Saturday 11 January 2014

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்...

பத்திரிகையில் வரும் ஒரு சில நல்ல விசயங்கள் பலரையும் சென்றடைவதில்லை. பல காரணங்கள் இதற்குச் சொல்லலாம். அவ்வாறு
விடப்படும்  ஒன்றிரண்டு நல்ல விசயங்களை  நமது பதிவுகளில் அவ்வப்போது இடம்பெறச்செய்து வருகிறோம் . அந்த வகையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஒரு செய்தி அதன் முக்கியத்துவம் கருதி  இன்று இங்கே இடம்பெறுகிறது.


சிதறும் செல்வத்தை சீரான செயல்களுக்கு செலவு செய்வோம்... பி. ப. சங்கம் வேண்டுகோள்.

தைப்பூசம் நெருங்க நெருங்க தேங்காய்களின் விலையும் சிறுகச் சிறுக உயர்ந்துகொண்டே போவது அதிர்ச்சியைத் தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூருகிறது.

அதே நேரத்தில் உடைபடாத நிராகரிக்கப்பட்ட தேங்காய்களையும் சிலர் விற்று விடுவதாகவும் பி.ப.சங்கம் கல்வி ஆய்வு பிரிவு அதிகாரி என். வி. சுப்பாராவ் கூறினார்.

ஒரு பையில் 50  தேங்கய்காய்களை கட்டி, தேங்காய் உடைக்க வரும் பக்தர்களிடம் விற்கின்றனர்.ஆனால் அந்தப் பையில் நல்ல தேங்காய்களோடு நிராகரிக்கப்பட்ட சுமார் 10 அல்லது 20 தேங்காய்கள் இருப்பதை தேங்காயைக் காசு கொடுத்து வாங்குபவர் அறிவதில்லை. உண்மையில் இப்படி நிராகரிக்கப்பட்ட தேங்காய்களுக்கும் ஒரு பக்தர் பணம் செலுத்துகின்றார். இதனால் ஒரு பக்தர் ஏறக்குறைய 20லிருந்து 30 ரிங்கிட் வரைக்கும் ஏமாற்றப்படுகின்றார் என்றார் சுப்பாராவ்.

தேங்காய் விலையேற்றம் தொடர்பாக புலம்பிக் கொண்டிருக்கும் பக்தர்கள் இந்நேரத்தில் உடைக்கும் தேங்காய்களின் எண்ணிக்கையையும் குறைத்துக்கொள்ளும்படி அவர் வேன்டுகோள் விடுத்தார்.


தேங்காய் உடைப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், யாரோ ஒருவர் ஆயிரக்கணக்கில் உடைக்கின்றார் என்பதற்காக நாமும் காரணம் தெரியாமல் அவரோடு சேர்ந்து  ஆயிரக்கணக்கில் தேங்காய்களை உடைப்பது சரியாகாது என்றார் அவர்.

அநாதைகள், அபலைகள், கல்வியைத் தொடர முடியாமல் தவித்துக்கொண்டிருப்போர், பணம் இல்லாத காரணத்தால் நோய்க்கு சிகிச்சை பெற முடியாமல் இருப்போர் என்று தைப்பூச நாளில் இவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களின் சுமையைக் குறைக்கலாம்.

இதுவும் தெய்வத்திற்குச் செய்யும் பெரிய சேவைதன் என்றார் அவர்.

 நன்றி : மலேசிய நண்பன்

No comments:

Post a Comment