Thursday 3 May 2012

அங்கிள் பாவ் . . .

குழந்தைகள் மத்தியில் எனக்கொரு பெயர் உண்டு...
'அங்கிள் பாவ்' என சுட்டீஸ் என்னைச் செல்லமாக அழைப்பார்கள்.

"செல்லக் கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே"
என சிவாஜியும்,

"செல்லக்கிளியே மெல்லப்பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு"
என எம்ஜிஆரும்,

திரையில் பாடி கோடிக் கணக்கான குழந்தைகளின் அன்பைப் பெற்றுவிட்டனர்.

எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் என்னைப் பார்த்ததும் சந்தோஷத்தில் ஒடிவரும் குழந்தைகள் எனது நட்பு வட்டாரத்திலும் உறவினர் மத்தியுலும் ஏராளமானோர் இருக்கின்றனர். 

"குழந்தைகளுக்கு இதுபோல இரட்டை நடிப்பிலான படங்களை எடுத்து அசத்தலாம்...."

மழழைகளின் அன்பைப் பெறுவது எளிது. எனது யுக்திகளாக என் பங்குக்கு சில சிவற்றை இங்கே தருவதில் மகிழ்கிறேன்.

சின்னச் சின்ன குட்டிக் கதைகளை அவர்களுக்கு பிடிக்கும் விதம் சொல்ல வேண்டும்.

பொதுவாக பெற்றோர்களே குழந்தைகளுக்கான கதைகளை சொல்லி விடுவதால், நாம் சொல்லும் அதே கதைகளில் ஆங்காங்கே சற்று வித்தியாசமான திருப்பங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

எவ்வளவு நாட்கள்தான் பாட்டி வடை சுட்டு அதை காக்கை திருட விட்டுக் கொண்டிருப்பார்...? அது மட்டுமா, ஒவ்வொருமுறையும் அதே நரியிடம் அல்லவா காக்கை வடையை இழந்து வருகிறது....

எனவே, பாட்டி வடை சுட்டால் மட்டும் போதாது, அவர் அதை காக்கையிடம் இருந்து பாதுகாப்பதிலிருந்து புதுக்கதை தொடங்க வேண்டும்.

மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் கதையின் சாராம்சம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அதாவது, பாட்டி வடையைச் சுடவேண்டும், காக்கை எப்படியாவது அதை கௌவிக்கொண்டு செல்ல வேண்டும்,  நரியிடம் பறிகொடுக்கவேண்டும். இந்த ஒரிஜினல் கதைக்கரு  மாறாமல் இருப்பது அவசியம்.


இப்போதுள்ள குழந்தைகள்  'லயன் கிங், மிக்கி மௌஸ், டோனல்ட் டக்' போன்ற கதைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். அவற்றையும் நாம் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

குழந்தைகளைக் கவர இன்னொரு வழிமுறையும் உண்டு... அவர்களை பயமுறுத்தா வண்ணம், சின்னதாக மேஜிக் செய்து காட்டலாம்.  ஆனால் இதற்கும் சில அடிப்படை ரகசியங்களை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, தெரிந்தவர் வீட்டுக்குச் செல்லும் போது, கையோடு எடுத்துச் செல்லும்  திண் பண்டங்களை அங்கே இங்கே என மறைத்து வைத்து விட்டு பின்னர் என்னவோ மேஜிக் மூலமாக வரவழைத்ததாக காட்டிக் கொள்ளலாம்.

ஆனால் இதற்கு வயதுக் கட்டுப்பாடு உண்டு. எல்லா மழழைகளையும் இப்படி ஏமாற்ற முடியாது. விவரம் தெரிந்தவர்கள் "அங்கிள், நீங்க எப்படி செய்தீங்கன்னு எனக்கு தெரியும் " என ஒரேயடியாக போட்டு உடைத்து விடுவார்கள் நமது மேஜிக் திறமையை.

இப்போதுள்ள சில சுட்டீஸ் நவீன கார்டூன்கள் பார்த்து பலவற்றை தெரிந்து கொள்கிறார்கள். பேய்களைப் பார்த்தே மிரளாதவர்கள் நாம் காட்டும் 'மேஜிக் ஷொவிலா' அசந்து விடுவார்கள்?

ஆனால் தரமான,  ருசியான சாக்லட்டுகளை நீங்கள் ஆகாயத்தில் இருந்து வரவழைக்கும் போது அதன் ருசி அவர்கள் எண்ணத்தில் ஓடி காரணங்களை கண்டறிய வைக்காது, சில நிமிடங்களுக்கு.

இடைப்பட்ட நேரத்தில் நாமும் ஹீரோ ஆகிவிடலாம்.
எதற்கும், இடம் பொருள் சமய சந்தர்ப்பம் பார்ப்பது முக்கியம்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களிடம் அன்போடும், நட்போடும்  பேசவேண்டும்.

அவர்களிடம் எதிர்மறை எண்ணங்களை பேசக்கூடாது. எப்போதும் நேர்மறை எண்ணங்களையே விதைக்கவேண்டும்.

'உங்களால் முடியும், சாதிக்கப் பிறந்தவர்கள்' நீங்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களின் வயதிற்கு ஏற்ற முறையில் சொல்லி வரவேண்டும்.

சுவாரஸ்யம் குன்றாமல் நமது பேச்சு இருந்தால், என்றென்றைக்கும் நம்மைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் அவர்களிடம் இருக்கும்.

அன்று குழந்தைகளாக இருந்து தற்போது பெரியவர்களாகி விட்ட இளைஞர்கள் என்னை சந்திக்க நேர்ந்தால் இன்றும் பாசத்தோடு பழகி, பழைய நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

"அங்கிள், இன்னும் அந்த காக்கா கதை, முயலும் ஆமையும்  கதை எல்லாம் சொல்றீங்களா...?

ராங்கி பண்ணும் பிள்ளைகளை இன்னமும் நீங்க கோழிகளாக மாற்றுவதுண்டா...?

மேஜிக் ஷோவுலே சாக்லெட் கொட்டுறது இப்பவும் நடக்குதா?"
என கேட்டவாறு கை குலுக்குவதும், கட்டி அணைப்பதும்,

"வாங்க ஏதாவது சாப்பிடலாம்.."
என கனிவோடு பேசுவதும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

1 comment: