Thursday 27 September 2012

படித்ததில் பிடித்தது....ஆகஸ்ட் அதிர்ச்சி

- சஸ்பென்ஸ்  எழுத்தாளர்  ராஜேஷ்குமார்.

ஒரு இரண்டு வருஷ காலம் தொடர்ந்து வாரம் ஒரு சிறுகதை எழுதி குமுதத்துக்கு மட்முமே அனுப்பி வைத்தேன். ஆனால், எல்லாம் கிணற்றில் போட்ட கல்தான்.
'அனுப்பும் கதையைப் படிக்கிறார்களா இல்லையா?' - குமுதம் ஆசிரியரைப் பார்த்துப் பேசிட வேண்டியதுதான். ஒருநான்சென்னை புறப்பட்டேன்.

அது ஆகஸ்ட் மாதம். புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் குமுதம் ஆஃபீஸுக்கு எந்த பஸ்ஸில் போவது? ஒரு சர்பத் வண்டிக்காரரிடம் விசாரித்துக் கொண்டு, பஸ் ஏறி மேகலா தியேட்டர் அருகில் இறங்கி, ஒரு பெட்டிக் கடையில் விசாரித்து குமுதம் ஆஃபீஸ் தொட்டேன்.

"யாரைப் பார்க்கணும்?"

"என் பெயர் ராஜேஷ்குமார். கோயமுத்தூரிலிருந்து வர்றேன். ரா.கி.. ஸாரைப் பார்க்கணும்."

"உள்ளே போங்க... காட்போர்டு பலகையால் தடுத்த ரூம் ஒண்ணு வரும். ரா.கி.. அங்கேதான் இருப்பார்."

நான் உள்ளே நுழைந்தேன். மிகச் சிறிய அறை. ஒரு மேஜை மட்டுமே போடக்கூடிய அளவுக்கு இடப் பரப்பளவு. மேஜைக்குப் பின்னால் ஐம்பது வயது நிரம்பிய ரா.கி.. தூய  கதராடையில் பார்வைக்குக் கிடைத்தார். ஏதோ எழுதிக் கொண்டு இருந்தார்.

"வணக்கம்... ஸார்."

"வணக்கம்... உட்காருங்க" எதிரிலிருந்த நாற்காலியைக் காட்டினார்.
உட்கார்ந்தேன்.
  
நிமிராமல் எழுதிக்கொண்டே கேட்டார்.
"என்ன  விஷயம்? சொல்லுங்க...?!"


"என் பேர் ராஜேஷ்குமார்..."
"கோயமுத்தூரிலிருந்து வர்றீங்கன்னும் தெரியும். வந்த விஷயத்தைச் சொல்லுங்க."

"குமுதத்துக்குக் கதை அனுப்பியிருந்தேன்."

"அப்படியா சந்தோஷம்..."

"ரொம்ப நாளாச்சு. அதான் பார்த்துட்டுப் போலாம்ன்னு..."

"வந்தீங்ளாக்கும்!"

"ஆமா ஸார்..."

"இதோ பாருங்க ராஜேஷ்குமார்! நீங்க அனுப்பியிருந்த கதைகள் நல்லாயிருந்ததுன்னா நிச்சயமா குமுதத்துல வெளிவரும்."

"எல்லாமே நல்ல கதைகள்தான் ஸார்."
ரா.கி.. சிரித்தார்

சிறிது நேரம் எங்களுக்கு மத்தியில் ஒரு வேண்டாத மெளனம். "அப்புறம்?" என்றார்

நான் எழுந்தேன்.
"வர்றேன் ஸார்..."  என் குரலில் தெரிந்த சோகம், அவர் மனத்தை நெருடியிருக்கவேண்டும். எழுதுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்தார்.

"குமுதத்துக்கு நாலு கதை அனுப்பி இருப்பீங்களா?"
  
"இல்ல ஸார்... நூத்திப்பதிமூணு."

  
அதிர்ந்து போனவராகத் தம் கையிலிருந்த பேனாவை மேஜையின் மேல் போட்டு விட்டு நிமிர்ந்தார்.
  
"என்ன சொன்னீங்க... 113 கதையா?"
  
"ஆமா ஸார்...!"

 அவர் பார்வையில் ஒரு பிரமிப்பு. எழுந்து வந்து என் தோளின் மேல் கையை வைத்தார். குரலில் நிறைய இதம்.

 "ராஜேஷ்குமார், நான் பார்த்த ஆரம்பக்கால எழுத்தாளர்களில் நீங்ககொஞ்சம் வித்தியாசம். நிறைய எழுதி அனுப்பறதுல எந்தப் பிரயோஜனமும் கிடையாது. தரமா எழுதணும். ஒரு சின்னக் கருவை எடுத்துக்கிட்டாலும் அதுல ஒரு மாரல் இருக்கணும். கதையோட கடைசி வரியில் எதிர்பாராத ஒரு 'டெய்ல் ட்விஸ்ட்' இருக்கணும். இந்த ஃபார்முலாவைக் கடைப்பிடிச்சுப் பாருங்க. கதை பிரசுரமாகும். நிச்சயமா ஜெயிப்பீங்க" சொல்லிவிட்டு என் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.
  
நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அதற்குப் பிறகு ரா.கி.. சொன்ன ஃபார்முலாபடி சிறுகதைகள் எழுதி, அடுத்த எட்டு வருடங்களுக்குள் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முடித்து எழுத்துலகில் எனக்கென்று ஒரு நாற்காலி போட்டுக் கொண்டேன்.
  
1986-ம் வருடம் ஆகஸ்ட் 1-ம் தேதியன்று  ரா.கி..விடமிருந்து எனக்கு ஃபோன்.
  
"ராஜேஷ்குமார், அடுத்த வாரக் குமுதத்தில் உங்களுடைய தொடர்களையொன்று ஆரம்பமாக வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார். அறிவுப்பு வைக்க வேண்டும். உடனடியாக ஒரு தலைப்பைச் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு நிமிஷம்தான் அவகாசம். லைன்ல வெயிட் பண்றேன்."
  
என் இதயத் துடிப்பு உச்சத்துக்குப் போயிற்று. இன்ப அதிர்ச்சி என்னை அடித்துப் போட்டிருந்தது. அவகாசம் முடிந்ததும் மறுமுனையிலிருந்து ரா.கி..வின் குரல்.
  
"டைம் ஈஸ் ஓவர். தலைப்பைச் சொல்லுங்க. எஸ்.டி..டி. பில் ஏறிட்டே போகுது."

"ஸார்... இன்னிக்கு ஆகஸ்ட் 1. ஆரம்பத்திலேயே எனக்கு இன்ப அதிர்ச்சி. இந்த ரெண்டையும் சேர்த்துப் பார்த்ததுல  ஒரு தலைப்பு ஃப்ளாஷ் ஆச்சு... அது 'ஆகஸ்ட் அதிர்ச்சி...!" என்றேன்.
  
மறுமுனையில் அவர் சிரித்தார்.
  
"நீங்க சொன்ன தலைப்பைக் கேட்டு நான் அதிர்ச்சியாயிட்டேன் ராஜேஷ்குமார்! ஓர் எழுத்தாளன் இப்படித்தான் இருக்கணும்." - வழ்த்தினார்.
  
1986-ல் ரா.கி..வும், புனிதனும் என் வீட்டுக்கு வந்து உணவு உண்டதும், நான் இதில் உட்காரலாமா?" என்று ஒரு சிறு குழந்தை போல் கேட்டு அதில் உட்கார்ந்து சந்தோஷப்பட்டதும் என் வாழ்வின் வைர நிமிடங்கள்.
  
ரா.கி.. இன்று நம்மிடம் இல்லை.
  
1975 ஆகஸ்டில் நான் அவரை முதல் முதலாய்ச் சந்தித்தேன். இந்த 2012 ஆகஸ்டில் நான் அவரை இழந்தேன். இந்த ஆகஸ்ட் அதிர்ச்சியிலிருந்து நான் மீண்டு வர பல வருடங்களாகும்.

 

இனி என்னுடைய அறையில் நான் உட்காரும் நாற்காலியைப் பார்க்கும்போதெல்லாம் கண்களில் நீர் முட்டும். ரா.கி.. என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளவரை  ரா.கி..வும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
  
மரணத்துக்குப் பின்பும் வாழ்பவர்கள் எழுத்தாளர்கள் மட்டுமே!
  
- நன்றி: கல்கி



No comments:

Post a Comment