரும் அறியும் வண்ணம் 'மாலை மலர்' வலைத்தளத்தில் காலச் சுவடுகள் எனும் பகுதியிலிருந்து  சில அரிய குறிப்புகளை கடந்த இரு பதிவுகளில் தந்திருந்தேன். இது மூன்றாம் பாகம். இளையோருக்கு உதவும் என நினைக்கிறேன். நன்றிகள், மாலை மலருக்கு உரித்தாகட்டும்.

நேதாஜி போன விமானம் மாயமாய் மறைந்தது

போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா குதித்ததும், போரின் போக்கே தலைகீழாக மாறியது. வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின்வாங்கின. அமெரிக்க தளபதி மக்ஆர்தர், பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கிக் கொண்டிருந்தார்.

1945 ஏப்ரல் 30-ந்தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப்படைகள் முற்றுகையிட்டன. இனி தப்ப வழி இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி சரண் அடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை.

எனவே, 1945 ஆகஸ்ட் 6-ந்தேதி ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகி மீது வீசியது. இதைத்தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 12-ந்தேதி, ஜப்பான், தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடையத் தீர்மானித்தது.

அப்போது நேதாஜி மலேயாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கப்பூர் திரும்பினார். சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். 1945 ஆகஸ்ட் 15-ந்தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று, ராணுவத் தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். முக்கியமாக, "ஜான்சி ராணிப்படை"யில் உள்ள பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார்.

இதற்கிடையே, ஜப்பான் அரசிடமிருந்து, நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது. "ரஷியா வசம் இருக்கும் மஞ்சூரியா பகுதிக்கு உங்களை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்" என்பதுதான் அந்தச் செய்தி.

அதன்படி அடுத்த நாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும், அங்கிருந்து மஞ்சூரியாவுக்குப் புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார். 1945 ஆகஸ்ட் 16-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு செய்திகளை வெளியிட்டார். முதலாவது செய்தி, இந்திய தேசிய ராணுவத்தினருக்கு.

"ஜப்பான் சரண் அடைந்துவிட்டாலும், டெல்லியை அடையப் பல வழிகள் இருக்கின்றன. இந்தியாவை மீட்பதுதான் நமது லட்சியம்" என்பதே அந்தச் செய்தி. அடுத்த செய்தி, கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு. "நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளராதீர்கள்.

இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரம் அடையும். ஜெய்ஹிந்த்." இந்தச் செய்தியை வெளியிட்டு விட்டு, காலை 10 மணி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய்ச்சேர்ந்தார். அதன் பின்னர் மின்னல் வேகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

1945 ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரிலிருந்து, சைகோன் (தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். துணைத்தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித் ஹசன் (நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது உடன் இருந்தவர்) ஆலோசகர் தேவநாத் தாஸ், நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரசார இலாகா மந்திரியாக பதவி வகித்த எஸ்.ஏ.அய்யர் (தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.

ஆகஸ்ட் 18 காலை 10 மணி: விமானம் சைகோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு ஜப்பானிய போர் விமானம் ஒன்று புறப்படத்தயாராக இருந்தது. அதில் ஒருவருக்கு மட்டும் இடம் இருக்கிறது என்றும், நேதாஜி மட்டும் வரலாம் என்றும், விமானத்தில் இருந்த ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா, வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார்.

சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகள் கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அந்தப் படைகளிடம் சிக்கினால் தன்னைக் கைது செய்வது நிச்சயம். போர்க் கைதியாகப் பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை.

எனவே, விமானத்தில் போவதே மேல் என்று முடிவு செய்தார். விமானத்தில் ஏறி அமர்ந்தார். கடைசி நேரத்தில், "இன்னொருவர் வரலாம்" என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். எனவே ஹபிப்-வுர்- ரகிமான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து நேதாஜி "ஜெய் ஹிந்த்" என்று கூறினார். விமானம் புறப்பட்டது.

அது எந்த இடத்துக்குப் போகிறது என்று அறிவிக்கப்படவில்லை. நேதாஜியின் கடைசி விமானப் பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆகஸ்ட் 19-ந்தேதி, ஜப்பான் ரேடியோ "நேதாஜி இறந்துவிட்டார்" என்ற திடுக்கிடும் செய்தியை அறிவித்தது. ஜப்பானிய ரேடியோ கூறியதாவது:-

"சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தின் தலைவரான நேதாஜி, 1945 ஆகஸ்ட் 16-ந்தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார். 18-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு, பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.

ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார். அவருடன் விமானத்தில் பயணம் செய்த ஜெனரல் சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்டவுடனேயே மரணம் அடைந்தார். நேதாஜியின் உதவித் தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமானும், மற்றும் 4 ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர்"

இவ்வாறு ஜப்பானிய ரேடியோ அறிவித்தது.

இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலர் நம்பவில்லை. "நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?" என்று கேட்டனர்.

ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்- ரகிமான், "நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்" என்று கூறினார். ஆயினும், முத்துராமலிங்க தேவர் உள்பட பல தலைவர்கள், "நேதாஜி உயிருடன் இருக்கிறார்" என்றே கூறி வந்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956-ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை.

டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான்" என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967-ல், 350 "எம்.பி."க்கள் கையெழுத்திட்டு, நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும்படி, ஜனாதிபதியிடம் மனு கொடுத்தனர்.

அதன்படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட "ஒரு நபர் விசாரணை கமிஷன்" அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, "விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை" என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார். 


இந்திய நாட்டின் விடுதலைக்கு எத்தனை எத்தனை பேர் தியாகங்கள் செய்திருக்கின்றனர். காந்திஜியும் நேருவும் ஒரு பக்கமும், நேத்தாஜி மறுபக்கமும் செய்த இதுபோன்ற செயல்களை எண்ணும் போது நெஞ்சம் கனக்கிறது.

படித்ததில் பிடித்தது - சரித்திர குறிப்புகள் 2

'மாலை மலர்' வலைத்தளத்தில் இருந்து உங்களுக்காக இங்கே:

நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் - பிரபாவதி தேவி தம்பதிகளின் 9-வது குழந்தையாக 23-1-1897-ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்).

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், "ஐ.சி.எஸ்" பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்" என்று வீர உரை நிகழ்த்தினார்.

அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை "நேதாஜி" (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை. 1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார்.

அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, "பட்டாபியின் தோல்வி, என் தோல்வி" என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட "பார்வர்டு பிளாக்" என்ற அமைப்பை உருவாக்கினார்.

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார்.

1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று.

நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார்.

வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார்.

"சயாதீன்" என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார்.

ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள்.

அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார்.

இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார். காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது.

அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார்.

அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார். 

 நன்றி : மாலை மலர் வலைத்தளம்

படித்ததில் பிடித்தது - சரித்திர குறிப்புகள் 1

சரித்திரத்தை தெரிந்து கொள்ள நமக்கு பழைய நாளிதழ்களும் அறிஞர் பெருமக்களின் கட்டுரைகளுமே கை கொடுக்கின்றன.
அன்மையில் சரித்திர கால புதையலாக ஒரு வலைத்தளத்தில் ( மாலை மலர் ) நமது அடுத்த தலைமுறைக்கு தேவையான முக்கிய குறிப்புகளைக் கண்டேன். படித்ததில் பிடித்தது என தலைப்பிட்டு அவற்றை இங்கே படிக்கக் கொடுத்திருக்கிறேன்.

நேதாஜியின் வீர சாகசம்

இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட படை அது. அவர்கள் பிரான்சு நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப்போரிட்டனர்.

1941 டிசம்பர் 7-ந்தேதி, போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் குதித்தது. வெகு எளிதாக சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது. தாய்லாந்து, மலேயா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் கைப்பற்றிக்கொண்டு, மேலும் முன்னேறின.

பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் ஆகியது. ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களைக்கொண்டு, "இந்திய தேசிய ராணுவம்" அமைக்கப்பட்டது. போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார்.

ஜப்பானுக்கு எப்படிச் செல்வது? கடலில் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கிகளும் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். "இது ஆபத்தானது" என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஆனால் நேதாஜி துணிவுடன் 1943 பிப்ரவரி 8-ந்தேதி ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார். அவருடைய செயலாளர் கர்னல் ஹசன், ராணுவ அதிகாரி குலாம் ஹைதர், ஒரு ஜப்பான் அதிகாரி, ஒரு ஜெர்மன் அதிகாரி ஆகியோரும் உடன் புறப்பட்டனர்.

எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக்கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது. மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கியை எதிர்கொண்டு வரவேற்றது.

ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏப்ரல் 28-ந்தேதி மாறினார் நேதாஜி. நீர்மூழ்கிக்கப்பல் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை, மே 6-ந்தேதியன்று நேதாஜி அடைந்தார். அதாவது, நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் 3 மாதம் நீடித்தது. சுமத்திராவில் ஒரு வாரம் தங்கியபின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்குப் பயணமானார்.

மே 16-ந்தேதி டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்டு, ஜுலை 2-ந்தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய விžகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, "தேசிய மாணவர் படை"யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார்.

அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. அதன்பின் நேதாஜி என்ற பெயர் உலகமெங்கும் பரவியது. 1943 அக்டோபர் மாதம், "சுதந்திர இந்திய அரசாங்க"த்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.

சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார். அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார் நேதாஜி. தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது;

புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன. நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன.

சுதந்திர அரசுக்கென தனியாக "பாங்கி" தொடங்கவேண்டும் என்றார், நேதாஜி. "இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?" என்று ஒரு முஸ்லிம் கோடீஸ்வரர் கேட்டார். "ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்" என்று நேதாஜி கூறியதும், "இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்" என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார்.

இரண்டே வாரங்களில் "ஆசாத் ஹிந்த் பாங்க்" தொடங்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவத்துக்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர். நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின. ஒருமுறை, ஒரே மாலை 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிற்று!

நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர். பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த நன்கொடை மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார்நேதாஜி.

இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், "ஜான்சிராணிப்படை" என்ற பெயரில் இயங்கியது. இதில் 1,200 பெண்கள் இருந்தனர். "தற்கொலைப்படை" ஒன்றும் இயங்கியது.

இவர்கள், முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, எதிரிப்படைகளின் டாங்கிகள் அணிவகுத்து வரும்போது, பாய்ந்து சென்று குறுக்கே படுத்துக்கொள்வார்கள். டாங்கிகளால் அவர்கள் நசுக்கப்படும் அதே நேரத்தில், குண்டுகள் வெடித்து டாங்கிகள் சின்னாபின்னமாகச் சிதறும்! இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்தனர்.

"டெல்லி சலோ!" என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது. "ஜான்சிராணிப்படை" பல மைல்கள் முன்னேறியது.

அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. "விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்" என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். 

Tuesday 5 March 2013

சொதப்பல்கள் பலவிதம்..

 'காதலில்    சொதப்புவது    எப்படி?'       திரையில்    ஒரு    காட்சி....

வளரும் காலத்தில் கல்வியில் தொடங்கி, பருவ காலத்தில் காதலிலும், மத்திம  காலத்தில் வாழ்கையிலும் சொதப்பல் திலகங்களின் சொதப்பல்கள் தொடர்கின்றன. 

காதலர்கள் தனித் தனியேயும், கணவன் மனவி ஒன்றாகவும் இருப்பதென்பதே வாழ்வின் சாராம்சம், நாகரீகத்தின் அடையாளம்.
இன்றைய நிலையோ தலைகீழ் பாடமாக இருக்கிறது.  காதலர்கள் சேர்ந்து வாழ்வதும், மணமானவர்கள் தனியே வாழ விழைவதும்  நகைப்புக்கு உரிய ஒன்றாகி விட்டது தற்போது.  இயற்கைக்கு எதிராக இவர்கள் விடும் சவால்கள் இவை. அதற்கு இவர்கள் அடுக்கும் காரணங்கள் சொல்லில் அடங்கா.

இவ்விரண்டு செயல்களுமே  தவறுகளையும்,  பாவங்களையும் அதிகரிக்கும் சிந்தனை மாற்றத்தின் எதிர்மறையானவையாகும்.

 

மென்செஸ்டர் யுனைட்டெட் Vs ரியல் மாட்ரிட்



மென்செஸ்டர் யுனைட்டெட் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்...
மோகன் பாலா.

 நாளை அதிகாலையில் இடம் பெறவிருக்கும் விளையாட்டில் ரியல் மாட்ரிட் குழுவை, மென்செஸ்டர் குழு தோற்கடிக்குமா?

முடியாது என்கிறேன் நான்.

இன்னும் சில மணி நேரத்தில் விடை தெரிந்து விடும்.



நம் குழந்தைகளும் அறிஞர்களாகலாம்

ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதை, அதன்படி அவர்களை வளர்க்கிறோமா என்பதே கேள்வி எனச் சொன்னார் மேலை நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ.

குழந்தைகள் பிறக்கும் போது எல்லாவித அறிவுடனும் ஆற்றலுடனுமே பிறக்கிறார்கள். அவர்களை வளர்க்கும் பொருப்புக்களில் நாம் சரியாக இருக்கிறோமா?

சிலர் அதிக செல்லம் கொடுத்து தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள். சிலர் அதிக கண்டிப்புடன் வளர்க்கிறார்கள். இந்த 'அதிக" எனும் சொல் இங்கு சரிதானா அல்லது இவ்வார்த்தை இங்கு மிகை படுத்தப்பட்ட வார்த்தையா என்பது சரியாக அளவிடப்பட வேண்டும்.

பிறக்கும் போது சகல திறமைகளோடு குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால் இடைப்பட்ட காலத்தில் என்ன ஆகிறது?  ஏன் ஒரு சிறு பகுதியினரே அறிஞர்களாகவும், மேதைகளாகவும், கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் ஆகிறார்கள்..? ஏன் எல்லாக் குழந்தைகளும் அப்படி ஆவதில்லை....?

குழந்தைகளை உற்று கவனிப்போருக்கு ஒன்று நன்கு விளங்கும்.  நமக்குத் தோன்றாத பல விசயங்களை நம் குழந்தைகள் எளிதாக செய்துவிட்டு வெகு இயல்பாக மற்ற வேலைகளைப் பார்க்க போய்விடுகிறார்கள். 
 நாம் சித்தித்தாலும் தோன்றாத விதங்களில் குழந்தைகள் செயல்பாடு இருப்பது,  நன்கு பராமரித்து முறைப்படி வளர்த்தால், சாதனையாளர்களாக அவர்கள் வரவிருப்பதையே குறிக்கிறது.

அந்தத் திறனை ஊக்குவிப்பதும், சாதகமாக பயன் படுத்திக் கொள்வதுமே நல்ல வழிகாட்டுதலின் அங்கங்கள் ஆகும். அவர்களின் ஆர்வத்தையும், வேகத்தையும், யுக்திகளையும் நாம் இரு மடங்காக்கப் பழக வேண்டும்.
"அவர்கள் மழலைகள், இது அவர்களுக்கு அதிகமான ஒன்று" என ஒருபோதும் அவர்களை  குறைத்து மதிப்பிடக் கூடாது.  அவர்களின் வீர தீரச் செயல்களை அறிவுப்பூர்வமாகவும், ஆக்ககரமாகவும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

 நிபுணர்களின் ஆய்வின் படி, சுலபான சில செயல்பாடுகள் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளோடு ஒன்றித்துப் போனால், குழந்தைகள் மேதைகள் ஆகும் திறன் பளிச்சிடும் என்கின்றனர்.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு முதல் படியாக அமைவது, அவர்களின் கிறுக்கல்களும் அதற்கு அவர்கள் பூசும் வர்ணங்களும். முறையாக எப்படி வரைவது, எப்படி வர்ணம் தீட்டுவது எனச் சொல்லிக் கொடுக்கும் நேரம், குழந்தைகளின் வேலைகளை, " அது அப்படியல்ல, தவறு" என எதிர்மறை கருத்துக்களை சொல்லி பெரிது படுத்தாதீர்கள். சிறுகச் சிறுக வர்ணங்களின் நிலைத்தன்மையை உணர்த்துங்கள்.

'புல் பச்சை நிறம், வானம் நீல நிறம்' என இயற்கை நிறங்களை சொல்லித் தருவதும், பிறகு வர்ணங்களை வைத்தே பூகோளத்தில்  மற்ற நாடுகளை அடையாளம் காணச் செய்வதும்  குழந்தைகளின் அறிவுக்கு மிகவும் பயனான செயல்களாம்.

அடுத்தது குழந்தைகளோடு கேள்வி பதில் அங்கம். குழந்தைகளுக்கு கேள்வி கேட்க ரொம்பவும் பிடிக்கும். அதிலும் மழலைகளுக்கு சொல்லித்தரவே வேண்டாம்.

" ஏன் அதற்கு மீனுன்னு பேரு?
ஏன் அது தண்ணியிலேயே இருக்கு?
ஏன் நாம் தண்ணியிலே இல்லை, வெளியே இருக்கிறோம்?"

என கேள்விகளை தொடுப்பார்கள். பல கேள்விகளுக்கு பதில் கூட இல்லாமல் போகலாம். ஆனால் அவற்றுக்கு பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

பொதுவாக மழலைகளின் கேள்விகளுக்கு எல்லா பெற்றோரும் பதில் சொல்லிவிடலாம்.  வளரும் குழந்தைகளின் கேள்விகள் நிஜ பதிலை எதிர் பார்ப்பவைகளாகும். ஆகவே, பதில் தெரியாத போது, சாமர்த்தியமாக புத்தகத்தில் உள்ள பதில்களை படித்துக் காட்டுங்கள். அல்லது, பதில் தெரிந்த மற்றவர்களிடம் கேட்டு தகுந்த நேரத்தில் அவர்களின் கேள்விகளை விளக்குங்கள். அவர்களின் கேள்விகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்.

சில நாட்கள் சென்றபின், அவர்களின் அறிவுப்பூர்வமான கேள்விகளை அவர்களிடமே மீண்டும் கேட்டு பரிசோதித்துப் பார்க்கலாம், அவர்களின் ஞாபக சக்தியை.

கூச்சம் போக்கவும், வார்த்தைகளை வளப்படுத்தவும் குழந்தைகளுக்கு குழந்தைப் பாடல்களும், உடல் பயிற்ச்சிக்காக ஆடலும் அவசியம்.

" நிலவே நிலவே ஓடிவா
 நீ என்னுடனே ஆடவா
மலராம் அரும்பின் எழில் மேவும்
மரகத மணியுடன் ஆட வா..."

என சிறு வயதில் நாம் பாடியதும் ஆடியதும் சிலருக்கு நினைவில் இருக்கலாம். இன்று மற்ற மொழிகளில் உள்ள 'ரைம்ஸ்களும்" முக்கிய இடம் பிடிக்கின்றன குழந்தைகளின் வாழ்வில்.

"பா பா பிளக் ஷிப் ஹெவ் யு எனி வுல்...
யெஸ் ஸார் யெஸ் ஸார் த்ரீ பெக்ஸ் ஃபுல்...."

"ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டல் ஸ்டார்
ஹவ் ஐ வொன்டர் வாட் யூ ஆர்.."

"லண்டன் பிரிட்ஜ் இஸ் ஃபாளிங் டவுன் ஃபாளிங் டவுன்"

போன்ற வரிசையில் உள்ள பாடல்களை நாமே சொல்லித்தருவது நல்லது.

வெட்டி ஒட்டும் போட்டிகளிலிருந்து 'டம், செஸ்' என அறிவுக்குகந்த விளையாட்டுகளாக வாங்கித் தரலாம்.  அவர்களோடு சேர்ந்து  விளையாடுவதும் சில சமயங்களில் அவர்களை வெற்றி பெற விடுவதும் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர உதவும். நாளடைவில், நீங்கள் முயன்றாலும் அவர்களை தோற்கடிக்க முடியாது.

 நேரம் கிடைக்கும்போது பூந்தோட்டங்களுக்கும், குழந்தைகளுக்கான விளையாட்டு மையங்களுக்கும் அழைத்துச் செல்லலாம். பருவ வயதிற்கேற்ப மேலுள்ள அனைத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள்.  ஐந்து வயதில் சொன்ன கதைகளை பத்து வயதில் மெருகேற்றி தரத்தினை உயர்த்திக் கொள்ளுங்கள்.

வானத்தில் விமானம் எப்படி பறக்கிறது என நமக்குத் தெரியாவிட்டாலும், குறைந்தது சைக்கிள் வண்டி எப்படி ஓட்டுவது என்றாவது சொல்லிக் கொடுங்கள். அடுத்து அவர்களாகவே மற்றவற்றை தெரிந்து கொள்ளும் காலம் வந்துவிடும்.

ஆக, சரியான வழிகாட்டுதல் இருந்தால் நம் மழலைகளும் கற்றறிந்தவர் பட்டியலில் இடம் பெற எவ்வித தடங்களும் இருக்கப் போவதில்லை.

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கலாமா?

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கலாமா என்பது இன்று நேற்றல்ல சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்ட ஒரு விவாதம்.

" நாங்களும் அடி வாங்கி இருக்கிறோம். அதன்படித்தான் படித்து முன்னுக்கு வந்திருக்கிறோம்" எனச் சொல்வோர் மத்தியில்,
"அடிப்பது காட்டுமிராண்டித்தனம். பயத்தினால் படிப்பை வரவழைக்க முடியாது. வார்த்தைகளினால் கட்டுப்படாத மாணவனை  அடிப்பதனால் அவன் அடங்கிப் பொய் படிப்பான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனச் சொல்வோரும் இருக்கவே செய்கிறார்கள்.

பெற்றோருக்கு அடுத்து கல்வி கற்றுத்தரும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு உயர்ந்த இடம் நம் இந்திய சமூகத்தில் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது.  இதில் பாலர் பள்ளி ஆசிரியர்கள் முதல் பல்கலைகழக விரிவுரையாளர்கள் வரை அடங்குவர்.

மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு அவர்களின் ஒழுக்கத்தை நிலை நாட்டவும், குற்றம் குறைகளை களையவும் அந்தந்த கால கட்டங்களில் ஆசிரியர்கள் தங்களின் சிறந்த ஆளுமையின் மூலம் கண்டித்தலையும் ஒரு அங்கமாகவே கல்வி பாடத்திட்டத்தில் வகுத்து வைதிருந்திருக்கின்றனர்.

தவறு செய்யும் மாணவர்களை திடலைச் சுற்றி ஓடச்செய்வதும், ஒருவர் காதை மற்றவர் பற்றிக்கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வதும், " இனி நான் தவறு செய்ய மாட்டேன்" என பத்து பக்கங்கள் எழுதச் சொல்வதும் அன்றைய நடைமுறையில் இருந்தச் சில கண்டிப்புகளாகும். இவற்றுக்குச் சிகரம் வைதாற்போன்றதுதான் 'பிரம்பால் அடித்து மாணவர்களை அச்சுறுத்தியது."

ஆனால், அவை தற்கால கல்வித்திட்டத்திற்கு ஏதேனும் பங்காற்றுகின்றதா எனும் கேள்விக்குத்தான் விடை தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம்.

'ஆமாம்' என்போர் ஒரு பக்கமும், 'இல்லை' என்போர் மறுபக்கமும் தங்களின் கூற்றினை தினம் தினமும் முன் மொழிந்தவாறு இருந்து கொண்டே இருக்கின்றனர். சரியென எடுத்துக்கொள்வதும் தவறென தவிர்த்து விடுவதும் கல்வி கற்பிப்போருக்கு மட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோருக்கும் ஒரு பெரிய தலைவலியாகவே இன்னும் இருக்கிறது.

கால நேர வித்தியாசமின்றி ஆசிரியர்கள் பள்ளியிலும் வெளியிலும் மாணவர்களின் வழிகாட்டிகளாக போற்றப்பட்டனர் அன்று. மனச் சோர்வு, ஸ்கூல் ஃபோபியா போன்றவை அன்றைய மாணவர்கள் கேட்டறியாத சில வார்த்தைகளாகும்.

அன்றைய குடும்பச் சூழலில் பள்ளிபிள்ளைகளின் எதிர்காளம் பெற்றோரை விட ஆசிரியர்களை சார்ந்ததாகவே இருந்தது.  பள்ளிப் படிப்பில் அறிவும், அனுபவமும் குறைந்திருந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்ல ஆசிரியர்களையே பெரிதும் நம்பி இருந்தனர். அதற்காக தங்கள் பிள்ளைகள் அடிவாங்கினாலும், அது அவர்களை நல்வழிப் படுத்தத் தான் என்றே அவர்களுக்குப் பட்டது. ஆசிரியர் அடித்தார் என வீட்டுக்கு வந்து சொன்னாலே இன்னும் அதிகம் அடி விழும் பெற்றோர்களிடமிருந்து.

இதற்கு பயந்து கொண்டே ஆசிரியர்களுக்கு பணிந்து அவர்களிடம் அடிவாங்காமல் அவர்கள் சொல் கேட்டு படித்து பட்டம் பெற்றனர். பட்டம் பெறாதோர் கூட நல்ல பண்பினை வளர்த்துக் கொண்டனர்.

இது அன்றைய நிலை. அடிப்பது மாணவர்களை நல்வழிப்படித்தி ஒழுக்கமாக கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவே என எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒன்று.

இன்றோ, காலச் சக்கர மாறுதல்களால், அதிலும் மேல் நாட்டு கலாச்சார ஊடுருவலால், தொடர்புத்துறை, தொலைக்காட்சி போன்றவற்றின் வளர்ச்சியினால், மக்களின் சிந்தனைகளில்  மாறுதல்கள் வரத் தொடங்கிவிட்டன. மனித நேயம் பேசுவோர் அதிகரித்து விட்டனர். அறிவில்லா மாணவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அவர்களை அடக்கி ஆளக்கூடாது  என வசனம் பேசுவோர் பெருகிவிட்டனர்.

மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்படுத்த வேறு அனுகுமுறைகளை முயற்ச்சிக்கிறார்கள் இப்போது. இதையெல்லாம் கடந்து மாணவர்களுக்கு கல்விகற்றுத் தரும் நிர்பந்தம் ஆசிரியர்களுக்கு பெருகிவிட்டது. அடிக்கவும் கூடாது, அறிவும் புகட்டவேண்டும்...தேர்விலும் வெற்றி பெறச்செய்யவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு கூடிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இது இப்படி இருக்க, திறமையற்ற ஆசிரியர்கள், மாதா மாதம் வருமானம் வந்தால் போதும் என மாணவர்களை அலட்சியப் படுத்தும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரின் தேவையற்ற கட்டுப்பாடுகள் போன்றவை அதிகம் தோன்றத் தொடங்கி விட்டன.

இந்தச் சாராருக்கு மாணவர் நிலை அப்படி ஒன்றும் பெரிதாகப் படுவதில்லை. ஒழுக்கத்தைப் பற்றி அவர்களுக்கே சரிவரத் தெரியாத போது மாணவர்களை எப்படி முறை படுத்துவர்?

இப்படி பலவற்றுக்கும் நடுவே மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கலாமா என்னும் விவாதம் இன்னும் மக்களிடயே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


ஒருவரை ஒருவர் சார்ந்தே நாம் வாழ்கிறோம்...

வேலைக்குச் சென்று சோர்வாக வீடு திரும்பும் கணவன் மனைவிக்கு தேவைப்படுவது உற்சாக மொழி.  ஆனால் அதிலும் கூட, ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பார்களேயானால், அனுசரித்து போகும் தன்மை நிறையவே தேவைப்படுகிறது. சூழ் நிலைக்கேற்ப பரஸ்பரமானதாக அது இருந்து விட்டால் அன்பு குடும்பத்தில் நிலைத்து நிற்கும். உணவும் உறக்கமும் அடுத்த நிலைதான்.

கணவன் மனைவியைச் சார்ந்திருக்கிறார்,
மனைவி கணவனைச் சார்ந்திருக்கிறார்,
பிள்ளைகள் பெற்றோரைச் சார்ந்திருக்கிறார்கள்,
வயதான பெற்றோர் பிள்ளைகளைச் சார்ந்திருக்கிறார்கள்......

இதன்படியே மற்றெல்லா உறவுகளும், ஒன்றைச் சார்ந்தே மற்றதும் அமைந்துவிடுகிறது. நம் சமூகத்தில் தெளிவாகத் தெரிகின்ற அதிகார வரிசையிலான நிலை இது.

இந்த தொடரில் ஏதாவதொரு பாதிப்பு ஏற்படும்போது பாதிக்கப் பட்டவர் நிலை குலைந்து போகிறார்.  இந்த சார்பு நிலையில் இருந்து பிரளும் போது ஏதோ பெரியதாக ஒரு பிரச்சினை தோன்றிவிட்டது போன்று மனச் சோர்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் இவர்கள் ஆதரவு காட்டும் வேறு சிலரோடு சேர்ந்து விடுவதும் உண்டு. தங்களிடம் உள்ள பொருள் பலத்தை பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுத்துவிடும் பெற்றோர் நிலையினை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். ஏமாற்றமடைவோர் முதியோர் இல்லங்களில் சேர்ந்து விடுகின்றனர் அல்லது பலவந்தமாக தங்களின் சொந்த பிள்ளைகளினாலேயே சேர்த்துவிடப்படுகின்றனர். பரவலாக நாம் காணும் ஒன்றே இது.

மனம் நோகும் இது போன்ற செயல்களுக்கு காரணங்களையும் அடிப்படைகளையும் ஆராயத் தொடங்குவுமேயானால், 'அத்திப் பழத்தை பிய்த்துப் பார்த்தால் அத்தனையும் சொத்தை' என்பார்களே அதுபோல சம்பந்தப் பட்ட அனைவருமே குற்றவாளிகளாக தெரிவார்கள்.  சில சமயங்களில் நம் வீட்டுக்கு வரும் மறுமகனும், மறுமகளும் ...ஏன், அவர்களின் உறவினர்களும்கூட காரணவாதிகளாக தெரியலாம். 100 விழுக்காடு ஒருவரைச் சார்ந்து இருப்பதால் தோன்றக்கூடிய பாதகமான செயல் இது.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தகுந்த தற்காப்பு, சிறுகச் சிறுக நாம் பிறரைச் சார்ந்திருக்கும் தன்மையினை குறைத்துக் கொள்வதே ஆகும். அன்பும், ஆதரவும், அரவணைப்பும்  எப்போதும் பாதிக்கப்படாமல் இருக்கும் அதே நேரம், நமது தன்னம்பிக்கையும் வளர்ந்து நாமே சுயமாக செய்து முடிக்கவேண்டிய கடமையினையும் பொறுப்பினையும் உணர்ந்து நடப்பதும் அவசியம்.

என்னதான் நாம் பிறரைச் சார்ந்து இருந்தாலும், நம் சக்திக்கும், வசதிக்கும் ஏற்றாற்போல் நம் காலில் நிற்கும் வல்லமையும் நாம் கொண்டிருப்பது நல்லது. இதனால், மனம் வேதனையில் துவண்டு விடாமல், வாழ்க்கை வாழ்வதற்கே என முன்னேறிப்போகும் நம் பயணம் தடை படாது.

சொற்களால் சொல்லப்படாத, எழுத்தால் எழுதப்படாத,  தினசரி வாழ்வில் நமக்கென வரையறுக்கப்படும் ஞாயமான எதிபார்ப்பினை செயல் படுத்தும் திறனைக் கொண்டிருப்போமானால், இந்தச் சார்பு நிலையில் உள்ள சாதகப் பலன் களை நாம் வாழ் நாள் முழுவதும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.