Monday 21 May 2012

ஆங்கிலம். . .

இந்தியர்களும் சீனர்களும் மேல் நாட்டு 'அவுட் சார்ஸிங்' வேலைகளுக்கு போட்டியிட்டபோது அதிக சந்தர்ப்பம் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டதாம்.

ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின்  கீழ்  இருந்த காரணத்தாலேயோ என்னவோ இந்தியர்கள் பொதுவாகவே ஓரளவு ஆங்கிலம் பேசுகின்றனர்.

பல குடும்பங்கள் அமெரிக்காவிற்கு போவதையே குறி வைத்து செயல்படுவதால், அவர்களின் ஆங்கில வெறி ஏறுமுகமாகவே இருக்கின்றது.

ஆனால், சீனா இந்த மொழிப் பிரச்சினையை அழகாக கையாண்டது. ஆங்கில அறிவின் அனுகூலங்களை பட்டியலிட்டு மக்களுக்கு பலவிதங்களில் ஊக்கமளித்தது.

தொலைக்காட்சிகளில், தொலைபேசிகளில், பொது இடங்களில் என எல்லா இடங்களிலும் மக்கள் ஆங்கிலத்தில் மற்றவர்களோடு பேசிப் பழக பல வசதிகளைச் செய்து கொடுத்தது.

இதனால் இப்போது வெளி நாட்டு மூலதனங்களும் கூடிவிட்டன, மக்களுக்கும் தன்னம்பிக்கை அதிகமாகி விட்டது. ஆங்கிலம் கற்றுக்கொள்வது இன்னும் பெருகிவிட்டது. கல்வி நிலையங்களிம் அதிகமாகிவிட்டன. இயன்றவரை ஒருவரோடு ஒருவர் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள்.

கூச்சப்படுவோர் இதுபோன்ற ஆங்கில மையங்களில் சேர்ந்து தங்களின் உலகமொழித் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் அதிக ஆர்வம் காட்டுவதனால் அவர்களின் தாய்மொழி  உணர்வு மங்கிவிட்டதாக நினைக்கவேண்டாம். ஆங்கில மோகம் இரண்டாம் பட்சம் தான் அவர்களுக்கு. ஆனாலும் பாருங்கள் அதிலும் சோபிக்கத்தொடங்கிவிட்டனர் உலக அரங்கில்.

இன்டர்நெட் தொழில் நுட்பம் விரிவடைந்து வரும் இந்தக் காலத்தில் அனைத்துலக  தொடர்புக்கு ஆங்கிலமொழி  மிக மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஆங்கிலம் பயில குறுக்கு வழிகள் ஏதும் கிடையாது. பலரும் பயணடைந்த சுலபமான சில வழிகள் இருக்கலாம். நமக்கு ஏதுவான ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்வது சிறப்பு.

 நல்ல தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நமக்கு 'போர்' அடிக்காமல் அறிவைப் புகட்டலாம். செய்திகள் தற்சமையம் நடக்கும் நடப்புகளை சொல்லும் அதே நேரம் உங்களுக்கு பல முக்கியமான சொற்களையும் சொல்லித்தரலாம். 

குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது ஒரு ஆங்கில நாளிதழை வாங்கிப் படிப்பது நல்லது. இன்னும் இதற்கு தயாராகாதவர்கள், சிறுவர்களுக்கான ஆரம்ப நிலை பள்ளிப்புத்தகங்களிலிருந்தே தொடங்கலாம். வெட்கப்படத்தேவை இல்லை.

நான் எனது 24ம் வயதில் என்னுடைய பத்தாம் வகுப்பு புத்தகங்களை மீண்டும் படித்தது நினைவுக்கு வருகிறது இப்போது. இன்றைய சரளமான நிலைக்கு வருவதற்கு அதுவும் எனக்கு பெரும் உதவியாய் இருந்தது.


வீட்டில் உள்ளோரிடம்  மெல்ல  மெல்லப் பேசிப் பழகுங்கள் அடுத்தது உங்கள் நலனில் ஆர்வம் கொண்டோரோடு பேசுங்கள். முதலில் ஓரிரு வார்த்தைகள். பின்னர் ஒன்றிரண்டு வாக்கியங்கள். நாளடைவில் நீங்கள் ஆச்சரியப்படும் மாற்றங்கள் கண் முன்னே தெரிந்துவிடும்.

சின்ன சின்ன கட்டுரைகள் எழுதுவது, படித்த கட்டுரைகளுக்கு கேள்விகளை தயார் செய்வது போன்றவை உங்கள் ஆங்கில அறிவுக்கு சிறப்பு சேர்க்கும்.

கம்ப்யூட்டர் பயண்படுத்துவோர் பொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனாலும் மற்றவர்களோடு பேச கூச்சப்படலாம். அதிலிருந்து அவர்களும் வெளி வர வேண்டும்.

திரும்பத் திரும்ப சொல்லும் போதுதான் ஒரு வார்த்தை மந்திரமாகிறது. அடிக்கடி ஒன்றை பயண் படுத்தும் போது தான் அதில் நீங்கள்   வல்லவர் ஆக முடியும்.  ஆங்கில மொழியும் அப்படியே.

 நாம்  பின்தங்கி விடாதிருக்க தாய்மொழியாம் தமிழ் மொழியோடு ஆங்கிலத்தில் உரையாடுவதையும் வழக்கத்தில் கொள்வோம்.

நாம் பேச நம் குழந்தைகளும் நம்மைப் பின் பற்றி பேசத் தொடங்குவர்...

No comments:

Post a Comment