Monday 15 April 2013

சந்தேகங்கள், வலைத்தளங்கள்.... நான் 2

பலரும்  சொல்வது " என்ன கொண்டு வந்தோம் இனி கொண்டு செல்ல' என்பது...
வேதாந்திகள் மற்றும் சொல்வேந்தர்கள் மட்டுமல்ல தமிழ்த்திரையிலும் இதே வசனங்கள் தாம் நாம் அடிக்கடி கேட்ட ஒன்றாக இருந்துவருகின்றன.

என்ன கொண்டுவந்தோம்.......என்ன கொண்டு செல்ல போகிறோம்???

ஆனால் உண்மையில் நாம் 'பல மூட்டைகளைக்  கொண்டு வந்திருக்கிறோம் நாம் பிறக்கையில்' என்பதை ஏனோ இந்தக் கேள்வியின் பதிலாக யாரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லக் காணோம்.
அப்படி அங்கும் இங்குமாக யாராவது சொல்லியிருப்பதும் வெகுச் சாதாரண ஒன்றாகவே ஒரு காதில் புகுந்து மறு காதில் வெளியாகி இருக்கின்றது.

அதுமட்டுமின்றி இந்தக் கேள்விக்கான  பதிலின் தாக்கத்துக்கு உள்ளாகி நேர்வழியில் சென்றோர் என குறிப்பிட்டுச் சொல்லும் படியிலான எண்ணிக்கையில் மக்கள் இல்லை.

ஒருவேளை, பலரும் பேசிட ஒரு சிலராவது அது பற்றி  சிந்திக்கத் தொடங்குவார்களோ... ?

எனது பங்குக்கு இங்கே அதைத் தருகிறேன். இயன்றவரை தவற்றினை நீக்கி, சீரிய சிந்தனையில் நமக்கும் பிறருக்கும் நன்மைகள் தரும் செயல்களில் ஆர்வம் கொள்வோம் இனி.

சில வேதாந்த நிஜங்களை தெரிந்து கொள்வோமா?

நாம் பிறக்கும் போது நம்மோடு வந்தவை நமது முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணிய மூட்டைகள். அதே போல நமது மரணத்திற்குப் பின்னும் நாம் கொண்டு செல்லவிருப்பது இது போன்ற பல மூட்டைகளைத்தான்...

நமக்கும் பிறருக்கும் தெரியாத மூட்டைகள் இவை. மற்றவரால் கவர்ந்து சென்று பயன் பெறவும் முடியாது, அதை அவர்கள் தெரிந்து கொண்டு நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ எதுவும் செய்யவும் முடியாது.   இந்த மூட்டைகளை நாமே முற்பிறவிகளில் தீர்மானித்திருக்கிறோம். நமக்கு மட்டும் நன்மை தீமைகளின் பலன்களைத் தர வல்ல இம்மூட்டைகளுக்கு நாமே முழுப்பொறுப்பு.

மகாமாயை எனும் நுண்ணிய திரைச் சீலையால்  மறைந்திருந்து நாம் பிறந்தவுடன் பல ஜென்மங்களில் நாம் பெற்ற பாவ புண்ணிய பலன்களை நாம் அடையச் செய்கின்ற  இதற்கு, " சஞ்சித கர்மா" எனப் பெயர்.

 நமது ஆயுட் காலம் முழுவதுமாக நின்று நிதானித்து இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நாம் அனுபவிக்கிறோம். பல ஜென்மங்களில் சேர்த்து வைத்து, அடுத்தடுத்த ஜென்மங்களில் இந்த மூட்டைகளில் இருந்த பாவ புண்ணியங்களை அடைந்து, மீதம் இருப்பவைகளோடு இன்னும் சில மூட்டைகளுடன் இப்பிறவியில் நாம் பிறந்திருக்கிறோம்.

இம்மூட்டைகளில் உள்ள பலன்கள் பிறந்தவுடன் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த ஜென்மத்தில் அப்படி நமக்கு பலன்களைக் கொடுக்கும் 'சஞ்சித  கர்மாவிற்கு "ப்ரார்த்த கர்மா' என்று பெயர். இதில் நல்லவைகளும் தீமைகளும் கலந்தே இருக்கும்.

 "என்னுடைய பிராப்தம் இப்படி ஆகிவிட்டது என முன்னோர்கள் சொன்னதன் உற்பொருள் இதுவே..."

முன்னே நமது ஜென்மங்களில் செய்ததை தவிர்த்து, இப்பிறவியில், இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு, "ஆகாமி கர்மா" எனப் பெயர்.

பிறந்தது முதல் நாம் கொன்டு வந்த பாவ புண்ணிய மூட்டைகள் காலியாகிக் கொண்டுவரும் வேளையில், இப்போது நாம் செய்கின்ற நன்மை தீமைகள் அந்தன் தரத்தின் படி  பாவங்கள் பாவ மூட்டையிலும், புண்ணியங்கள் புண்ணிய  மூட்டையிலும் போய் சேர்ந்துவிடுகின்றன.

 'பெர்ஸ்ட் காம் பெர்ஸ்ட் செர்வ்ட்' அடிப்படையில் பழையனவற்றை அனுபவித்த பின்னரே, இப்போது போய் சேரும் பாவ புண்ணியங்களை நாம் அனுபவிக்க முடியும் .

இதற்கு இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுக்கவேண்டுமோ... அது கொண்டுவந்த மூட்டைகளில் மீதம் இருப்பதையும் இப்போது சேரும் பாவ புண்ணியங்களையும் சேர்த்து வரும் கணக்கின் அடிப்படையில் தான் தெரியும்.

 நாம் இப்போது 'பிரார்த்த கர்மாவின்' பலன்களையே அனுபவித்து வருகிறோம். நாம் செய்யும் நல்ல காரியங்களின் பலன்கள் 'சஞ்சித கர்மாவோடு' சேர்ந்திருப்பதால் அவற்றை அடுத்தடுத்த ஜென்மங்களில்தான் நாம் அனுபவிக்க இயலும்.

சஞ்சித கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் தத்தம் பணிகளைச் செய்யும் போது, இன்று நாம்  செய்யும் கர்மாக்கள் குறுக்கிட்டு ஒன்றும் செய்ய முடியாது.

பக்திகரமாக, பல நல்லனவற்றை நாம் செய்து வரும் போதுகூட நமக்கு எதிர்மறையான பலன்கள் கிடைப்பதும், பல பாவங்களுக்கும் காரணமானோர் நமது கண் முன்னே பிரமாதமாக வாழ்வது போல தோன்றுவதற்கும்  இதுவேதான் காரணம்.  நாம் செய்யும் இப்போதைய எதுவும் உடனே நமக்கு பலனலிக்காது.

நாம் அனுபவிப்பது நமது முந்தைய பூர்வ ஜென்ம கர்மாவின் பலன்களையே.  பல ஜென்மங்களினால் மாசு பட்டிருக்கும் நமது ஜெனம பலன்களை நம்மால் உணரவும், உதறித்தள்ளவும் இயலாது. 

வேத நூல்களில் உள்ளது போல ஞானத்தால் மட்டுமே,
ஞானத்தை அடைந்தவரால் மட்டுமே,
அதில் லயிப்பவரால் மட்டுமே இந்தக் கர்ம வினைப்பயன்களில் இருந்து விடுபட்டு பிறவியறுக்க முடியும்.

-நம்பகத்தன்மை உள்ள வலைத்தளங்களில் இருந்து எடுத்து தொகுக்கப்படும் வாழ்க்கைக்குத் தேவையான "விதியும் மதியும்" விவாத மேடைக்குச் சில...

No comments:

Post a Comment