Friday 19 October 2012

புத்தகக்கண்காட்சி . . .

எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, ஆங்காங்கே நடக்கும் புத்தக கண்காட்சிகளுக்கு சென்று வருவது.

ஒரே இடத்தில் பல புத்தகங்களையும் ஒருசேரப் பார்ப்பது கண்களுக்கு குளிச்சியான ஒன்று. பல பிரபலங்களின் புத்தகங்கள்  அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். நமது ஆசைக்கேற்றபடி உள்ளம் கவரும் புத்தகங்களை வாங்கி வரலாம்.

பொதுவாக புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் விலை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதனால், பலரும் இதுபோன்ற தருணங்களில் ஆர்வமோடு வந்து கலந்துகொள்கின்றனர். சில ஏற்பாட்டாளர்கள், பழைய புத்தகங்களை குவியல் குவியலாக மலிவு விலையில் கொடுக்கின்றனர். இது போன்ற சந்தர்ப்பத்தை பயன் படுத்தி பல புத்தகங்களை அள்ளிக்கொண்டு போவோர் பலர் உண்டு.

இன்டெர்னெட் வருகையினால் இப்போது பல இளைஞர்கள் புத்தகங்களை வாங்கி கைகளில் வைத்து படிப்பது குறைந்துவிட்டது. அவர்கள் நேரடியாக கம்ப்யூட்டர் திரையிலேயே தங்களுக்கு விருப்பமானதை படிக்கின்றனர். எவ்வித செலவுத்தொகையும் இல்லாது இனாமாக வலைத்தளங்களில் கிடைக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டு வருகிறது.

 நல்ல புத்தகங்கள் நமக்கு நம்முடைய வாழ்க்கையின் வழிகாட்டியாக அமைந்துவிடுவதுண்டு. பலரும் இதை உறுதி செய்கின்றனர். படிக்காத மேதைகள் சிலர் இருந்தாலும், படித்ததினால் அறிவு பெற்றோர் இந்த பாரினில் பலர் உண்டு.   இங்கே படிப்பு என்பது பள்ளிப்படிப்பு மட்டுமல்ல, வாசிப்பு பழக்கத்தின்பால் அறிவை வளர்த்து புகழ் பெற்றவர்களை குறிப்பிடுகிறேன்.

உண்மையில் புத்தகக்கண்காட்சியின் போதுதான் பல வகை அரிய புத்தகங்களையும் நாம் காணும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இது எனது அனுபவம். பல கடைகளுக்குச் சென்று தேடியும் கிடைக்காத ஒன்று, ஒரு நாள் இப்படியொரு புத்தகக்கண்காட்சியில் கிட்டியது. 1946ம் ஆண்டில் சர் எஸ்.முத்து ஐயங்கார் அவர்களின் ஆக்கத்தில் வெளியான மெட்ராஸ் வள்ளி பதிப்பகத்தாரின் ஆங்கில - தமிழ் அகராதி அது. அதற்குப்பின் பல புத்தகங்களை பார்த்திருந்தாலும், வார்த்தைகளின் விளக்கங்களும்,  பல பொருள் பட வார்த்தையினை உபயோகிக்கும்   விளக்கங்களும்,  வேறு எங்கும் அப்படி முழுமையாகக் காணோம்.

விலையாகாத நல்ல புத்தகங்களும் பல கடைகளில் இருந்து இப்படி மலிவு விலையில் புத்தகக்கண்காட்சிக்கு வந்து விடும். சிரமம் பாராது தேடிப்பார்த்தால் மனதுக்கு பிடித்த பல புத்தங்களை இங்கு நாம் காணலாம்.

இதுபோன்ற இடங்களுக்கு செல்லுவதே ஒரு இனிமையான உணர்வு. அடுக்கியும், அலங்கோலமாகவும், குவியலாகவும் கிடக்கும் புத்தகங்களை பார்ப்பதே ஒரு சுகம். அதிலும் சில புத்தங்கங்களின் தலைப்புகள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். நமது உள்ளக் கிடக்கையின் தாக்கத்தை அது போன்ற தலைப்புக்கள் வெளியிடுவது போலவும் தோன்றியதுண்டு.

 பொதுவாக அதிகாரப்பூர்வ புத்தகக்கண்காட்சியென்று வந்து விட்டால், அங்கு பெரும்பாலும் வயதானவர்களே மைய இடத்தை ஆக்கரமித்துக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் வருகையும், பிரபல எழுத்தாளர்களின் பக்களிப்பும் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு பலம் சேர்த்தாலும், இளம் வயதினரை கவரும் யுக்திகளையும் ஏற்று நடத்தும் பதிப்பகத்தினரும் புத்தகக்கடையினரும் தெரிந்து வைத்திருப்பது அவர்களின் தொழிலின்  பொருளாதார மேன்மைக்கு நல்லது. காரணம் இப்போது இளம் சமுதாயத்தினர் சினிமா குறுவட்டுக்களை சேகரிக்கும் ஆர்வத்தில் இருக்கின்றனர். அவர்களை புத்தகங்களின் பக்கம் திசை திருப்பும் பொறுப்பு மேல் குறிப்பிட்ட அனைவருக்கும் உண்டு.

பல சந்தர்ப்பங்களில் நான் வேறு ஒன்றையும் கவனித்திருக்கிறேன். நூல் நிலையங்களுக்கு போவோர் அனேகமாக இளையோரே. சில நடுத்தர வயதினரை அவ்வப்போது பார்க்கலாம். ஆனால், வயோதிக பெருமக்கள் அது தங்களுக்கு உகந்த இடமாக எண்ணுவதில்லை. ஒருவேளை, நூல் நிலையங்கள் இளையோருக்கு மட்டும் தானோ...?

எனது வசிப்பிடத்திலும் இதுதான் நடக்கிறது. நான் நூல் நிலையத்துக்கு சென்று நேரத்தை செலவிடும் அளவுக்கு என் வயதுக்காரர்கள் ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் காணோம். வருவோர் அனைவரும் பள்ளிப்பிள்ளைகளே...
இந்த எண்ணம் மனதைத் தாக்க, அங்கு வைத்திருக்கும் புத்தகங்களை நோட்டமிட்டேன். அறிவியல் தொடங்கி ஆய்வுக்கட்டுரைகள் வரை பெரியோருக்கானவைகளாக பல இருந்தன.

இலக்கியவாதிகள் காசு கொடுத்தால் தான் பேசுவோம் என்பதை விடுத்து, புத்தகக் கண்காட்சி போன்ற இடங்களுக்கு இனாமாக பேச முன்வரவேண்டும். இளையோர்களைக்கவர சுவாரஸ்யமான நகைச்சுவை தலைப்புகளில் பேசலாம்.  
நகைச்சுவைக்கு மயங்காதவர் யாரும் இல்லை. இது இன்னும் பலரை புத்தகக்கண்காட்சியின் பக்கம் கவனத்தை  திருப்ப உதவி செய்யும்..

இறுக்கமான வாழ்க்கையை இலகுவாக்க புத்தகங்களால்  முடியும். படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்வோம். அருகே நடக்கும் புத்தகக்கண்காட்சிக்கு சென்று வருவோம்....


No comments:

Post a Comment