Monday 28 September 2015

ஞானக் கதிர்கள் ....

மாயமான் இரகசியம்
----------------------------------------
இராமாயணத்தில் சீதை மானைப் பிடித்துக்கொண்டு வரும்படி இராமனைக் கேட்டபோது , வந்திருப்பது 'மாயமான்' என்று சொல்லிப் பேசாமல் இருந்திருக்கலாம். பின் என் அவர் போனார்? ஏற்கனவே மனைவியின் சொல்லைக் கேட்டு, இராமனைக் காட்டுக்குப் போகச் சொன்ன 'கெட்டப்பெயர்' தன் தந்தை தசரதனுக்கு வந்துவிட்டது. இப்பொழுது தான், மாய மானைத் தேடிப் போகாவிட்டால், அந்தக் கெட்டப் பெயர் சரித்திரத்தில் தந்தைக்கு மட்டுமே நிலைத்திருக்கும். அப்படித தந்தையின் பெயர் மட்டுமே 'மாசு' படுவதை விரும்பாத இராமர் தனக்கும் கொஞ்சம் வரட்டுமே என்று தான் மாய மான் பின்னால் போனார்.

நீடாமங்கலம் கிருஷ்ணமுர்த்தி பாகவதர்.
வானொலி உரை. குமுதம் - 10-01-1985.

----------------------------------------------------------

'ஆ', 'மா' அர்த்தம்?
------------------------------------
ரம்ஜானும், கிறிஸ்துமஸ் பண்டிகையும் டிசம்பரில் வருகிறது. இது இப்படி இருக்க திருப்பாவை , திருவெம்பாவை பற்றி சைவ வைணவ பேதமாக சிலர் நினைப்பது என்?
திருப்பாவையின் 'முதல் பாட்டின் முதல் எழுத்து "மா".(மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்.....)
திருவெம்பாவையின் முதல் பாட்டின் முதல் எழுத்து "ஆ"(ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதியை.....).
ஆண்டாள் பாடிய 'மா' என்ற திருப்பாவைப் பாட்டின் முதல் எழுத்து , திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரைக் குறிக்கும்.
அதேபோல மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை யின் முதல் பாட்டின் முதல் வரியான 'ஆ' என்பது திருப்பாவை பாடிய ஆண்டாளைக் குறிக்கும்.

காஞ்சி பெரியவர் கூறியது - 27-05-1985
--------------------------------------------------------------------

பாரதியார்
-----------------------

காதல் பாடல்களை இயற்றிய பல கவிஞ்ஞர்களும், 'அடுத்த பிறவியிலும் நாம் இணை சேர்ந்து இருப்போம்; எனக்கு நீயே மனைவியாவாய் , உனக்கு நானே கணவன் ஆவேன்' என்று தான் பாடியிருக்கிறார்கள். பாரதியார் ஒருவர் தான் 'அடுத்த பிறவியில் நான் நீயாகவும், நீ நானாகவும் பிறந்து இணைவோம் ' என்று பாடினான்.
- வலம்புரி ஜான் கூறக்கேட்டது.


"காலா, என் காலருகே வாடா, உன்னை என் காலால் மிதிப்பேன் "என்றான் பாரதி. நாம் யாரையாவது மிதிக்கவேண்டுமென்று நினைத்தால் போய்த்தான் மிதிப்போம். "நான் உன்னை மிதிக்கணும், பக்கத்தில் வாடா" என்று கூப்பிடமாட்டோம். உயிரைப் பறிக்க வருகிற எமனையே "டே காலா...." என்றான் பாரதி. இந்த ஆண்மை, தன்னம்பிக்கை தான் தமிழ்க் கவிஞ்ஞனுக்கே உள்ள பெரிய சொத்து. அதனால்தான் எருமை வாகனத்தில் வரும் காலன், பாரதியின் உயிரைப் பறிக்க யானை மீது அம்பாரி வைத்து வந்தான்.
- வைரமுத்துவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வலம்புரி ஜான் கூறியது. ஆனந்த விகடன் (03-09-1989).



'பக்தி பாடல்களை, காதல் பாடல்களை, வேதாந்தப் பாடல்களைப் பாட பாரதிக்கு முன் எத்தனையோப் பேர் இருந்தார்கள், ஆனால் தேசியம் பாட அவன் ஒருவனே இருந்தான்.
- ம.போ.சி கூறக்கேட்டது. (03-10-1985)

-------------------------------------------------------------

வாய் - கண்
------------------------

வாய்
மற்ற எந்த அவயத்தையும் விட வாய்க்குத்தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது அதாவது சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு காரியம் இருப்பதாலேயே இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். "வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி" என்கிறபோது சாப்பாடு, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவது தான் தாத்பர்யம்.
-ஜகத்குரு சந்திரசேகரேந்திரர்.


கண்
பாரத இதிகாசங்கள் கண்களைச் சிறப்பித்துக் கூறுகின்றன. கடவுளைக் 'கண்' கண்ட தெய்வம் என்று சொல்கிறது. 'கண்' நம் வாழ்க்கைக்கு வழி காட்டியாய் அமைந்திருக்கிறது. திருதராஷ்டிரனுக்கு 100 குழந்தைகள் இருந்தும் ஒருவனைக் கூட நல்வழியில், ஒழுக்க நெறியில் கொண்டு செல்ல அவனால் இயலாமற் போயிற்று. அதற்கு அடிப்படைக் காரணம் அவனுக்குக் கண் இல்லாமை தான். கண் இருந்திருந்தால் அவர்களையும் பாண்டவர்களைப் போல நல்லவர்களாக உருவாக்கியிருக்க முடியும்.
-20-04-1987.

------------------------------------------------------------

மூன்று சகோதரர்கள் ...
-------------------------------------

ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் மூவரும் சகோதரர்களாக இருந்தாலும் குணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ராவணன் எப்போதும் பிறருக்குக் கெடுதலை நினைத்து, கெடுதலை செய்துவந்தான். கும்பகர்ணனோ கெடுதல் நினைக்க மாட்டான், நல்லதை நினைப்பான். ஆனால் கெடுதலைச் செய்வான். விபீஷணன் நல்லதை நினைப்பவன், நல்லதையே செய்பவன்.
- கி.வா.ஜ (23-7-1985)

--------------------------------------------------------------




No comments:

Post a Comment