Monday 17 December 2012

மாக்கோலம் போடுவோம் வாருங்கள். . .

மார்கழி மாத பூஜைகள் தொடங்கி விட்ட நிலையில் அதிகாலையில் வீட்டு முன் அழகிய கோலங்கள் இம்மாதம் சிறப்பாக பல இல்லங்களை அலங்கரிக்கும்.

மற்ற நாட்களில் போடுகிறோமோ இல்லையோ நம் மலேசியர்களில் பலர் இந்த மார்கழி மாதத்தில்  கோலமிட்டு வீட்டை அழகு   செய்வது தவறாது.
கோலம் போடுவதால் மகாலட்சுமி நம் வீட்டுக்கு விஜயம் செய்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

வீட்டின் முன் போடும் மாக்கோலத்தில் புதைந்திருக்கும் அர்த்தம் என்ன என்று பலருக்கும் தெரியும். "எறும்புகள் வந்து கோலத்தில் இருக்கும் மாவினை  சாப்பிடுவது நாம் இடும் அன்னதானத்திற்கு சமமாம். இதனால் நம்முடைய ஏழு தலைமுறைக்கும் வற்றாது தானியங்கள் நிலைக்குமாம். காலங்காலமாக நம்பப் பட்டுவரும் ஒன்று இது.

எங்கள் வீட்டு மாக்கோலத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்ட எங்கள் ஊர் நாட்டாமை.

நம் நாட்டில் சம்பிரதாயப்படி மாக்கோலம் போடுவது குறைந்துகொண்டு வருகிறது. இப்போது அழகுக்காக மட்டுமே வண்ணக்கலவைகளில் மாவிலோ, அரிசியிலோ இல்லாமல் வேறு சிறு துகல்கள் கொண்டு பல வண்ணங்களில்  கோலமிடுகிறார்கள். வழக்கமான கோலங்களாக இல்லாமல் கிளிகளாகவும் மயில்களாகவும் கோலங்கள் மாறிவருகின்றன.

இந்த மார்கழி மாதத்தில் கோலமிடுவதும் கோயில்களுக்குப் போவதும் புனிதமாக தமிழர்கள் கருதுகிறார்கள். ஆனல் ஒன்று, முன்பு போல் இளம் பெண்கள் அதிகாலையில் குளித்து முடித்து பூக்களோடு கோயிலுக்குப் போவது அரிதாகிவிட்டது.

முன்பெல்லாம் கிராமங்களிலும், எஸ்டேட்டுகளிலும் பல இந்தியக் குடும்பங்கள் ஒரே இடத்தில் வசித்து வந்ததால் இது போன்று வீட்டுமுன் கோலம் போடும் சம்பிரதாயத்தை அதிகமாக காண முடிந்தது.  இப்போது 'தாமான்களில்' அங்கொருவரும் இங்கொருவரும் வசிப்பதால் குறிப்பிடும் அளவுக்கு கோலத்தின் பங்கினைக்  காணமுடியவில்லை... ஆயினும், முக்கிய நாட்களில் நம் வீட்டுப் பெண்மணிகள் இன்றும் கோலமிட்டு வீட்டின் தெய்வீகத்தன்மையை நிலை நிறுத்திக்கொண்டுதான் வருகிறார்கள்.

புள்ளிகள் வைத்தோ கோடுகள் இட்டோ இரண்டு வகையில் கோலம் போடலாம். கோலம் போடும்போது இவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும் :

- கோலத்தின் நடுவே செம்பருத்திப் பூ அல்லது பூசணிப்பூ வத்தால் செல்வம் கூடுமாம்.

- இடது கையால் கோலம் போடக்கூடாது.

- பெண்கள் குனிந்து நின்று கோலம் போடலாம், ஆனால் அமர்ந்தபடி கோலம் போடக்கூடாது. இப்படிப் போட்டால் வீட்டில் உள்ள செல்வம் குறையுமாம்.

- வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடலாகாது.

குலம் செழிக்க, குடும்பம் தழைக்க, தலைமுறை வளம்பெற, மாக்கோலம் போடுவோம் வாருங்கள்.

No comments:

Post a Comment