Tuesday 17 April 2012

மகிழ்ச்சியாக வாழ . . .

மகிழ்ச்சியாக வாழ எல்லோரும் எண்ணுகிறார்கள். ஆனால் அதற்கான முயற்சிகளில் அவர்கள் இறங்கக் காணோம்.

என்  வயதை ஒட்டிய நண்பர்கள்  என்னை சந்திக்கும் போதெல்லாம் "அதெப்படி,  எப்போதும் உன்னால் மகிழ்ச்சியாக இருக்முடிகிறது?" என ஆச்சரியத்தோடு கேட்பது தறுவதில்லை..

இப்படி இருப்பது என்னுடைய இயற்கையான சுபாவம். இதை கட்டாயத்தின் பேரில் வரவழைத்துக்கொள்ள முடியுமா?

ஒவ்வொருவரும் தன்னுடைய சுய முயற்ச்சியில் பழகிக்கொண்டு வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டுமே அன்றி, மற்றவர் சொல்கிறார் என்பதனால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?

என நண்பர்கள் விடுவதாயில்லை...

எனது இயல்பான சுபாவத்தை அவர்கள் தெரிந்திருந்தாலும், என் வாயால் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்  என்றிருக்கிறது போல என மௌனமாக உள்ளுக்குள்ளேயே சிரித்துக்கொண்டேன்....

ஐந்து நிமிடங்களுக்கு பின், "இவ்வளவுதானா? இதிலென்ன பிரமாதம்?" என்றனர்.

இரண்டொரு வழிகளில் நான் சொன்னாலும், மகிழ்ச்சி என்பது குறுக்கு வழியில் அடையக்கூடியதா என்ன? பல உபகரணங்கள் உங்களுக்கு தோதாகவும் இருக்கவேண்டுமே?

மனதை இலகுவாக வைத்திருப்பது என்றேன்... எனக்குதெரியும் என்றனர்,
மன்னிக்கும் குணம் வேண்டும் என்றேன்.... அது சுலபம் என்றனர்,
பக்குவமாக நடந்துகொள்வது அவசியம் என்றேன்...அந்தப்பழக்கம் எங்களுக்குண்டு என்றனர்,
அனைத்தும் தெரிந்திருந்தால் அடுத்தது என்ன என்றேன்...
அதைத்தான் உன்னிடம் கேட்கிறோம் என்று புன்முறுவலிட்டனர்....

அவர்கள் மகிழ்ச்சியின் முதல் படிக்கு செல்லவேண்டுமாம்.... மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி ...?  டிப்ஸ் வேண்டுமாம்.

இதுபோல சொல்லிச் சொல்லியே நான் என்னுடைய குறைகளை வெளியே காட்டமுடியாமல் செய்துவிட்டனர். 

அவர்கள் கண்களுக்கு நான் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்பவன். ஆகையால், எனக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்காதென நினைக்கிறார்களோ...

'அட போங்கப்பா....

பாதி நேரம் என்னுடைய துக்கத்தையும் துயர்களையும் யாரிடம் பகிர்ந்து கொள்வதுன்னு தெரியாம தவிச்சிகிட்டு இருக்கேன்.... ' உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன்.

சொல்லிவிடுவது மிகச்சுலபம்.

ஆனால், அவர்கள் என்னைப்பார்த்து தாங்களும் என்னைப்போல ஆனந்தமாக இருக்க நினைக்கும் இந்நேரம் சொல்வது சிறப்பாகாது...

யாரிடமும் எவ்வித அனுதாபமும் எதிர்பார்க்காதோரில் நானும் ஒருவன்.

மற்றவர்களை வழி நடத்திச்செல்லும் பதவிகளிலேயே வாழ்க்கை போய்விட்டதால், அவர்கள் படும் சிரமங்களுக்கு தீர்வுகளையும் பரிகாரங்களையும் சொல்லிப் பழகிய எனக்கு என்னுடைய சொந்தப் பிரச்சினை எதுவும் பெரிதாக தெரிவதில்லை. காரணம் அவற்றை என் கண்களுக்கு அருகில் வைத்து பூதாகாரமாக பார்ப்பதில்லை.

அடுத்தக் கட்ட நடவடிக்கையிலே என் சிந்தனையும் செயலும் இருப்பதனால் எதையுமே நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இதுவே நான் எப்போதும் இனிமையாக இருக்கக் காரணம்.

 நன்றாக செஸ் விலையாடத்தெரிந்தோர் எதிராளியின் திறனைப் பாராட்டுவார்களே தவிர கவலைகொண்டு பயந்து ஓட மாட்டார்கள்.

 நானும் ஒரு செஸ் விலையாட்டாளன்.

எனக்கு வரும் பிரச்சினைகளை என்னுடைய செஸ் போட்டியாளரின் கெட்டிக்காரத்தனம் என எண்ணி அவற்றுக்கான தீர்வுகளைத்தான் ஆரய்வேனே ஒழிய, என்னால் முடியவில்லை என்று கைகளை தூக்கி தோல்வியை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

என்னுடைய மகிழ்ச்சிக்கு இதுவே முதல் படி.



No comments:

Post a Comment