Saturday 19 October 2013

கணினியின் செயலிகளும் மென்பொருளும்...

கணினியின் கடந்த பத்தாண்டு கால வளர்ச்சியில் மென்பொருள் புரட்சி அபாரமான விகிதத்தில் உலகளாவ நடந்திருக்கிறது, தொடர்ந்துகொண்டும் இருக்கிறது. அறிவியல் தொழில் நுட்பத்துறையில் நம் இந்தியரின் பங்கு இங்கு  பெரிதும் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

சாட்டலைட் துணைகொண்டு நம் வீடு எங்கிருக்கிறது, நம் கார் இப்போது எங்கு பயணித்துக்கொண்டிருக்கிறது, நாம் தற்போது இருக்கும் இடத்தில்  தானியங்கி பணம் பட்டுவாட செய்யும் இயந்திரம் உண்டா, கே.எஃப்சி போன்ற என்னென்ன வசதிகள் இருக்கின்றன என மிகச் சரியாக காட்டும் மென்பொருள் நம்மை ஆச்சரியப் பட வைக்கிறது. அதிலும் இவை போன்ற பல மென்பொருள்களின் கலவையாக என்ரோய்ட் கைபேசிகளில் இருப்பதைப் பார்க்கும் போது அறிவியல் சாதனைகளை எண்ணி மனம் மகிழ்கிறது.

அதிகச் செலவில்லாமல் இணைய வசதியில் உலகில் எந்த பாகத்தில் இருந்தாலும், ஸ்கைப், வைபர், வாட்ஸாப் மற்றும் யாஹூ மெஸ்ஸெஞ்செர்  மூலம் இனாமாக  தொடர்பு கொண்டு   நாம் பேசுகிறோம். இது கணினியின் வரவினால் ஏற்பட்ட முக்கிய ஒன்று. அதிலும் கணினி வந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இலவச வசதிகள் பெருகிவிட்டன என்றே சொல்லவேண்டும்.

மென்பொருள் வளர்ச்சியில், பஸ்ஸுக்காகவோ, ரயிலுக்காகவோ காத்திருப்போருக்கு அடுத்த பயணம் எப்போதென துல்லியமாக காட்டும் விவரங்கள் கணினியில் மட்டுமல்ல, அவர்கள் காத்திருக்கும் இடத்தினிலேயே வந்துவிட்டது இப்போது.

இன்னும் சற்று ஆழ்ந்து கவனித்தால், இணையம்  தரும் "வைஃபை" இப்போது பழையது என்கின்றனர் அத்துறையில் சம்பந்தப்பட்டோர். சீனாவில் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகை எரியும் பல்பு விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்ட இணையத் தொடர்பை தருகிறதாம். இதற்கு "லைஃபை" எனப் பெயரிட்டுள்ளனர். அடுத்த மாதம் 6ம் தேதி சீனாவில் அறிமுகம் காண்கிறது இது.

அட இதெல்லாம் சாதாரணம் என எண்ணினால், இதோ வருகிறது மருத்துவ உலகின் ஆச்சரிய மையம்.  செயற்கை புரதம் தயாரித்தல், மூலிகைச் செடிகளில் நோய் தடுப்பு ஆற்றலை கண்டறிதல், ஆயுதங்கள் அதிகமின்றி அறுவைசிகிச்சை, வேறு வழிகளில் எரிபொருளை பிரித்தெடுத்தல், உயிர் கொல்லும் நோய்களான நீரிழிவு, மாரடைப்பு  பொன்றவற்றை எதிர்கொள்ளும் அதிநவீன முறைகளும் தற்போது கணியின் மென்பொருள்களின் உதவி கொண்டு நடைமுறைப்படுத்த முனைந்து வருகின்றனர்.  இன்னும் சில வருடங்களில்,
"இருதயத்தில் அதிக அளவிலான கொழுப்பு அடைத்துக் கொண்டிருக்கிறது... எனவே அறுவை சிகிச்சை தேவை",
என மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். இரத்தத்தினை தூய்மைப்படுத்தி அதில் இருக்கும் வேண்டாத கொழுப்பினை அகற்றிவிடும்  பரிசார்த்த முறையில் மாத்திரைகள் விஞ்ஞானிகளின் புதிய  கண்டுபிடிப்பாக மருத்துவ ஜெர்னல்களில் இடம்பெற்றுவிட்டன. ஆயினும், வியாபார ரீதியில் மக்களை வந்தடைய சற்று கால தாமதமாகலாம்.இருந்து பார்க்க ஆயுள்  இருந்தால் சரி, அவ்வளவுதான்.

'நானோ' புரட்சியோடு இந்த மென்பொருள் புரட்சியும் சேர்ந்து உலகத்தினருக்கு நன்மைகள் செய்ய தொடங்கி இருப்பது, அசாதாரண ஆராய்ச்சித் திட்டங்களை கொண்டிருக்கும்  ஆராய்ச்சி மையங்களின் புகழை இன்னும் பல மடங்கு உயர்த்தும் என நிச்சயம் நம்பலாம்.

அறிவியல் இன்னும் ராக்கெட் வேகத்தில் மேலே உயரந்துகொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment