Saturday 29 June 2013

வலி...

தலைவலி, இடுப்புவலி, முதுகுவலி, வயிற்று வலி, கைகால் குடைச்சல், முட்டுக்களில் வலி, மார்பு வலி, குனிஞ்சா நிமிர்ந்த வலித்தல் என பலவித வலிகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. அதுவும் வயதானோருக்கு சொல்லவே வேண்டாம். எந்த நேரம் எந்த வலி வருமோ என பயந்து கொண்டிருப்போரும் உண்டு.

நமக்கு ஏற்படும் உடல் வலிகளில் எந்த வலி மிகவும் அவஸ்தையானது எனச் சொல்ல முடியுமா?  வரும் வலிகள் அனைத்தும் தாங்கொனா துன்பத்தைத் தருவது போலத்தான் ஒவ்வொரு முறையும் உணருகிறோம். காது வலிக்கையில் அவ்வலி ஒரு பக்கம் தொடங்கி மறுபக்கம் குடைவது போல படுகிறது. கண் வலிக்கும் போது, பார்வையே இல்லாதது போல தோண்றுகின்றது.  பல் வலிக்கும் போது, கையாலேயே பல்லை பிடுங்கி விடலாமா எனவும் நினைக்க வைக்கிறது. இப்படியே மற்றவையும். இதில் எந்த வலி நல்ல வலி?

வலி நிவாரணத்துக்கு மருந்துகள் பெரிதும் உதவுகின்றன. பெனடோல், பொன்ஸ்டன், டிஃப்னல் என்பவை தற்காலிகமாக வலியினை நிறுத்தக்கூடிய மருந்துகளாகும்.

ஒரு சில பயிற்சிகள் மூலமும், சில நேரங்களில் தியானத்தின் மூலமும்கூட நமக்கு ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்தவோ, இல்லாமல் செய்யவோ முடியும் என பலரும் முயற்சி செய்துவருகின்றனர். ஒரு சிலர் இவ்வகையான யுக்திகளில் வெற்றி பெற்றதாக கூறிக்கொள்கின்றனர்.

பரீட்சார்த்த முறையில் இப்படி வலியினைப் போக்கும் செயல்கள் இருந்தாலும், இவற்றை அறிவியல் பூர்வமாக பார்க்கையில் வலி நிவாரணமாக மருத்துவர்கள் அறிவிக்க தயாராயில்லை. இது தனிப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் இருக்கும் வலியினை தாங்கும் சக்தி.  சிலரால் மட்டுமே முடியும் ஒன்று நமக்கு நிரந்தர தீர்வாகாது.

உண்மையில் வலி என்பது நோயல்ல, அது நோயின் அறிகுறி மட்டுமே. வலி ஏற்பட அடிப்படைக்காரணம் என்ன என்று தெரிந்து அதை குணப்படுத்துவதே சிறந்த மருத்துவமாகும்.

ஒரு சிலரைப் போலில்லாமல், எனக்கு ஏற்படும் வலியினைத் தாங்கிக் கொள்ளும் சக்தி குறைவு. உடனடியாக தகுந்த மாத்திரைகளை தேடி விழுங்கி விடுவேன். வலி என்றால் அப்படி ஒரு பயம் எனக்கு ஒரு காலத்தில். ஆனால், அருகில் இருக்கும் மற்றவர் வலியால் துடிக்கும் போது, எனக்கு ஏற்படும் வலி வர வர பெரிதாக தோன்றுவதில்லை. ( வயதாவதினால் ஏற்படும் மாற்றமோ..??? )

சில வலிகள் ஆபத்தானவை, அதில் மார்பு வலியும் ஒன்று. இரத்த ஓட்டம் இதயத்தில் தடைபடும்போது இந்த வலி தோன்றும். அந்த தடை அகற்றப்பட்டு விட்டால் வழ்க்கை மீண்டும் சுமூகமாக வழக்க நிலைக்கு வந்து விடும். இல்லையேல் ஆபத்துதான்.

இது போன்ற நேரங்களில் என்ன செய்யவேண்டும் எனும் விழிப்புணர்வும், எச்சரிக்கையும் மிக மிக அவசியம்.


No comments:

Post a Comment