Wednesday 6 November 2013

நமது கணிப்பு: இம்முறையும் ஆனந்தே சாம்பியன்...

உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டி  நாளை  சென்னையில் திறப்பு விழா காண்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக இந்தப் போட்டி விளையட்டினை தொடங்கி வைக்கிறார்.

அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்து விட்ட நிலையில் உலகின் ஆரூடங்கள் பெருமளவுக்கு ஊடகங்களினூடே உலா வந்தவண்ணம் இருக்கின்றன.

பலவித கருத்துக்கணிப்புக்களும் அதற்கான காரணங்களும் செஸ் விளையாட்டினை உலகின் உச்சத்தில், மக்களின் பார்வையில் கொண்டுவந்துள்ளன. இது இன்னும் ஒரு மாதத்திற்கு தொடரும். வெற்றியாளர் இவர்தான் என தெரியும் வரை இந்த அரூடங்கள் மேலும் மேலும் வந்துகொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


கார்ல்சன், தனது மின்னல் வேக வளர்சியின் மூலம் உலகினை தன் கைப்பிடியில்   வைத்துள்ளார். இளம் வயதில் கஸ்பராவ் மற்றும் ஆனந்த் ஆடிய அட்ட வேகம் இவரிடம் இருப்பதை வைத்து, இம்முறை அவரே சாம்பியன் ஆவார் என பலரும் கருதுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் கார்ல்சன் ஜெயிப்பது நிச்சயமான ஒன்று என வெளிப்படையாக பேசுகின்றனர். அவரின் தொடர் தாக்குதலுக்கு ஆனந்த் பதிலளிக்க முடியாது ஆரம்பத்திலேயே படிந்துவிடுவார் என பல புகழ் பெற்ற விளையாட்டாளர்களும், பிரபலங்களும் ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் ஆனந்த் ஐந்து முறை சாம்பியனாகையால், தனது தற்காப்பு ஆட்டத்தினை அதற்கேற்றாற்போல்  தனது அனுபவ முத்திரையுடன் செயல்படுத்துவார் என அவர் மேல் நம்பிக்கை வைத்திருப்போர் கருத்துரைக்கின்றனர்.

உலக அரங்கில், அனேகமாக எல்லா மாநகரங்களிலும் இந்த செஸ் உலக போட்டிகள்தான் இன்றைய முக்கிய நிகழ்வாகவும்,  செய்தியாகவும்  இடம் பெறுகின்றது. 1972ம் ஆண்டுக்கப்புறமாக, செஸ் விளையாட்டாளர்களின், செஸ் அதிகாரிகளின், செஸ் பிரியர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இவ்வாண்டு நடைபெறும் உலக செஸ் போட்டிகள் தான்.  43 வயதான இந்திய வீரர் ஆனந்தை, நார்வேயின் 22 வயது இளம் ஆட்டக்காரர் கார்ல்சன் எதிர்த்து விளையாடுகிறார்.

 நியூ யோர்க்கில் உள்ள வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் கூட செஸ் பற்றிய பேச்சே முதன்மை வகிக்கிறது.

உளக தரவரிசை ஆட்டக்கார்கள், தங்களின் தேர்வாக இந்த இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் வெற்றிபெற எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு செஸ் காய்ச்சல் வந்து பல நாட்கள் ஆகின்றது போலும். திடீரென பல செஸ் வலைப்பதிவுகள் இணையத்தில் தோன்றிவிட்டன.

ஆனந்த் ஜெயித்தால், அது அனுபவம் ஜெயித்ததென்றும், கார்ல்சன் ஜெயித்தால் அது இளம் தலைமுறையினருக்கு கிடைத்த வெற்றி என்றும் ஊடகவியலாளர்கள் தங்களின் கருத்தாக பதிவிட காத்திருக்கிறார்கள்.

'இதில் உங்கள் முடிவு என்ன...?' என ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்டுக்கொள்ளும் கேள்வி எல்லா இடங்களிலும் ஒலிக்கக் காண்கிறோம்.

இம்முறை வெல்லப்போவது யாராயிருந்தாலும் சிறந்தவரே வென்றார் என போட்டியின் முடிவில் சொல்வோமானால் அதுவே நமக்கு பெரும் திருப்தி.

ஆயினும், பலரும் வற்புறுத்துவதற்கிணங்க நமது கணிப்பினையும் இங்கே குறிப்பிட வேண்டியதிருக்கிறது.  ஆனந்த் 6.5 க்கு  5.5 எனும் ஆட்ட எண்ணிக்கையில் கார்ல்சனை வீழ்த்துவார் என நான் எதிர்பார்க்கிறேன். ஆனந்த் இன்னும் ஒரு தவணைக்கு சாம்பியனாக இருக்க அனைத்துத் தகுதிகளும் கொண்டவர் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதன் அடிப்படையிலும், முக்கிய போட்டிகளின் போது அவரது சிந்திக்கும் தன்மை அபாரமாக இருக்கும் என பழைய அனுபவத்தை மனதில் கொண்டே இதை நான் குறிப்பிடுகிறேன்.

எனவே, ஆறாம் முறையாக இம்முறையும் ஆனந்தே வெற்றியாளராக வாழ்த்துவோம், வாருங்கள்.

No comments:

Post a Comment