Thursday 22 August 2013

ஷேக்ஸ்பியர்...

தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் போல காலம் கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆங்கில இலக்கியம் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களாகும்.

ரோமியோ அன்ட் ஜூலியட், ஒத்தெல்லோ, ஹெம்லட், கிங் லியர், மெகாபெத், டெம்பஸ்ட்,  தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ் , அஸ் யூ லைக், ட்வெல்த் நைட், ஆல்'ஸ் வெல் தேட் என்ட்ஸ் வெல்,  அந்தோனி கிளியோபாட்ரா,  தி டூ நோபிள் கின்ஸ்மென், 'பெரிகிள்ஸ்...பிரின்ஸ் ஆஃப் டைர்'  மற்றும் மச் அடு அபௌட்  நத்திங் ( இல்லாத ஒன்றுக்குப் பொல்லாத ஆர்ப்பாட்டம் ) போன்றவை காலம் உள்ளளவும் உயிரோடு வாழும் காவியங்களாகும். உண்மை நிகழ்வுகள் போலவும், நிஜ மாந்தர்கள் போலவும் தோன்றுபவைகளாகும். அதே நேரம் , கற்பனைக் கதாபாத்திரங்கள் போல இருந்தாலும்,  ஜூலியஸ் சீசர் போன்ற உண்மைக் கதாபாத்திரப் படைப்புக்களையும் அவர் படைத்திருக்கிறார்.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இனம் கடந்து, மொழி கடந்து பல நாட்டினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலக மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு  வந்த ஒரு சில காவியங்களில் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களும் அடங்கும். மொத்தம் 38 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார்.

ரோமியோ ஜூலியட் பற்றி தெரியாத காதலர்கள் இருக்க முடியாது. காதலின் எல்லை எது என்போர்க்கு, ஷேக்ஸ்பியரின் பதிலாக வந்தது ரோமியோ ஜூலியட். தமிழில் உதாரணமாக கொள்வதென்றால் "தேவதாஸ்" திரைப்படத்தை சொல்லலாம். ஆயினும், ரோமியோ ஜூலியட் தாக்கம் என்பது பல இன மக்களாலும் உணரப்பட்ட ஒன்றாகும். காதலில் வீர தீரச் செயல்களாக, காதலின் புனிதத்தை சொல்லியிருந்தார். ஒருவருக்காக மற்றவர் எதையும் தியாகம் செய்யும் நிலையைய்யும் அழகாக விளக்கி இருப்பார். ஒத்தெல்லோவின் முடிவும், ரோமியோ ஜூலியட்டின் முடிவும் அதிக சோகத்தை வழங்கிய நாடகங்களாக இன்றளவும் குறிப்பிடப்படுகின்றன. அதிலும், ஒதெல்லொவின் நாயகனாக ஒரு கறுப்பினத்தவரை உருவாக்கி இருந்தது பல விமர்சனங்களுக்கு அவரை இலக்காக்கி இருந்தது.

காதல் காவிய சகாப்தமாக கருதப்பட்ட இவர், நகைச்சுவை, சரித்திரம், சோகம்  என மூன்றிலும் பெயர் பதித்தவர். எனக்கு பிடித்த இவரின் பன்ச் வரிகள், "இப்படி இருப்பதா அல்லது வேண்டாமா; அது தான் கேள்வி"( டு பி ஒர் நொட் டு பி ) என்பதாகும்.

இவரது படைப்புக்களில் என்னை அதிகம் பாதித்தது  ஹெம்லட். எனது இடை நிலைப் பள்ளி காலத்தின் போது பாட புத்தகமாக வில்லியம் ஷேக்ஸ்பியரின்  14 நாடங்கள் இருந்தன. அதில் ஒன்று,   ஹெம்லட்.

ஹெம்லட், ஒரு அரச குமாரன். தன் தந்தையையின் காதில் விஷம் ஊற்றி கொன்றுவிட்டு தன் தாயை கவர்ந்துகொள்ளும் சிற்றப்பனை பழிவாங்கச் சொல்லி ஆவியாக வரும் தந்தையின் வேண்டுகோளை ஏற்று அது ஒன்றை மட்டுமே நினைவில் கொண்டு வாழ்ந்து மறையும் ஒரு வீரனின் கதை.

இக்கதையில் எனக்குப் பிடித்தது இறுதி காட்சிகளாகும்.   தனது காதலி ஒப்பீலியாவின் தந்தையாயிருந்தாலும்,தனது சிற்றப்பனோடு சேர்ந்து சதி செய்த மந்திரியைக் கொன்றுவிடும் ஹெம்லட் நாடு கடத்தப்படுகிறான். சிறிது காலம் சென்று நடு திரும்பும் ஹெம்லட், எதிரே ஒரு சவ ஊர்வலம் வருவதைப் பார்க்கிறான்.  அது தனது காதலி ஒப்பீலியாவின் இறுதி ஊர்வலம் என அறிந்ததும் கவலையும் அதிர்ச்சியும் ஒருங்கே அவனை வாட்டுகிறது.

புதைகுழியுனுள் குதித்து ஒப்பீலீயாவைக் கைகளில் ஏந்தி கதறுகிறான். அவன் பகை தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற சிற்றப்பன் மேலும், அவனுக்கு உதவியாயிருந்த ஒப்பீலியாவின் தந்தை மந்திரியின் மேலும் தான். அதே நேரம், அங்கு இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒப்பீலியாவின் சகோதரன், தனது சகோதரி ஒப்பீலியாவும், தனது தந்தையும் இறப்பதற்கு காரணமான ஹேம்லட்டுடன் சண்டையிடுகிறான்.

சிற்றப்பனின் சூழ்ச்சியில் மந்திரி மகனின் வாளில் விஷம் பூசப் படுகிறது.  சிறிது பட்டாலும், ஹேம்லட் இறந்துவிடுவான் என திட்டமிடுகிறான் அரசனாக இருக்கும் சிற்றப்பன். அதே போல சண்டையில் மந்திரி மகனின் விஷம் தோய்ந்த வாள் அவனக் கீறுகிறது. ஆனால் தனது வாளை இழக்கும் ஹேம்லட், மந்திரி மகனின் வாளை பறித்து அவனையே குத்திவிடுகிறான்.

இதற்கிடையே, தனது மகன் வெற்றி பெற்றுவிட்டான் எனும் மகிழ்ச்சியில் அருகில் இருந்த மதுக்கோப்பையை எடுத்து அதில் இருந்த பானத்தை அருந்திவிடுகிறாள் அரசி. அது, 'ஹேம்லட் ஒரு வேளை ஜெயித்து வந்துவிட்டால், அவனுக்காக தயாரிக்கப்பட்ட விஷம் கலந்த பானம்.
திகைத்து நிற்கும் ஹேம்லட்டிடம் வாளில் விஷம் தோய்ந்திருந்ததையும், சிற்றப்பனின் சூழ்ச்சியையும் மரணப்படுக்கையில் சொல்லிவிடுகிறான் மந்திரி மகன்.  இதையறிந்த ஹேம்லட் மீண்டும் அந்த விஷம் தோய்ந்த வாளை எடுத்து தன் சிற்றப்பனைக் குத்திவிடுகிறான். அனைவரும் இறக்கிறார்கள்.

இதுவே ஹேம்லட்டின் கதை.

இதுபோல ஷேக்ஸ்பியரின் கதைகளில் சுவாரஸ்யம் குன்றாத காட்சியமைப்புக்கள்  அதிகம் இருப்பதைக் காணலாம்.
ஆங்கிலம் கற்றிருப்போருக்கு ஷெக்ஸ்பியர் புத்தகங்கள் சுலபத்தில் கிடைத்துவிடும். மொழிமாற்றம் கண்டு தமிழில் இப்புத்தகங்கள் வேண்டுவோர், தலை நகரில் இருக்கும் பெரிய புத்தகக் கடைகளில் தேடிப்பார்க்கலாம். இல்லையேல், தமிழ் நாட்டு புத்தக பிரசுரித்தாரிடம் நேரிடையாக தொடர்புகொண்டு தருவித்துக்கொள்ளலாம். உலகமயமாக்கலில் எளிமையாகிவிட்டது இது இப்போது.











No comments:

Post a Comment