Tuesday 9 April 2013

கைபேசியில் தமிழ்...

எனது பதிவுகளில் நான் அதிகம் வலியுறுத்தி சொல்லி வருவது வாசிப்பின் அவசியத்தையே. இது என்னோடு ஆரம்பம் முதல் இணைந்திருக்கும் வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். 

கணினியில் கோடான கோடி இலவச நூல்கள் இருந்தாலும், ஒரு புத்தகத்தினை கையில் வைத்து படிப்பதென்பது சுகமான அனுபவம் என்றே சொல்லி வந்திருக்கிறேன். அதனோடு இன்னொன்றையும் இனி சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.  கணினியில் மட்டுமல்லாது கையடக்க என்ட்ரோய்ட் கைபேசியிலும் இப்போது நூல்களை  வாசிக்கும் இலகுவான வழிகள் தோன்றிவிட்டதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தமிழ் இப்போது கைபேசியில் வரத்தொடங்கிவிட்டது.  அப்ளிகேஷன் மென்பொருள் ( சொப்ட்வெர் ) இதனைச் சுலபமாக்கிவிட்டது இப்போது.
என்னற்ற தேவைகளுக்கு நாம் கைபேசிகளின் பயன்பாட்டை பற்றிக்கொள்ள பழகி வருகிறோம். அந்த வகையில் அப்ளிகேஷன் மென்பொருள் சேவையினால் அதில் தமிழில் படித்து மகிழ நல்ல வாய்ப்புக்கள் பல இனி உண்டு என நம்பலாம். ஆங்கில மொழி ஆதிக்கம் உள்ள கைபேசியில் தமிழ்மொழி வெளிவரத் தொடங்கி நமக்கு பெரும் உற்சாகத்தை தந்த வண்ணம் இருக்கிறது.

இதற்குக் காரணமானவர்களை எப்படி புகழ்ந்தாலும் தகும்.

ஒரு பயணத்தின் போதோ அல்லது மற்ற வேலைகளுக்கிடையிலோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேரத்தை வீணடிக்காது படித்து செய்திகளை அறிந்து கொள்ள தமிழ் செயலியில் தமிழ் செய்தித்தாழ்கள் இருக்கின்றன. உண்மையான ஒரு நாளிதழின் பதிப்பைப் போலவே கைபேசியில் நம்மால் படிக்க முடிகிறது.

மலேசிய பத்திரிக்கைகள் தங்களின் செய்திகளுக்கு கட்டனம் வசூலிக்கும் அதே  நேரம், தமிழ் நாட்டு நாளிதழ்கள் இனாமாக நமக்கு கிடைக்கின்றன கைபேசியில். இதே செய்திகள்தாம் அடுத்த நாளில் மலேசிய நாளிதழ்களில் நான்கு பக்கங்களுக்கு இடம் பெறுகின்றன என்பது இரண்டையும் படிப்போருக்கு உடனே தெரிந்து விடும். 

இதைத் தவிர,  வாசிக்கும் பழக்கம் உள்ளோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைவது, புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்களும், கட்டுரைகளும் ஸ்மார்ட் போன், ஐ போன், அன்ட்ரோய்ட் போன்ற கைபேசிகளில் அவர்களுக்குப் படிக்கக் கிடைப்பதே.

பெரிய, தடிமனான பல புத்தகங்களை கையில் ஏந்திச் சென்று படிக்கும் காலம் போய், கைக்கு அடக்கமாக அவற்றை கைபேசியில் படிப்பதென்பது பலருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று எனச் சொன்னால் அது நூறு சதவீதம் நிஜமாகும்.

ஒரு சில புத்தகங்கள் ஒரு கட்டனம் கட்டியே பின்பே நாம் படிக்க கிடைக்கின்றன. ஆனாலும் உரிமையாளர்கள் வசூலிக்கும் தொகை அவ்வளவு அதிகம் இல்லை என்றே எனக்குப் படுகிறது. இனாமாக கிடைக்கும் புத்தகங்களும் அதிக அளவில் இணையத்தளத்தினைப் போல  வந்துவிட்டன இப்போது.

இதனால் வாசிக்கும் பழக்கம், அதுவும் தமிழில் வாசிக்கும் பழக்கம் அதிகரித்து விட்டதை நம்மால் உணர முடிகிறது.  தமிழ்ப் பற்றுள்ளோருக்கு இது ஆறுதல் தரும் ஒன்றாகும். தமிழ் இனி மெல்லச் சாகும் என நினைப்போர் மீண்டும் ஒருமுறை தங்கள் கருத்தை திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் தருகிறது இந்த தமிழ்ச் செயலி.

தமிழ் நாட்டில்  பல தனியார் நிறுவனங்கள் தற்போது தமிழில் தரமான நூல்களை கைபேசிச் செயலியில் நாம் வாசிக்க வழங்கி வருகின்றனர்.

பிப்ரவரி மாதம் முதற்கொண்டு நான் சாம்சுங் அன்ட்ரோய்ட் கைபேசியினை பயன் படுத்தி வருகிறேன். கல்கி மற்றும் ஜெயகாந்தன் நூல்கள்,  திருக்குறள்,  தமிழில் குறுஞ்செய்திகள்,  தமிழில் பல நாடுகளின் உலகச் செய்திகள் என தற்போது கைபேசிச் செயலியில் இருக்கக் காண்கிறேன்.

எல்லையில்லா ஒரு பெரிய நூலகமாகவே எனது கைபேசி என்னை ஆனந்தத்தில் அசத்துகிறது தினமும்.

No comments:

Post a Comment