Friday 4 May 2012

தமிழ் வழி உயர்நிலைக் கல்வி . . .

சில மாதங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து இடம் மாறி வேறு ஒரு மாநிலத்திற்குச் சென்றார்.  அவர் ஒரு ஆசிரியர்.

மீண்டும் என்னைச் சந்தித்தபோது, அவர் குறிப்பிட்ட சில விஷயங்கள் என்னை வியப்படைய வைத்தன.

அவர் சென்றிருக்கும் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழியே நமது தமிழாசிரியர்கள் கற்பிக்கிறார்கள் என்றார். எண்ணிக்கையில் தமிழ்ப்பிள்ளைகள் அதிகம் இருப்பதால் இப்படி நடைமுறையில் தமிழில் இருக்கிறதோ என்னவோ...

தமிழ் நாட்டில் உள்ள பல அறிஞர்களும் சிந்தனையாளர்களும், சாதனையாளர்களும் தமிழ் வழி உயர்நிலைக் கல்வி கற்றவர்கள் என்பது நாம் படித்த ஒன்றுதான்.

ஆனால், நம் மலேசிய மண்ணில் இது எப்படி முடியும், நமக்கென்று உள்ள பாடத்திட்டங்கள் வேறு மாதிரியாக அல்லவா இருக்கின்றன....?

தமிழில் உயர்நிலைக் கல்வி கற்பதும், கற்பிப்பதும் நம் குழந்தைகள் நல்லபடி பாடங்களை விளங்கிக் கொள்ள வழி வகுக்கும். இதில் சந்தேகம் இல்லை. அதே நேரம், ஆங்கில, மலாய் மற்றும் அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பிரத்தியேகமான சொற்கள் மாணவர்களை சென்றடைவதை உறுதி செய்யவேண்டும்.

இன்றைய ஆசிரியர் தொழில் செய்வோர் தங்களின் அர்ப்பணிப்பு உணர்வோடு தமிழ்ப்பிள்ளைகளை கவனிப்பதும், கற்றுத் தருவதும் நமக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.

பாராட்டப்பட வேண்டியவர்கள் இவர்கள்.

அனைத்துலக பள்ளி ஒன்றில் நான் பணியாற்றிய ( ஆசிரியராக அல்ல) அந்தக் கால கட்டத்தில் தமிழ்ப்பிள்ளைகளே தமிழில் பேசத் தெரியாதது கண்டு வருந்தியிருக்கிறேன். ஆங்கிலத் திறன் சரளமாக இருந்த அவர்களுக்கு ஏனோ தமிழ்ப் பற்றி அவ்வளவு தெரிந்திருக்கவில்லை.

உலக மொழியாம் ஆங்கிலமும், நமது தேசிய மொழியான மலாய் மொழியும் நமக்கு அவசியமே. தமிழில் கற்று தேர்ச்சி பெறுவோர் அடுத்து கவனம் செலுத்த வேண்டியது இந்த இரு மொழிகளிலும்  ஆகும்.


தமிழில் கல்வி கற்று உயரும்போது, ஆங்கிலம் மற்றும் மலாய்  மொழிகளில் புலமை பெற்றிருந்தால் பொதுத் துறைப் பணிகளிலும் இம்மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.

No comments:

Post a Comment