Sunday 25 November 2012

எனக்கென்ன என நகர்வது சரியா?

'எதையும் காணதது போல போய் வா" என வெளியில் போகும் நமது பிள்ளைகளுக்கு சொல்லி அனுப்புவோம்.

வீட்டினுள் இருக்கும் வரை அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆனால் வெளியில் நடப்பதை நாம் உறுதியாக கூற முடியாது. நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். நாம் தான் புத்திசாளித்தனமாக தெரிந்து நடந்து கொள்ளவேண்டும். முன்பெல்லாம் வெளியில் போகும்போது 'சந்தர்ப்ப சூழ் நிலையை பார்த்து நடந்து கொள்" என்பார்கள். இப்போது அப்படிச் சொல்வது குறைந்துவிட்டது. காரணம் அப்படிச் சொல்வதில் நமக்கு ஒரு  நஷ்டமும் உண்டு. உதவும் நேரத்தில் உதவி செய்தாக  வேண்டியதிருக்கும்.

அன்றைய காலத்தில் உதவிக்குப் போவோருக்கு கொஞ்சம் மரியாதை கிட்டியது. இப்போது என்ன கிடைக்கிறது என்பதை நான் சொல்லியா தெரிந்து கொள்ளவேண்டும்...?
பொதுவாக கெட்டதே நடப்பதால் இப்பொதெல்லாம் வீட்டில் உள்ளோர் கூட சற்று மாறுதலுடன் " எதையும் காணாதது போல " என சிறப்பாக சொல்லி அனுப்புகிறோம். இதனால் தெரியப்படுத்துவது என்னவென்றால், "எது நடந்தாலும் நீ ஒன்றும் நடவாதது போல உன் வேலையை மட்டும் பார்த்துவிட்டு வந்து சேர்" என்பதே.

மற்றவர்களுக்கு உதவப் போய் வம்பில் மாட்டிக்கொள்வோர் எண்ணிக்கை கொஞ்சமா என்ன?

ஆனால் இதையும் இரு பிரிவுகளாக சிந்திக்க வேண்டி உள்ளது. எல்லாவற்றுக்கும் இந்த "எனக்கென்ன " எனும் தோரணையில் நழுவுவது பொருந்துமா? ஒரு வேளை நமக்கே எதாவது நேர்ந்தால்...மற்றவர்கள் ஒன்றும் நடவாதது போல அப்பால்  நகர்வதை  நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஒரு சராசரி மனிதன் "டென்ஷன்" ஆகக்கூடிய பல சந்தர்ப்பங்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இனம், மதம், மொழி எனும் பேதமின்றி அனைவருக்கும் இதே பிரசினைதான. எது சரியான முடிவு என யோசிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிடுகின்றன இப்போது.... 

No comments:

Post a Comment