Tuesday 24 December 2013

சிறந்த சேவைக்கு நம் வட்டாரத்தில் இருவர்...


உயரிய சிந்தனைகள் எந்த இடத்திலும் தோன்றலாம்... இங்கு 'அங்கிள் ஜாக் காலை உணவகத்தில்' தங்களின் அடுத்தக்  கட்ட  திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் திரு செல்லதுரையும், திரு ரகுவும்...

"ஏதோ ஆசிரியராகப் பள்ளிக்கு வந்தோம், பணி செய்தோம். இனி நம்ம வேலையை நாம் பார்க்க வேண்டியது தான்...." என எண்ணி நடந்துகொள்ளுவோரே நம்மிடையே அதிகம்.

அப்படி சாதாரணமாக ஆசிரியராய் பணியைத் தொடங்கி, தனது திறமையினால் மாணவர்களிடத்தும், பெற்றோர்களிடத்தும் நற்பெயரைப் பெற்று தொடர்ந்து பல பதவி உயர்வும் பெற்று வெற்றி நடைபோடும் ஆசிரியப் பெருமக்கள் மிகவும் குறைவு. 

அந்தக் குறையை தீர்க்கிறார்கள் நம் சமூகத்தின் முக்கிய தூண்களாக திகழும் இந்த இருவரும். இவர்கள், முறையே பூகோளம் மற்றும் சரித்திரப் பாட ஆசிரியர்களாக அதீத திறமையுடன் செயலாற்றிய, செயலாற்றிக் கொண்டிருப்பவர்களாகும்.

ஐயா திரு. ஐ.செல்லதுரை அவர்கள், மெதொடிஸ்ட் (எம் ஈ எஸ்) இடை நிலை பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியாரக அனைத்து இன மாணவர்களுக்கும் சேவை ஆற்றியதன் வழி தனிப்பெரும் இடத்தை பெறுகிறார். பணி ஓய்வில் வீட்டில் வெறுமனே இல்லாது மதப் பிரச்சாரத்தில் தம்மை இணைத்துக்கொண்டிருக்கிறார்.

திரு ரகு, 'சரித்திர ஸ்பெஷலிஸ்ட்' எனும் பட்டப் பெயருக்குச் சொந்தக்காரர். இவரும் எல்லா இன மாணவர்களுக்கும் கல்வியின் அவசியத்தையும், கற்காவிடில் படப்போகும் துண்பங்களையும் துயர்களையும் 'கவுன்சலிங்' முறையில் சொல்லித்தந்து  பல மாணவர்களின் வாழ்வில் மறக்கமுடியா நபராகி வருகிறார். அத்துடன்,  'இந்து தர்ம மாமன்ற  பந்திங் அருள் நிலையத்தின் தலைவராகவும் தனது சேவையை தொடர்ந்து வருகிறார்.

எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் தங்களைத் நாடி உதவிக்கு வரும் எவரையும் இவர்கள் மறுப்பதில்லை.  அப்படி இவர்களிடம் உதவி பெற்று நல்ல நிலையை அடைந்தோர் இவர்களுடனே சேர்ந்து இவர்களின் சேவையை தொடர்வது மன மகிழ்ச்சி தரும் காட்சி.

வாய்ச்சொல்லில் வீரர்களாக வலம் வரும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த இருவரும் தங்களின் சீரிய குணங்களினால் வேறு படுகிறார்கள். பொருளாதாரம் மட்டும் இலக்கல்ல, சமூக முன்னேற்றமும் தேவை என தங்களின் சிந்தனைகளில் முன்னோடிகளாகத் திகழும் இந்த இருவரும் தனிப்பிறவிகளே...

No comments:

Post a Comment