Tuesday 10 July 2012

வந்து போய்விட்ட மலர்க் கண்காட்சி 2012...

வருகிறது வருகிறது, புத்ராஜெயா மலர் கண்காட்சி இதோ வருகிறது... என சொல்லி முடிப்பதற்குள் அது வந்து சென்று விட்டது.

ஆயிரக்கணக்கில் மக்கள் வந்திருந்தாலும், நம்மவர்கள் சற்று குறைவாகவே வந்திருந்தது தான் மனவருத்தமாக இருந்தது.

மலர் என்றால் முன்னனியில் இருப்பவர்கள் நாம். தினமும் பூஜைக்காக மலர் வாங்குவதில் அதிகம் செலவழிப்பவர்கள் நாம் என்றே நினைக்கிறேன். இருந்தும் இனாமாக அரசாங்கம் ஏற்று நடத்தும் இது போன்ற பிரமாண்டமான கண்காட்சிகளை நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சென்று ரசிப்பதில்லை.

குடும்ப மகிழ்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் இது போன்ற மனதை கவரும் இடங்களுக்கு போய்வருவது சிறப்பு சேர்த்திருக்கும். பலர் ஏனோ இதை அலட்சியம் செய்துவிடுகின்றனர்.

ஒன்று தெரியுமா...?

ஆழ்மனதுக்கு கூட விடுமுறையும் அமைதியும் வேண்டும். அப்போதுதான் அது எல்லா நேரங்களிலும் சரிசமமான மனப்போக்குடன் உங்களை கொண்டு செல்லும்; சரியான முறையில் உங்களின் திட்டமிடலையும், சிந்தனை போக்கையும் வழி நடத்தும். பலர் இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டனர்...

ஜூன் 30 தொடங்கி ஜூலை 8 வரை நடந்தேறிய 2012க்கான புத்ராஜெயா மலர் விழாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருக்கின்றனர். வெளி நாட்டிலிருந்தும் பல சுற்றுலா பிரயாணிகள் இதைக்கண்டு களித்திருக்கின்றனர்.

பலவித பூக்களின் அமர்க்களமான பூந்தோட்ட வடிவமைப்புகளுடன், ஒவ்வொரு இரவும் அலங்கரிக்கப்பட்ட மலர்ப் படகுகளின் அனிவகுப்பும், வான வேடிக்கைகளும் இடம்பெற்று மக்களின் மனதைக் கவர்ந்தது.

வழக்கமான பூக்களான மல்லிகை, சம்மந்தி, ரோஜா, ஹெலிகோனியா, ஒர்க்கிட் போன்றவற்றோடு, இவ்வாண்டின்  ஸ்பெஷலான 'காதிதப்பூவும்'  பிரமாதப்படுத்தப் பட்டிருந்தது....

இந்தமுறை, கடைசி மூன்று நாட்களில் சில உறவினர்களும் நண்பர்களும் எங்களோடு சேர்ந்து இந்த மலர்த் திருவிழாவை வலம் வந்து ரசித்தது பல நாள் நினைவில் நிற்கப்போகும் மகிழ்ச்சியான அம்சமாகும்.

மீண்டும் 'ஃபிளோரியா 2013டை' எதிர்பார்த்து காத்திருப்போம். அடுத்த ஆண்டு, "ஒர்க்கிட்" பிராதான மலராக அறிவிக்கப்பட்டிருக்கிறது...

No comments:

Post a Comment