Saturday 1 June 2013

என் பார்வையில் தியானம் என்றால்...

ஆர்ப்பரிக்கும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி அதில் அமைதி காண்பதே தியானம்.  சுற்றி நடக்கும் செயல்களில் இருந்து விடுபட்டு சாந்தமாக இறைவனை நினைப்பது தியானத்தினால் நாம் அடையும் சிறப்பு. 

உண்மையில் தியானம் என்பது ஒரு தேடல்..... நமக்கு நாமே மேற்கொள்ளும் ஒரு பயிற்சி. நம் மனதை கட்டுப்படுத்தி, பலப்படுத்தும் ஒரு வித்தை. வித்தை என வரும்போது நமக்கொரு குருவும் அவசியம். ஆக நல்லதொரு குருவின் அருளால், இறையருளை அடைவதும் சாத்தியமாகும் நம் தியானத்தின் மூலம்.

ஆன்மீகத்துக்கு தியானமே முதலடியும் முதல் படியுமாகும்.. இல்லறத்தில் உள்ளோரை துறவறத்துக்கு மாற்றுவதல்ல இது. எங்கும் எதிலும் பரந்திருக்கும் ஆண்டவனின்  அருளால், மனமெனும் ஆழ்கடலை வென்று அவன் வசம் லயித்திருப்பதே தியானம் என்கிறார்கள் இதில் அனுபவமுள்ளோர்.  இதையே பலரும் தியான மன்றங்களில் எதிர்பார்க்கிறார்கள்.


ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினைகளும், அவருக்கு வரும் நோய்களும், அவர்மேல் விழும் சுமைகளுமே ஒருவரை தியானத்திற்கு இட்டுச்செல்லும் மூல காரணம் என்கின்றனர் தியான மன்றங்களை நடத்தும் இறை சிந்தனையாளர்கள்.

ஒவ்வொரு நாளும் ஆழ்மனதில் தோன்றி நம்மை அலைக்கழிக்கும் சிந்தனைகள் ஆயிரமாயிரம். அவை அனைத்தையும் அடக்கி வைத்து நம் உள்மனதில் தூய எண்ணங்களை விதைப்பது தியானமே.

தியானம் செய்ய புதிதாய் பழகுவோர் பல தடங்கள்களை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. தொடக்கத்தில், குடும்பத்தினரின் ஒப்புதலும், ஒத்துழைப்பும் இல்லாததும் ஒரு காரணமாகும். ஆயினும், தியானம் என்பதே வரும் இன்னல்களையும், கஷ்டங்களையும் இன்முகத்துடன் சமாளிப்பது தானே.


இறைவனை நினைத்து தியானிக்கும் போது தடைகள் தவிடுபொடியாகின்றன, சகல நன்மைகளும் நம்மை வந்தடைய ஆரம்பிக்கின்றன. இதை முழுமையாக உணரத்தொடங்கும் போது, தியானம் நெஞ்சினில் நிலைக்கும், நம்மையும், நம் குடும்பத்தினரையும் காக்கும். இத்தனைக்கும் மேலாக சாந்தம் நம்மை சூழ்ந்து நமக்கு இனிமையை தரும்.

பலர் பல பாதகங்களையும், பாவங்களையும் செய்துவிட்டு, தியானம் எனும் போர்வையில் அனைவரின் முன்னும் பரிசுத்தமான ஆத்மா போன்று பளிச்சிடும் வெள்ளை உடையில் கடவுளுக்கு சேவை செய்வதாக தங்களைத் தாங்களே நியாயப் படுத்திக் கொள்கின்றனர். இவர்களுக்காவே, " இங்கே வந்தால் உங்கள் கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படும் " என முழங்கும் ஆன்மீக சங்கங்களும், அமைப்புக்களும், தியான மன்றங்களும் இருக்கின்றன. இது தவறான உதாரணம்.

இளந்தலைமுறையினருக்கு முறையில்லாத ஒரு நம்பிக்கையை இவை அளிக்கின்றன. " பாவம் செய்தும் பாவம் தீர்க்க படிவோம் பின்பொரு நாள்.." என வயதான பின் பாவ மன்னிப்பு பெறுவோம் எனும் நினைவில் வாழ வழி செய்கின்றன இச்சங்கங்கள்.  உண்மைக்குப் புறம்பாக உழன்று திரிந்தபின் உத்தமராகி விட முடியுமா, பக்தியென்றும் தியானமென்றும் பேசத்தொடங்கிடும் போது....? 

பிறக்கும் போது கொண்டுவரும் நமது பாவ புண்ணீய மூட்டைகளில் நம் செய்கைகள் போய்ச்சேரும் என்று நம் மத நூல்கள்  சொல்கின்றன. ஆயினும், மனமுவர்ந்து திருந்திடுவோர், தங்களின் பாவக் கணக்கினை நிறுத்துவதற்கு தியானம் பெரும் பங்காற்றுகிறது என்று சொல்வதில் தவறில்லை. உடலையும் உள்ளத்தையும் மறுமலர்ச்சியடையச் செய்யும் சக்தி தியானத்திற்கு உண்டு.

தியானம் ஆண்டவனின் அருகில் சென்றிட வகை செய்கிறது. அவனை அடைந்தோர் அனைத்தும் அடைந்தோராகிறார்கள்.




No comments:

Post a Comment