Wednesday 5 December 2012

மன உளைச்சலும், மன இறுக்கமும். . .

நமது உடல் பல அரிய நுட்பமானச் செயல்களைச் செய்யும் ஆற்றலைக் கொண்ட ஒரு தொழிற்சாலை. அதை நல்லவிதம் பேனிக்காப்பது நமது கடமை.

துயரங்கள்,தொல்லைகள், தாங்கொணா வேதனைகள், விமர்சனங்கள் என பல நெஞ்சைத் துளைக்கும் நிகழ்வுகளில் தினமும் நாம் சிக்கித் தவிக்கிறோம். இவற்றை கண்ணும் கருத்துமாக எண்ணி வாழ்க்கையை தொடர்பவர்கள் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

ஆர்வமும் உற்சாகமுமின்றி ஏனோ தானோ என்று வாழ்பவர்களே மன உளைச்சளுக்கும், மன இறுக்கத்துக்கும் உள்ளாகிறார்கள். வாழ்க்கையை குறுகிய போக்கில் பார்ப்பவர்கள் இவர்கள்.

மன அழுத்தம் என்பது நோய் எதிர்ப்பு சக்தியை பெருமளவுக்கு குறைக்கக்கூடியது. இதனால் வெளிப்படையான உடல் நலக் கோளாறுகளும், மனதளவில் கண்ணுக்குத் தெரியாத பாதிப்புகளும் தோன்றுகின்றன.

இதனால் பாதிக்கப் படுபவர்கள், தன் வசதிக்கும் மீறி எல்லா பொறுப்புக்களையும் இழுத்துப் போட்டுக்கொள்ளுவார்கள். ஆனால், சரிவரச்செய்து முடிக்காத அதன் சுமையால் சோர்ந்து விடுகிறார்கள். அதுவே 'ஸ்ட்ரெஸ்ஸின்' துவக்கம். பின்னர் ஒருவித மனப்புழுக்கம் தொற்றிக் கொள்கிறது. இதன் பாதிப்பே, தான் எதையோ இழந்து விட்டது போலவும், தன்னால் இனி எதையும் செய்ய இயலாது எனவும் எண்ணத் தோன்றுகிறது. இந்த நிலை முற்றும் போது, தனக்கு மிகப் பெரிய எதிரி தன்னைச் சுற்றி இருப்பவர்களே எனும் 'ஸ்டிரெஸ்ஸில்' வீழ்கிறார்கள்.
உலகமே இவர்களை எதிர்ப்பது போல தோன்றுகிறது.  விபரீத முடிவுகளை எடுக்கவும் துணிகிறார்கள்.


'இன்ஃபீரியோரிட்டி காம்ப்ளெக்ஸ்' எனும் தாழ்வு மனப்பான்மை கூட இதுபோன்ற சிக்கலான சந்தர்ப்பங்களை தோற்றுவிக்கும்.தன்னைவிட மற்ற அனைவரும் சிறந்தவர்கள் என எண்ண வைக்கும் இந்த தாழ்வு மனப்பான்மை.  நிஜத்தில் நம்மைவிட, நாம் செய்வதைக்கூட செய்ய இயலாதவர்கள் பல ஆயிரம் பேர் இந்த உலகத்தில் உண்டு. இது  மன உளைச்சலுக்கு ஆளானோரின் சிந்தனைக்கு எட்டாது.

"வாழ்க்கை ஒரு முறை.  நாம் வாழப்போவதும் ஒரு முறை தான். நாம் உயிரோடிருக்கும் வரை, 'இதுதான் அல்லது இதுவே கடைசியென' எதுவும் இல்லை".  இது மனதில் பதிந்தால்தான்  ஆபத்துக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளில் இருந்து  இவர்கள் மீள முடியும்.

 எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் மன மாற்றம் வந்திடுமேயானால், 'ஸ்ட்ரெஸ்', 'டிப்ரெஷன்' எல்லாம் இடந்தெரியாமல் ஓடிவிடும்.

எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காது,  வாழ்க்கையை மனமகிழ்வோடு வாழப் பழகுவோம், மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற மனதை பாதிக்கும் சிந்தனைகளில் இருந்து தெளிவாக இருப்போம்.

No comments:

Post a Comment