Sunday, 21 July 2013

வீட்டினுள் நுழையுமுன்...

வெளியில் சென்று திரும்பும் போது, பேய் தொடருகிறதோ இல்லையோ,  நோய் நம்மைத் தொடராமல் இருக்க கை கால் சுத்தம் செய்துகொண்டு வீட்டினுள் நுழைவது நல்லது.

புதிதாக குழந்தைகள் பிறக்கும் போது இதுபோல் பல வீடுகளில் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளும் இப்படி கை கால் கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் போகப் போக இவ்வழக்கம் கைவிடப்படுகிறது.

வெளியில் தினம் தினம் பலரையும் நாம் சந்திக்கிறோம். அவர்களுடன் கைகுலுக்குகிறோம். அவர்களின் பொருட்களையும் கையாளுகிறோம், சில நேரங்களில் பொது இடங்களில் உள்ள பொருட்களைக்கூடத்தான். பொது பேருந்துகளிலும், வாடகைக் கார்களிலும் பயணிக்கிறோம். இதுபோன்றவை எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறதென்று நமக்குத் தெரியாது. இதற்கு முன் என்னமாதிரியான ஆட்கள் இதுபோன்ற பொது இடங்களிலும் பொது வாகனங்களிலும் வந்து போனார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. எந்த மாதிரியான நோய்க்கிருமிகள் இங்கெல்லாம் இருக்குமென்பதும் நாம் யூகிக்க முடியாத ஒன்று.

 நம்மைத் தொற்றிக்கொண்டு நம் இல்லங்களில் உட்புகுந்து ஒன்றுமறியா நம் குடும்ப உறுபினர்களை தாக்காதிருக்க,  முதற்கட்ட பாதுகாப்பாக அமைவது இப்படி நாம் கை கால் முகம் கழுவிக் கொண்டு வீட்டினுள் அடியெடுத்து வைப்பதே.

"வாய் கழுவாராயினும் கை கழுவ
கழுவாக்கால் நோயாவர் கையழுக்குப் பட்டு"
என்பது நகைச்சுவைக்காக சொல்லப்படும் புதுக்குறள். ஆனல் அதன் முக்கியத்தை எண்ணிப்பாருங்கள். 

ஆரோக்கியம் பேணுவோர் அனுசரிக்கும் முறை இது. நாமும் பின்பற்றுவோமே...

சாலையில் வேண்டாம் வேகம்...

மெதுவாக போயிருந்தால் விலகிப் போயிருப்பேன்,
விரைவாகப் போனதால் விரட்டிப் பிடித்தேன்.."

என மரணம் சொன்னதாக, விபத்தின்போது மரணமுற்றவர்களில் சிலர் இறக்கும் முன் முனுமுனுத்ததாக முதலுதவிக்குப் போயிருந்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விபத்தில் இறப்பது ஒரு பயங்கரம். உடல் பாகங்கள் துண்டு துண்டாக அங்கும் இங்கும் சிதறிக்கிடக்க உயிர் சில நிமிடங்கள் இழுத்துக்கொண்டு,  துடி துடித்து இவ்வுலகை விட்டுப் போவது மிகக் கொடூரமானது. எதிர்பாரா விபத்து என்பது ஒரு புறமிருக்க, வேகக் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாவது தேவையில்லா விபரீதமாகும்.

10.10.10 அன்று, மாலை ஆறு மணிக்கு மலாக்கா பேருந்து நிலையத்தில் இருந்து கோலாலும்பூர் நோக்கி புறப்பட்ட விரைவு பேருந்து, 223கி.மீ சிம்பாங் அம்பாட் வடக்கு தெற்கு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. வேகத்தை கட்டுப்படுத்த இயலாது, பக்கத்தில் இருந்த தடுப்புக்கம்பிகளை மீறி எதிர் திசையில் வந்துகொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது அந்த பேருந்து.  ஒரு மைவி ரக காரின் மீது தலைகீழாக அது நின்றது பார்க்க பயத்தை தந்தது. சுமார் 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.




 ( என் குடும்பத்தினரோடு நானும் மலாக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது எங்கள் கண்களுக்கு முன்னர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்த விபத்து நடந்தது. சாலையில் அங்கும் இங்குமாக உயிரற்ற உடல்கள் கிடப்பதை பார்த்துக்கொண்டே கடந்து சென்ற அந்த காட்சி பயங்கரமான ஒன்றாகும்) 



அடுத்த சில நாட்கள் நாளிதழ்களில் பல கோணங்களிலும் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அதில் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. விசாரனையின் போது சக பேருந்து ஓட்டுனர்கள், வேகமாக பேருந்துகளை ஓட்டிவரும் நேரங்களில் சாலையின் ஒருபுறமிருந்து மறுபுறம் ஏதோ கருப்பாக ஒன்று கடந்து செல்வதை  கண்டாதகச் அதிகாரிகளிடம் சொல்லியிருந்தனர்.

 நமக்கு எழும் சந்தேகம் இதனால் இன்னும் வலுக்கிறது. வேகம் இருக்கும் இடங்களில் எமன் வந்துபோகும் சாயல் இருப்பது போலல்லவா ஆகிறது இவர்கள் சொல்வது.

சாலை, நாம் சவாரி போவதற்காகத்தான், சாகசம் புரிய அல்ல. அதுவும் பக்கத்தில் இருப்போர் மெச்சிக்கொள்ள காரை வேகமாக ஓட்டுவோரும் நம்மிடையே உண்டு. யோசிக்கும் தன்மை உடையோர் இப்படி அநாவசிய, அபாய கணிப்பீடுகளை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். 'ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போல' என தங்கள் திறனை சாலையில் காட்டி பிதற்றியோரில் பலரை இப்போது காணோம்.

அவசரம் + வேகம் = மரணம்.

இந்த புது ஃபோர்முலாவை மனதில் வைப்போம்.
அதிவேகம் மரணத்திற்கு  பிடித்த அம்சம். எமன் அங்கே பல் இளிக்கிறான்.

சாலையில் வேண்டாம் வேகம், அங்கே விவேகமே போதும்.

சிரிக்கத் தெரிந்தால் போதும்...

வாய்விட்டுச் சிரியுங்கள்.  மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சி பொங்க கள்ளம் கபடமில்லா சிரிப்பே சரியான வழி.

வயதாக ஆக சிரிப்பதை குறைத்துக் கொள்கிறோம் நாம்.  கடந்து வந்த அனுபவங்களும் இனி கடக்கவிருக்கும் பயணங்களும் தெளிவில்லா ஒரு நிலையை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தலாம். இதையொரு பின்னடைவாக பார்க்காமல் காலத்தால் நாம் அடையும் மனமுதிர்ச்சியையும், பக்குவத்தினையும் உபயோகத்திற்கு கொணர்ந்து கல கலவென சிரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். இந்த மனப்பாங்கினையுடைய பலர் எல்லாவித சூழ்நிலைகளிலும் இன்முகத்துடன் வாழ்வினை எதிர்கொள்கிறார்கள்.

சிரிப்பதென்பது நோய் தடுக்கும் மருந்து. வந்த பின் அல்ல, வரும் முன்னரே....

மருத்துவர்கள் சிலர் நண்பர்களாக எனக்கிருப்பதால், அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். உங்கள் வாழ்வில் ஆரோக்கியம் பெருக நிறைய சிரியுங்கள். இதுவே மருத்துவ உலகம் அறிவுரையாகச் சொல்லும் ரகசியம்.

கள்ளமற்ற சிரிப்பினில் ஆரோக்கியம் அடங்கியுள்ளது என்பதை உணர்வோம். கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சிரிக்கப் பழகுவோம்.

பின் குறிப்பு: ஒரு சில மருத்துவர்கள் சிரிப்பதன் அவசியத்தை வெளியில் அவ்வளவாக சொல்வதில்லை என்றும் காதில் விழுகிறது. " உங்கள் நோயும் தொடரட்டும் எனது வருமானமும் பெருகட்டும்" என இன்னமும் ஒரு பிரிவினர் நினைக்கிறார்கள் போலும். அதற்கென்ன, பரவாயில்லை... அவர்களை விட்டுவிடுவோம். இப்போதுதான் அந்த ரகசியம் நமக்கு தெரிந்துவிட்டதே... வாய்விட்டுச் சிரிப்போம், வளமாக வாழ்வோம்.


நல்ல மனம் வாழ்க...

அடுத்தடுத்து ஐந்து பரம்பரைக்கு சொத்து இருந்தாலும், இன்னமும் அதே வழியில் சென்று கொண்டிருப்போர் நம்மிடையே அனேகர் இருக்கிறார்கள்.

பொருளீட்டும் யுக்தி தெரிந்தவர்கள் என இவர்களை  ஒரு வகையில் பாராட்ட வேண்டியது அவசியம் தான் என்றாலும், இவர்கள் மனது வைத்தால் ஏழைகளில் ஒரு சிலரின் தலைவிதியை மாற்றிட முடியும் என்பதும் ஒரு நிதர்சனமான உண்மை.

இந்த நற்குணங்களை மனம்தான் நிர்ணயிக்கிறது. சரி என்பதும் இல்லையென்பதும், முடியுமென்பதும் முடியாதென்பதும் ஒரு மெல்லிய நூலிழையில் மனம் எடுக்கும் முடிவினைப் பொறுத்தே அமைகிறது.

'பணம் இருக்கும் இடத்தினிலே மனம் இருப்பதில்லை' எனும் பொய்யான கருத்தினை இவர்கள் உடைத்தெரிய முன் வருவார்கள் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு.

 நம் கண்முன்னே நடக்கும் பல தொண்டுள்ளம் கொண்டவர்களின் திருப்பணியினைப் பார்க்கும் போது இப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது.

நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க!!!

Saturday, 20 July 2013

கவிஞர் வாலியின் நினைவுகள்...

கவிஞர் வாலி திரைப்படல்கள் எழுத வரும் முன்பே டி.எம்.சௌந்தரராஜனுக்கு முருகனைப் பற்றிய பக்திப்பாடல் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார். சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் நம்மை உருகவைத்த அந்தப் பாட்டு,
 " கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உன்னை மறவேன்..." என்பதாகும். எத்தனை முறை கேட்டாலும் புத்துயிர் தரும் பக்திக்கு இப்பாடல் ஒரு உதாரணம்.

சினிமாவுக்கு முதன் முதலில் அவர் எழுதிய பாடலும் இனிமையான ஒன்று தான்.
" நிலவும் தரையும் நீயம்மா,
உலகம் ஒரு நாள் உனதம்மா? "
எனும் மனதைக் கவரும் மெல்லிசையாகும். 1958ல் அழகர் மலை கள்வன் எனும் திரையில் இடம்பெற்ற பாடல் இது.

அடுத்தது அற்புதமான பாடல்களைக்கொண்ட "கற்பகம்" திரைப்படம்.
1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம், 'கற்பகமாகும்'. கே. எஸ். கோபாலாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர்.ராதா என பலரும் திறம்பட நடித்திருந்தனர். 1964 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - இரண்டாவது சிறந்த படத்துக்கான தகுதிச் சான்றிதழ் பெற்ற படம் இது. இத்திரைப்படத்தின் மூலம் கே. ஆர். விஜயா தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அவர் மட்டுமல்ல தமிழ் நல்லுலகத்தை ஆளப்போகும் ஒரு மிகச் சிறந்த கவிஞரும் அன்று பலர் கண்களுக்கு தெரியத்தொடங்கினார்.

'பக்கத்து வீட்டு பருவ மச்சான், பார்வையிலே படம் புடிச்சான்....'
'அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா,
ஆடும்வரை ஆடிவிட்டு அல்லி மலர் மூடம்மா...'
'மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா'
'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு'

எனும் பாடல்கள் சிறந்த கதைக்கும் நடிப்புக்கும் ஈடு கொடுத்து படத்தை வெற்றி பெறவைத்தன.

ஆயினும் கவியரசு கண்ணதாசனின் முரணான போக்கினால் எம்.ஜி.ஆர் தனக்காக பாட்டெழுத ஒருவரை தேடிக்கொண்டிருந்த போது கவிஞர் வாலியின் திறமையக் கேள்விப்பட்டு தனக்கு பாட்டெழுதும்படி அழைக்க, எம்.ஜி. ஆரின் கொள்கைகளை பிரதிபலிக்கும் பாடல்கள் நிறைய வெளிவந்து வெற்றியடையத் தொடங்கின. அதுபோன்ற மிக அருமையான பாடல்களின் மூலம் எம்ஜிஆருடைய பேரன்பை பெற்றவர் வாலி.

சில காலத்திலேயே பலரும் தேடும் கவிஞராகவும்  உருவானார்.

இசைத்தட்டுக்கள், டேப்புகள், சிடிக்கள் மற்றும் வீடியோக்கள் விற்பனையில் உள்ளோர், " வாலி எம்ஜிஆர் ஹிட்ஸ்" சிடிக்கள் தொடர்ந்து அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதை  பத்திரிக்கைகளில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சாதனையாக கருதப்படும் இந்த சிடி விற்பனை இன்னும் தொடர்கிறது. எம்ஜிஆர், டி.எம்.எஸ் அவர்களுக்கு அடுத்து அதிகமாக விற்பனையாவது கவிஞர் வாலியின் ஆல்பங்களாகும்.

" நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்..."
" ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..."
" கண் போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா.."
போன்றவை அவற்றுள் சில.

அவரின்  இனிமையான பாடல்களில் சில...

-  வெற்றிவேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல்
-  அந்த நாள் ஞாபகம் நெஞிலே வந்ததே நண்பனே ....
-  சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
-  மல்லிகை என் மன்னன் மயங்கும்
-  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே....

இப்படி அவரின் திறமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்த பாடல்கள் இன்னும் எத்தனையெத்தனையோ...

ஒரு முறை, கலங்கரை விளக்கம் திரைப்படத்தின் போது எம்ஜிஆர் அவர்கள் 15 நிமிடத்தில் ஒரு பாடலை இயற்றித்தந்தால் தனது கைக்கடிகாரத்தை பரிசளிப்பதாக கூற, அப்போது உருவானதே " காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் " எனும் பாடல்.

நம் நாட்டில் மலாய்க்காரர்களும் சீனர்களும் அன்றைய எஸ்டேட் திரையீடுகளின் போது இந்த பாடலை பாடி மகிழ்ந்ததை நானே நேரில் கண்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடலாக அது அன்று இருந்தது.

ஆயினும் எம்ஜிஆரின் கருத்துக்களுக்கு எதிரானவர்களோடு  கடந்த சில வருடங்களாக  இவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டதால், இவரின் உண்மை அபிமானிகள் சற்று வருத்தத்தில் இருந்தது வெள்ளிடை மலை.

Thursday, 18 July 2013

கவிஞர் வாலி காலமானார்...

கவிஞர் வாலி தனது 82வது வயதில் நோயின் காரணமாக  காலமானார்.



எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய பல பாடல்கள் அவருக்கு பேரும் புகழும் வாங்கித்தந்தன.  பின்னர் பல கவிதைத்தொகுப்புகளையும் புத்தகங்களையும் எழுதி வந்தார். திரைப்படங்கள் சிலவற்றுக்கு திரைக்கதையையும் அமைந்திருந்தார். கலியுக கண்ணன் அவற்றில் எனக்குப் பிடித்த ஒன்று. திரையில் முகம் காட்டத் தொடங்கிய போது நடிப்பிலும் முத்திரை பதித்தார். ராதிகாவின் அண்ணாமலை தொடரில் கடைசி சில காட்சிகளில் வந்து மனதில் இடம் பிடித்தார்.

கண்ணதாசனுக்குப் பின் கவியரசாக உலா வந்த கவிஞர் வாலிக்கு ஏனோ அத்தனைத் திறமையிருந்தும் 'கவியரசு" என்னும் பட்டம் கிடைக்காமல் போனது. அதிலும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவருக்கு அது கிடைத்ததில் பலருக்கு இன்னமும் ஆச்சரியம்.

இளம் வயது நடிகர்களுக்கும் காதல் பாடல்களை எழுதி ரசிகர்களை பரவசத்தில் அசத்தியதால் அவர் இளமைக் கவிஞர் எனவும் புகழப்பட்டார். எம்.ஜி. ஆர் முதல் தனுஷ் வரை நான்கு தலைமுறைக் கவிஞராக நிலைத்து நின்றவர் கவிஞர் வாலி அவர்கள்.

மத்திய மா நில அரசுகளால் பல பரிசுகளும் பட்டங்களும் கொடுத்து கௌரவிக்கப்பட்டாலும், மக்களின் மனதில் அவரின் கவித்திறன் என்றென்றும் நிலைத்து நிற்கும். 50 வருடங்களில் சுமார் 12 ஆயிரம் பாடல்களை இயற்றி இருக்கும் அவரின் சில புகழ் பெற்ற பாடல்கள் அடுத்த சில பதிவுகளில் இங்கே இடம் பெறும்.