Saturday 25 August 2012

மொழிபெயர்ப்பின் 3 ரகசியங்கள் - ரா.கி.ரங்கராஜன்

புகழ்பெற்ற எழுத்தாளர்   ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மறைவினையொட்டி 1990களின் போது அவர் எழுதி குமுதத்தில் வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு பற்றிய கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருக்கிறேன். படித்து ரசிக்கவும். . .


கொஞ்சம் சரியாய் யோசித்துப் பார்த்தால் மொழி பெயர்ப்பு எழுத்தாளனாகத்தான் நான் வாழ்க்கையை ஆரம்பித்தேன் என்று புரிகிறது. அப்படியேதான் என் வாழ்க்கை முடியவும் போகிறது என்று தோன்றுகிறது. மொழி பெயர்ப்பு விஷயத்தில் ஒரு பெரிய வசதி என்னவென்றால், எவனோ ஒருத்தன் கஷ்ட்டப்பட்டு மண்டையை உடைத்துக் கொண்டு எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறான். அதற்குப் போய் 'பிரமாதம்' என்ற பாராட்டு நமக்குச் சுலபமாய்க் கிடைக்கும்.

என் அப்பா மகாமகோபாத்யாய ஆர். கிருஷ்ணமாச்சாரியார். அவர் சமஸ்கிருத பண்டிதர். அதனால் தமிழில் மொழிபெயர்ப்பார். என் அப்பா மொழிபெயர்ப்பாளராய் இருந்ததால் அது என் ரத்தத்தில் ஊறி எனக்கும் கொஞ்சம் வந்திருக்கும் என்ரு நினைக்கிறேன். அவர் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தார். நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு .

ஐந்தாம் ஃபாரம், ஆறாம் ஃபாரம் படித்துவிட்டுக் கொஞ்ச நாட்கல் சும்மா இருந்தபோது கும்ப கோணத்தில் பிரபலமாய் இருந்த சாது சேஷ்ய்யா லைப்ரரி என்ற நூலகத்துக்கு அடிக்கடி போவேன். பழைய லைப்ரரி. பழைய புத்தகங்கள். அங்கே போய் டிக்கன்ஸ் போன்ற எழுதாளர்களின் படைப்பை எல்லாம் படிப்பேன். ஷேக்ஸ்பியர், மில்டன் போன்றவர்களின் கவிதகளையெல்லாம் படிக்க மாட்டேன். விக்டர் ஹ்யூகோ, டூமாஸ் போன்றவர்களின் ஆக்ஷன் நிறைந்த கதகளைச் சுவாரஸ்யத்துடன் படிப்பேன்.


டிட் பிட்ச் பத்திரிகை அப்போதே வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு ஜோக் வெளிவந்திருந்தது. " நான் பாடிக்கொண்டே இருந்தேன். என் செவிட்டு அத்தை திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்" என்பார் ஒருவர். "ஓஹோ...திடீரென்று அவளுக்கு காது கேட்க ஆரம்பித்துவிட்டதா...?" என்பார் இன்னொருவர். இதைக் கல்கிக்கு மொழி


பெயர்ப்புச் செய்து அனுப்பினேன். பத்து ரூபாய்ப் பரிசு கிடைத்தது.

மௌளபரீஸ் ரோட்டில் சக்தி என்னும் பத்திரிகை ஆபீஸ் இருந்தது. வை.கோ தான் முதலாளி. சுப. நாராயணன், தி.ஜ.ர. ஆகியோர் இருந்தார்கள். அங்கே எனக்கு வேலை கிடைத்தது. முதலில் ஐபது ரூபாய் தருவதாகச் சொன்னார். என் அண்ணா சொன்னதன் பேரில் எழுபத்தைந்து ரூபாய் தர ஒப்புக்கொண்டார்.

அந்தக் காலத்திலேயே வை. கோ ஹிக்கின்பாதம்சூக்குப் போய் முன்னூறு நானூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு டாக்ஸியில் எடுத்துவருவார். அதையெல்லாம் மொழிபெயர்ப்புச் செய்யச் சொல்லுவார். எல்லாமே கம்யூனிஸ்ட் இலக்கியங்கள். ஆங்கிலத்தில் வந்த ரஷ்யப் புத்தகங்களை மொழிபெயர்ப்பேன். அவற்றைப் பிரசுரம் செய்வார். அனேகமாகச் சிறுகதைகள்தான்.

இப்படிக் காலம் போய்க்கொண்டிருந்தபோது கோயமுத்தூரில் பெரியசாமித் தூரன் அவர்கள் ஒரு பத்திரிகையை காலச் சக்கரம் என்ற பெயரில் ஆரம்பிக்கப் போவதாகவும் அதில் வேலை செய்ய உதவி ஆசிரியர் தேவை என்றும் தினசரியில் விளம்பரம் கொடுத்திருந்தார். அவருக்கு எழுதிப் போட்டேன். சென்னை சாந்தோமில் ஒரு விலாசம் கொடுத்து அங்கு வரப் போவதாகவும், தன்னை வந்து சந்திக்கும்படியும் எழுதி இருந்தார். போய்ப் பார்த்தேன். மிகமிகப் பிரியமாய்ப் பேசினார். என்னை வேலைக்குச் சேர்த்துக் கொள்வதாகய்ச் சொன்னார்.

 நான் ஏற்கனவே வேலை செய்துகொண்டிருந்த சக்தி பத்திரிகையில் முதலாளி வை.கோ. அவர்களிடம் மெல்லப் போய், நான் வேறு வேலையில் சேரவிருப்பதைத் தயங்கி தயங்கிச் சொன்னேன். அவர் சிரித்தபடி "தாராளமாய்ப் போய் விட்டு வா. நீ நன்றாய் ஓஹோவென்று வரப் போகிறாய். எங்கள் நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு வெளியே போய் வேறு வேலையில் சேர்ந்தவர்கள் எல்லோரும் இன்றைக்கு மிகவும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். நீயும் அதுப்போல் நன்றாய் இருப்பாய்." என்று வாய் நிறைய ஆசிர்வாதம் செய்து அனுப்பினார்.

நான் நேராய்க் கும்பகோணம் போனேன். அங்கேயிருந்து கோயமுத்தூர் போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே போனதும் என் அண்ணா விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னை பார்த்துக் கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்துவிட்டார்."எழுத்து மூலம் உனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் எதாவது வந்ததா?" என்று கேட்டார். நான் இல்லையென்றேன்.

"பின்னே எந்தத் தைரியத்தில் ஏற்கனவே இருந்த வேலையை விட்டாய்?" என்று என்னைக் கோபித்துக் கொண்டார். எழுத்து மூலம் ஆர்டர் இல்லாமல் நான் போய்ச் சேரக்கூடாது என்றார். நான் பெ. தூரனுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு, "எப்போது வந்து சேரட்டும்?" என்று கேட்டதற்கு அவர், " நாங்கள் எப்போது பத்திரிகை ஆரம்



பிப்பது என்றே இன்னும் முடிவு செய்யவில்லை. ஆரம்பித்தவுடனேயே உங்களை வரவழைத்துக் கொள்கிறேன்." என்று எனக்கு எழுதிப் போட்டுவிட்டார். அவ்வளவுதான். என் அண்ணா பார்த்தசாரதிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. கன்னா பின்னாவென்று கோபமாய் ஒரு லெட்டர் எழுதிவிட்டார். "என் தம்பி உங்களை நம்பி ஏற்கனவே இருந்த வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டான். இப்போது என்னடாவென்றால் இப்படிச் சொல்கிறீரே?" என்று கேட்டு எழுதியிருந்தார். அப்படியெல்லாம் கடிதம் எழுதுவதென்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் கடிதத்திப் பார்த்துவிட்டு பயம் ஏற்பட்டதாலோ என்னவோ, என்னை  உடனேயே வந்து சேருமாறு அவர்கள் எழுதிவிட்டார்கள். என் அண்ணா எழுதியிருந்த கடிதத்தில், " நீங்கள் வேல தராவிட்டாலும் அவனுடைய காலச்சக்கரம் சுழலும்" என்று எழுதியிருந்தார். அந்தப் பத்திரிகையின் பெயரும் காலச்சக்கரம் என்பதால் அதை வைத்து அப்படி எழுதி விட்டதில் அண்ணாவுக்கு மிகவும் பெருமை.

தன் கடிதத்துக்கு நல்ல பலனும் இருந்தது பற்றி மிகவும் மகிழ்ந்து போனார். என்னை அனுப்பி வத்தார். நான் கோயாமுத்தூர் போனேன். சி. சுப்பிரமணியம் வீட்டில்தான் காலச்சக்கரம் ஆபீஸ் இருந்தது. அதற்கு இரண்டு ஆசிரியர்கள். பெரியசாமித் தூரன் ஒரு நாளும் பெரியசாமிக் கவுண்டர் என்பவர் இன்னொரு நாளும் வருவார்கள். நான் மற்ற நாட்களில் பத்திரிகையப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் என்னிடம், "டைம் பத்திரிகையப் போல் நம் பத்திரிக வரவேண்டும்." என்று சொன்னார். நான் டைம் பத்திரிகையெல்லாம் அதிகம் பார்த்தது கிடையாது. நான் எப்படி என்று கேட்டபோது, " பத்திரிகையில் படங்களே கூடாது. செய்திகள்தான் அதிகம் இருக்க வேண்டும்." என்றார்.

நான் ஏற்கனவே கம்யூனிஸ்ட் சிந்தனையுள்ள பத்திரிகையில் வேலை செய்ததாலும், கம்யூனிஸ்ட் நண்பர்கள் அதிகம் என்பதாலும், கம்யூனிஸ்ட் பத்திரிகைகளை வாங்கி அவற்றிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்து எழுத ஆரம்பித்தேன்.

ஒரு சமயம், காலச்சக்கரம் பத்திரிகையில் வரும் தலையங்கமெல்லாம் காரசாரமாய் இல்லை என்று பேசிக்கொள்வதாய்ச் சொன்னார்கள். ஏனெனில், இரண்டு ஆசிரியர்களுமே விவசாயிகள் என்பதால் விவசாயப் பிரசினைகளை மையமாமாய் வைத்தே தலையங்கம் எழுதிக் கொண்டிருந்தார்கள். என்னிடம் வந்து தூரன் அவர்கள், " ஏன் ரங்கராஜி ( என்னை அவர் இப்படித்தான் கூப்பிடுவார் ) நம்ம தலையங்கமெல்லாம் காரமாய் இல்லைன்னு பேசிக்கறாங்களாமே?" என்று கேட்டார். நானும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டேன்.

அப்போது அவர் என்னைத் தலையங்கம் எழுதச் சொன்னார். நான் கம்யூனிஸ்ட் சிந்தனையுடன், ஜெய்ப்பூர் காங்கிரஸ்சைப் பற்றியும், அப்போது நடந்து கொண்டிருந்த ரயில்வே ஸ்ட்ரைக்கை ஆதரித்தும் தலையங்கம் எழுதிவிட்டேன்.

கொஞ்ச நாட்கள் கழித்து, " ஏம்ப்பா, என்ன தலையங்கம் எழுதினே ரங்கராஜி?"

அந்த அளவுக்குத் தன் பத்திரிகையில் என்ன வருகிறது என்று அவரே கவனித்துப் பார்க்க மாட்டார். நான் என் தலையங்கத்தைப் பற்றிச் சொன்னேன். அவ்வளவுதான். " ஐயைய்யோ...அப்படியெல்லாம் எழுதாதே! சி. சுப்பிரமணியம் கூட என்னிடம் கேட்டார். எல்லோரும் உன் பத்திரிகையில் யாராவது கம்யூனிஸ்ட் இருக்காரா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் எழுதக் கூடாது" என்றார்.

டால்டாவ்ஸ்க்கியிம் 'கிரைம் அன்ட் பனிஷ்மென்ட்' என்று ரொம்ப நல்ல புத்தகம் ஒன்று உண்டு.



அதை மொழிப்பெயர்ப்புச் செய்ய ஆசை ஏற்பட்டது. ஒரு கொலையப் பற்றி மிகவும் அருமையாய் அதில் ஒரு பகுதி உண்டு. அது கொஞ்சம் கஷ்ட்டமான பகுதி. அதைச் சிரமப் பட்டு மொழிபெயர்த்தேன். சீனிவாசராகவன் அவர்கள் சிந்தை என்று ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு அனுப்பி வைத்தேன், பிரசுரமானது.

மொழிபெயர்ப்புக் கலையில் நான் ஏதோ சிறப்பாய் இருப்பாதாய்ச் சொல்கிறார்களே தவிர, அப்படியெல்லாம் இல்லை. அதெல்லாம் மிகவும் கஷ்ட்டம். மத்திய அரசாங்கத்திடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தில் என்னை மொழிபெயர்ப்பு செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். முதலில் குழந்தைகளுக்காகத் தாகூர் எழுதிய கதை ஒன்றைக் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அது சுலபமாய்ச் செய்ய வந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு, 'தி காம்ப்ளக்ஸஸ் அண்ட் பிரின்சிபில்ஸ் ஆஃப் பிராட்காஸ்டிங் இன் இண்டியா' என்கிற மாதிரி ஏதோ சிக்கலான தலைப்பு. எந்தெந்த நாட்டில் ஒலிபரப்புக் கலை எந்த நிலையில் உள்ளது என்று ஆரம்பித்து நிறைய இருந்தது. முதல் இரண்டு பக்கங்கள் மொழிபெயர்க்கவே எனக்கு இரண்டு நாட்கள் பிடித்தன. ஏனெனில் அதில் டெக்னிகல் வார்த்தைகள் மிகவும் அதிகமாய் இருந்தன. ஆகவே, இது எனக்கு ஒரு தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் அதில் எனக்கு ஆர்வம் இல்லாதது தான். ஆர்வமாய்ப் படிக்கக்கூடிய விஷயத்தை மட்டும்தான் சுவையாய் மொழிபெயர்க்க முடியும். பட்டாம்பூச்சி அப்படி சிறப்பாய் அமைய அதுதான் காரணம். அந்தப் புத்தகத்துக்குச் சுஜாதா மிகவும் பிரமாதமாய் ஒரு முன்னுரை எழுதிக் கொடுத்திருந்தார். என்னை ஆகா ஓஹோ என்ரு பாராட்டி எழுதியிருந்தார். அதில், 'ரங்கராஜன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதால்தான் அவருக்கு இவ்வளவு சிறப்பாய் மொழி பெயர்க்கவும் வருகிறது,' என்று எழுதியிருந்தார். ஆனால், எனக்கென்னவோ அந்தப் பாராட்டுச் சரியா என்று தெரியவில்லை. ஏனெனில் சாதாரணமாய் எனக்குத் தெரிந்த யாருமே, மூலத்தைப் படித்தால் மொழிபெயர்ப்பைப் படிப்பதில்லை. தமிழில் படித்தால் ஆங்கிலத்தில் படிப்பதில்லை. அதைப் படிப்பவரும் இதைப் படிப்பவரும் சந்தித்தால் என் பாடு ஆபத்துதான்.

ஏனெனில், மூல ஆசிரியருக்கு உண்மையில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று தெரிந்தால் என்னை வெட்டிப் போட்டுவிடுவார். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து அவர் எழுதியிருப்பதை அப்படியே கொடுக்க முயற்சி செய்தால் அதில் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது. வேகம், சரளம், சுவாரஸ்யம் இவைதான் ஒரு மொழிபெயர்ப்புக்கு அவசியம். நான் கஷ்ட்டப்பட்டுக் கொண்டு புரிந்துகொண்டு அதைக் கஷ்ட்டப்பட்டுக்கொண்டு இன்னொருவருக்கு விளக்குவானேன்?

நான் மொழிபெயர்க்கும் கதைகளை நிறையப் பேர் படித்துவிட்டு, இதைப் படித்தால் மொழிபெயர்ப்பு மாதிரியே இல்லையே என்று புகழ்கிறார்கள். நான் எங்கே மொழிபெயர்ப்பு செய்கிறேன்? படித்துவிட்டுத் தமிழில் அதையே எழுதிவிடுகிறேன். நடுவில் ஏதாவது புரியவில்லையென்றால் அதை விட்டுவிட்டு எழுதிக்கொண்டே போய்க்கொண்டிருப்பேன். புரிந்தால் அப்படியே எழுதிக்கொண்டு போவேன். மொழிபெயர்ப்பானாலும் என் சொந்த நடையில் எழுதிவிடுவேன். இதுதான் என் வெற்றியின் ( அப்படி ஏதாவது இருந்தால் ) ரகசியம்.

- புத்தக நண்பர்கள் நூலகக் கூட்டத்தில் ரா.கி.ரங்கராஜன் ( தொகுப்பு : பாமாஜி )

நன்றி : குமுதம் 




என் பார்வையில் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்களின் சிறந்த படைப்பாக இங்கே உள்ள 'பட்டாம்பூச்சி' நாவலைத் தான் சொல்வேன். தமிழில் படிக்கும் போது 'சஸ்பென்ஸ் ' தாங்காமல், ஆங்கிலத்தில் 'பாப்பிலான்' என வெளிவந்த இந்த புத்தகத்தை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கேட்டு அலைந்து,  கண்டுபிடித்து வாங்கி வந்து, பாதி விளங்கியும் மீதி விளங்காமலும் படித்து முடித்ததை நினைவுகூர்கையில் அந்த இளமைக்கே பறந்து சென்று மீண்டும் வந்தது போன்ற ஒரு பிரம்மை.


மேலே: 13.4.1972ம் தேதி முதன் முதலில் குமுதத்தில் அச்சிடப் பட்ட 'பட்டாம்பூச்சி' நாவலின் முதல் அத்தியாயம். அன்று குமுதத்தின் விலை 30 மலேசிய காசுகள் ( இன்று 2.70 ம.ரி ). அன்றைய வாசகர்களிடம் இன்னொரு பழக்கமும்  இருந்தது. தங்களது விருப்பமான எழுத்தாளரின் தொடர்கதைகளை சேகரித்து 'பைன்டிங்' செய்து வைத்துக்கொள்வார்கள். 'பட்டாம்பூச்சி' நான் சுமார் நூறு வாரங்களாக சேகரித்து வைத்து, இன்றும் அழகு பார்க்கும் ஒரு புத்தகமாகும்.


No comments:

Post a Comment