Sunday 2 June 2013

ஆர்வமில்லா ஆசிரியர்கள்...

ஆசிரியர்கள் போற்றுதற்குரியவர்கள்.  தாய், தந்தையை தொடர்ந்து அவர்களே நம்முடைய மரியாதைக்கும், வணக்கத்திற்கும் உறியவர்களாகிறார்கள். ஆயினும் அன்மையில் நான் சந்திதித்த சில ஆசிரியர்கள் நமது எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக இருப்பது ஆச்சரியத்தைத் தந்தது.  கம்பீரமாகவும், எழுச்சியும் இல்லாது சோர்வாகவும், ஆர்வமில்லாதது போலவும் காணப்படுகின்றனர் ஒரு சில பள்ளிகளில்.

காப்புறுதி சார்ந்த உப தொழிலில் நான் ஈடுபட்டிருப்பதால், அவ்வப்போது பல இடங்களிலும் இருக்கும் ஆசிரியர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டுகிறது. அது போன்ற நேரங்களில் அவர்களின் தோற்றத்தையும், மன நிலையையும், அவர்களின் மனதிலிருந்து வரும் வாய்வழி வார்த்தைகளையும் வைத்துப் பார்க்கையில், அவர்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறதோ எனும் ஒரு கேள்விக்குறி என்னில் தோன்றவே செய்கிறது.

பத்து நிமிடப் பேச்சில் பலவாறான எதிர்மறை எண்ணங்கள் வெளிப்படுவதைக் காண்கிறேன். " என்னத்த இவனுங்க படிச்சி பாஸ் பண்ணப் போறானுங்க...?" என்றும், " வந்தேனா, படிச்சிக்கொடுத்தேனா, வேலையை செய்தேனா, வீட்டுக்குப் போனேனா'ன்னு இருக்கனும். அத விட்டுட்டு, எவன் நல்லா படிக்கிறான், எவன் நல்லா படிக்கலன்னு பார்க்க தொடங்கினா, அப்புறம் நான் 'டென்ஷன்" ஆயிடுவேன்..." என்றும் என்னிடம் நேரிடையாக சொல்லும் ஆசிரியர்களைப் பார்க்க ஆச்சரியம் மேலிட்டது.

தெளிவான இலக்கில்லாமல் மாணவர்களை எப்படித்தான் வழி நடத்துகின்றனரோ...? அதிலும் இவர்களின் தலமையாசிரியராய் பணியில் இருப்போர் என்ன பாடு படுகிறார்களோ...? நம் நாட்டில் இருக்கும் ஐனூற்று முப்பது  பள்ளிகளில் சில மட்டுமே சிறந்த பள்ளிகளாக அடையாளம் காணப்படுவது இதனால் தானோ..?

ஆசிரியப் பெருமக்களுக்கு விவேகச் சிந்தனை அவசியம். தங்களின் பொறுப்பிலுள்ள  மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கும்  அதே நேரம், அவர்களுக்கு 'விடாமுயற்சி வீண் போகாது" எனும் சீரிய கருத்தை தினம் தினம் நேர்மறை விமர்சனங்கள் மூலம் சொல்லித்தந்து, அவர்கள் சிறந்த அடைவு நிலையைப் பெறும்படி உறுதுணையாக இருப்பது, அவர்களின் சேவை மனப்பான்மையைக் காட்டுவதாகும்.  மாணவர்களுக்கு உற்சாகத்தினையும், உத்வேகத்தினையும் அளிப்பதற்கு இதுவே சிறந்த வழி.

ஆசிரியர்களில் சிலர் ( அந்த சிலரில் என் நண்பர்களும் சிலர் ) " நான் பள்ளியில் இல்லாவிட்டால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது " என தற்பெருமை பேசிக்கொள்கிறார்கள். பள்ளியின் புறப்பாட நிகழ்வுகளாயிருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். பல நேரங்களில் பள்ளிக்கூட நேரத்தின் போதே பல சொந்த காரணங்களை 'மேற்கோள்' காட்டி, வெளியில் உலவுகிறார்கள். 'சில' ஆசிரியர்களே இப்படி என பொறுத்துக் கொண்டாலும், இவர்களின் கீழ் படிக்கும் 'பல' மாணவர்களின் எதிர்காலம் பற்றி நமக்கு சந்தேகம் எழத்தான் செய்கிறது.

அனைவரும் மதிக்கும் தொழிலே ஆசிரியர் தொழில். அந்த மதிப்பை தங்களின் உயர்ந்த சேவையின் மூலம் சமூகத்திற்கு  திருப்பித் தரும் கடப்பாடும் ஆசிரியர்களுக்கு உண்டு. பல பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் புறப்பாட வகுப்புகளின் போதும், ஏனைய நிகழ்வுகளின் போதும் பல நல்ல ஆலோசனைகளைத் தந்து ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். இதுபோன்று ஒன்றிணைந்து செயல்படுவது மாணவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றதாக அமையும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினை நாட்டின் எதிர்கட்சியினைப் போல பார்க்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். இது தவறு.

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக எல்லாப் பள்ளிகளிலும் கொண்டாடப் பட்டு வருகின்றது. அது போன்ற நாட்களில் பள்ளிகள் திருவிழாக்கோலம் காணுகின்றன. ஆசிரியர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள். இந்த ஆனந்த நிலை  ஒட்டுமொத்தமாக எல்லா ஆசிரியர்களுக்கும் கிடைக்கிறது. ஆனால், தேர்வின் முடிவுகள் வரும் நேரத்தில் தோல்விகாணும் மாணவர்களுக்கு பொறுப்பேற்று வருந்தும் ஆசிரியர்கள் இருப்பதாக தெரியவில்லை. தோல்வியுறும் மாணவர் சுமை என்றுமே ஆசிரியர்களை பாதித்தாக காணோம். தேசிய அளவிலான தேர்வின் வெற்றி விழுக்காடினைப் பார்க்கையில், பல மாணவர்களின் தோல்வியில் தங்கள் பங்கு ஏதுமில்லை என்று நழுவி விடுகிறார்கள். மாணவர்கள் தண்டனையை அனுபவிக்க, அவர்களை சரிவர வழி நடத்தாத குற்றம் பெற்றோர் மீதே விழுகிறது.

இதில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரங்களில் சில ஆசிரியர்கள், பிள்ளைகளின் தோல்வியினை பெற்றோரின் பயமாக மாற்றி, தாங்கள் நடத்தும் "டியூஷன்" வகுப்புகளில் வந்து சேர்ந்து கொள்ளும் படி வற்புறுத்தி, கல்வியை வியாபாரமாக்கி விடுகிறார்கள்.

மாணவர்களின் அறிவுக்கண்களை திறந்து வைப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் செய்வது அறப்பணி, அவர்களுக்கு 'அர்ப்பணிப்பு மனம்' என பலராலும் புகழப்படுகிறார்கள்.  இந்த எண்ணத்தை நிலை நாட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு அவர்கள் கையிலேயே இருக்கிறது.

1 comment: