Sunday 21 July 2013

சாலையில் வேண்டாம் வேகம்...

மெதுவாக போயிருந்தால் விலகிப் போயிருப்பேன்,
விரைவாகப் போனதால் விரட்டிப் பிடித்தேன்.."

என மரணம் சொன்னதாக, விபத்தின்போது மரணமுற்றவர்களில் சிலர் இறக்கும் முன் முனுமுனுத்ததாக முதலுதவிக்குப் போயிருந்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விபத்தில் இறப்பது ஒரு பயங்கரம். உடல் பாகங்கள் துண்டு துண்டாக அங்கும் இங்கும் சிதறிக்கிடக்க உயிர் சில நிமிடங்கள் இழுத்துக்கொண்டு,  துடி துடித்து இவ்வுலகை விட்டுப் போவது மிகக் கொடூரமானது. எதிர்பாரா விபத்து என்பது ஒரு புறமிருக்க, வேகக் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாவது தேவையில்லா விபரீதமாகும்.

10.10.10 அன்று, மாலை ஆறு மணிக்கு மலாக்கா பேருந்து நிலையத்தில் இருந்து கோலாலும்பூர் நோக்கி புறப்பட்ட விரைவு பேருந்து, 223கி.மீ சிம்பாங் அம்பாட் வடக்கு தெற்கு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. வேகத்தை கட்டுப்படுத்த இயலாது, பக்கத்தில் இருந்த தடுப்புக்கம்பிகளை மீறி எதிர் திசையில் வந்துகொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது அந்த பேருந்து.  ஒரு மைவி ரக காரின் மீது தலைகீழாக அது நின்றது பார்க்க பயத்தை தந்தது. சுமார் 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.




 ( என் குடும்பத்தினரோடு நானும் மலாக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது எங்கள் கண்களுக்கு முன்னர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்த விபத்து நடந்தது. சாலையில் அங்கும் இங்குமாக உயிரற்ற உடல்கள் கிடப்பதை பார்த்துக்கொண்டே கடந்து சென்ற அந்த காட்சி பயங்கரமான ஒன்றாகும்) 



அடுத்த சில நாட்கள் நாளிதழ்களில் பல கோணங்களிலும் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அதில் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. விசாரனையின் போது சக பேருந்து ஓட்டுனர்கள், வேகமாக பேருந்துகளை ஓட்டிவரும் நேரங்களில் சாலையின் ஒருபுறமிருந்து மறுபுறம் ஏதோ கருப்பாக ஒன்று கடந்து செல்வதை  கண்டாதகச் அதிகாரிகளிடம் சொல்லியிருந்தனர்.

 நமக்கு எழும் சந்தேகம் இதனால் இன்னும் வலுக்கிறது. வேகம் இருக்கும் இடங்களில் எமன் வந்துபோகும் சாயல் இருப்பது போலல்லவா ஆகிறது இவர்கள் சொல்வது.

சாலை, நாம் சவாரி போவதற்காகத்தான், சாகசம் புரிய அல்ல. அதுவும் பக்கத்தில் இருப்போர் மெச்சிக்கொள்ள காரை வேகமாக ஓட்டுவோரும் நம்மிடையே உண்டு. யோசிக்கும் தன்மை உடையோர் இப்படி அநாவசிய, அபாய கணிப்பீடுகளை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். 'ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போல' என தங்கள் திறனை சாலையில் காட்டி பிதற்றியோரில் பலரை இப்போது காணோம்.

அவசரம் + வேகம் = மரணம்.

இந்த புது ஃபோர்முலாவை மனதில் வைப்போம்.
அதிவேகம் மரணத்திற்கு  பிடித்த அம்சம். எமன் அங்கே பல் இளிக்கிறான்.

சாலையில் வேண்டாம் வேகம், அங்கே விவேகமே போதும்.

No comments:

Post a Comment