Sunday 2 December 2012

கோபம் . . .

கோபக்கார சிறுவன் ஒருவன் ஒரு குருவிடம் சிஷ்யனாக வந்து சேர்ந்தான்.

தனக்கு அளவுக்கதிகமாக கோபம் வருவதாகவும் அதை கட்டுப்படுத்த தன்னால் இயலவில்லை என்றும் அதன் பொருட்டே சிஷ்யனாக வர முடிவு செய்ததாகவும் குருவிடம் கூறினான்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் குரு.
" உனக்கு கோபம் வரும் போதெல்லாம் இதோ இந்தச் சுவரில் ஒவ்வொரு ஆணியாக அடி" என்றார் அவனிடம்.

சிஷ்யனும் அப்படியே தொடர்ந்தான். ஒவ்வொரு நாளும் அன்று எத்தனை ஆணிகள் அடித்தான் என குருவிடம் சொல்வது  வழக்கம். சில நாட்கள் ஓடின.

இருபது, பத்து, ஐந்து, ஒன்று என அடிக்கப்படும் ஆணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

ஒரு நாள், " இன்று ஒரு ஆணியும் நான் அடிக்கவில்லை , குருவே..." என்றான்.

குரு அவனை ஆரத்தழுவினார். " சரி, இனி நீ கோபப்படாத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணியாக பிடுங்கி எடு" என்றார்.

சிஷ்யனும் சரியென தலை ஆட்டிவிட்டு அதுபோலவே ஒவ்வொரு ஆணியாக பிடுங்கலானான்.

சில நாட்களில் எல்லா ஆணிகளும் பிடுங்கப் பட்டு விட்டன.

மகிழ்ச்சியாக குருவிடம் போய் நிலையைச் சொல்லி குருவை அழைத்து வந்து சுவரைக் காண்பித்தான்.
"ஆணிகள் அடிக்கப்பட்டதும் பிடுங்கப்பட்டதும் சரி, இவை என்ன?" என்று அந்தச் சுவரில் இருந்த ஓட்டைகளைக் சுட்டிக் காட்டினார் குரு.

" இவை நான் கோபப்படும் போது அடித்த ஆணிகளின் தடங்கள் ..." என்றான் அவன்.

சிஷ்யனை அருகே அழைத்தார் குரு.... " உன் கோபத்தின் போது சுவரில் ஏற்பட்டவை தடங்கள்..உனது உற்றார், உறவினர், நண்பர்கள் மனதில் ஏற்பட்டவை ரணங்கள். அவையும் இது போல அவர்களின் மனங்களில் அப்படியே இருக்கும்..." என்று அவர் சொல்லும் போது சிஷ்யன் அவரின் பாதங்களைத் தொட்டு வணங்கிக்கொண்டிருந்தான்.

" காரண காரியமின்றி அளவுக்கதிகமான கோபம் செய்யும் வடு என்றுமே ஆறாது...."

No comments:

Post a Comment