Saturday 28 September 2013

புதுப்புது பின்னனிப் பாடகர்கள்...

பின்னனிப் பாடகர்களில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அதிகம் கேட்ட குரல்களாக பலரையும் சொல்லலாம். காலத்தால் மறக்க முடியாத பாடகர்களாக அவர்கள் இன்னும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அன்மையில் காலமான டி.எம்.எஸ், பி.பி.சீனிவாஸ் போன்றோரின் குரல்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவர்களின் குரலை ரசித்த அதே நேரம் அவர்களுக்கு வழங்கப்பட்ட தரமான பாடல்களையும் நம் மனதில் இருந்து அவ்வளவு சுலபத்தில் அகற்றிட இயலாது.

ஆனால் இன்றைய நிலை அதுபோல் இல்லை. தொழில் நுட்பம் எவரையும், யாரையும் பாட வைத்துவிடுகிறது. அதே போல அதி புத்திசாலி பாடலாசிரியர்களும் மக்களைப்பற்றியோ, மொழியினைப்பற்றியோ அல்லது இசையைப் பற்றியோ கவலையின்றி பாடல்கள் எழுதுகின்றனர்.

மற்றவர்கள் தயாரிப்புக்களில் இல்லாவிடினும் தங்களின் சொந்தப் படங்களில் இதுபோன்ற கேள்விக்குறியாகும் பாடல்களை புகுத்திக்கொள்கின்றனர். லூசுப்பெண்ணே, எவன்டி உன்ன பெத்தான்... போன்றவை உதாரணத்திற்கு சில. இவற்றில் பளிச்சிடும் அவர்களின் மேதாவித்தனத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

 நவீன ஒலிப்பதிவுக் கருவிகளின் வரவால் மொழி தெரியாவிடினும் பரவாயில்லை எனும் நிலை இப்போது நிலவுகிறது.  வேற்று மொழியினர் தமிழிப்பாடல்களை பாடக்கூடாதென்பதல்ல இங்கு சொல்லவந்த கருத்து. பாடும் மொழியினை தெரிந்துகொண்டு, அதில் நல்ல பயிற்சி பெற்றபின் பாடலாமே... ஒரே மூச்சில் மொத்தப்பாடலையும் பாடிய காலம் போய், இரண்டு இரண்டு வரிகளாக பாடி இணைக்கும் சுலபமான வசதிகள் இப்போது ஆக்ரமித்துக்கொள்ள வந்துவிட்டன.

இன்றைய நாளில் நூற்றுக்கணக்கான  புதியவர்கள் பின்னனிப்பாடல்களை பாடுகின்றனர். சிலர் திறமைசாலிகள்தாம். ஆனால், மீதமுள்ளோர் பாடுவதைக் கேட்கும் போது அவர்கள் எதை உச்சரிக்கிறார்கள் என்றே தெரியாமல் போகின்றது. மருத்துவர்களின் கையெழுத்தை புரிந்துகொள்ள முடியாது என்பார்கள். அதுபோல இவ்வகை புதுப்பாடகர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அட தேவையா இந்த நிலை தமிழுக்கு என நம்மை நாமே கேட்டுக்கொள்வதைத் தவிர சாதாரண ரசிகன் வேறென்ன செய்திட முடியும்....

இது உண்மையில் பாடகர்கள் தவறா அல்லது அவர்களை தேர்வு செய்யும் இசையமைப்பாளர்கள் தவறா...? எங்கு தவறிருந்தாலும் அதன் குளறுபடிகளை அனுபவிப்பது என்னவோ ரசிகர்கள்தான்.

ஊடகங்களின் நேர்காணலின் போது சில புதுப்பாடகர்கள் தாங்கள் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குள் மொத்தப் பாடலையும் பாடித் தந்துவிட்டதாக சொல்லும் போதெல்லாஅம், அறிவியலின் முன்னேற்றத்தைத் தான் நான் பார்த்து பெருமைப் படுகிறேனே தவிர தற்பெருமையாக பேசிக்கொள்ளும் அவர்களை அல்ல. குரல்வளமில்லா, உச்சரிப்பு சரியாக இல்லா அவர்களின் வார்த்தைகளை கோர்வையாக கேட்கும் போது மனது சங்கடப் படுகிறது. பள்ளிப்பிள்ளைகளைப்போலவே பாடுகின்றனர், அதிலுள்ள நெளிவு சுளிவுகளை அறிந்துகொள்ளாமல்.

"வை திஸ் கொலவெறி கொலவெறி" பாடல் பல சாதனைகளைப் புரிந்தாலும், உலகமுழுவதுமாக பல்லாயிரம் பேர் அந்த பாடலை ரசித்தாலும், இசையும் குரலும் கூட நன்றாகவே இருந்தாலும், மொழி ஆர்வளர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். "அடிடா அவள, வெட்றா அவள.." எனும் பாடல் காட்சிக்கு சரியாக இருந்தாலும் கருத்துக்குக்கு சரியாக இல்லை.

சில இசையமைப்பாளர்கள் ஆங்கில வார்த்தைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகின்றனர். அந்தத் திறமை அவர்களுக்கு இருந்தால், அப்பாடலை முழுவதுமாக ஆங்கிலப் பாடலாகவே தந்துவிடலாமே.... உலகம் எங்கும் கேட்கும் நாமும் பெருமைப் பட்டுக்கொள்ளலாம் நம்மாலும் ஆங்கில பாடல்களை எழுதி, இசையமைத்து ஆங்கிலேயரின் அளவிற்கு பிரமாதப் படுத்த முடியுமென்று.

நான் முன்பு சொன்னது போல, புதிய பாடகர்களில் ஒரு சிலரது குரலும், உச்சரிப்பும் அபாரமாக இருக்கிறது. இசையமைப்பாளர்கள் பலரை அறிமுகப்படுத்தும் ஆர்வத்தில் இதுபோன்ற நல்ல சில குரல்களையும் தவற விட்டுவிடுகின்றனர். நல்ல பயிற்சியும், சந்தர்ப்பமும் தந்தால் தரமான இளம் குரல்களை நெடுங்காலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாம் சொல்லுகின்ற கருத்துக்கு எதிர் மாறாக 'கண்ட பாடல்களும் வெற்றிபெருவதால்தான் மீண்டும் மீண்டும் அவ்வகைப் பாடல்களையும் பாடகர்களையும் தாங்கள் வாய்ப்பளித்து தக்கவைத்துக்கொள்வதாக' சில இசையமைப்பாளர்கள் நினைக்கிறார்கள்.

இதிலுள்ள உண்மை நிலை விவாத மேடைக்குத் தகுந்ததாக இருக்கலாம். உடனே சொல்லும் அளவிற்கு அதில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. முப்பது, நாற்பது .... ஏன் சிலர் ஐம்பது ஆண்டுகள்கூட தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும் போது, தற்போது வரும்  பாடகர்கள் இரண்டொரு வருடங்களில் காணாமல் போய்விடுகின்றனர்.

No comments:

Post a Comment