Friday 30 October 2015

பபி : சுடும் உண்மை, சுடாத அன்பு.....



சுடும் உண்மை, சுடாத அன்பு.....
என்.கணேசன்


இருபது வருடங்கள் கழித்து, தன் மகனைப் பார்க்க, சென்னைக்கு வந்திருக்கிறாள் நிர்மலா. இந்தத் தீர்மானம், அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும் கொடுமையான அனுபவமாக, இந்தப் பயணம் இருக்கப் போகிறது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். போகும் இடத்தில் மகனால், ஒரு புழுவை விடக் கேவலமாக, அவள் பார்க்கப்படுவாள், நடத்தப்படுவாள் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. ஆனால், எத்தனையோ காலமாய், அவள் சுமந்து கொண்டிருந்த ஒரு பெரிய பாரத்தை, இறக்கி வைக்காமல், இறக்க அவளுக்கு மனமில்லை என்பதால், சகல தைரியத்தையும் வரவழைத்து, தன் உயிர்த் தோழி வசந்தியையும் உடன் அழைத்துக் கொண்டு, அவள் கிளம்பி இருக்கிறாள்.

ஆனால், பெங்களூருவில் இருந்து கிளம்பும் போது இருந்த தைரியம் சிறிது, சிறிதாகிக் கொண்டே வந்து, சென்னை சென்ட்ரலில் வாடகைக் காரில் ஏறி அமர்ந்த போது, சுத்தமாகக் கரைந்து போயிருந்தது. வாசலிலிருந்து வீட்டுக்கு உள்ளே போகவாவது அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. ஆனால், அவன் எப்படி நடத்தினாலும், அது, அவள் செய்த தவறுக்குக் குறைந்தபட்ச தண்டனையாகக் கூட இருக்க முடியாது என்று நினைத்தாள்.

கார், மகன் வீட்டை நோக்கி முன்னேற, மனமோ பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்து, அவளது இளமைக் காலத்தை நெருங்கியது...

படிப்பிலும், அழகிலும் பலரும் பாராட்டும்படி இருந்த நிர்மலாவுக்கு, அவள் தந்தை, அழகு என்ற சொல்லிற்கு சம்பந்தமே இல்லாத நடேசனை கணவனாக தேர்ந்தெடுத்த போது, அதை, கடுமையாக எதிர்த்தாள் நிர்மலா; ஆனால், அவள் தந்தை, அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. "பையன் குணத்தில் சொக்கத் தங்கம்; அரசாங்க உத்தியோகம் இருக்கு... பார்க்க சுமாரா இருந்தா என்ன?' என்று, அவள் வாயை அடைத்தார். "பார்க்க சுமார்' என்ற வர்ணனை, நடேசனை அநியாயத்திற்கு உயர்த்தி சொன்னது போல தான்.

கறுத்து, மெலிந்து, சோடா புட்டிக் கண்ணாடியும் அணிந்திருந்த அவரை, எந்த விதத்திலும் சுமார் என்று ஒத்துக் கொள்ள நிர்மலாவால் முடியவில்லை. இரண்டு நாள் சாப்பிடாமல் கூட இருந்து பார்த்த நிர்மலா, குடும்ப நிர்ப்பந்தம் காரணமாக வேறு வழியில்லாமல், கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டி வந்தது.

ஆனால், அவளுடைய அப்பா சொன்னது போல, நடேசன் குணத்தில் சொக்கத் தங்கமாகவே இருந்தார். அன்பான மனிதராக இருந்த அவர், அவள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார். எல்லா விதங்களிலும், அவளுக்கு அனுசரித்துப் போனார். அவளுக்கு, அவருடைய குணங்களில், எந்தக் குறையையும் சுட்டிக் காட்ட முடியவில்லை; ஆனால், வெளியே, நான்கு பேர் முன், அவருடன் செல்வது அவளுக்கு அவமானமாக இருந்தது. வேண்டா வெறுப்பாக, வீட்டுக்குள் அவருடன் குடும்பம் நடத்தப் பழகிக் கொண்டாள்.
கல்யாணம் முடிந்து, ஆறு மாதத்தில், அவள் கர்ப்பமான போது, குழந்தை அவர் போல் பிறந்து விடக் கூடாது என்று அவள் வேண்டாத தெய்வமில்லை; அவள் பிரார்த்தனை வீண் போகவில்லை. அவளுக்கு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. வாழ்க்கை சிறிது சுலபமாகியது.

அவள் மகன் அருணுக்கு, இரண்டு வயதான போது, அவள் எதிர் வீட்டுக்கு, ஒரு கவர்ச்சியான ஆணழகன் குடி வந்தான். தனியார் கம்பெனியில் வேலை பார்த்த அவன், பார்க்க சினிமா நடிகன் போல் இருந்தான். ஆரம்பத்தில், அடிக்கடி சிநேகத்துடன் புன்னகைத்தவன், பின் அவளிடம் பேச்சுத் தர ஆரம்பித்தான். அவள் குழந்தையிடம் அதிக அன்பைக் காட்டினான்.
குழந்தையை அடிக்கடி எடுத்துக் கொண்டு, வெளியே சுற்றப் போனான். போகப், போக அவள் உடுத்தும் உடைகளைப் பாராட்டினான்; அவள் அழகைப் பாராட்டினான். மெல்ல, மெல்ல அவள் மனதில் இடம் பிடித்தான். கடைசியில், ஒரு நாள் அவள் சரியென்று சொன்னால், அவளைக் குழந்தையுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொன்னான்.

ஆரம்பத்தில் தன்னுடன் தனியாக வந்து விடும் படியும், அவள், நடேசனிடமிருந்து சட்டபடி விவாகரத்து வாங்கிய பின், திருமணம் செய்து, குழந்தையை அழைத்துக் கொண்டு போய் விடலாம் என்று சொன்னான். ஓரிரண்டு மாதங்களில் இதையெல்லாம் சாதித்து விடலாம் என்றும், அதன் பின் அவர்கள் வாழ்க்கை, எல்லையில்லாத சொர்க்கமாக இருக்கும் என்றும் ஆசை காட்டினான்.

ஒரு பலவீனமான மனநிலையில், அவள் சம்மதித்தாள். ஆனால், அவளுக்குக் குழந்தையை விட்டுப் போவது தான் தயக்கமாக இருந்தது. சில நாட்கள் தானே என்று, அவன், அவளை சமாதானப்படுத்தி, ஒத்துக் கொள்ள வைத்தான். தன்னை மன்னிக்கும் படி கணவனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, அவனுடன் ஓடிப் போனாள்.

இருவரும் பெங்களூருவில், ஒரு லாட்ஜ் எடுத்துத் தங்கினர். மூன்று நாட்கள் கழித்து, அவள் பணத்தையும், நகைகளையும் எடுத்துக் கொண்டு, அவன் காணாமல் போனான். அவளுக்கு, நடந்ததை நம்பவே முடியவில்லை. அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு மெல்ல, மெல்ல தான் உண்மை உறைத்தது. அவள் உலகம், அன்று அஸ்தமனமாகியது. அந்த லாட்ஜிற்குத் தரக் கூட அவளிடம் பணம் எதுவும் இருக்கவில்லை. நல்ல வேளையாக, அவளுடைய தோழி வசந்தி, பெங்களூருவில் வேலையில் இருந்து, அவள் வேலை செய்யும் கம்பெனியின் விலாசமும் அவளிடம் இருந்ததால், போன் செய்து அவளை வரவழைத்தாள்.

திருமணம் செய்து கொள்ளாமல், தனியாக வசித்து வந்த வசந்தி வந்து, நிர்மலாவை தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனாள். சில நாட்கள் உண்ணாமல், உறங்காமல் பித்துப் பிடித்தது போல் இருந்த தன் தோழியைப் பார்த்து, ஆரம்பத்தில் பயந்தே போனாள் வசந்தி. அவள் தற்கொலைக்கு முயல்வாளோ என்ற சந்தேகம் கூட அவளுக்கு வந்தது. அவள் சந்தேகத்தை ஊகித்தது போல, வறண்ட குரலில் நிர்மலா சொன்னாள்...

"பயப்படாதே வசந்தி... நான் கண்டிப்பாக தற்கொலை செய்துக்க மாட்டேன். நான் செய்த தப்புக்கு, நான் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதை முழுசும் அனுபவிக்காமல், நான் சாக விரும்பல...' சொல்லும் போதே அவள் வார்த்தைகளில் சுய வெறுப்பு பரிபூரணமாகத் தெரிந்தது.

அது, காலப் போக்கில் வடிந்து விடும் என்று வசந்தி நினைத்தாள்.
ஆனால், அது சாசுவதமாக நிர்மலாவிடம் தங்கிப் போனது. ஒரு மாதம் கழித்து, வசந்தி கேட்டாள்... "நிர்மலா... இனி, என்ன செய்யப் போகிறாய்?'
"எனக்கு இங்கே எதாவது வேலை வாங்கித் தருகிறாயா?'
"நீ திரும்ப உன் வீட்டுக்குப் போகலையா?'
அந்தக் கேள்வியில் நிர்மலா கூனிக் குறுகி விட்டாள்...
"மூன்று நாள், நான் சாக்கடையிலே விழுந்திருந்து, அழுகிட்டேன். அந்த நல்ல மனுஷனுக்கு மனைவியாகவோ, அவரோட குழந்தைக்கு தாயாகவோ இருக்கிற அருகதையை நான் இழந்துட்டேன் வசந்தி!'
"நீ போகலைன்னா, நீ, அவன் கூட எங்கேயோ வாழ்க்கை நடத்திக்கிட்டிருக்கிறதா அவங்க நினைச்சுட்டு இருப்பாங்க நிர்மலா. நீ மூணு நாளுக்கு மேல அவன் கூட இருக்கலைன்னு அவங்களுக்கு தெரியாமல் போயிடும்!'
"கற்பில் கால், அரை, முக்கால்ன்னு எல்லாம் அளவில்லை வசந்தி. இருக்கு, இல்லை என்ற ரெண்டே அளவுகோல் தான்...'
வசந்தி வாயடைத்துப் போனாள். ஆனால், பின் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும், நிர்மலாவின் அந்த எண்ணம் கடைசி வரை மாறவில்லை.

அந்த மூன்று நாட்கள் வாழ்க்கை பழைய நிர்மலாவை முழுவதுமாக சாகடித்து விட்டதாகவே வசந்திக்குத் தோன்றியது. தொடர்ந்த காலங்களில் அவள் என்றுமே அழுததில்லை; சிரித்ததில்லை. தன்னை அழகுப்படுத்திக் கொண்டதில்லை. ருசியாக சாப்பிட்ட தில்லை; "டிவி' பார்த்ததில்லை.
வசந்தியை தவிர, யாரிடமும் நெருங்கிப் பழகியதுமில்லை. எத்தனையோ இரவுகளில் உறங்காமல், ஜன்னல் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த தோழியைப் பார்த்து, வசந்தி மனம் வெந்திருக்கிறாள்.
"என்ன கொடுமை இது... எத்தனை காலம் இப்படி இருப்பாய் நிர்மலா?' ஒரு நாள் தாள முடியாமல் கேட்டாள் வசந்தி.
அதற்கு பதில் சொல்லவில்லை நிர்மலா.
"இப்படி உள்ளுக்குள்ளே சித்திரவதை அனுபவிக்கிறதுக்கு பதிலா, நீ நேரா உன் வீட்டுக்குப் போய் அவங்க பேசறத கேட்டுக்கலாம்; கொடுக்கற தண்டனையை ஏத்துக்கலாம். ஒரேயடியாய் அழுது தீர்க்கலாம். அப்படியாவது உன் பாரத்தை குறைச்சுக்கலாம்...'

அதை, நிர்மலா ஏற்றுக் கொள்ளவில்லை. அவளுடைய நடைப்பிண வாழ்க்கை தொடர்ந்தது. அடுத்த மாதமே ஒரு வேலையில் அவளை சேர்த்து விட்டாள் வசந்தி. நடைப்பிணமாய் அந்த வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தாள் நிர்மலா. வாங்குகிற சம்பளத்தில் அத்தியாவசிய செலவு போக, ஒரு பகுதியை வசந்தியிடமும், மீதியை அனாதை ஆசிரமங்களுக்கும் தந்து விடுவாள்.
அவர்களுடைய தோழி ஒருத்தி மூலமாக நிர்மலாவின் வீட்டு விஷயங்கள் அவ்வப்போது தெரிய வந்தன. கணவர் நடேசன் வேறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை. நிர்மலாவின் பெற்றோர் அருணைத் தாங்கள் வளர்ப்பதற்கு முன் வந்தனர். அதற்கு சம்மதிக்காமல், மகனைத் தானே வளர்த்தார் நடேசன். ஊரில் நிர்மலா பற்றி வம்புப் பேச்சு அதிகமாகவே, அவர் சென்னைக்கு மாற்றல் வாங்கி, மகனை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். மகன் அருண், படிப்பில் படுசுட்டியாக இருந்தான். நடேசன் அவனை, பி.இ., படிக்க வைத்தார். அவனுக்கு நல்ல வேலை கிடைத்த இரண்டே மாதங்களில், நடேசன் காலமானார்.

அந்தத் தகவல் கிடைக்கும் வரை பொட்டு மட்டும் வைத்துக் கொண்டிருந்த நிர்மலா, பின் அதையும் நிறுத்தி விட்டாள். அவர் இறந்து மூன்று மாதங்கள் கழித்த பின், <உடல் நலம் பாதிக்கப்பட்ட நிர்மலாவிற்கு, மருத்துவ பரிசோதனைகள் செய்த போது தான், கேன்சர் முற்றிய நிலையில் இருப்பது தெரிந்தது. அதன் பின் தான், பல நாள் யோசனைக்குப் பின், இறப்பதற்கு முன் ஒரு முறை, மகனை நேரடியாக சந்திக்க முடிவு செய்தாள் நிர்மலா.
அவள் தன் முடிவை வசந்தியிடம் சொன்ன போது, வசந்திக்கு, தன் காதுகளை நம்ப முடியவில்லை. பேச வார்த்தைகள் இல்லாமல், தோழியின் கைகளை ஒரு நிமிடம் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். எத்தனையோ முறை இது பற்றி சொல்லியும் கேட்காத நிர்மலா, மரணம் அருகில் வந்து விட்டது என்பதை அறிந்தவுடன், மனமாற்றம் அடைந்தது வசந்தி மனதை நெகிழ வைத்தது.

குரல் கரகரக்க வசந்தி சொன்னாள்...
"துணைக்கு நானும் வர்றேன் நிர்மலா...'
கார், அருண் விட்டு முன் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கும் போது, நிர்மலாவின் இதயத் துடிப்புகள் சம்மட்டி அடிகளாக மாற ஆரம்பித்தன. வசந்திக்கும் சிறிது பதட்டமாகத்தான் இருந்தது. அருணின் வீடு அழகாகத் தெரிந்தது. வீட்டு முன் நிறைய பூச்செடிகள் இருந்தன. ஒரு காலத்தில், நிர்மலாவிற்கும் பூச்செடிகள் என்றால் உயிர்.

அழைப்பு மணியை அழுத்தினாள் வசந்தி; கதவைத் திறந்தான் அருண். அவனிடம், நிர்மலாவின் அன்றைய சாயல் அப்படியே இருந்தது; அழகான வாலிபனாக இருந்தான். "என்ன வேண்டும்?' என்பது போல, அவர்களைப் பார்த்தான்.
""அருண்?'' வசந்தி கேட்டாள்
""நான் தான்... நீங்கள்?''
""நான் வசந்தி... இது, என் சிநேகிதி நிர்மலா; உங்களைத் தான் பார்க்க வந்தோம்.''

தாயின் பெயர் கேட்டும் அவனுக்கு, அவளை அடையாளம் தெரியவில்லை. வசந்திக்கு அவனைத் தவறு சொல்லத் தோன்றவில்லை. அவனுக்கு, அவன் தாயின் நினைவு எல்லாம், ஏதாவது பழைய புகைப்படத்தினுடையதாக இருக்கலாம். அந்த அழகு நிர்மலாவிற்கும், இன்றைய நடைப்பிண நிர்மாலவிற்கும் தோற்றத்தில் சிறிது கூட சம்பந்தம் தெரியவில்லை.

""உள்ளே வாங்க...'' அவன் அழைத்தான்.
உள்ளே வரவேற்பறையில், இரண்டு புகைப்படங்கள் சுவரில் தொங்கின. ஒன்றில் நடேசன் மட்டும் இருந்தார். இறப்பதற்கு சில காலம் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் போல இருந்தது. அந்தப் புகைப்படத்திற்கு சந்தன மாலை போடப் பட்டிருந்தது. இன்னொன்றில் நடேசனும், நிர்மலாவும், கைக்குழந்தை அருணும் இருந்தனர்.

""உட்காருங்க!'' என்றான் அருண்.
இருவரும் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தனர். நிர்மலாவின் கண்கள், நடேசனின் புகைப்படத்தில் நிலைத்து நின்றன. அவள் போன பின், இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல், மகனைத் தன்னந்தனியே வளர்த்து, ஆளாக்கி, நல்ல நிலைக்கு கொண்டு வந்து, கடமையை முடிந்த பிறகு, இறந்து போன அந்த நல்ல மனிதரை அவள் பார்த்தாள்; அவள் கண்கள் லேசாகக் கலங்கின.

தன் தோழியையே பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி. 20 வருட காலத்தில், முதல் முறையாக நிர்மலா கண்கலங்குகிறாள்.

நிர்மலாவின் பார்வை, நடேசன் படத்தில் நிலைத்ததும், அவள் கண் கலங்கியதும், அவள் பெயர் நிர்மலா என்று, கூட வந்த பெண்மணி சொன்னதும் எல்லாம் சேர்ந்த போது அருணிற்கு, அவள் யார் என்பது புரிய ஆரம்பித்தது.
அவன் முகத்தில் சொல்ல முடியாத உணர்ச்சிகள் தெரிந்தன. அவன், இன்னொரு புகைப்படத்தில் இருந்த தாயின் உருவத்தையும், இப்போது எதிரில் இருக்கும் உருவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தான். ஒற்றுமை சுத்தமாக இல்லை என்றாலும், அவள் தான் தாய் என்பது சொல்லாமலேயே உறுதியாகியது. அவன் அறிந்து கொண்டான் என்பது இருவருக்கும் தெரிந்தது. சிறிது நேரம் அங்கே ஒரு கனத்த மவுனம் நிலவியது.

ஆனால், நிர்மலா பயந்தது போல, அவன், அவளை அடித்துத் துரத்தவோ, கேவலமாக நடத்தவோ முனையவில்லை. நிர்மலாவிற்கு நாக்கு வாயிற்குள்ளே ஒட்டிக் கொண்டது போல் இருந்தது. எத்தனையோ சொல்ல நினைத்தது; ஆனால், ஒன்றுமே சொல்ல முடியவில்லை.

அருணாகவே, அந்த மவுனத்தைக் கலைத்தான்... ""நீங்க ஒரு நாள் கண்டிப்பாய் வருவீங்கன்னு, அப்பா சாகிற வரை சொல்லிக்கிட்டே இருந்தார்...''
நிர்மலா கண்கள் குளமாயின... ""நான்... நான்...'' அதற்கு மேல், அவளால் பேச முடியவில்லை.

அருண் சொன்னான்...""நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம்... அப்பா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லி இருக்கார். நீங்க அழகு; அவர் அழகில்லைன்னு அவருக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்ததாகவும், உங்களை எப்போதுமே, அவர் சந்தேகப்பட்டுக்கிட்டு இருந்ததாகவும், அடிக்கடி சித்திரவதை செய்ததாகவும், ஒரு நாள் தாங்க முடியாமல், நீங்க வீட்டை விட்டே ஓடிப் போனதாகவும், அவர் சொல்லி இருக்கிறார்.''
இது என்ன புதுக்கதை என்று திகைத்தாள் வசந்தி. அருண், அவளை அடித்துத் துரத்தாமல் இருந்த காரணம், நிர்மலாவிற்குப் புரிந்தது.

அருண் தொடர்ந்தான்...
""அவர் சாகிறப்ப கடைசியாய் என்கிட்ட கேட்டுக்கிட்டது இது தான்... ஒரு நாள் நீங்கள் திரும்பி வந்தால், உங்களை நான் பழையதைப் பற்றியெல்லாம் கேட்டு புண்படுத்தாமல், நல்ல மகனாய் உங்களை கடைசி வரைக்கும் பார்த்துக்கணும்ன்னு தான்.''
உடைந்து போனாள் நிர்மலா.

இத்தனை வருடங்கள் சேர்த்து வைத்திருந்த துக்கம், இந்த வார்த்தைகளால், ஒரே கணத்தில் பல மடங்காகப் பெருகி, வெடித்து விட்டது. எழுந்து, அந்த மனிதர் புகைப்படத்திற்கு அருகே போய், கை கூப்பிக் கொண்டே கீழே சரிந்தபடி குலுங்கி, குலுங்கி அழுதாள். இறக்கும் வரை அவளைப் பற்றி, ஒரு தவறு கூட சொல்லாமல், இறக்கும் போதும் அவளுக்காக மகனை வேண்டிக் கொண்ட இப்படிப்பட்ட மனிதரை, கணவராய் பெற அவள், என்ன தவம் செய்து விட்டாள்... அப்படிப்பட்ட மனிதரை விட்டு ஓடி, அவள் என்னவொரு முட்டாள் தனம் செய்து விட்டாள்.

அவளை சமாதானப்படுத்த அருண் முயன்ற போது, அவனிடம் வசந்தி மெல்ல முணு முணுத்தாள்...
""வேண்டாம்... அழட்டும்... விட்டு விடு, அவள் இந்த, 20 வருஷமாய், ஒரு தடவை கூட அழவோ, சிரிக்கவோ இல்லை. அழுது, குறைய வேண்டிய துக்கம் இது; அழுதே குறையட்டும்!''
வசந்தி சொன்னதை யோசித்துக் கொண்டே, அருண், அழும் தாயை வெறித்துப் பார்த்து கொண்டு அமர்த்திருந்தான். மானசீகமாக நடேசனுக்கு நன்றி சொன்னாள் வசந்தி. மலையாய் நினைத்து பயந்த விஷயத்தை, அவர் நல்ல மனதால், ஒன்றுமில்லாமல் செய்து விட்டார். அவள், நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

ஆனால், சிறிது அழுது ஓய்ந்த நிர்மலா, மகனைப் பார்த்து உடைந்த குரலில் சொன்னாள்...
""அவர் சொன்னதெல்லாம் பொய்...''
வசந்தியின் நிம்மதி காணாமல் போனது. எல்லாம் நல்லபடியாக வரும் வேளையில், இவள் ஏன் இப்படி சொல்கிறாள். கண் ஜாடையால் தோழி பேசுவதை நிறுத்த சொன்னாள்; ஆனால், நிர்மலா தன் தோழியின் கண் ஜாடையை லட்சியம் செய்யவில்லை...
""அவர் என்னை சந்தேகப்படலை; என்னை சித்திரவதை செய்யலை. ஏன், ஒரு தடவை கூட என்னிடம் முகம் சுளித்தது இல்லை. அந்த தங்கமான மனுஷனைப் பற்றி நீ தப்பாய் நினைச்சுடக் கூடாது; நான் நல்லவள் இல்லை... எல்லாத் தப்பும் என்மேல் தான்... '' என்று ஆரம்பித்தவள், நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள்.

ஒரு நீதிபதி முன், குற்றவாளி தன் முழுக் குற்றத்தையும் ஒத்துக் கொள்வது போல, ஒத்துக் கொண்டாள். எல்லாம் சொல்லி விட்டு, "நீ என்னை எப்படி தண்டித்தாலும், நான் ஏற்றுக் கொள்ளத் தயார்...' என்பது போல, அவனைக் கண்ணீர் மல்கப் பார்த்தபடி நின்றாள்.

பரிதாபமாக அருணைப் பார்த்தாள் வசந்தி. நிர்மலா சொன்ன எல்லாவற்றையும் கேட்டு விட்டு, சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல், அவளையே ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அருண். பின் மெல்ல சொன்னான்... ""அவர் சொன்னது பொய்ன்னு எனக்கும் தெரியும்.''
திகைப்புடன் அவனைப் பார்த்தாள் வசந்தி. அவன், தாயைப் பார்த்து தொடர்ந்து சொன்னான்... ""எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து, அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கு, அவர் என்ன செய்வார், என்ன செய்ய மாட்டார்ன்னு தெரியாதாம்மா. பெரியவனான பிறகு, சில உறவுக்காரங்க மூலமாகவும் எனக்கு உண்மை தெரிஞ்சு போச்சு...

""ஆனா, அப்பாகிட்ட நான் உண்மை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலை. எனக்கு அம்மாவா, அப்பாவா, எல்லாமுமா இருந்த அந்த மனுஷர், என்கிட்ட இது வரைக்கும் வேறு எதையும் கேட்டதில்லை. சாகறதுக்கு முன், அவர் கடைசியா கேட்டுக்கிட்டது, உங்க கிட்ட பழையது எதுவும் கேட்காமல், உங்களை ஏத்துக்கிட்டு கடைசி வரை நல்லபடியா பார்த்துக்கணும்கிறதை மட்டும் தான்...
""அதனால, அதை அப்படியே செய்ய நான் தயாராய் இருந்தேன்னாலும், மனசால் எனக்கு உங்களை மன்னிக்க முடிந்ததில்லை.''

நிர்மலா தலை குனிந்தபடி, புரிகிறது என்பது போல தலையாட்டினாள். அருண் எழுந்து, அவள் அருகில் வந்து தொடர்ந்து சொன்னான்...
""நான், நீங்க எவன் கூடவோ வாழ்க்கை நடத்தி, வேற குழந்தை குட்டிகளோட இருப்பீங்கன்னு மனசுல நினைச்சுக்கிட்டு இருந்தேன்மா. ஆனா அப்பாவுக்கு மட்டும் உள் மனசுல நீங்க அப்படி இருக்க மாட்டீங்கன்னு தோணியிருக்கு. அதனால, அவருக்கு உங்கள் மேல் கடைசி வரை அன்பு இருந்ததும்மா. நீங்க ஒரு நாள் வருவீங்கன்னும் எதிர்பார்த்தார். நான் அவர் சொல்லியிருந்த பொய்யைச் சொன்னவுடனே, அப்படியே நான் நினைச்சு கிட்டு இருக்கட்டும்ன்னு இருக்காமல், நீங்க மறுத்து, சத்தியத்தை இவ்வளவு தைரியமா சொன்னதையும், நீங்க அழுத விதத்தையும், இப்ப இருக்கிற கோலத்தையும் பார்க்கிறப்ப, உங்க மேல எனக்கு மதிப்பு தோணு தும்மா. அப்பா கடைசி வரை உங்கள் மேல் வச்சிருந்த அந்த அன்பு முட்டாள்தனம் இல்லைன்னு தோணுதும்மா.''

மகனைத் திகைப்புடன் பார்த்தாள் நிர்மலா. தாயைத் தோளோடு அணைத்து, கண்கலங்க சொன்னான் அருண்...
""இப்ப எனக்கு உங்க மேல கொஞ்சமும் கோபம் இல்லைம்மா. நீங்க அப்போ செஞ்சது தப்பா இருந்தாலும், நீங்க அதுக்கு அனுபவிச்ச தண்டனை ரொம்பவே அதிகம். உங்கக்கிட்ட நீங்க இவ்வளவு கடுமை காட்டியிருக்க வேண்டாம் அம்மா. அப்பா இருக்கறப்பவே நீங்க வந்திருக்கலாம்மா. அவர் நிஜமாகவே ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார்.''
மகன் தோளில் சாய்ந்து, அந்த தாய் மீண்டும் மனமுருக அழ ஆரம்பித்தாள். பார்த்துக் கொண்டிருந்த வசந்தி கண்களில் ஆனந்தக் கண்ணீர் கோர்த்தது.
***



சில பரிசுகளும் பெற்ற இந்தக் கதையை படித்து ரசித்த நண்பர்களுக்கு, இதை எழுதியவரையும் அறிமுகப் படுத்திவிடுகிறேன்.  
இதோ அவரைப் பற்றிய விவரங்கள்.

என்.கணேசன்
கோவை ஆர்.எஸ்.புரம் விஜயா வங்கியில் பணிபுரியும் இவர், பல பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நிலாச்சாரல் இணைய தளத்தில், மூன்று நாவல்கள் எழுதி உள்ளார். இவரது வலைப்பூ enganeshan.blogspot.comல் முன்னூறுக்கும் மேற்பட்ட ஆன்மிக, சமூக, சுய முன்னேற்றக் கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகள் பதிவாகி உள்ளன.
*** 

Wednesday 28 October 2015

மம்தா மோகன்தாஸ்...மிஸ் தன்னம்பிக்கை!!!

 

 

அந்த சிரிப்புதான் என் கேன்சரை முழுமையா குணப்படுத்தியது!

 - மம்தா மோகன்தாஸ்

"வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் நடுவுல இறகு மாதிரி ஒரு மெல்லிய கோடு இருக்குன்னு சொல்வாங்க. அந்தக் கோட்டுக்கு நான் வெச்சிருக்கிற பேர் - நம்பிக்கை. நான் உயிரோடு இருக்கிறதுக்கும் உங்ககிட்ட பேசுறதுக்கும் அந்த நம்பிக்கைதான் காரணம்!" - ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளியையும் அழகாக நிரப்புகிறது மம்தா மோகன்தாஸின் மென் புன்னகை. இரண்டு வருடங்களாக மார்பகப் புற்று நோயோடு போராடி மீண்டு வந்து இருக்கும் மிஸ் தன்னம்பிக்கை.
எப்படி இருக்கீங்க?
இப்போ நல்லா இருக்கேன். மலையாளம், தமிழ், தெலுங்குனு மூணு இண்டஸ்ட்ரியில் படங்கள் நடிச்சுட்டு இருக்கேன். கடந்த ஆறு மாசமா கேன்சர் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தேன். கேன்சர் முழுக்கவே குணமாகிவிட்டதால், ரொம்பவே சுதந்திரமா உணர்றேன். தமிழ்ல இப்போ 'சிவப்பதிகாரம்', 'குரு என் ஆளு' படங்களுக்குப் பிறகு, இப்போ 'தடையற தாக்க' படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்!
கேன்சரை எப்படி இவ்வளவு ஈஸியா எடுத்துக்கிட்டீங்க?
ஹார்ட் அட்டாக், பிரஷர், ஷுகர் மாதிரி கேன்சரும் ஒரு நோய். ஆனா, அது ஏதோ பேய், பூதம் கணக்கா பயமும் அவநம்பிக்கையும் பரவி இருக்கு. 'நாம ஒரு நடிகை. நிறைய சம்பாதிக்கிறோம். நல்லா ஹைஜீனிக்கா சாப்பிடுறோம். நமக்கு எந்த நோயும் வராது'னு நினைச்சுட்டு இருந்தேன். திடீர்னு தொடர்ச்சியான இருமல் வந்துட்டே இருந்தது. உடல் எடையும் குறைஞ்சது. தற்செயலா ஸ்கேன் பண்ணிப் பார்த்தப்போ, மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துச்சு. 'கேன்சர் வந்திருச்சே'ங்கிறதைவிட, எனக்கு எப்படி வந்துச்சுங்கிற அதிர்ச்சிதான் அதிகம். 'இயற்கைக்கு முன்னாடி எல்லாருமே ஒண்ணுதான்'னு எனக்குக் கத்துக் கொடுத்தது இந்த கேன்சர். அந்த வகையில் கேன்சருக்கு நன்றி!
ஈஸியா எடுத்துக்கிட்டீங்க. ஆனா, சிகிச்சையே ரொம்ப வலி கொடுத்திருக்குமே?
உடம்பு வலியை அனுபவிச்சிருப்பீங்க! தசை வலி தெரியுமா? உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் ஊசி வெச்சுக் குத்துற மாதிரி வலி தெறிக்கும். சும்மா வீட்டுக்குள்ள அங்கே இங்கே நடக்கவே நிறைய சாப்பிடணும். வலியை மரத்துப்போகவைக்க சாப்பாட்டுக்குச் சமமா 'பெயின் கில்லர்' மாத்திரைகள் எடுத்துக்கணும். பாதி நேரம் படுத்தேதான் இருக்கணும். ஹீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கிட்டதால முடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சிருச்சு. 'பாய்கட்' பண்ணிக்கிட்டேன். ஒரு நடிகைக்கு உடல் அழகுதான் மூலதனம். அதுலயே சிக்கல்னா, சினிமாவில் எப்படி சர்வைவ் பண்ண முடியும்? என் சினிமா கேரியர் முடிஞ்சிருச்சுன்னுதான் நினைச்சேன். ஆனா, அப்புறம்தான் என் இன்னிங்ஸ் ஆரம்பிச்சுது!
'கேடி'னு ஒரு தெலுங்குப் படத்தில் நடிச்சேன். ஒரு வாரம் ஷூட்டிங்ல இருந்தா, அடுத்த 10 நாள் பெட் ரெஸ்ட்ல இருக்கணும். ஒரு மாசத்தில் நடிக்க வேண்டிய சீன்களை, ஆறு மாசம் டைம் எடுத்து நடிச்சுக் கொடுத்தேன். இவ்வளவு சிரமங்களையும் எனக்காகப் பொறுத்துக்கிட்டாங்க 'கேடி' யூனிட். அதே நேரம் மலையாளத்தில் 'கதை தொடரு', 'அன்வர்'னு நான் நடிச்ச ரெண்டு படமும் எனக்கு ஏகப்பட்ட 'சிறந்த நடிகை' விருதுகளைக் குவிச்சது! நம்பிக்கையா பிடிச்சுக்க ஒரு கை, ஆதரவா சாஞ்சுக்க ஒரு தோள் கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருந்தப்ப, எல்லாரும் கைதட்டி ஒரு விருது கொடுத்தா, எப்படி இருக்கும்? ரெஃப்ரெஷ் பட்டன் அமுக்கி மீண்டும் பிறவி எடுத்து வந்த மாதிரி இருந்தது!
எனக்கு இப்படி ஒரு பிரச்சினைன்னு தெரிஞ்சதுல இருந்து அம்மா, அப்பாதான் ரொம்பவே துவண்டுட்டாங்க. ஆனா, நான் நம்பிக்கை இழக்காம சிரிச்சுட்டே இருந்ததுதான் அவங்களுக்கு ஆறுதலா இருந்திருக்கு. அந்த சிரிப்புதான் என் கேன்சரையும் முழுமையாக் குணப்படுத்தியது!
ரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல நடிக்குறீங்க... எப்படி இருக்கு அனுபவம்?
அருண் விஜய்கூட 'தடையற தாக்க' படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். எனக்கு நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர். அருண் விஜய் இதுக்கு முந்தி பெரிய ஹிட் எதுவும் கொடுத்தது இல்லைனு சொன்னாங்க. ரெண்டு வருஷம் முன்னாடி 'மம்தாவுக்கு நடிக்கவே தெரியலை. அந்தம்மா அவ்வளவுதான்'னு சொன்னாங்க. ஆனா, 'பாசஞ்சர்'னு ஒரு படம் என் கேரியரையே மாத்தி அமைச்சதே. இதுவரை நான் 25 ஹீரோக்களோட ஜோடியா நடிச்சிருக்கேன். அதில் எல்லா விஷயங்களையும் ஃபெர்பெக்டா பண்றது அருண் விஜய்தான்!
எப்போ திருமணம்?
விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. என்னுடைய சிறுவயது தோழனையே என் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இவர் பக்ரைனில் வசிக்கிறார். திருமண நிச்சயதார்த்தம் நவம்பரில் நடக்கிறது.

Friday 23 October 2015

அனல் குளியல் ...

அது ஒரு பலகை வீடு.
அதுவும் பழைய பலகை வீடு.
ஆயினும் அன்றைய நாட்களின் தனித்துவம் அப்படியே இருக்க, இரண்டாவது தலைமுறை எடுத்த முடிவுதான் இந்த பழைய கட்டிடத்தை அப்படியே வைத்து பாதுகாப்போம் என்பது.
அங்கு, வருவதும் போவதுமாக மூவின மக்களும் என ஒரு தனிக்கூட்டமே இருக்கிறது. மூளிகை மணத்துடன் அத்தனை பேரையும் ஈர்க்கும் இடமாக அமைவது, "ஸ்டீம் பாத்" எனும் அனல் குளியல் இடம்.
சுமார் பத்து ஆண்டுகளாக வருகை தரும் திரு&திருமதி.பாலகிருஷ்ணனுடன் நடந்த ஒரு நேர்காணலில், பலவற்றை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
- சுமார் 70 டிகிரி செல்சியஸில் வெப்ப சூழ்நிலையில், வடியும் வியர்வையில் அமர்ந்து, நீராவியின் சுகத்தை அனுபவிப்போருக்கான இடமாம் இது.
- உடலில் சேரும் நச்சுத் தன்மைகளையும், கொழுப்பினையும் மெள்ள மெள்ள கரைக்கும் சில மூளிகைகளை கொதிக்கும் நீரில் கலந்து அதன் அனலை ஒரு அறைக்குள் அனுப்புகின்றனர்.
- வந்தமர்ந்த சில நிமிடங்களில் உடலிலிருந்து வியர்வை வெளியேர, அதனுடன் உடற் கழிவுகளும் அகற்றப் படுவதை உணருவதாக சொல்கின்றனர்.
- தங்களின் விருப்பத்துக்கேற்ப, வசதிக்கேற்ப பலரும் இங்கு வந்து இந்த அனல் குளியலில் கலந்து கொள்கின்றனர்.
- சில நாட்களில் சிறப்பு பூக்குளியலும் உண்டாம்.
- இவ்வித பூக்குளியலில் சேர்க்கப்படும் மூளிகை மணம், வீட்டுக்குச் சென்று குளித்தாலும் தொடர்ந்து சில நாட்களுக்கு உடலில் இருக்குமாம்.
நாங்கள் அங்கிருக்கும் போது, வாத நோயில் பாதிக்கப்பட்டிருந்தவரும், இருதய நோயினால் அவதிப்பட்டவரும் வந்திருந்ததை எனக்கு சுட்டிக்காட்டினார் திரு பாலா. அவர்கள் எழுபது / என்பது வயதைக் கடந்தவர்களாக எனக்கு பட்டனர்.
திரு&திருமதி.பாலகிருஷ்ணன் இருவரும் இந்த அனல் குளியலில் கலந்து கொள்ள பழகிய பின் தங்களின் உடல் ஆரோக்கியம் பல மடங்கு நன்றாக இருப்பாதாக தாங்கள் உணர்வதாக சொல்லியது, எனக்கும் என் மனைவிக்கும் ஆர்வத்தை அதிகரித்தது.
என் மனைவி இங்கு வருவது இது முதல் தடவை. இருந்தும் குளியலுக்குப் பின், அடுத்து எப்போது நாம் இங்கு வரவிருக்கிறோம் என என்னை வினவியது அவர் எவ்வளவு ரசித்திருக்கிறார் இந்த மூளிகை நீராவியை என எனக்கு விளங்கியது.
25 காசு காணிக்கையாகவும், 15 ரிங்கிட் கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டாலும், இங்கு வரும் கூட்டம் இதனால் அடையும் பலன்களை உணர்ந்து அடிக்கடி வருகின்றனர். யாரும் விலையை பற்றி கவலைப் பட்டதாக காணோம்.



Thursday 15 October 2015

சிரிப்போம்... சிறப்போம் !

''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றனர்'' முதியோர்.
நடை முறையில் மீண்டும் மீண்டும் சந்தேகமற நிரூபிக்கப் பட்ட கருத்து இது.

நோய் வந்திடில், பணம் பெருமளவுக்கு குறையும், அதன் சிகிச்சைக்கு என்றாலும், மன நிம்மதி நம்மை விட்டகலும் என்பதே சோகத்தின் உச்சம்.

இவற்றை கவனத்தில் கொண்டே, நோயில்லா வாழ்வுக்கான வழிகளை நமது முன்னோர்கள் ஆராய்ந்து வந்தனர். உடல் ரீதியிலான நோய் எதிர்ப்பு காரணங்களோடு, உள ரீதியில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் வழிகளை கண்டறிந்தனர். அவற்றில் ஒன்றுதான், ''வாய்விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும்'' எனும் நமது ஹாஸ்ய உணர்வுகளை தட்டி எழுப்பும் சிந்தனையாகும்.

மேலை நாட்டினர் போல் அதிதீவிர எண்ணங்களுடன் ''சென்ஸ் ஒப் ஹியூமர்''  அதாவது ''நகைச்சுவை உணர்வை'' நாம் கொண்டாடுவதில்லை. அப்படி சிரிப்பதென்பதை பைத்தியக் காரத்தனம் எனச் சொல்லும் சுற்றுப்புறத்தில் நாம் வாழ்கிறோம். சிரிக்கத் தெரியாதவர்களுக்கு சிரிப்பை கற்றுத் தர பல அமைப்புகள் அங்கு உண்டு. ஆனாலும், மருத்துவ உலகம் சொல்லித் தரும் அறிவுரையை  நாம் கவனித்தல் அவசியம்.

சிரிப்பதனால் நோய் குறையுமெனில்,
சிரிப்பினில் ஏன் சுணக்கம்?
சிரிப்பதனால் உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்குமெனில்,
சிரிப்புக்கு ஏன் தடை?
சிரிப்பு மற்றவரை நம்முடன் இணைத்திடுமாயின்,
சிரிப்பை விட சிறந்தது எது?

ஆகவே, சிரிப்போம்... சிறப்போம் !

Friday 9 October 2015

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்…

10 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்...
படித்த பின் பகிர்ந்து கொள்ளுங்கள்...
1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு..!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
உணவே மருந்து
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
மருந்தே வேண்டாம்
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.
லப்… டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்….
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி…!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
கிட்னி
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு..!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.வைத்தியசாலை
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
நோயாளிகள் தங்கும் இடம்
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது...

Tuesday 6 October 2015

படித்ததில் பிடித்தது : வெங்காயம், உருளைக் கிழங்கு, தக்காளி

ஒரு ஊர்ல...
ஒரு வெங்காயம், ஒரு தக்காளி,
ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.
ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.

அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு.
அதை கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க.
சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்கு கிளம்பினாங்க.

போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில ஆக்ஸிடண்ட் ஆகி தக்காளி நசுங்கி செத்துப் போச்சு.
அதை பார்த்து வெக்ஸ் ஆன வெங்காயம், கதறி கதறி அழுதது.

தனியாகி போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி, "உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம்.
இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா...?" ன்னு கேட்டு,
"ஓ..." ன்னு அழுதுச்சு.

அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், "சரி..., இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க" ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதான படுத்தினாராம்.

(ஸோ..., இனிமே யாராச்சும், "வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது" ன்னு கேட்டா, 'திருதிரு'ன்னு முழிக்காம, சோகமான இந்த திக் ஃப்ரெண்ட்ஸ் கதைய தெரியப்படுத்துங்க)

---------000------------------000---------------000----------------

மேலும் சிறிது காலங்களுக்கு பிறகு மக்கள் சுடு தண்ணீரில் வெங்காயத்தை போட்டு அழுகாமல் தப்பித்து வந்தனர். இதை பார்த்து வெங்காயத்துக்கு கோபம் வந்தது. கடவுளிடம் சென்று முறையிட்டது. கடவுள் கோபம் கொண்டு சாபம் இட்டார். இனிமேல் வெங்காயம் வாங்கும் போதே மக்கள் கண்ணீர் விடுவார்கள் . இது கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவிலும் இதர நாடுகளிலும் அமல் படுத்தப்பட்டு உள்ளது


படித்ததில் பிடித்தது: பாம்பும் குருவும்...

★ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு வழியிலே யாரையும் செல்லவிடாது..அங்கு சென்ற பலரை தீண்டி கொன்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குரு வந்தார்.. அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.

★அவரை தீண்ட அந்த நாகம் வந்தது.. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய், கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய், அதில் என்ன பயன்" என கூறி அதற்கு அமைதியை கற்றுக் கொடுத்தார்..அன்றில் இருந்து அந்த நாகம் அமைதி காக்க தொடங்கியது.!

★யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.

★ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுமத்தாத தன்மை அடைந்ததால் ,நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்"என்றது.. அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு என கேட்டார். உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.

★உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே, சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல, நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய். நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள் என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.

★ஆம். நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது.. ஆனால் அதில் விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீறவேண்டும் இல்லாவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள் .!

ஜோக்குகள் பல விதம்...



வன்மையானது அழியும் . மென்மையானது வாழும்...

ஒரு குருவின் மரண தருவாயில், சிஷ்யர்கள் சிலர் அவரிடம் ''ஐயா நீங்க போகும் முன் எங்களுக்கு ஏதாவது சொல்லிவிட்டு போங்க'' என இறுதி நிமிட அறிவுரையை கேட்டார்களாம். அதற்கு குரு, சைகையில், தன் வாயை காட்டிவிட்டு இறந்துபோனாராம்
.
விடை தெரியா சிஷ்யர்களோ, சந்திக்கும் ஒவ்வொரு குருவிடமிடமும் இது பற்றி வினவ, பலருக்கும் அது பற்றி விளக்க தெரியவில்லையாம்.
சில காலத்துக்குப் பிறகு, மரத்தடியே தியானத்தில் இருந்த ஒரு முனிவரை கண்டவுடன் அவர் சுய நிலை வரும் வரை காத்திருந்து இது பற்றி கேட்க, 
''அந்த வயதில் இறக்கும் தருவாயில் இருந்த குருவின் வாய்க்குள் என்ன இருந்தது ?'
என முனிவர் கேட்டாராம்.
' நாக்கும் , உள் நாக்கும் இருந்தது ' என்றார்களாம் சிஷ்யர்கள்.
' பல் இருந்ததா ?' கேட்டார் முனிவர்.
' இல்லை ' என பதில் வந்தது.
''அதுதான் வாழ்க்கை . 'வன்மையானது அழியும் . மென்மையானது வாழும் ' என்பதனை உங்களுக்கு புரியவைக்கவே குரு அப்படி தன வாயை காட்டி இருக்கிறார்"
என முனிவர் விளக்கிட, அனைவரும் தங்களின் இது நாள் வரையிலான சந்தேகம் தீர்ந்தபடியால், தீர்த்து வைத்த மரத்தடி முனிவருக்கே சிஷ்யர்கள் ஆனார்களாம்.

வைல்ட் வைல்ட் வெஸ்ட் , தொலைக்காட்சித் தொடர்...

அவ்வப்போது கிடைக்கும் ஒய்வு நேரங்களில் வாசிப்பது மட்டும் எனது பொழுது போக்கல்ல. 1960களில் 1970களில் அன்றைய தொலைக்காட்சியில் இடம்பெற்ற புகழ் பெற்ற ஆங்கில தொடர்களை பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடித்ததாகும்.
007 ஜேம்ஸ் பாண்டுக்கு முன்னர், இந்த ஜேம்ஸ் வெஸ்ட் தான் அமெரிக்காவின் சிறந்த துப்பறியும் நிபுணராக இருந்தார் என்பது இன்றைய இளையோருக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.
1965 முதல் 1969 வரை தொலைக்காட்சியில் தொடர்ந்த இந்த நிகழ்ச்சி, வன்முறைக் காட்சிகளை தடை செய்யக்கோரும் அமெரிக்க அரசாங்க அரசியல் சட்ட திருத்தங்களால் 1970ல் தடை செய்யப்பட்டது.
ஆனாலும், சுவாரஸ்யமான கதைப் பின்னணியுடன், அக் ஷன் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்த இந்த துப்பறியும் தொடர், இப்போது யூ டியூப்பில் எளிதாக, இனாமாக கிடைக்கிறது.


இந்தியனின் மற்றுமொரு கண்டுபிடிப்பு...

எதை எதையோ, எத்தனை எத்தனையோ கண்டு பிடிப்புகளை நாம் பார்த்திருப்போம். இப்படி ஒரு கண்டுபிடிப்பும் ஒரு இந்தியனின் கண்டுபிடிப்புதான் என ஒரு குறிப்பு சொல்கிறது.
பலே ...பலே... நமக்கு தலை முழுவதும் மூளை அய்யா....