Sunday 15 July 2012

தன்னம்பிக்கை. . .

எல்லா பொருள்களுக்கும் தயாரிக்கப்பட்ட நாளும் உபயோகப்படுத்தக்கூடிய கடைசி நாளும் இருக்கும்.  காலாவதியாகும் நாளுக்குள் அந்தந்த பொருட்களை உபயோகப்படுத்திவிட வேண்டும். இல்லையேல் அப்பொருள் பயனற்றதாகி விடும்.

மனிதர்களுக்கும் அப்படியே, முதலும் முடிவும் உண்டு.

ஆனால் ஒன்று, பிறந்த நாள் தெரிந்திருக்கும் நமக்கு போகும் நாள் தெரியாது.... ஒருவகையில் இதுவும் நன்மைக்கே.

'இன்றே  நம் வாழ்வின் கடைசி நாள் " என்பது போல, நாட்களைத் தள்ளிப் போடாமல் நல்லவற்றை உடனே செய்து முடிக்கலாம் என தன்முனைப்புத்தூண்டல் பயிற்சியாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தன்னம்பிக்கையை வளர்க்க சொல்லப்படுவது  இது.

"மலையையும் தூக்கலாம், மனமிருந்தால். மனமில்லையேல், ஒரு புல்லைத் தாண்டும் திறனும் இருக்காது" என பெரியோர் அடிக்கடி நமக்குச் சொல்லித்வருவது நமக்கு தன்னம்பிக்கை வருவதற்கே.

நம்மிடம் உள்ள ஆற்றலை அடையாளம் கண்டு செயல் வடிவம் தருவதே  தன்முனைப்புத் தூண்டல்  நிபுனர்களின்  குறிக்கோள். இவர்களின் பட்டறையில்  உத்வேகமும், உந்துதலும் தன்னம்பிக்கைக்கு எவ்வளவு  அவசியம்  என்பதனை சொல்லித்தருகிறார்கள்.

 எந்த ஒரு நல்ல விசயத்தையும் ஒரு சிறு தூறல் போல துவங்கி பின் பெரும் மழைபோல தொடரும் வழக்கத்தை தர வல்லது நம்முள் புதைந்திருக்கும் இந்த தன்னம்பிக்கை எனும் தீபம். இதனால் சலைக்காமல் போராடும் குணமும் இயல்பாகவே வந்திடும்.

சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் மனம் உடைந்து போவோர் நிறையவே இருக்கிறார்கள். குடும்பத்தகறாறு, நோய்கள் வந்துவிட்டதே எனும் மன உளைச்சல், கடன் தொல்லை.. இதுபோன்ற பல காரணங்களுக்காக  விரக்தி அடைகிறார்கள்.

இவற்றை சரியான முறையில் எதிர்கொண்டு நடக்கத் தூண்டுவதே 'தன்னம்பிக்கை'. எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஒரு தீர்வு நிச்சயம் உண்டு என எண்ணத்தூண்டும் உணர்வு இது.

நம்பிக்கையுடையோர்  மனம்  தளர்வதில்லை. கீழே விழுந்து விட்டோமே என கண் கலங்கி கிடப்பதில்லை.  மீண்டும் எழத்தொடங்கி விடுகின்றனர்.  இதுவே நம்பிக்கை உள்ளோருக்கும் இல்லாதோருக்கும் இருக்கும் வித்தியாசம்.

மனிதனாக பிறப்பெடுத்த நாம் அனைவரும் ஒருவகையில் வெற்றியாளர்களே. இது அறிவியல்பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை.

நேற்று ஜெயித்தோம்...இன்று ஜெயித்துக்கொண்டிருக்கிறோம்... நாளையும் ஜெயிப்போம். இதுதான் தன்னம்பிக்கை உள்ளோரின் தாரக மந்திரம்.

என்னால் முடியும்...
உங்களால் முடியும்...

நம்மால் முடியும்!!!

No comments:

Post a Comment