Sunday 7 October 2012

பிரசினைகளின் மறுபக்கம்...

மனதை ஒருமுகப் படுத்தி வாழ்வின் இலக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பதே எனத் தெரிந்து கொண்டால், நடக்கும் அனைத்தும் நன்மைக்கே என்பது புரிந்துவிடும்.

எல்லா  இடங்களிலும் பிரசினைகளை பார்க்கிறோம். எல்லோரும் தவிப்பதை பார்கிறோம். வாழ்க்கையே சரி இல்லாதது போல நினைக்கிறோம். ஆனால் 'உண்மையான பிரசினை நம்முள்ளேதான் இருக்கிறது' என்பதனை நம்ப மறுக்கிறோம்.

நம்மைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலாது. ஆனால், அவற்றை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது நிச்சயம் நம்மால் ஆன ஒன்றுதான். எல்லாவற்றையும் உணர்ச்சிவசமாக பார்ப்போரும் உண்டு, என்னமோ நடக்கிறது, என அலட்சியமாக ஒன்றும் நடவாதது போல எடுத்துக்கொள்வோரும் உண்டு. இரண்டுமே எல்லையின் இரு முனைகள். நடப்பவைகளை சீர்தூக்கிப் பார்த்து நடு நிலையில் சாந்தமாக கையாள்வதே சிறப்புக்குறிய பண்பாகும்.

 வாழ்வின் அனைத்திற்கும் மறுபக்கம்  ஒன்று உள்ளதாக சொல்வார்கள். பிரசினைகளின் மறுபக்கத்தை தேடி அடைந்துவிட்டால் அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழி என்பது தெரிந்துவிடும். பெரிய வேதாந்தம் போல் இது தோன்றினாலும், சற்றே சிந்தித்தால் இது சாத்தியமே என நமக்கு புலப்பட்டு விடும்.

பல பிரசினைகளுக்கு பணப்பிரயோகத்தின் மூலமாக தீர்வு காண்பது முடியாத ஒன்று. ஏனைய சிலவற்றுக்கு பலப்பிரயோகமும் பயனற்றுப்போய்விடும்.  சர்ச்சைக்குரிய அனைத்துக்கும் ஒரு மையமாக இருந்து செயல் படுவது நம் மனம் மட்டுமே. இங்கே தோன்றும் தெளிவான சிந்தனைகளே நமக்கு அமைதியான, அன்பான வாழ்வை ஏற்படுத்தி தருகின்றது. அபிவிருத்திச் செயற்பாடுகளை நமக்கு உத்தரவு இடுவதும் மனமே.  

வயதாகும் காலத்தில் நமக்கு ஏற்படும் சிந்தனை மாற்றங்களின் நன்மைகள் பல. ஒருவர் வயதானவர் என நாம் சொல்லும்போது உண்மையில் அவர் ஒரு அனுபவசாலி எனத்தான் நாம் சொல்ல வருகிறோம். ஆயினும், காலம் போனபின் நன்மைகளை உணர்ந்து நாம் செய்யப்போவது என்ன...? அதனால்தான் , வாழும் காலத்திலேயே சமயோசித சிந்தனையுடன் மகிழ்ச்சியின் ரகசியங்களை அறியத்தொடங்கிவிடவேண்டும் என்று    சொல்கிறோம்.

சாந்தி, சமாதானம்  என  மனத்தினை நேர்த்தியான சிந்தனைகளில் வைத்துக்கொண்டால், அங்கிருந்து வரும் கட்டளைகளும் ஆரோக்கியமானதாகவே இருக்கும்.



No comments:

Post a Comment