Sunday 3 June 2012

எண்ணங்கள் ஆயிரம்... மனம்

வாழ்க்கை ஒரு விபத்து என்று சிலர் சொல்வார்கள்.  பல சந்தர்ப்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை எண்ணுகையில் எதுவும் நாம் எதிர்பார்த்து நடப்பதாக தோன்றாததும் இதற்கு ஒரு காரணம்.

பலரையும் நாம் ஒரு விபத்தைப்போன்றே  சந்திக்கிறோம். நமது நல்ல நண்பர்களும் இப்படியே அமைகிறார்கள் சில நேரங்களில்.

 'வாகனங்களால் மோதித்தள்ளப்படுவது மட்டுமல்ல விபத்தென்பது. வழக்கத்துக்கு மாறாக ஒரு சம்பவம் நடந்தால், அதுவும் ஒரு வகையில் விபத்தே'.

இதற்கு நேர்மாறாக சொல்வோரும் நம்மிடையே உண்டு.  ' நடக்கிற எல்லா காரியங்களுக்கும் ஒரு காரணம் நிச்சயம் உண்டு' என்கின்றனர்.

'எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. எல்லாம் ஏற்கனவே திட்டமிடப் பட்டுவிட்ட ஒன்றே' என்பது இவர்கள் வாதம்.

'உதிக்கும் போது விதிக்கப்பட்டது' என்று இவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது பிறக்கும்போதே நம் தலையில் எழுதப்பட்டுவிட்ட ஒன்று என இதற்கு அர்த்தம்.

இதில் எது சரியானது,  எது  உண்மையானது எனத் தெரியாவிட்டாலும், ஒன்று மட்டும் நமக்கு விளங்குகிறது.

எந்த ஒரு சம்பவமும் நமது மனோ நிலைக்கேற்பத்தான் கணிக்கப்படுகிறது.  சிலருக்கு இனிமையாகவும் சிலருக்கு கசப்பாகவும் அமைய அவர்களின் மனமே காரணமாகிறது. ஆக மனதே நடக்கின்ற அனைத்தையும் விகிதாச்சாரப்படி நல்லவைகளாகவும் தீயவைகளாகவும் மாற்றியமைத்துக்கொள்கிறது.

விதியையும் விபத்தையும் நம் கட்டுப்படுக்குள் கொண்டுவர இயலாவிட்டாலும் நம் மனதை எவ்வித உச்சத்திற்கும் போகாமல் ஒரே வித சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்ள, " நடக்கும் அனைத்தும் நன்மைக்கே " என தூர நோக்குப்பார்வையில் பயிற்ச்சிக் கொடுக்கலாம்.


 

No comments:

Post a Comment