Wednesday 24 July 2013

கோயிலும் நூல் நிலையமும்...

மலேசிய தமிழர்களின் குறையாகவும், ஆதங்கமாகவும் இருப்பது, மானியம் எனும் பெயரில் கோயில்களுக்குக் கொடுக்கப்படும் கணிசமான தொகையினை சரியான, முறையான வகையில் சமூக முன்னேற்றத்திற்கு உபயோகப்படுத்தாததே ஆகும்.

இருக்கும் கோயிலை உடைத்துவிட்டு ( அது எவ்வளவு பெரியதாகவும் சிறப்பாகவும் இருந்தாலும்கூட ) இன்னும் பெரியதொரு அமைப்பில் கட்டுவதற்கே அனைத்து ஆலய நிர்வாகங்களும் முனைப்பு காட்டுகின்றதே தவிர மக்களின் சமய விழிப்புணர்வை தூண்டும் செயல்களில் சிந்திக்கவும் காணோம், சமூகம் சீர்படவும் காணோம்.

" கோயில் இல்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம் " என்பது நம் முன்னோர் சொன்னது. அதுமட்டுமா சொன்னார்கள், "கோபுர தரிசனம் கோடி புண்ணியம் " என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால்  'இருக்கும் கோயில்களை இடித்துவிட்டு மேல் மாடி வைத்து இன்னும் கட்டிக்கொண்டு போ' என்றோ, 'ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒவ்வொரு கோயிலைக் கட்டிக்கொள்ளுங்கள்' என்றோ அவர்கள் சொல்லவில்லை..

உண்மையில் பெரியளவில் கோயில்களை நவீனமயமாக்கும் இவர்கள், தங்கள் கோயில்களுக்கு தினம் வரும் பக்தர்களை கணக்கெடுத்தால் சமூகத்துக்கு எவ்வித நன்மைகளையும் அவர்கள் செய்யவில்லை என்பதனை ஒப்புக்கொள்வார்கள்.

ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மூன்று கோயில்களை கொண்டிருக்கிறோம் நாம்.

இங்கே, மதம் என்பது வளர்ந்துவிட்டதாக எண்ணுவோர் மீண்டும் சிந்திக்க வேண்டும். இந்த தனித் தனி கோயில்களுக்கு தினமும் போவோர் பத்து பேர் கூட இல்லை, இருந்தும் இங்கே மூன்று கோயில்கள். நமது மதத்திற்கு விடப்படும் சவால் என்றே இதைக்கூற வேண்டும். மக்கள் வராத இடத்துக்கு ஏன் இத்தனை கோயில்கள்....? அல்லது மக்கள் வரும்படியான உபரித்திட்டங்கள் ஏதும் இல்லையா....? பொறுப்பில் இருப்போர் இதை அலசி ஆராய வேண்டும்.  எல்லாக் கோயில்களும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு நிதி உதவி பெற்றதன் பயனாக வெளிப்புற தோற்றம் மாறி இருக்கிறதே தவிர வேறு ஏதும் விசேசமாக மாற்றம் காணவில்லை. அப்படியானால் இவை நமக்குச் சொல்வதுதான் என்ன.....? நம்மிடையே உள்ள பிரிவினையையும் ஒற்றுமையின்மையையுமே இத்தனைக் கோயில்களும் காட்டுகின்றன. இல்லையேல், அருகருகே இதனை கோயில்கள் இருக்கவேண்டியதன் அவசியம்தான் என்ன....?

தமிழ் நாட்டில் துண்டைப்போட்டு ஓடும் பஸ்ஸில் இடம்பிடிப்பது போல இப்போதே எதிர்காலத்துக்கான இடத்தை பாதுகாத்து வைக்கிறார்களோ...?

சம்பந்தப்பட்டவர்கள் பல காரணங்களை கையில் வைத்திருக்கூடும். அவற்றைக் கேட்குமுன்னரே அவை நமது நேரத்தை வீணடிக்கும் ஒன்று என நாமே யூகித்துவிடலாம்.

இதில் குருபூஜை எனவும் அதற்கொரு ரத ஊர்வலம் எனவும் புதுமையைப் புகுத்துவதும் நாம் நிஜத்தில் எத்திசையில் பயணிக்கிறோம் எனும் சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.  "குறைந்த நேரத்தில் நிறைந்த இலாபம்" எனும் கருப்பொருளில் சில பிரிவுகள் நமது இயலாமையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்கள். சமய சன்மார்க்கத்தில் ஆர்வமுள்ளோர் கசடற கற்றுத் தெளிந்த பின் தங்கள் மதச்சேவையை தொடரவேண்டும். தவறுகள் குறைய இதுவே வழி. அறிவுச் சார்ந்த ஒன்றை அவர்கள் தங்களுக்கு பின்னால் வருவோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது அவர்களின் புகழை மங்கா ஒளியுடன் இரட்டிப்பாக்கும்.

தற்சமயம், வசதி உள்ளோரும், நிதியுதவி பெருவோரும் சமயத்தலைவர்களாக தங்களைக் அடையாளம் காட்டிக்கொண்டு செய்யக்கூடாத மாற்றங்களை மதரீதியில் செய்து வருகின்றனர். இது நல்லதல்ல. சங்கமும், மாமன்றமும் நாட்டுப் புறத்தில் நடப்பதை கண்டும் காணாதது போல இருப்பதும் சரியல்ல. அப்படி இதுபோன்றவை அவர்களின் கவனத்திற்கு எட்டவில்லை என்றால் அவர்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் செயல்பாடுகளை ஆராயவேண்டும். அவர்களின் பிரதி நிதிகளை இன்னும் அதிகரித்து தேவை ஏற்படுமானால் உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும். காரணம் காட்டும் கடிதம் ஒன்று அனுப்பினாலே பலர் தங்களை திருத்திக்கொள்வார்கள் என்பது பலரின் நம்பிக்கையாகும்.

கோயில்கள் வருடாந்திர திருவிழாக்களுக்கும் திருமணங்களுக்கும் மட்டுமே உபயோகத்தில் இருக்கின்றன. சங்கத்திலும் மன்றத்திலும் இருப்போர் நிருபர்கள் தேடிவந்தால் தான் வாயே திறக்கிறார்கள். அவர்களாக நாடு முழுவதும் பயணம் சென்று செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என பிரச்சாரம் செய்வதில்லை. பல நேரங்களில் இந்த சங்கமும் மன்றமும் எதற்கென்றே நினைக்கத் தோன்றுகிறது. எங்களூரில் அனாதைப் பிணங்களின் இறுதிச் சடங்குகளை இவர்கள்  மேற்கொள்வதை சில நேரங்களில் பார்திருக்கிறேன். அவ்வளவுதான். கோயில்களிலும் பிற இடங்களிலும் நடைபெறும் தவறுகளை தட்டிக்கேட்கும் நிலைக்கு அவர்கள் தயாராக இல்லை. " ஏன் இந்த வீண் வம்பு...?" என்றிருக்கிறார்கள். 

ஆனால், யாரும் எவரும் நமது சமூகம் விழிப்புணர்வு அடைவதற்கான அடிப்படைகளை எண்ணிப்பார்க்க நேரத்தை ஒதுக்குவதாக தெரியவில்லை.
தலைவர்கள் நாளிதழ்களில் அறிக்கைகள் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். பெற்றோர் தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்க்கிடக்கிறார்கள்.

இதனிடையே, வளரும் சமுதாயத்தை நல்வழி நடத்த எவ்வித புதுத்திட்டங்களையும் யாரும் அறிமுகப்படுத்தக்காணோம். நிதி சார்ந்த பல திட்டங்களே அவர்கள் கண்ணுக்குத் தெரியுமோ என்னவோ... அதற்கான போட்டிகளை பார்க்கும் போது நமக்கு பல சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. ஒரு சில கோயில்களில் அங்கத்தினர்களாக சேர்வதற்கு ஆயிரம் ரிங்கிட் கட்டனமாக வசூலிக்கப்படுகிறதாம். இவ்வளவும் கட்டி சிலர் அங்கு சேருகிறார்கள் என்றால் 'அவர்கள் சிறந்த சேவையாளர்கள்' என் கிறார்கள் சிலர். 'உண்மையாகவா? ' என கண் சிமிட்டுகிறார்கள் சிலர்.

இதற்கு தீர்வுதான் என்ன.....?



திரு,ரகு சரித்திரப்பாடத்தை போதிக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். தனது 30வது வருட அனுபவத்தில் சரித்திரச் சம்பவங்களை பள்ளிப் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் அதே நேரம் தன்முனைப்புப் பயிற்சியரங்கங்களையும், பட்டறைகளையும் நடத்தி மாணவர்களின் எதிர்காலத் தேவையறிந்து சேவை செய்து வருபவர், சரித்திரப் பாட 'ஸ்பெஷலிஸ்ட்'.

மாற்றி யோசிக்கும் தன்மையினால் சக ஆசிரியப் பெருமக்களாலும், பெற்றோர்களாலும் வரவேற்கப்படுபவர்.

தற்கால பிரச்சினைகளைப் பற்றி தன் சிந்தனையில் உதித்த கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இங்கு...

" நமக்கு இப்போ இருக்கிற பிரச்சினைகள் ரெண்டுதான் சார். கோயில்கள் புதிய வடிவில் நிர்மானிக்கும் அளவுக்கு அங்கே மத போதனைகள் இல்லை.  இறையான்மையை வெளிக்கொணர்ந்து கோயிலுக்கு வரவழைக்கும் வழிகளை பல இடங்களில் பின்பற்றவில்லை. தேவார வகுப்புக்களும் பரத நாட்டிய பயிற்சிகளும் ஆங்காங்கே  ஒரு சில இடங்களில்தான். மற்ற நேரங்களில் கோயில் ஒரு வெற்றிடம்.

தொலைக்காட்சி உள்ளவரை பெற்றோர்களையோ சீரியல்களையோ கட்டுப்படுத்த ஒருகாலமும் முடியாது. அதோடு பல வீடுகளில் பெரியோர்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு சீரியல்கள்தான்.  அதை தடுக்கும் நிலை நல்லதும் அல்ல...."

" மிஸ்டர் ரகு, அப்போ இதுக்கு வழிதான்  என்ன....?"

"இருக்கு சார்! நல்ல திட்டம் ஒண்ணு கையிலெ இருக்கு. சொல்றேன் கேளுங்க... ஒவ்வொரு கோயில் மண்டபத்திலும் ஒரு நூல் நிலையம் அமையனும். அங்கே இரவு 7ல் இருந்து 10வரை மாணவர்கள் வந்து அமர்ந்து அமைதியாக படிக்கும் வசதிகள் செய்துதரப்படனும்.  நூல் நிலையம் எனும்போது புத்தகங்கள் வாங்க செலவாகுமோன்னு சிலர் பயப்படலாம்.  நல்ல நெஞ்சங்கள் பல இதுபோன்ற சேவைகளுக்கு உதவ முன்வருவாங்க. இதுபோன்ற நூல் நிலையங்களை பராமரிக்கும்  பொறுப்பை கோயில் நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களில் தினம் இருவராக பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள கோயிலால் ஏற்பாடு செய்யப்படனும்.. அதுமட்டுமல்ல, போதுமான இடவசதி இருந்தா, நல்லுள்ளங்கொண்ட ஆசிரியர்கள் தங்கள் நேரத்தை இதுபோன்ற பயனுள்ள இடங்களில் செலவிட முன் வருவார்கள். இதை அருகில் இருக்கும் பள்ளியாசிரியர்களிடமோ அல்லது சுற்றுவட்டார தமிழ் ஆசிரியர்களிடமோ கலந்து பேசி உதவி கேட்கலாம். ஆனால், பிள்ளைகளின் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொறுப்பு கோயில் நிர்வாகத்தினுடையதாக இருக்கவெண்டும். காரணம் ஒவ்வொரு நாளும் பள்ளியில் பணிபுரிவதால் இந்த கூடுதல் பொறுப்பினையும் அவர்கள் மேல் சுமத்துவது சரியல்ல. அவர்கள் தங்கள் நேரத்தையும்  அறிவையும் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ள முன்வருகிறார்கள், அவ்வளவுதான்.

ஆனா,இது கோயில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நூலகமானதால், வெளியாட்களும் இங்கே வர முனைவார்கள், " நூலகம் பொதுவானது" எனும் கருத்தில். ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளும் சூழ் நிலை இருப்பதால், ஒழுக்கத்தினை பணையம் வைக்காது, முன் பதிவு பெற்றவர்களையே உள்ளே அனுமதிக்கவேண்டும். அப்படி பதிவு செய்துகொள்வோர் முறைகேடாக நடந்துகொள்ளும் போது, கோயில் பொறுப்பாளர்கள் அவர்களை கண்டிக்கவோ அல்லது காவல் துறையிடம் ஒப்படைக்கவோ வழிபிறக்கும். எதுக்கும் போலிசாரிடம் கோயில் சார்பாக நடக்கும் இது போன்ற வகுப்புக்களைப் பற்றி தகவல் தெரிவித்துவிடுவது இன்னும் நல்லது. அவர்களும் அவ்வப்போது இங்கு வந்து பார்வையிட ஏதுவாக இருக்கும். நாம் இங்கு பேசுவது முழுக்க முழுக்க பள்ளிப்பிளைகளுக்கான ஏற்பாடாகையால் பொதுமக்கள் இங்கே தலையிடாமல் இருப்பது நல்லது."

" நல்ல அருமையான ஐடியா, மிஸ்டர் ரகு. அப்புறம்..?"

" அதாவது சார், இதுல இன்னொரு சிறப்பும் இருக்கு.  இந்த நூல் நிலையத்தினுள் செல்லுமுன், கோயிலில் இறைவனை பூஜித்து விட்டுத்தான் வரனும்னு  கண்டிப்பா சொல்லிட்டோம்னா, இளம் வயதில் இறைநம்பிக்கையை சிறுகச் சிறுக அவர்களின் அறிவுக்கு புகுத்துகிறோம்னு இருக்கும். பிள்ளைகளை இங்கே விட வரும்போது, பெற்றோர்களும் கோயில் பூஜைகளில் கலந்து கொள்ள்வது ஏதுவாகும். 

கோயில்களில் அதிக ஆட்கள் வந்து பூஜிக்கும்போது அதன் பாசிடிவ் அதிர்வுகளினால் பல நன்மைகளை உடனிருப்போரும் பெறும்படி அமையும். இதனால்,  தங்களின் மனதை கண்டபடி அலைபாய விடமாட்டாங்க. அரசாங்கத்துக்கும், சமுதாயத்துக்கும் புறம்பான சீழறுப்பு வேலைகளில் ஈடுபட மாட்டாங்க. செய்வதறியாம வெளியிலே சுற்றித் திரியும் மாணவர்களின் போக்கு மாறவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.  அதே நேரத்தில் படிப்பதாக சாக்கு போக்கு சொல்லி கம்ப்யூட்டர் கேம்ஸ், ஃபேஸ் புக் என அடிமைப்பட்டுக்கிடக்கும் பிள்ளைகளுக்கான மாற்று இடமாக இந்த நூலகம் அமையும். நல்வழி, நல்லொழுக்கம் போன்ற சீரிய சிந்தனைகள் அவர்களிடம் குடிகொள்ள ஆரம்பிக்கும்.  பழக்கங்களே வழக்கங்கள் ஆகின்றன. ஒரு மாணவன் தொடர்ந்து பூஜையின் போது கோயிலும், அதன் பின் நூலகத்திலும் இருக்கும் செய்கையானது, நாளடைவில் அவனுள் எழும் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பு. அப்போது இவ்விடங்கள் இருப்பதை ஞாயப்படுத்தவே அவன் முனைவான். இது இய/ர்கை. எதிமறையாக தோன்றுகின்றவற்றாஇ கோயிலில் கிடைக்கும் பக்கிதியின் மூலமும்ம் நூலகத்தில் கிடைக்கும் பகுத்தறிவின் மூலமும் எதிர்கொள்கிறான். விளைவு.... அவன் எதிர்காளம் பிரகாசிக்கத்தொடங்கும் என்பதே...

சரித்திரம் இதைத்தான் கூறுகிறது. இறையருளோடு அறிவை விறுத்திசெய்துகொள்ளும் போது மேன்மக்கள் தோன்றுகிறார்கள்."

"பிரமாதமான கருத்துக்கள் மிஸ்டர் ரகு. அதிக செலவில்லாமல், பொதுச்சேவை செய்ய விரும்புகிறவர்கள் ஆர்வமோடு கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும். ஹ்ம்ம் மேல சொல்லுங்க சார்..."

"..ஹ்ம் ..சுருங்கச் சொன்னா...
   -  எப்போதும் காலியாக இருக்கும் கோயில் கல்வியில் முன்னேற    நினைக்கும் பிள்ளைகளுக்கு நல்ல இடமாகிறது.
   -  அரசாங்க மானியம் சரியான இலக்குக்குச் சென்றடைகிறது.
   -  பெற்றோர் நிம்மதி அடைகிறார்கள்
   -  சமூகம் மேம்பட அருமையான வாய்ப்புக்களை இங்கே நாம் பார்க்கிறோம்."

" சரித்திரப் பாடத்தை 30 வருடங்களுக்கும் மேலாக சொல்லித்தருவதனால, கொஞ்சம் பின்னோக்கிப் போய் பார்த்தா, இதுபோன்ற மாற்றங்கள் பொதுவில் நல்ல பலன்களையே தந்திருக்கின்றன. அதை சில இடங்களில் நான் கவனித்திருக்கிறேன். சுமார் நூறு வருடங்களுக்கு முன் உலகம் எப்படி இருந்தது, உலகமக்கள் எப்படி இருந்தனர் என்பதனை அலசும் போது சமூக சீர்திருத்தங்களின் பங்கினை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

மாற்றம் கொணர்ந்த 'தமடுன்கள்", மத, இன, மக்களை மாற்றிய 'ரிஃபோர்மேஷன்' என சிறிய அளவில் தொடங்கி அறிவுப்பட்டறைகளாக மக்களை உணரச்செய்தது நூல் நிலையங்களே. சில இடங்களில் அமல்படுத்தப்பட்டு அதன் வெற்றி தெரியவரும் போதுதான் பலரும் இதில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்."

" ஆமா மிஸ்டர் ரகு, உங்க கருத்து நிச்சயமாக வரவேற்கப்படவேண்டிய, போற்றப்படவேண்டிய ஒன்று.

"ஐடியாவ நாம சொல்லிட்டோம். நடைமுறைப்படுத்த வேண்டியது சம்பந்தப் பட்டவர்களின் பொறுப்பு."

எவ்வளவு நிஜமான வார்த்தைகள். பலரும் எதிர்பார்க்கும் மாற்றங்கள் கோயில் தர்மகர்த்தாக்களிடம் வருமா? திருமண மண்டபம் என வருமானத்தை ஈட்டும் இடமாக இருக்கும் அதே நேரம், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கும் அவ்விடத்தை சில மணி நேரங்கள் விட்டுக்கொடுக்க முன்வருவார்களா...?

 நாலடியார் இப்படிக்கூறுகிறது....

" நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ் நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று..."

பலருக்கும் பயன்படும் அறங்களை உடனே செய்துவிட எண்ணம் வேண்டும், காரணம் அவன் வருகிறான், விரைந்து வருகிறான். அதற்குமுன் செய்து புண்ணியம் தேடிக்கொள்.

No comments:

Post a Comment