Tuesday 17 April 2012

மறுமணம் . . .

எனக்குத் தெரிந்த பெண்ணுக்கு மறுமணம்.

32 வயதிலேயே கணவனை இழந்தவர். இரண்டு குழந்தைகளுக்கு தாய். விபத்தில் கணவர் இறந்து சில காலம் ஆகிவிட்டது.

கவலைகளும் பிரச்சினைகளும் தொடர்கதைகள் அல்ல. அவற்றை கடப்பில் போட்டுவிட்டு இப்படி முன்னேற்றகரமான பாதையில் அடியெடுத்து வைப்பது நல்லது என்றே என் மனதுக்குப் பட்டது. மகிழ்ச்சியாக வாழவே வாழ்க்கை. அதை ஒருமுறை இழந்திடுவோர் மீண்டும் அடைய நினைக்கக்கூடாதா என்ன...

 என்னை சந்தித்தபோது ,
"மாமரத்தின் மேல் கல்லை எறிகிறேன். விழுவது மாங்காயா அல்லது கல்லா என்று போகப் போகத்தான் தெரியும்" என்றார்.

 "இரண்டாம் தடவை கல்யாணம் என்றால் எத்தனை பிரச்சினைகள் முளைக்கும். யாருடன், எங்கே, எப்படி, ஏன் என்ற கேள்வியெல்லாம் எழும்பாதா?"

"புதுசாய் வருகிற கணவன் என்னதான் குணத்தில் தங்கக் கம்பியாக இருந்தாலும்... "

 "விதவைகள் வாழ்வில் மறுமலர்ச்சி எனபது மேடையில் பேச நல்லா இருக்கும் தான். ஆனால்  நடைமுறையில்...?"

ஏன்..அதில் என்ன தவறு?

 "ஓர் ஆம்பளை, பெண்டாட்டி செத்தா ரெண்டாங் கல்யாணம் செஞ்சுக்கறான். ஒரு பொண்ணு , தன் புருஷன் போயிட்டா மறுபடி ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறதில என்ன தப்பு?"


" தப்பே இல்லே. ஆனா, நிறைய வித்தியாசங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஒரு மனுஷன் பெண்டாட்டி செத்து , இன்னொருத்திய தாலி கட்டி, வீட்டுக்குக் கொண்டு வர்றப்ப என்ன செய்யறான்..."

"என்ன செய்யறான்..?"

"முதல் சம்சாரத்தோட போட்டோவைப் பெரிசா பிரேம் போட்டு சுவத்துல மாட்டி, மாலை  சாத்தி ,  ஊதுவத்தி செருகி , ரெண்டாந்தாரத்துகிட்ட "இவதான் உன் மூத்தாள்...கீழே விழுந்து கும்பிட்டுக்க"ன்னு சொல்லுவான். அவளும் சரிதாங்கன்னு விழுந்தெழுந்து    நமஸ்காரம்  செய்வா.. "

"இதே போல புருஷன் செத்துப்போய் ரெண்டாங் கல்யாணம் செஞ்சுக்கிட்டவ தன்  புது புருஷன்கிட்ட சொல்ல முடியுமா, “இவர் உங்க  அண்ணா ...வணங்கி ஆசீர்வாதம் வாங்க்கிகுங்க 'ன்னு..... ? "

"செருப்பைக் கழட்டிடுட்டு வந்திருவான்.."

 சோற்றில் அகப்பட்ட கல் மாதிரி உடம்பெல்லாம் கூசுகிறதே...

 "ஓர் ஆண்  தன் மனைவியை விவாகரத்து செய்திருந்தால், இரண்டாவதாய் வருபவளிடம் தீர்மானமாய் சொல்லிவிடுவான்....'இந்தா, அவ  ஒரு குணம் கெட்டவ.  அதனாலத்தான்  நான் அவளைத் தொலைச்சு தலை முழுகினேன். நீ, அவளை ஞாபக படுத்தற மாதிரி நடந்துக்காதெ..என்ன..புரிஞ்சுதா...அப்புறம் உன்னையும் உதறித் தள்ள  எனக்கு ரொம்ப நேரமாகாது...."

 இதேபோல கணவனை ஒதுக்கி, இரண்டாம் மணம் புரியும் பெண் சொல்ல முடியுமோ...?

மேலே  நாடகச் சாயலில்  உள்ளவை  அணுராதா  ரமணனின் கருத்துக்கள். பல வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்.  ஆனால், அவர் சொல்லுவது அனைத்தும் உண்மையென்றே படுகிறது.

இந்த உலகம் ஒரு பாரபட்சமானது. ஆண்களுக்கு ஒரு தனிச்சட்டம். அதை சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் கூட்டிக்குறைத்துக்கொள்ள ஆண்களுக்கு நன்றாகத்தெரியும்.  

எதார்த்தமாக  காரியங்களை நகர்த்தும் பெண்களுக்கு எந்தச் சட்டங்களும் உதவிக்கு வருவதில்லை.

 ஆண்களில்  இது போன்ற மறுமணங்களுக்கு திறந்த மனதோடு சம்மதிப்போரும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில்  மிகவும் குறைவு.

 னத்துணிச்சலும் தெய்வ நம்பிக்கையும் ஒன்று சேர்ந்த ஒரு கலவையாக,  வருவதை எதிர்கொண்டு வாழப் பழகவேண்டும். அப்போதுதான் வாழ்வில் குறுக்கிடும் சம்பவங்கள் நினைத்தபடி நடக்காத போது மனவலிமை அவர்களை கரைசேர்க்கும்.




No comments:

Post a Comment