Tuesday 30 July 2013

நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்...

நோயுற்று இருப்போருக்கு சிகிச்சைஅளிக்க   நாள்  நட்சத்திரம் பார்த்துக்கொண்டிருந்தால் என்னவாகும்? நோய் முற்றி உடல் இன்னும் மோசமடையாதா?

சிகிச்சை செய்வதில் அலட்சியம் காட்டினால் பின்பு அவருக்கு சங்கு ஊதவேண்டிய நிலை வந்தாலும் வரலாம். 3, 8, 16, 30ம் நாட்களில் பூஜைபோடவேண்டிய சூழ்நிலை உருவாகலாம்..

 நம்மில் சிலர் தெரிந்தோ தெரியாமலேயோ இந்த  மனப்பான்மையிலேயே வாழ்கிறோம்.
" அதுவாக சரியாகிவிடும்" என நோயாளி சொல்வதைக் கேட்டுக்கொண்டு,
 " அவரே சொல்கிறார்..." என்று அசட்டையாக இருந்துவிடுகிறோம். 
அல்லது "இது என் வேலையா?" என்கிறோம்.

எல்லோரும் அறிவாளியாக இருந்திட முடியாதுதான். இந்த உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எல்லோரும் புத்திசாலிகளாக இருந்திட முடியுமா?  ஆனால், நம் குடும்பங்களில் உள்ள நோயாளிகளையோ அல்லது திடீரென நோயில் வீழ்பவர்களையோ கவனிக்காது அலட்சியப் படுத்தும்படியான அறிவிலியாக  நாம் இருந்திட முடியுமா? நமது இந்த மானிடப் பிறப்பு அதற்கு இடம் தருகிறதா?

நோயாளியை மருத்துவரிடம் காண்பித்து அவருடைய உடல் நிலையைப் பற்றி தெரிந்துகொண்டு, அவருக்கு தேவையான சிகிச்சைக்கு உட்படுத்துவதே நோயுற்றவர்களுக்கு நாம் செய்யும் மனிதாபிமான சேவை. இதில் மாமியார் மருமகள் என்றோ மருமகன் மாப்பிள்ளை என்றோ பாகுபாடுகள் எதுவும் கிடையாது. அப்படி இருக்கவும் கூடாது.


ஒரு சில நேரங்களில், ஒரு சில குடும்பங்களில் நடக்கின்ற இதுபோன்ற எதிர்மறை நிகழ்வுகள் என்னைப்போல் பலரையும் திகைக்க வைக்கிறது.

அன்மையில் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், வயதான மூதாட்டி ஒருவர் இதய நோயால் துன்புறுவதை  கண்டும் அதன் தாக்கம் புரியாமல் வெறுமனே விட்டுவிட்ட அவ்வீட்டின் குடும்பத்தினர் செய்கையானது பலவித எண்ண ஓட்டத்தினை எனக்குள் ஏற்படுத்தியது.

சரியான நேரத்தில் மருத்துவர் கவனிப்பு பலரது உயிரைக் காத்து அவர்களை பழையபடி இயல்பான வாழ்க்கைக்கு மீட்டு வந்திருக்கிறது.

கண் திறப்போம், உடன் இருப்போரை கவனிப்போம்.

No comments:

Post a Comment