Saturday 13 October 2012

மாற்றான். . .

மாற்றான் திரைப்படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் நேற்று கிடைத்தது. பில்லாவைப்போல முதல் பாதி இரண்டாம் பாதியென உள்ளூரிலும் வெளியூரிலும் எடுக்கப்பட்ட படம். சூரியாவின் இரட்டை வேட நடிப்பு மிக அருமையாக படமாக்கப்பட்டிருந்தது. அகன்ற திரையில் மட்டுமே கண்டு ரசிக்கவேண்டிய காட்சிகள் அவை. தொலைக்காட்சியிலோ டிவிடி, வீசிடி போன்ற சாதனங்களிலோ பார்க்க நினைப்போர் பெரிதும் ஏமாற்றமடைவர்.

அந்தக் காலத்தில் இருந்து பலவிதமான இரட்டை வேடங்களை சினிமாவில் பார்த்துவருகிறோம். எம் கே ராதா முதல் ஜீவா வரை பல படங்கள் அப்படி வெளி வந்து வெற்றிபெற்றிருக்கின்றன. எல்லா படங்களும் அந்தந்தக் காலத்துக்கு ஏற்றபடி சிறப்பாகவே எடுக்கப்பட்டிருந்தன.

எம் ஜி ஆர் தனது இரட்டை வேட நடிப்பால் புது பரிமாணத்தைத் தந்தார். 'எங்க வீட்டுப் பிள்ளையில்' அவரின் கோழையான பாவத்திலும், அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் ஆக்ரோஷமான பாகத்திலும் நடித்து மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார்.

கமலஹாசன் தனது 'அபூர்வ சகோதர்களில்' பார்ப்போரை ஆச்சரியப்படவைத்தார். உயரமாக ஒருவரும் குள்ளமாக ஒருவருமாக பிரமாதமாக வந்தது அந்தப்படம்.

ஒரு வரைமுறைக்கு உட்பட்டு எடுக்கப்பட்டு வந்த இது போன்ற இரட்டை வேடங்களை டைரக்டர் ஷங்கர் தனது ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரமாண்டப்படுத்தினார். ஒருவருக்கொருவர் மிகச்சாதாரனமாக தொட்டுக்கொள்வதும் கட்டியணத்துக்கொள்வதும் பிரசாந் நடிப்பில் அமர்க்களப்பட்டது.

அதற்குப் பின் எத்தனையோ படங்கள். சில நடிகைகளும் இது போன்ற இரட்டை வேடங்களில் ஜொலித்தார்கள். பார்த்திபன் கனவில் ஸ்நேஹாவின் காட்சி அமைப்புகள் ரசிக்கும்படியாகவே இருந்தது.

ஆயினும் இரட்டை வேட நடிப்பின் உச்சமாக இப்போது வெளிவந்திருப்பது "மாற்றான்". ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளைப் பற்றிய திரைக்கதை இது. உருவதில் ஒரே மாதிரியாக இருந்தாலும், குணத்தில் மாறுதலான இருவர். முதல் பகுதி ஹாஸ்யமாக முகத்தில் புன்னகையை தவழ விடும் அதே நேரம் இரண்டாம் பாதி விருவிருப்பாக துப்பறியும் தொடர்போல படு வேகமாக போகிறது.

குடும்பத்தோடு பார்த்து ரசிக்க ஒரு படம்... நல்ல படம் இது.









No comments:

Post a Comment