Tuesday 31 December 2013

புத்தாண்டு பிறக்கிறது...

எல்லாமும் மாறிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் மாறிக்கொண்டு இருக்கிறோம். நீங்களும், நானும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மாறிக்கொண்டுதான் இருக்கிறோம். உள ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ  மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையே, அன்றிருந்த சுற்றுப்புறச் சூழல் இன்றில்லை எனும் நிலையும் ஒவ்வொரு வருடமும் மாறிவருவதை நாம் பார்க்கிறோம்.

மாற்றம் ஒன்றே மாறாததென இதைத்தான் சொன்னார்களோ....


2013ம் ஆண்டும் மாறிவிடப்போகிறது... 2014குக்கு வழி கொடுத்து கடந்த வருடம் எனும் பட்டியலில் சேரவிருக்கிறது.  இவ்வருடத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கையில் மன மலர்ச்சியும் இருந்திருக்கலாம், மன அதிர்வுகளும் நிகழ்ந்திருக்கலாம்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. வேறுபாடான உணர்ச்சிகளோடு சென்றதை எண்ணிப்பார்க்கும் தருணம் இது. நடந்த அனைத்தும் நன்மைக்கே என ஏற்றுக்கொள்வதே நம் வாழ்வில் சிறக்க நாம் எடுக்கும் முடிவாகும். சென்றதை செலவெனக் கொண்டு, வருவதை வரவில் வைக்கும் துள்ளல் குணமே இன்று நமக்குத் தேவை.

புது வருட தொடக்கம் பலருக்கும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்.

முடிந்த ஆண்டில் செயல் படுத்த முடியாதவைகளை இந்த ஆண்டு முடித்திட சபதம் கொள்வோறும், தேவையற்ற பழக்கங்களையும், பயனில்லாத கொள்கைகளையும் உதறித்தள்ளிட முடிவெடுத்திருப்போரும் மீண்டும் ஒருமுறை தங்களது பட்டியலைச் சரி பார்த்திடும் வேளை இது.

புது வருட தீர்மானங்கள் பலவும் படாத பாடு பட்டிருக்கொண்டிருக்கும் இப்போது.  நான் இதைச் செய்யப்போகிறேன், அதைவிடப்போகிறேன் என பலர் எண்ணம் கொண்டிருக்கலாம். நல்லதை செய்ய எண்ணும்போது மகிழ்ச்சியடைவது இயற்கை. இந்த மகிழ்ச்சி திட்டமிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியபின் பல மடங்கு பெருகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆயினும் ஆண்டுக்கொருமுறை ஆண்டின் இறுதியில் தீர்மானங்களை பட்டியலிடுவதென்பது, அதே கால அளவில் சத்து நிறைந்த உணவுகளை உண்பது போல எனலாம். ஒரு வருடத்தில் ஓரிருமுறை நல்ல உணவை சுவைத்துவிட்டால் மட்டும் போதுமா? வருடம் முழுவதும் தொடர்ந்து உட்கொள்ளவேண்டுமல்லவா... ஆக, தீர்மானங்களும் அப்படியே. புத்தாண்டின் போது  நாம் போடும் தீர்மானங்கள் அவ்வப்போது சரிபார்க்கப்படவேண்டும்.
தேவைப்படும்  மாற்றங்களை செய்து  ஆண்டு இறுதிக்குள் ஆண்டின் துவக்கத்தில் நாம் எழுச்சியுடன் செய்த தீர்மானங்களை  நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். அதுவே ஆக்கப்பூர்வமான தீர்மானமாகும்.

நம்முடைய தனிப்பட்ட  தீர்மானங்களோடு இந்த சிலவும் சேர்ந்தால் பலருக்கும் நன்மையாய் அமையும்:-

  -   அனாவசிய அதிரடி செலவீனங்களைக் கட்டுப்படுத்தி, சேமிப்பை உயர்த்துவோம்.
  -   சாலைகளில் பொறுமை  கடைபிடிப்போம்.
  -   பெரியோர்களை மதிப்போம்.
  -   ஏழை எளியவருக்கு உதவுவோம்.
  -   மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கவனிப்போம்.
  -   இயற்கையை எதிர்த்து எதுவும் செய்யாமல் இயற்கையோடு ஒன்றிப்போவோம்.

மலேசிய நாட்டில் நாமும் நம் சமூகமும் முன்னேற நிறையவே சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அவற்றை அடைவது பற்றி திட்டமிடலாம,  நம் மொழி வளர தொடர்ந்து நாம் செய்யவேண்டியதையும் நினைவில் கொள்ளலாம்,  நாம் முன்னேறும் ஆதே நேரம், நம்மோடு வழிதெரியா  மற்றவர்களையும்  தோள் கொடுத்து கூட்டிச் செல்லலாம்.

எங்கு பார்க்கினும் கோயில்கள் எனும் நிலை வரத்தொடங்கிவிட்ட இன்று, நம்முடைய சமய அறிவை பெருக்கிக் கொள்ளும் அதே நேரம்,  தவறான சிந்தனைகளில், மூடப்பழக்கங்களில் மூழ்கிக் கிடப்போரை நல்வழி படுத்தும் அமைப்புக்களில் சேர்ந்து அவர்களுக்கும் ஒரு கை கொடுக்கலாம்.

வழக்கமான  சுய நலப்போக்கில்லேயே சிந்திப்பதை விடுத்து, இப்படி எத்தனை எத்தனையோ புது வருட திட்டங்களாக பட்டியலிட்டு அதன் படி நடக்க முயலலாம். பொது நலமும் நமது தேடல்களில் ஒன்றாக இருப்பது அவசியம். இதுவே நாம் தன்னிறைவு பெற்றவராய் திகழ உத்தமமான வழி.


குடும்பத்தில் அன்பு நிலைக்க பணிவை கடைபிடிப்போம்... 
வீட்டிலுள்ள பெரியோர்களை வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற்று இனிமையாக இந்த புது வருடத்தினை தொடங்குவோம்...

வயது பேதம் பார்க்காது, புத்தாண்டினை வரவேற்க காத்திருக்கும் இவ்வேளையில், நமது  பாதுகாப்புக்கும், நம்மைச் சுற்றி உள்ளோர் பாதுகாப்புக்கும் உரியனவற்றைச் செய்து, எல்லோரும் மன மகிழ்வுடன் வாழ்வில் சிறக்க, 2014ம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களை  அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

" இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பானாக...."

No comments:

Post a Comment