Tuesday 5 March 2013

நம் குழந்தைகளும் அறிஞர்களாகலாம்

ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதை, அதன்படி அவர்களை வளர்க்கிறோமா என்பதே கேள்வி எனச் சொன்னார் மேலை நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ.

குழந்தைகள் பிறக்கும் போது எல்லாவித அறிவுடனும் ஆற்றலுடனுமே பிறக்கிறார்கள். அவர்களை வளர்க்கும் பொருப்புக்களில் நாம் சரியாக இருக்கிறோமா?

சிலர் அதிக செல்லம் கொடுத்து தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள். சிலர் அதிக கண்டிப்புடன் வளர்க்கிறார்கள். இந்த 'அதிக" எனும் சொல் இங்கு சரிதானா அல்லது இவ்வார்த்தை இங்கு மிகை படுத்தப்பட்ட வார்த்தையா என்பது சரியாக அளவிடப்பட வேண்டும்.

பிறக்கும் போது சகல திறமைகளோடு குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால் இடைப்பட்ட காலத்தில் என்ன ஆகிறது?  ஏன் ஒரு சிறு பகுதியினரே அறிஞர்களாகவும், மேதைகளாகவும், கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் ஆகிறார்கள்..? ஏன் எல்லாக் குழந்தைகளும் அப்படி ஆவதில்லை....?

குழந்தைகளை உற்று கவனிப்போருக்கு ஒன்று நன்கு விளங்கும்.  நமக்குத் தோன்றாத பல விசயங்களை நம் குழந்தைகள் எளிதாக செய்துவிட்டு வெகு இயல்பாக மற்ற வேலைகளைப் பார்க்க போய்விடுகிறார்கள். 
 நாம் சித்தித்தாலும் தோன்றாத விதங்களில் குழந்தைகள் செயல்பாடு இருப்பது,  நன்கு பராமரித்து முறைப்படி வளர்த்தால், சாதனையாளர்களாக அவர்கள் வரவிருப்பதையே குறிக்கிறது.

அந்தத் திறனை ஊக்குவிப்பதும், சாதகமாக பயன் படுத்திக் கொள்வதுமே நல்ல வழிகாட்டுதலின் அங்கங்கள் ஆகும். அவர்களின் ஆர்வத்தையும், வேகத்தையும், யுக்திகளையும் நாம் இரு மடங்காக்கப் பழக வேண்டும்.
"அவர்கள் மழலைகள், இது அவர்களுக்கு அதிகமான ஒன்று" என ஒருபோதும் அவர்களை  குறைத்து மதிப்பிடக் கூடாது.  அவர்களின் வீர தீரச் செயல்களை அறிவுப்பூர்வமாகவும், ஆக்ககரமாகவும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

 நிபுணர்களின் ஆய்வின் படி, சுலபான சில செயல்பாடுகள் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளோடு ஒன்றித்துப் போனால், குழந்தைகள் மேதைகள் ஆகும் திறன் பளிச்சிடும் என்கின்றனர்.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு முதல் படியாக அமைவது, அவர்களின் கிறுக்கல்களும் அதற்கு அவர்கள் பூசும் வர்ணங்களும். முறையாக எப்படி வரைவது, எப்படி வர்ணம் தீட்டுவது எனச் சொல்லிக் கொடுக்கும் நேரம், குழந்தைகளின் வேலைகளை, " அது அப்படியல்ல, தவறு" என எதிர்மறை கருத்துக்களை சொல்லி பெரிது படுத்தாதீர்கள். சிறுகச் சிறுக வர்ணங்களின் நிலைத்தன்மையை உணர்த்துங்கள்.

'புல் பச்சை நிறம், வானம் நீல நிறம்' என இயற்கை நிறங்களை சொல்லித் தருவதும், பிறகு வர்ணங்களை வைத்தே பூகோளத்தில்  மற்ற நாடுகளை அடையாளம் காணச் செய்வதும்  குழந்தைகளின் அறிவுக்கு மிகவும் பயனான செயல்களாம்.

அடுத்தது குழந்தைகளோடு கேள்வி பதில் அங்கம். குழந்தைகளுக்கு கேள்வி கேட்க ரொம்பவும் பிடிக்கும். அதிலும் மழலைகளுக்கு சொல்லித்தரவே வேண்டாம்.

" ஏன் அதற்கு மீனுன்னு பேரு?
ஏன் அது தண்ணியிலேயே இருக்கு?
ஏன் நாம் தண்ணியிலே இல்லை, வெளியே இருக்கிறோம்?"

என கேள்விகளை தொடுப்பார்கள். பல கேள்விகளுக்கு பதில் கூட இல்லாமல் போகலாம். ஆனால் அவற்றுக்கு பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

பொதுவாக மழலைகளின் கேள்விகளுக்கு எல்லா பெற்றோரும் பதில் சொல்லிவிடலாம்.  வளரும் குழந்தைகளின் கேள்விகள் நிஜ பதிலை எதிர் பார்ப்பவைகளாகும். ஆகவே, பதில் தெரியாத போது, சாமர்த்தியமாக புத்தகத்தில் உள்ள பதில்களை படித்துக் காட்டுங்கள். அல்லது, பதில் தெரிந்த மற்றவர்களிடம் கேட்டு தகுந்த நேரத்தில் அவர்களின் கேள்விகளை விளக்குங்கள். அவர்களின் கேள்விகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்.

சில நாட்கள் சென்றபின், அவர்களின் அறிவுப்பூர்வமான கேள்விகளை அவர்களிடமே மீண்டும் கேட்டு பரிசோதித்துப் பார்க்கலாம், அவர்களின் ஞாபக சக்தியை.

கூச்சம் போக்கவும், வார்த்தைகளை வளப்படுத்தவும் குழந்தைகளுக்கு குழந்தைப் பாடல்களும், உடல் பயிற்ச்சிக்காக ஆடலும் அவசியம்.

" நிலவே நிலவே ஓடிவா
 நீ என்னுடனே ஆடவா
மலராம் அரும்பின் எழில் மேவும்
மரகத மணியுடன் ஆட வா..."

என சிறு வயதில் நாம் பாடியதும் ஆடியதும் சிலருக்கு நினைவில் இருக்கலாம். இன்று மற்ற மொழிகளில் உள்ள 'ரைம்ஸ்களும்" முக்கிய இடம் பிடிக்கின்றன குழந்தைகளின் வாழ்வில்.

"பா பா பிளக் ஷிப் ஹெவ் யு எனி வுல்...
யெஸ் ஸார் யெஸ் ஸார் த்ரீ பெக்ஸ் ஃபுல்...."

"ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டல் ஸ்டார்
ஹவ் ஐ வொன்டர் வாட் யூ ஆர்.."

"லண்டன் பிரிட்ஜ் இஸ் ஃபாளிங் டவுன் ஃபாளிங் டவுன்"

போன்ற வரிசையில் உள்ள பாடல்களை நாமே சொல்லித்தருவது நல்லது.

வெட்டி ஒட்டும் போட்டிகளிலிருந்து 'டம், செஸ்' என அறிவுக்குகந்த விளையாட்டுகளாக வாங்கித் தரலாம்.  அவர்களோடு சேர்ந்து  விளையாடுவதும் சில சமயங்களில் அவர்களை வெற்றி பெற விடுவதும் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர உதவும். நாளடைவில், நீங்கள் முயன்றாலும் அவர்களை தோற்கடிக்க முடியாது.

 நேரம் கிடைக்கும்போது பூந்தோட்டங்களுக்கும், குழந்தைகளுக்கான விளையாட்டு மையங்களுக்கும் அழைத்துச் செல்லலாம். பருவ வயதிற்கேற்ப மேலுள்ள அனைத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள்.  ஐந்து வயதில் சொன்ன கதைகளை பத்து வயதில் மெருகேற்றி தரத்தினை உயர்த்திக் கொள்ளுங்கள்.

வானத்தில் விமானம் எப்படி பறக்கிறது என நமக்குத் தெரியாவிட்டாலும், குறைந்தது சைக்கிள் வண்டி எப்படி ஓட்டுவது என்றாவது சொல்லிக் கொடுங்கள். அடுத்து அவர்களாகவே மற்றவற்றை தெரிந்து கொள்ளும் காலம் வந்துவிடும்.

ஆக, சரியான வழிகாட்டுதல் இருந்தால் நம் மழலைகளும் கற்றறிந்தவர் பட்டியலில் இடம் பெற எவ்வித தடங்களும் இருக்கப் போவதில்லை.

No comments:

Post a Comment