Sunday 30 December 2012

அன்பு மகளே...

படித்தால் புத்தி வரும் என்கிறோம். ஓரு சிலருக்கு என்னதான் படித்தாலும் புத்தி வருவதே இல்லை.  அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

எனக்குத் தெரிந்த எழுபது வயது பெரியவர் ஒருவர்.  ஓரு தனியார் நிறுவனத்தில்  பாதுகாவளராக பணியாற்றி வருகிறார்.  ஆவரின் மனைவியும் அவருமாக  இருவரும் தனியே வாழ்ந்து வருகின்றனர். 

உறவுக்கார்கள் சிலர் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுப்போவது உண்டு.
அவர்களுக்கு ஒரு மகள். அவரின் மேல் படிப்புக்காக எல்லா செலவுகளையும் செய்தனர். தங்களின் புராவிடன் பணத்தையும் தங்களின் ஒரே  பெண் குழந்தைக்காக செலவிட்டு படிக்க வைத்தனர்.

பெண் படித்து பட்டதாரியானார்.  சற்று தொலைவில் வேலையும் கிடைத்தது. வீட்டுக்கு வருவது மாதத்திற்கு ஒன்றாக மாறியது. சில மாதங்களுக்குப் பின் சுத்தமாக வருவதே இல்லை. பல்கலைகழத்தின் போதிருந்தே தனித்து வாழ்ந்து பழகிவிட்ட தங்களின் மகள் இப்போதும் அப்படியே தனியாக வாழ்கிறார்  என அவர்கள் நம்பிக் கொண்டிருக்கையில் ,  திருமணம் செய்து கொண்டு  குடித்தனம் நடத்தி வருவதாக உறவினர் மூலம் தெரிய வர வேதனையில் வாடி வருகின்றனர் இந்த வயதான இருவரும். 

“அவளுக்கு என்ன நடந்துச்சின்னு தெரியலையே…. எங்கள பார்க்கவும் வருவதில்ல….” என தங்களின் செல்ல மகளின் மனமாற்றத்திற்கு காரணம் புரியாமல் கண்ணீர் சிந்துகின்றனர். 

 நேரே சென்று மகளைப் பார்க்கும் முயற்சிகளும் தோல்வியடைந்ததனால், இப்போது தங்களைப் பார்க்க வரும் உறவுக்கார்களிடமும் நண்பர்களிடமும்,
“ எங்க மகள பார்த்தா கொஞ்சம் இந்தப் பக்கம் வந்துட்டு போகச் சொல்லுங்க…” என கெஞ்சுகின்றனர் இருவரும்.

கையிலிருந்த பணத்தையெல்லாம் பிள்ளையின் படிப்புக்கு செலவழித்துவிட்டு, தங்களின் வயிற்றைக் கழுவ இந்த தள்ளாத வயதிலும் வேலைக்குப் போகும் அந்த பெரியவரின் நிலையைப் பார்த்தால் மனம் வருந்துகிறது.

எது எப்படி இருந்தாலும், பெற்றோரை பார்த்து தான் அப்படி நடந்துகொள்வதற்கான காரணத்தை சொல்லியிருந்தால், இரு தரப்பினருக்கும் நல்லதாக போயிருக்கும்.

பிள்ளைகளின்றி தனியே விடப்படும் பெரியோரின் நிலை நமக்கு விளங்குகிறது. ஆனால்,  ஒரு மகள் உயிரோடிருந்தும், வயதான காலத்தில்  தங்களை எந்த ஆதரவுமின்றி தனியே தவிக்க விட்டுப் போன  அந்த மகளை என்ன சொல்வது…?

இப்படியும் நடக்குமா…?

No comments:

Post a Comment