Tuesday 30 October 2012

ஜேம்ஸ்பாண்ட் 007 . . .

பாண்ட்... “
எனச் சொல்லி கண்களை உயர்த்தி, தலையை லாவகமாக அசைத்து,
 " ஜேம்ஸ் பாண்ட்..."
என முடிப்பது இந்த திரைக்கதாநாயகனின் தனிச் சிறப்பு.
அப்டியே ஒரு புன்னகை...அதுவும் உதட்டில் ஒரு சிகரெட் என படு ஸ்டைலாக தன்னை அறிமுகப்படுத்தும் காட்சிகள் மற்ற படங்களில் இல்லாதவை.  ஜேம்ஸ்பாண்டின் தனி அடையாளம் இது.



"பாண்ட்....ஜேம்ஸ்பாண்ட் ... " இதோ வந்துவிட்டார், தனது 23வது வீர தீர சாகசங்களோடு.

உலகத்திலேயே மிகப் பிரசித்தி பெற்றது இந்த கதாபாத்திரம். உலக மக்கள் அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி பார்த்து ரசிக்கும் படம் இந்த ஜேம்ஸ்பாண்ட் 007 தொடராகும். இந்த வருடத்தோடு ஜேம்ஸ்பாண்ட் படங்கள் திரையிடப்பட்டு 50 வருடங்கள் பூர்த்தியாவதால், இதன் கொண்டாட்டங்கள் உலக நாடுகள் பலவற்றில் அமர்க்களப்படுகின்றது.



முன்பு  எம்ஜிஆர் படங்களுக்கும், பின்னர் ரஜினி படங்களுக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் ஆரவாரங்களும் ஆர்ப்பாட்டங்களும் இந்த ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கு உலகெங்கிலும் உண்டு.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்குதான்
கொண்டாட்டங்களின் உச்சமே தவிர அதில் கதாநாயகனாக நடிப்பவர் என தனியாக இல்லை. அந்த ஜேம்ஸ்பான்ட் நாயக பாத்திரத்தில் இதுவரை   ஏழுபேர் நடித்துவிட்டனர். ஒவ்வொருவரும் அந்த பாகத்தை ஏற்று நடிக்கும் போது புகழின் எல்லைக்கு சென்றிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆயினும் புதியவராக ஒருவர் வரும்போது அந்த மதிப்பும் மரியாதையும் புதியவருக்கே போய்ச் சேருகிறது.  



"ஸ்கைஃபால் " என்னும் இவ்வருட புதிய படம் அந்த வகையில் ஜேம்ஸ்பாண்டாக 'டேனியல் கிரெக்' நடிப்பில் அவருக்கு புகழ் சேர்க்கும்  மூன்றாவதாக  வரும் படம்.  வழக்கம்போல அவரின் நடிப்பாற்றலை ரசிக்கும் அதே நேரம் பிரமாண்டமான அப்படக்காட்சிகளை பார்க்க உலகளவில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

மலேசியத் திரையரங்குகளில் நாளை வெளியீடு காணவிருக்கும்து  007 ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வெளிவரும் 23வது படமாகும். அமெரிக்காவில் கடந்த 26ம் தேதி திரையிடப்பட்டு  வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், ஐரோப்பிய நாடுகளில் வரும் நவம்பர் 9ல் தான் திரையிடப்பட இருக்கின்றது.


 (மேலுள்ள படங்கள் : சில இணையத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவை )

No comments:

Post a Comment