Monday, 29 July 2013

காதில் விழுந்த கதைகள் ...2

பார்வை தெரியாத ஒருவன் தன் நண்பன் வீட்டுக்குப் போயிருந்தான். நேரமாகிவிட்டபடியால் வீடு திரும்பும் போது அவனுக்கு அவனது நண்பன் ஒரு விளக்கை கையில் கொடுத்து அதை ஏந்தியபடி போகச் சொன்னான்.

" நண்பா, எனக்குத்தான் பார்வை இல்லையே. இது எதற்கு? " என்றான் பார்வையற்றவன்.

" உனக்கிது தேவைப்படாதென்று என்று எனக்கும் தெரியும். ஆனால் உன்மேல் வேறு யாரும் வந்து மோதிடாமல் இருக்க இது தேவைப்படும்" என்றான் நண்பன்.

'அதுவும் சரிதான்' எனப்பட, விளக்கினை ஏந்தியபடி பார்வையற்றவன் திரும்பிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே எதிரே வந்தவன் ஒருவன் இவன்மேல் மோத இருவரும் கீழே வீழ்ந்தனர்..

" என்ன சார் நீங்க, முகத்துக்கு முன்னால் விளக்கினை தூக்கிப்பிடித்தாவாறு வருகிறேனே, இதுகூடவா உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை....?என்று கடிந்து கொண்டான் பார்வையற்றவன்.

" ஐயா உங்க விளக்கு அணைந்து வெகு நேரமாகிவிட்டது போலிருக்கிறது...." என்றபடி மோதியவன் அவ்விடம் இருந்து அகன்றுவிட்டான் .

ஒரு சிலர் அறிவுரைகள் ஒரு சில நேரமே நம்மை தாங்கிப் பிடிக்கும். விழிப்படைதலே நமக்கு நிரந்தர தீர்வாகும்.

காதில் விழுந்த கதைகள் ...1

மூன்று சாமியார்கள் சேர்ந்து ஒரு வாரத்துக்கு மௌனவிரதம் கடைபிடிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். பூஜைக்கு சில மெழுகுவர்த்திகளை வைத்துக்கொண்டு பூஜையை தொடங்கினார்கள்.

முதல் நாள் ஒன்றும் சிறமமாகத் தெரியவில்லை. இரண்டாம் நாள், பலத்த காற்றினால் மெழுகுவர்த்திகள் ஒவ்வொன்றாக அணையத் தொடங்கின.

ஒரு சாமியார், " என்ன இந்த காற்று மெழுகுவர்த்திகளை அணைத்திடும் போலிருக்கிறதே...?" என்று சொல்ல, அவர் தியானம் கலைந்தது.

அடுத்தவர், " சாமி நாம பேசக்கூடாது என்றல்லவா முடிவெடுத்து விரதம் கொண்டோம்" என்று தன்னையுமறியாது முதல் நண்பருக்காக வருந்தினார். அவரும் தியானத்தில் இருந்து வெளியேறும்படி ஆயிற்று.

அவ்விருவரின் தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மூன்றாவது சாமியார், "நாந்தான் கடைசிவரைக்கும் பேசலே" என்றார்.

மற்ற இருவரும், "சாமி இன்னும் 5 நாட்கள் இருப்பதை மறந்துவிட்டு நீங்களும் பேசிவிட்டீர்களே..." என்றனர்.

அடுத்தவர் தவறுகள் நமக்கு மலைபோல தெரியும். அப்படி அவற்றை சுட்டிக்காட்டுகையில், நாமும் அத்தவற்றை செய்யக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

விளங்காத வாழ்க்கை...

இளம் வயதில் பல நிகழ்வுகள் மறக்க முடியாததாக இருந்திருக்கும். எனக்கும் அப்படி சில உண்டு.  அவற்றுள் ஒன்றுதான் பின்வருவது.

5ம் படிவ பள்ளிப் பரிட்சை முடிந்ததும் வீட்டில் அப்பா திட்டுகிறாரே என்று வேலைத்தேடத் தொடங்கினேன். என்னோடு எனது இன்னும் மூன்று நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டனர். அவர்களது வீட்டிலும் இதே கதைதான்....சோகக்கதை. 

ஒவ்வொரு தனியார் நிறுவனமாக ஏறி இறங்கி வந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் ஒரு காவலாளி எங்களை அழைத்தார். பார்த்ததுமே நாங்கள் வேலை தேடித்தான் அழைகிறோம் என அவருக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.

"உள்ளே போங்க. ஒரு பரிட்சை வைப்பாங்க, பார்த்து எழுதுங்க..." என்று சொல்ல, அவசர அவசரமாக அந்த அலுவளகத்தின்  உள்ளே சென்றோம்.

100 கேள்விகள் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டது.
"இதில் 'செலெக்ட்' ஆகிறவங்களத்தான் இன்டெர்வியூவிற்கு கூப்பிடுவோம்" என ஒரு அதிகாரி விளக்கினார்.

பல கேள்விகளுக்கு விளக்கம் தேவைப்பட்டது. ஆனால் அப்படி விளக்கம் பெற முனைந்தால்  'நமக்கு ஒன்றும் தெரியவில்லை' என நினைத்துவிட்டால்...? 'தெரிந்ததை எழுதுவோம்' என முடிவு பண்ணி, ஒன்றறை மணி நேரத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு வெளியே வந்தேன்.

எனது நண்பர்கள் எனக்காக வெளியில் காத்திருந்தனர்.
"ஏன்டா இவ்வளவு நேரம்?" என வினவினான் ஒருவன்.

"ஏன், நீங்க மொதல்லேயே வந்துட்டிங்களா? எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சிருந்தது? எத்தனை பதில் எழுதினீங்க? " என ஆர்வம் பொங்கக் கேட்டேன்.

ஒருவன் 28 என்றான். மற்றவன் 29 என்றான். மூன்றாமவன் 30 என்றான். அனைவரும் என்னைப் பார்த்தார்கள். நான் பெருமையாக,
" என்னடா நீங்க... நான் நூறு கேள்விகளுக்கும் பதில் எழுதினேனே..." என்றேன்.

"அவ்வளவுதான் நீ ... போ..." என்றார்கள், அனைவரும் ஒரே குரலில்.

 "30 கேள்விகள் எழுதினால் போதுமாம். சரியான பதிலுக்கு மூன்று புள்ளிகள். பதில் தவறாக இருந்தால் ஒரு புள்ளி வெட்டப்படும். கேள்வித்தாளின் அடியே சிறு எழுத்துக்களில் கொடுத்திருந்ததை நீ கவனிக்கவில்லையா?"

"ஐயோ...." என்றேன். வேறென்ன சொல்ல முடியும்....?

வாழ்க்கையிலும் இதுதான் நடக்கிறது. அன்பைப் பரிமாறிக்கொள்ளும் அமைதியான வாழ்விற்கு பதிலாக, கோபம், களவு, ஆடம்பரம், அடிதடி என புரியாது போட்டியிடுகிறோம், புலம்புகிறோம்.

முடிவு?

 சுற்றிச் சுற்றி ஒரே இடத்திலேயே நிற்கிறோம்.  வீணாக நேரத்தை செலவிட்டதுதான் மிச்சம்.




Sunday, 28 July 2013

மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி?

பிரச்சினை என வரும்போது, எவ்வித விருப்பு வெறுப்புமின்றி அறிவின் துணைகொண்டு ஆராய்ந்தறிவோர் என்றென்றும் வாழ்வில் மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார்கள்.

சுடு சொற்களும், கடும் தண்டனைகளும் இவர்களிடம் இருந்து வராது. வாழ்க்கை அனைவருக்கும் சமமென நினைப்பவர்கள் இவர்கள்.  வாழ்க்கை வாழ்வதற்கே என வாழ்பவர்கள். அதனால் "வாழு, வாழவிடு" என்பதே இவர்களின் ரகசிய கடவுச் சொல்லாக இருக்கும்.

மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி என்போரைப்பற்றியே நாம் இங்கு  பேசிக்கொண்டிருக்கிறோம்.

அப்படியொரு தனிப்பிரிவாக யாரும் இல்லையென்றாலும் தாங்கள் கடந்து செல்லும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் சாதகமாக மாற்றுந் திறன் கொண்டோர் இந்த பட்டியலில் சேர்கிறார்கள்.

மற்றவர்கள் கையாளும் முறைகளைப்பற்றி அவ்வளவு தெரியாத நிலையில், நான் பொதுவில் எந்தெந்த வழிகளில் மகிழ்ச்சியாக இருக்க முனைகிறேன் என்பதனை பகிர்ந்து கொள்வதில் எனக்கெந்த ஆட்சேபனையும் இல்லை.

எப்போதுமே மற்றவர்களோடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. நான் நானாகத்தான் வாழமுடியும். என்னைவிட பல நற்குணங்கள் பலருக்கு இருக்கலாம், என்னைவிட மேல் நிலையில் அவர்கள் சுகமாக வாழலாம், ஆயினும் என்னிலும் வசதியற்றோரும், குணப்பண்புகள் குறைந்ததோரும் இந்த உலகில்  இருப்பதனால் நான் கவலைப்பட ஒன்றுமில்லை. எனவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  அடுத்தவர் மெச்சும்படியாக நான் எதையும் செய்வதில்லை. அதனால் பெரியளவில் பாதிப்பும் எதுவுமில்லை.

எல்லோருக்கும் குறைகள் உண்டு. அப்படி எனக்கும் உண்டு. ஆனால் என் குறைகளில் நான் என்றும் மிரண்டு போனதில்லை. அவ்வளவு குறைகள் என்னிடம் இல்லை என்றெண்ணுவதால், நல்ல அதிர்வுகளில் எண்ணங்கள் எனக்கு மகிழ்வைத் தருகின்றன.

இருதய நோய்க்கான அறுவை சிகிச்சை முடிந்த நேரம் அது. என்னைப்பார்க்க வந்திருந்தோரில் சிலர், " புது வாழ்வைத் தொடங்குகிறீர்கள், வாழ்த்துக்கள்" என்றனர். பலவீனமாக இருந்த இதயம் அறுவைசிகிச்சைக்குப் பின் பலம் பெற்று புத்துணர்வுடன் செயல் பட தொடங்குவதை பாராட்டியே அப்படி சில வாழ்த்துக்கள். அவர்களுள் ஒருவர், " உங்களுக்கு இது இரண்டாம் பிறப்பு. வாழ்க்கையை எஞ்சோய் பண்ணுங்க..." என்றார். பார்வையாளர்கள் ஏதாவதொன்றை சொல்லியவண்ணம் இருந்தனர். "இனி வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள் உங்களுக்கு. ஆயினும், இன்றே உங்கள் கடைசி நாளென வாழுங்கள்", என்றார் மற்றவர் ஒருவர். அந்த 'கடைசியாக' என அவர் சொன்னது அவ்வப்போது மனதில் தோன்றி மறையும்.

இதுவே என்னுடைய இறுதி நாளாக இருந்தால், எனக்கேன் பேராசை...? நான் ஏன் மற்றவர்களுடன் பகைமை பாராட்டவேண்டும்... ?அடுத்தவர் குறைகளையோ, குற்றங்களையோ காண எனக்கு நேரமிருக்குமா என்ன...? பகைமையும் குதர்க்கமும் மனதில் இல்லாதபோது மகிழ்ச்சி அங்கே, தானே நிறைந்திருக்கும்.

சற்று நிதானமாக எண்ணிப்பார்த்தால் சில உண்மைகள் விளங்கும். நமது குறிக்கோள் மகிழ்ச்சிதான் என்றால், வீண் கவலைகள் எதற்கு? ஆகவே, எதைச்செய்தாலும் மகிழ்வுடன் முடியும்படியாக அவற்றைப் பார்த்துக்கொள்வேன். கலகலப்பானவர்களோடு பழகுவது, புன்னகை தவழும் முகத்தினரை நண்பர்களாக்கிக்கொள்வது எனும் சில செயல்கள் எனக்கு நன்மைகள் தருவதாக நினைக்கிறேன்.

 நமக்கு முன்னால் வாழ்ந்தோர் சொன்னவற்றில் 80 விழுக்காடு நன்மைகளே அதிகம். அதில் நேர்மறை எண்ணங்களை மனதில் பதியவைப்பதன்வழி நாம் இனிமையாக வாழ்ந்திட முடியும். யாருக்கு இல்லை பிரச்சினைகள்? பிரச்சினை ஒன்றே நம் கண்ணுக்குத் தெரிந்தால் நாம் நம் இலக்கைவிட்டு நகர்கிறோம் என்று பொருள். எதிலும் முன்னேற்றம் தரும் நேரான சிந்தனைகளை தூண்டிவிடுவதன் மூலம் நம் மகிழ்ச்சியை நாம் இரண்டு மடங்காக்கலாம்.

மற்றவர் சொல்வதை கேட்பதில் தவறில்லை. ஆனால், அதற்கொரு எல்லையை வகுத்திடுவது எனது வழக்கம்.  அறிவுரைகள் சொல்ல பலரும் உண்டு. அது இனாம்தானே என கேட்பதற்கு, எனக்குத்தான் நேரமில்லை.  பெரியோர் சொல் வேதவாக்கு எனச் சொல்லி வந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை திரும்பச்சொல்லி அவர்களோடு  நான் தர்க்கம் புரிவதில்லை. எனவே பெரியோர் நட்பும் பாசமும் எனக்கு நிறையவே உண்டு. அப்புறம் மகிழ்ச்சிக்கு என்னங்க குறை....?

இன்னொரு முக்கிய காரணத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். என்னைப்பற்றி தீவிரமான எதையும் நான் என் மனதில் அலைபாய விடுவதில்லை. " அடடா, இப்படிச் செய்துவிட்டேனே..." என வருந்தி என்னையே நான் நொந்து கொள்வதில்லை. " பரவாயில்லை, அடுத்த முறை சரியாய்ச் செய்வோம்." என்றே மனதை வழக்கப் படுத்தி வைத்திருக்கிறேன். இதற்கு அதிக நாட்கள் பிடித்ததென்பது உண்மைதான். சின்னச் சின்னதாக எனது தவறுகளை மலைபோல எண்ணி வருந்தி உடல் நலத்தைக் கெடுத்துக்கொண்டதுண்டு முன்பு. அனுபத்தின் காரணமாக இப்படி என்னை நானே குறைபட்டுக்கொள்வதில் இருந்தும், சுய அனுதாபத்தில் இருந்தும் மீண்டுவிட்டேன். சரியானவற்றை நாம் சிந்திக்கவும் செயல்படவும் துணியும்போது, இயற்கையாகவே மகிழ்ச்சி நம்மை ஓடோடி வந்து அணைத்துக்கொள்ளும். 

எல்லாப் பிரச்சினைகளிலும் ஏதாவதொரு நல்லது இருக்கும் என நினைப்பவன் நான். ஆக்வே நிரந்தர துயர் என நான் எதிலும் என் காலத்தை கழிப்பதில்லை.  உடல் நோய்வாய்ப்பட்ட போத்குகூட, " அடுத்து என்ன செய்திட வேண்டும் " என சிந்தித்தது உண்டே தவிர, "ஐயோ அடுத்து என்னாகுமோ..?" என பயந்தது இல்லை. பொருளாதாரத்திலும், குடும்ப நிலவரங்களிலும் ஏற்படும் பிரச்சினைகள் சமாளிக்கும் படியாகவே இருந்துவந்திருக்கின்றன இதுவரை. என் குடும்பத்தினரின் வற்றாத அன்பும் புரிந்துணர்வுமே என்னை மீண்டும் மீண்டும் எழுந்துவர பேருதவி புரிந்திருக்கிறது. அதை எண்ணுகையில், மகிழ்ச்சியின் ரேகைகள் என் முகத்தில் ஓடக் காண்கிறேன். ஆக, மகிழ்ச்சியாக வாழ குடும்பத்தினர் உங்கள் பக்கம் இருப்பது மிகவும் அவசியம்.

 நல்ல நண்பர்களின் சேர்க்கை நமக்குத் தேவைதான். அவர்களே நம் சுதந்திர உணர்வுக்கு பக்க பலமாக இருப்பார்கள். நம்மோடு அவர்கள் இருக்கும் துணிவு பல நேரங்களில் நமக்கு நிம்மதியையும் தருகின்றதாக இருக்கும். ஆயினும், " உனது சிறந்த நண்பனே, உன்னுடைய மிகப்பெரிய எதிரியாவான்..." என யாரோ சொன்ன ஒரு கருத்தையும் மனதில் ஒரு ஓரத்தில் வைத்திருப்பது அவசியம். இதனால் பெரிதாக நாம் அவர்களிடம் இருத்து எதையும் எதிர்பார்த்து ஏமாற்றம் கொள்ளாமல் இருக்க உதவும். நட்பும் நிரந்தரமாகும். இவற்றையும் மீறிய சந்தர்ப்பங்களில், சில நண்பர்களை அந்த பட்டியலில் இருந்து அகற்றிவிடுவது இன்னும் சிறந்ததாகும். உறவினர்களும் இதன் படியே நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஒத்துவராத உறவு நமக்கு வீண் மனவேதனையைத்தான் தரும். ஒன்றுக்கு பத்துமுறை யோசித்தே இந்த முடிவை நான் எடுக்கிறேன். அதனால் எனக்கு, உறவினர்களும் குறைவு, நண்பர்களும் குறைவு. அவற்றோடு பல பிரச்சினைகளும் குறைவென்பதையும் இங்கு சொல்லவேண்டி இருக்கிறது. அமைதியான வாழ்விற்கு வேறென்ன வேண்டும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, எந் நேரமும் ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருக்கும் பழக்கம் நமக்கு வரவேண்டும். சோம்பலில், நோயுற்றவனைப் போல் காட்சித் தருவது நமது இலக்கினை வெகு தூரம் கொண்டு செல்லும் செயலாகும். மகிழ்ச்சியே நமது குறிக்கோள் என முடிவெடுத்தால், ஒன்றும் செய்யாமல் நேரத்தைச் செலவிடுவது சரியல்ல. பலனை எதிர்பார்த்து செய்யாவிட்டாலும், நமது செயல்களில் ஒரு நேர்மையும், பிறருக்கு பயன் தரும்படியும் இருக்கப் பார்த்துக்கொள்ளவேண்டும். நான் பகுதி நேர மருத்துவ அட்டை விற்பனையில் இருப்பதனால், பலரிடம் பேசவேண்டியதிருக்கிறது. பலர் பல காரணங்களுக்காக "வேண்டாம்" எனச் சொல்வதுண்டு. ஆயினும், மருத்துவ அட்டையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்வதே எனது கடமை என நான் நினைப்பதால், வருமானம் பற்றி நான் வருந்துவதில்லை. ஆனால், பலரையும் நான் பார்க்கவேண்டியதிருப்பதால், கருத்துப் பரிமாற்றத்தில் நான் மகிழ்வடைகிறேன். என்னிடமிருந்து அவர்களும், அவர்களிடமிருந்து நானும் பலவற்றைக் கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு மன நிறைவை தருகிறது. 
மற்ற நேரங்களில், குழந்தைகளுக்குத் தேவையானவற்றை செய்வதிலும், படிப்பதிலும், வலைப்பூ எழுதுவதிலும் மற்றும் மனைவியோடு ஸ்கிரபள் எனும் வார்த்தை விளையாட்டு என பலவித வேலைகளில் நான் மூழ்கிவிடுகிறேன்.  அமைதியாக ஏதும் செய்யாமல்  ஒரே இடத்தில் இருக்கிறேன் என்றால், அன்று எனக்கு உடல் நலம் சரியில்லை என்று பொருள்.

இதுவரையில் நாம் பார்த்தது, நாம் மகிழ்ச்சியாக வாழ நமக்கிருக்கும் வாய்ப்புக்கள். ஆனால், நாம் உடல் நலம் கருதி மகிழ்ச்சியாக வாழ்ந்தாகவேண்டியதும் இருக்கிறது. மருத்துவ சூழலில் இதை நாம் காணவேண்டும்.

பொதுவாக உணவருந்தும் போது, நாம் எவ்வித சலனமுமின்றி மகிழ்வோடு உணவருந்தவேண்டும். உணவின் ஜீரணத்திற்கு நம்மிடம் உள்ள சுரப்பிகளின் பங்கும்  உதவுகிறது.  தேவையான ஜீரண "என்ஸைம்ஸ்" உணவை முறையாக ஜீரணிக்கச் செய்து உடலில் பல பாகங்கள் சரிவர இயங்க உதவுகின்றது. வாயிலிருந்து உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குப்போய், அங்கிருந்து சிறு குடல், பெருங்குடல் என போகும் வரை இந்த ஜீரண என்ஸைம்ஸ் ( டைஜெஸ்டிவ் என்ஸைம்ஸ் ) தனது பங்கினை சிறப்பாக செயல்படுத்துகின்றன. இதற்கு நாம் மகிழ்ச்சியாக இருப்பதென்பது அவசியம். ஜீரணக்கோளாறு வயிற்று வலியினைத்தரும். நெஞ்சிலும் களுத்திலும் வலி பரவுதல் என சில வேலைகளில் இருதய நோய்க்கான  போலியான காரணிகளை காண்பிக்கக் கூடும். அதுமட்டுமல்ல. குடலில் சரியான அளவு பித்த நீரைச் சுரக்கச்செய்து மலச்சிக்கலையும் தவிர்க்கிறது.இவை அனைத்தும் முடங்கி பலவித நோய்களை தருவித்துவிடும் நாம் மகிழ்வாக இல்லாத சூழ் நிலைகள் தோன்றும் போது.


ஆக, மகிழ்ச்சியாக வாழ்வதென்பது ஒன்றுபட்ட பலவற்றின் கூட்டு முடிவு. அதன் அஸ்திவாரம் மெல்ல மெல்ல சரியான முறையில் இருந்திடல் நமக்கு நீண்ட நாள் பயனைத் தரும்.


தெய்வத் தமிழ்...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது நம் தமிழ் மொழி.  தமிழறிஞர்கள் இதனை மீண்டும் மீண்டும் நம் நினைவில் நிறுத்த எவ்வளவோ பாடுபடுகின்றனர். தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவுதல் வேண்டும் என்பதற்கொப்ப பலவாறும் தமிழ் உணர்வை நிலை நாட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள். கற்றறிந்த தூய உள்ளம் கொண்ட பெரியோர்களின் வேண்டுதலை ஏற்று தமிழ் மொழியை  நடைமுறையில் பின்பற்றிட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

இன்றைய தமிழ், அடுத்த தலைமுறையில்  காலெடுத்து வக்கும்போது என்ன ஆகுமோ எனும் பயம் இப்போது நமக்கு வருகிறது. கல்வியில் வளர்ச்சி காணும் குடும்பங்களும் இதற்கொரு காரணம். பல்கலைக்கழகங்களுக்கு போகும் நம் பிள்ளைகளின் தொடர்பு மொழி ஆங்கிலமாக மாறிவருகிறது இப்போது.  பயிற்சிக்காகவும் படிப்புக்காகவும் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறில்லை. வீட்டில் உரையாடும் மொழியாக தமிழ் இருந்ததென்றால் மெத்த  மகிழ்ச்சி. பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லித்தாருங்கள். ஆனால், தமிழ்மொழிக்கடுத்து அது இருக்குமேயானால், நம்மொழிபால் நமக்கிருக்கும் கடமை உணர்வை நிலை நாட்டுபவர்களாகிறோம்.

நாம் ஆங்கிலத்துக்கு எதிரியல்ல. ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் எனச்சொல்லியும் வருகிறோம். ஆங்கிலம் கற்றுக்கொள்வது பலவகைகளில் நமக்கு உறுதுணையாகவும் இருக்கிறதென்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே ஆங்கிலத்தை ஆதரிப்பது  தவறெனவும் தோன்றவில்லை. ஆங்கிலம் நமக்கு இரண்டாம் மொழியாக அவசியம் தேவை. ஆயினும் தமிழ் மொழியினை வாழவைக்க நாம் தமிழில் எழுதவும், படிக்கவும், பேசவும் வேண்டும். அதே நேரம், நமக்குத்தெரிந்த மற்றவர்களையும்  நம் மொழியில் ஆர்வம் கொள்ளச்செய்வது ஒரு புண்ணியம் சேர்க்கும் செயலாகும்.

 நமக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய தமிழ் நாட்டில் கூட ஆங்கில கலப்பில்தான் தமிழ் உரையாடல்கள் இருக்கின்றன. கல்விகற்றதும் அவர்களின் அடுத்த இலக்கு அமெரிக்கா என இருப்பதால் அந்த மோகமோ....?

தமிழ்த் தலைவரென தமிழகத்தை ஆட்சி புரிந்தோர்கூட தமிழுக்கு வேறெதுவும் செய்திடக் காணோம். தமிழுக்கு உயர்ந்த இடத்தை பெற்றுத்தந்துவிட்ட பெருமை அதற்கு உழைத்த மற்ற அறிஞர்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆட்சியின் போது அப்படி ஏதும் செய்திருந்தால், தமிழ் நாட்டுத் தமிழ் இப்படி "கலப்படத் தமிழ்"ஆகி இருக்காது . இத்தனை வருடங்கள் சென்றபின்தான் சித்திரை மாதத்தில்  வருவது நமது வருடப்பிறப்பல்ல என்றே தெரியவருகிறது சிலருக்கு. வேறென்ன பெரிதாக அவர் போன்றோரிடமிருந்து எதிர்பார்த்துவிட முடியும்....?

உண்மைத் தமிழ் நம் நாட்டில் இன்னும் உயிருடனேயே இருக்கிறது. படிப்பறிவில்லாத பலரும் ஆங்கில கலப்பில்லாத தமிழையே பேசிவருகிறோம். படித்தோரில் சிலர் பழக்கம் காரணமாக அப்படி சற்று இடம் மாறிப்போயிருக்கலாம். அவ்வப்போது அவர்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் அவர்களையும் அணைத்துச் செல்லும் சாத்தியம் இன்னும் நிறையவே இருக்கிறது.

தமிழ் மொழி பல மாறுதல்களுக்குப் பின்தான் இந்த தற்பொதைய நிலையை எட்டியிருக்கிறது என்பதை 1950ம் வருடமுதல் இருக்கும் பழைய புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலம் தவிர இதர பலமொழிகளினால் கவர்ந்திழுக்கப்பட்ட ஒன்றாகவே அன்றைய தமிழ் நூல்கள் இருந்திருக்கின்றன. எழுத்தாளர் வட்டங்களில் சுய தமிழில் எழுதியோர் மிகக் குறைவே. அன்று நம் மொழி பிறரையும் தன் பக்கம் இழுக்கும் காந்தம் போன்றதொரு சக்தியை கொண்டிருந்திருக்கிறது. பல மொழிக்கலப்பென பெருமிதப்பட நம் முன்னோர் தயாராயில்லை. கால ஓட்டத்தில் அவர்களின் சிரத்தையினால், வேண்டாத பிற மொழி வார்த்தைகள் அகற்றப்பட்டு தூய தமிழில் எழுத்துலகம் சிறக்கத் தொடங்கிவிட்டது.

இன்று அப்படிச் சீரியக் குணங்களுடன் இருக்கும் தமிழ் நம் பெருமைக்குறியதாகிறது. தமிழில் பேசுவோர் அதிகரித்தால் மட்டுமே இது நிலைத்து நிற்கும். சுருங்கும் தமிழ்ப் பள்ளிகள் அந்த சந்தேகத்தை நமக்கூட்டுகின்றன. வீட்டில் தமிழ் பேசுவோரும் குறைவது போல் படுகிறது. தமிழ் நாளிதழ்களை வாங்குவோர் எண்ணிக்கையும் அப்படி உயர்வதாக இல்லை. எனவே நமக்கு வரும் பயம் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றே.

" ஐம் சாரி. எனக்கு தமிழ் வராது...." என ஸ்டைலாகச் சொல்வதை நிறுத்தி, தினமும் சில நிமிடங்கள் பேசிப் படிக்க முயன்றாலே  போதும், பல மாறுதல்களை சில நாட்களிலேயே நம் கண்கூடக் காணலாம்.


Thursday, 25 July 2013

நம்பிக்கை...

உறவு வலுப்பெற முக்கியத் தேவை நம்பிக்கை.  நம்பிக்கைக்கு பங்கம் வரும்போது உறவு உடைகிறது. எந்த உறவிலும் நம்பிக்கை குறையும் போது சந்தேகம் எழுகிறது. சந்தேகம் பின்னர் கோபத்தை கிளறுகிறது. கோபம் உறவை எதிரியாக எண்ணத் தூண்டுகிறது. இதுவே நம்பிக்கையின் 'பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஃபோர்முலா".

அதனால்தான் சொல்கிறோம், இந்த உலகமே நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்குகிறது என்று. நம்பிக்கைக்கு இதர குணங்களும் உதவிக்கு வருகின்றன. அவற்றில் சகிப்புத்தன்மையும் ஒன்று.
" என் மனைவி எல்லாவற்றையும் தன்னிச்சையாக செய்கிறாள். நான் சொல்வதைக் காது கொடுத்து கேட்பதே இல்லை." என ஸ்வாமிஜியிடம் குறைபட்டார் ஒருவர்.

" உன்னைவிட சிறந்த குணங்களைக் கொண்டிருந்தால், அவளுக்கு உன்னைவிட உயர்ந்தவன் கணவனாக வந்திருப்பான். குறை சொல்லாமல் அவளிடம் உள்ள நன்மைகளைப் பார்" எனச் சொல்லி அனுப்பிவிட்டார் ஸ்வாமிஜி.

முறைகேடாக இல்லாமல் இருக்கும் போது அவள் செயவதை அனுசரித்து, அதன் நன்மைகளை உணர்ந்து வாழக்கற்றுக்கொள்ளவேண்டும். தான் கணவன், எனவே தனக்கு கட்டுப்பட்டே மனைவியானவள் இருக்கவேண்டும் என ஈகோ பார்க்காது அவள்மேல் நம்பிக்கை வைப்பது அவசியம்.

சிறந்த மனைவி என யாரும் இல்லை. பல உபரிக் காரணங்களினால் அப்படி ஒரு சிறந்த நிலையை அடைகிறார்கள் சில பெண்கள். அவ்வளவுதான்.

ஒருவன் திருமண ஏஜென்சிக்கு வந்திருந்தான். தான் திருமணம் செய்துகொள்ள ஒரு பொருத்தமான பெண் வேண்டும் என்றான். நேர்காணலின் போது தனக்கு பிடித்தமான பெண் எப்படி இருக்கவேண்டுமென வினவப்பட்டது.

" நல்ல அழகுடன், மரியாதையான, நகைச்சுவை உணர்வுமிக்க, தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தும் அறிந்தவளாக, பாடும், ஆடும் திறன் கொண்டவளாக, ஓய்வெடுக்க நான் வீட்டிலிருக்கும் போது என்னுடனே வீட்டில் இருக்கும், தேவைப்படும்போது கதைகள் சொல்லி, தேவைப்படாத நேரங்களில் அமைதியாக பேசாதிருப்பது போல் ஒருத்தி வேண்டும்" என்றான்.

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அதிகாரி,
" உங்களுக்கு தேவை ஒரு தொலைகாட்சி பெட்டியே..." எனச் சொல்லிவிட்டார்.

கிடைக்கும் மனைவி எதிர்ப்பார்ப்பதைப் போல இருக்கவேண்டும் என நம்பிக்கை வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது எனச் சொல்கிறார் நண்பர் ஒருவர். 


தாக்கும் முன் சிந்திக்க...

கராத்தே பயிற்சியின் தொடக்கதிலேயே ஒன்றை சொல்லித் தந்துவிடுகிறார்கள். "கராத்தே நி சென் த நாஷி." அதாவது 'கராதேயில் முதல் தாக்குதல் என்று ஒன்றில்லை" என்று அதற்குப் பொருள். அதனால்தான் ஒவ்வொரு 'கதா'வும் ( கராத்தே நுனுக்கங்களின் வடிவங்களும் ) தற்காப்பிலிருந்தே தொடங்குகின்றன.

'ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு'.  இக்கலையில் தேர்வு பெறுவோர் ஆத்திரம் கொண்டு தாக்கத்தொடங்கினால், அழிவு பண்மடங்கு பாதகமாக இருக்கும் என்பதனை மனதில் கொண்டே கராத்தேயினை ஒரு தற்காப்புக்கலையென குறிப்பிடுகிறார்கள். இதனையொட்டியே மற்ற கலைகளும் "தற்காப்பு"க்கென வடிவமைத்தார்கள். முதல் தாக்குதலின் விபரீதம் பல விசயங்களுக்கும் பொருந்தும்.

இந்தக் கொள்கையே எழுத்துக் கலைக்கும் உண்டு. அதுவும் அலுவளகத்தில் பணிபுரிவோர் அதிகம் கவனிக்க வேண்டியது இது. சினமுடன் எழுதத் தொடங்கினால் சீண்டிப்பார்க்கும் வார்த்தைகளுக்கு பஞ்சம் இருக்காது.

" என்னால் நம்பமுடியவில்லை. உயர்பதவிக்கு பரிந்துரைக்கும் போது 'என்னோடு பணிபுரிபவர்களில் நானே எல்லா தகுதிகளும் கொண்டுள்ளேன்' என என்னைப் பாராட்டிப் பேசி, பொய்யாக என்னை நம்ப வைத்து, இப்போது அந்த உயர்பதவியை வேறொருவருக்கு வழங்கி விட்டீர்கள். 'நீங்கள் ஒரு பாரபட்சமானவர்' என இதனால் தெளிவாகத் தெரிகிறது' என தனது மேலாளருக்கு சுடச் சுட ஒரு மின்னஞ்சல் அனுப்பினார் சியூ மெங்.

" மிக்க நல்லது. உடனடியாக உங்கள் பணியிடத்தை காலி செய்துவிட்டு பாரபட்சம் இல்லாதவரைத் தேடி பணியில் சேரவும். நன்றி."  என பதில் வந்தது.

சியூ மெங்கின் கோபம் ஞாயமானதாகப் படலாம்.  ஒருவேளை அவர்தான் அந்த உயர் பதவிக்கு தகுதியானவராகவும் இருந்திருக்கலாம். ஆனால், தனது 'பாஸ்'ஸை இப்படி விமசித்து எழுதிருப்பதானது அவருக்கு தனது வேலையை இழக்கும் சூழ் நிலையை தந்து விட்டது.

அப்படியானால் சியூ மெங் தனது கோபத்தை எப்படித்தான் தீர்த்துக் கொண்டிருக்கலாம்....?

"அலுவளக அறையை விட்டு வெளியே வந்து, ஒரு காகிதத்தில் தனக்கு எழும் கோபத்துக்கான காரணங்களை எழுதிவிட்டு மீண்டும் அலுவலகத்தின் உள்ளே சென்று எழுதிய அந்தக் காகிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவதுதான் சிறந்தது."

படிக்க பைத்தியக்காரத்தனமாகத் தெரியும் இதுவே மன நல மருத்துவர்களும், நிபுணர்களும் ஒட்டு மொத்தமாக வழங்குகின்ற தீர்வு. இதனால் சியூ மெங்கிற்கு சினமாக எழுந்த எதிர்மறை எண்ணங்கள் வெளிக்கொணரப்பட்டு அழிக்கப்படுகின்றன என்கிறார்கள் அவர்கள்.

சியூ மெங் எழுதியிருக்கவேண்டிய மின்னஞ்சல் ஏறக்குறைய இதைப்போல இருந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்....

" ஐயா, என்மேல் நம்பிக்கை வைத்து உயர்பதவிக்கு என்ன பரிந்துரைக்கப் போவதாக தாங்கள் சொன்னது எனக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தருகிறது. ஆனாலும், அப்பதவி எனக்குக்கிட்டாததை அறிந்து வருந்துகிறேன். அதன் காரணங்களை தங்களை சந்தித்து தெரிந்துகொள்ள விழைகிறேன். இன்றைய ஏமாற்றம் அடுத்தமுறை நடவாமல் தடுக்க இதுவே சிறந்த வழி என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். நன்றி. - சியூ மெங்"

 "சியூ மெங், உங்கள் மின்னஞ்சலைப் பார்த்தேன். கூடிய விரைவில் வேறொரு உயர்பதவிக்கான ஊர்ஜிதக்கடிதம் உங்களைத் தேடி வர என்னால் ஆன அனைத்தையும் செய்வேன் என இங்கு  சொல்லிக்கொள்வதில் மகிழ்கிறேன். - பாவ், உங்கள் பணியிட மேலாளர்.


 இதையே ஒரு ஹைக்கூவாக பார்ப்போமா....?
" தாக்கும் முன் சிந்திக்க
சிந்திக்காதோர்
சின்னாபின்னமாவர் சிறந்தவர் கையில் சிக்கி"