Showing posts with label uncle pow. Show all posts
Showing posts with label uncle pow. Show all posts

Wednesday, 7 November 2012

தீபாவளி நல்வாழ்த்துகள். . .


தீபாவளி வந்துவிட்டது... இன்னும் சில தினங்களில் நாம் அனைவரும், ஒரு வருடம் காத்திருந்த அந்த பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட இருக்கிறோம். ஆடம்பரமாக இல்லாமல், செலவுகள் அதிகம் செய்யாமல், நம் தகுதிக்கேற்றாற்போல் சிக்கனமாக, அடக்கமாக ஆனால் அதே நேரம் குதூகலமாக கொண்டாடிட  இவ்வேளையில் முடிவெடுப்பது மிகவும் சிறந்தது.

ஒரு நாள் வரும் பெருநாளுக்கு கடன் வாங்கி வருடம் முழுவதும் வாங்கிய கடனை அடைத்துக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. 'உயர்ந்த உள்ளம்' கமல ஹாசனைப்' போல தடபுடலான விருந்துகளில் வீண் விரயம் செய்வதை தவிர்ப்போம்.  உலகில் சத்து உணவு கிடைக்காத மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தை என்பது அதிர்ச்சியான உண்மை. சில நாட்களுக்கு முன்னர் தான் இதைப் படித்த ஞாபகம். எனவே, விருந்துபசரிப்புகளில் வீணடிக்கப்படும் உணவை பற்றிய விழிப்புணர்வை நாம் நினைவில் கொள்வோம். மதுபானங்கள் உடல் நலத்துக்கு தீங்கு செய்வன. அவையும் வேண்டாம்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், இதய நோயினால் துண்பப்படுகிறவர்களும் இந்த தீபாவளி வேலையில் சாப்பிடும் உணவுப்பண்டங்களில் அதிக கவனம் செழுத்த வேண்டும்.
  -  சர்க்கரை வேண்டாம்
  -  எண்ணெயில் பொரிக்கப்படும் பதார்த்தங்களையும் பட்சணங்களையும்       உட்கொள்வது அளவோடு இருக்கட்டும்.
  -  இறைச்சி, முட்டை மற்றும் துரித உணவு ( ஃபாஸ்ட் புட் ) போன்றவற்றை தவிர்ப்போம்.

பெரியோர் சொன்னபடி, தீபாவளி நாளில் இயன்றவரை அசைவத்தை தவிர்த்துவிடுங்கள். பின்பொரு நாளில் வாய்க்கு ருசிப்பவற்றை சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.

 இந்த தீபாவளியின் போது நமது உணவு கட்டுப்பாடுகளை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஒரு பொழுதும்  வேண்டாம்.  ஒரு நாள் ருசிக்கு வாழ் நாள் ஆரோக்கியத்தை பணையம் வைப்பது அறிவுடைமை ஆகாது என்பது நமக்குத் தெரிந்தது தான் .

அண்டை அயலாருடனும், உற்றார் உறவினர்களுடனும் மற்றும் நண்பர்களுடனும் இனியவைகளைப் பேசி இன்பமாய் கொண்டாடி மகிழும் இந்தத் தீபத் திருநாளில், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது எனும் விழிப்பு நிலையில் எண்ணிப்பார்த்து ஏற்புடையதைச் செய்வோம்....

' விரலுக்கேற்ற  வீக்கம் ' என்பதே  காலத்துக்கு ஏற்ற உண்மை நிலை.  அதன்படி மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுவோம்....

'ஹெப்பி டீபாவளி.....'

Wednesday, 11 July 2012

ஓவியங்களும் ஓவியர்களும்...

கோயில்களில் உள்ள சிற்பங்களின் மேல் வர்ணம் தீட்டும் வேலை செய்பவர்கள் இப்போது தங்களை ஓவியர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள். அது ஒன்றும் அப்படி பெரிய தவறாக இல்லாது போனாலும், "ஓவியர்கள்" எனும் பட்டியலின் கீழ் அவர்கள் வரலாமா என்பதில் ஒரு சின்ன நெருடல்.

வலைத்தளங்களில், மாத, வார, நாளிதழ்களில் வெளிவரும் பல தரமான ஓவியங்களை பார்த்துப் பழக்கப்பட்டவன் நான். போட்டிக்கு அனுப்பப்படாவிட்டாலும், அவற்றுள் வெளிவரும் பல சித்திரங்கள் வெற்றிப் படைப்புகளாகவே எனக்குப் படும். அதேபோன்று, கோயிற் சிலைகளும் சிற்பங்களும் போட்டிகளுக்கு அப்பாற்பட்டவை.

நிஜத்தில், நல்ல பல ஓவியர்களின் படைப்புகள் வெளி உலகுக்கு தெரியாமலேயே இன்னும் இருக்கின்றன. 'பப்ளிசிட்டி' செய்து தன் திறமையை பறைசாற்ற பொருளாதார வசதி இல்லாமலிருக்கலாம். அல்லது, பிறர் கட்டுப்பாட்டில் இருப்பதனால், அவர்களின் படைப்புக்களை விளம்பரப் படுத்த முடியாமல் போகலாம். ஆனால், சில நேரங்களில் நம் கண்ணில் படும் அவர்களின் சித்திரங்கள் குடத்திலிட்ட விளக்கினைப் போல் பலருக்கும் தெரியாமல் போவது கண்டு வருந்தச் செய்கிறது.

பள்ளிக்கூட நாட்களில் நாம் படங்களை வரைந்திருந்தாலும், நம்மில் பலர் இப்போதும் காகிதம் கிடைக்கும் போதெல்லாம்  விளையாட்டாக வரைந்து கொண்டிருப்போம். ஆனால், சீரியஸான முயற்சியில் ஒரு நாள் கூட நாம் எதையாவது வரைந்து பத்திரப் படுத்தி வைதிருக்க மட்டோம். ஓவியம் என வரும் போது பொதுவில் நாம் அணைவரும் நல்ல ரசிகர்களாகவே இன்னும் இருக்கிறோம்.

தற்போது இந்த சித்திரக் கலையில் மாறுதல்கள் வந்துவிட்டன. பல்கலைகழங்களில் இதைப் படிப்போர் இதனூடே 'எனிமேஷன்' எனும் தொடர் கல்வியையும் கற்று கை நிறைய பணம் பார்க்கிறார்கள்.

ஓவியங்களை ரசிக்க நுண்ணறிவு தேவை இல்லை என்பது என் வாதம். அது நீதிபதிகளுக்கு இருக்கவேண்டிய ஒன்று. கலைக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சித்திரங்களைவிட அருமையான பல நாம் சாதாரணமாக நேரத்தைப் போக்க படிக்கும் இதழ்களில் வந்து கொண்டிருப்பது சற்று கவனித்துப் பார்த்தால் புரியும்.

அப்படி இருக்க, அசல் ஓவியங்களை படைப்பவர்களை விட அதனை மாற்றியமைப்போரும், அதன் மேல் வர்ணம் பூசுவோரும் சம அந்தஸ்த்து கேட்கும் காலமாக இப்போதிருப்பது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.






வெப் உலகத்தில் கிடைத்த 'நீர் வர்ணத்தில்' வரையப்பட்ட ஓவியங்கள். என்னைக் கவர்ந்த இவை உங்களையும் கவரும் என்று இங்கே பதிவில் தந்திருக்கிறேன். தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு சிவபாலன் அவர்களின் சித்திரங்கள்.

Wednesday, 10 August 2011

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்...

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்


“உலகெலாம்”

“உலகெலாம்” என்கிற சொல் தெய்வச் சேக்கிழார் பாடியருளிய பெரியபுராணம் எனப்படும் திருத் தொண்டர்புராணத்தின் முதற்பாடலின் முதல் வரியில் உள்ள முதற் சொல். தில்லை ஆடலரசுப் பெருமான் புராணம் பாடுவதற்காக எடுத்துக் கொடுத்தருளிய  முதல். இந்த முதலாகிய சொல்லைக் கொண்டுதான் சேக்கிழாரும் புராணத்தின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வைத்துப் புராணத்தைப் பாடிமுடித்தார். இச்சொல்லை இறைவர் முதலாக எடுத்துக் கொடுக்கக் காரணம் இந்த உலகமெல்லாம் உய்யவேண்டும் என்பதற்காகத்தான்! உலகம் என்னும் சொல் மங்கலச் சொல்லாகும்.  “உ” என்னும் உகார எழுத்து பிள்ளையார் சுழியையும் குறிக்கும், காத்தல் தொழிலையும் குறிக்கும். உலகு என்ற சொல் ஆகுபெயராக அதில் வாழுகின்ற உயிர்களைக் குறிக்கும். அதிலும் குறிப்பாக உணர்ந்து ஓதற்கு அரியவன் என்று பின்னர் கூறியதனால் ஆய்ந்து உணரும் அறிவுடைய மனித உயிர்களைத்தான் குறிக்கும்.

“அகர முதல எழுத்தெல்லாம்” என்று திருவள்ளுவப் பெருமான் எடுத்துரைத்ததுபோல் ‘அ’ ஆகிய அகர எழுத்து மேற்சொன்ன ‘உ’கர எழுத்திலும் அமைந்திருக்கிறது. ஆக “உலகெலாம்” என்கிற சொல்லில் அ,உ,ம் என்கிற மூன்று எழுத்துக்களும் அடங்கியுள்ளன. இது  ஓங்காரத்தின் வியட்டிப் பிரணவ வடிவமாகும். பெரியபுராணம் பிரணவத்தோடு தொடங்குகிறது என்று அறிஞர்கள் கூறுவர். 
“உலகெலாம்” என்கிற சொல் இரண்டு வெவ்வேறு சொற்களால் ஆன ஒரு சொல். ‘உலகு’ என்ற சொல் உயிர்களாகிய பசுவையும், ‘எலாம்’ என்ற சொல் எல்லாமாகிய இறைவனாகிய பதியையும் குறிப்பனவாகும். இது சைவ சித்தாந்த அத்துவிதக் கொள்கையைக்  குறிப்பதாகும்.   
இந்த “உலகெலாம்” என்கிற சொல் பாடலின் நான்காவது வரியில் உள்ள “மலர் சிலம்படி” என்பதோடு இயைந்து உலகெலாம் மலர்த்திய சிலம்படி, மலர்த்திக் கொண்டிருக்கும் சிலம்படி, மலர்த்தப் போகும் சிலம்படி எனப் பொருள் விரியும்படி சேக்கிழார் பெருமான் வினைத் தொகையை உள்ளமைத்துப் பாடியிருக்கிறார் என்பார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.

"உணர்ந்து ஓதற்கு அரியவன்"

இறைவன் உலக உயிர்களால் உணர்தற்கும் அரியவன் ஓதற்கும் அரியவன். ஓதல் என்பது  பாடுதல், உரைத்தல் எனப் பொருள்படும். உணர்தல் என்பது மனத்தின் தொழில். ஓதல் என்பது வாக்கின் தொழில். “மாற்றம் (உரை) மனம் கழிய நின்ற மறையோனே” என்பார் மணிவாசகர். உணர்தல் வேறு, அறிதல் வேறு. மேம்போக்காகத் தெரிந்து கொள்வது அறிதல். உள்ளத்தில் தெளிவாகப் பதியுமாறு விளக்கம் பெறுதல் உணர்தலாகும். ஆனால் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாதவனாகிய  இறைவனை எப்படி உணர்ந்து ஓதுவது? 
முதலமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமானுக்கு முந்திய முதலமைச்சராகிய மணிவாசகப் பெருமான்  இதற்கு பதில் கூறுகிறார். இறைவன் சொல்லற்கு அரியவனாக இருந்தாலும்  ஏதோ ஒருவகையில் அவனுடைய திருவருளாலே ஒருவாறு சொல்லித் துதிப்போமாக. அவ்வாறு சொல்லித் துதிப்பதையும் பொருள் உணர்ந்து சொல்லுவோமாக. “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்” என்பார். 
அவர் சொல்லிய பாட்டு- திருவாசகம். 
திருவாசகத்திற்குப் பொருள் யாது? என்று கேட்டபோது திருசிற்றம்பலத்தானைச் சுட்டிக் காட்டி “இவன்தான் பொருள்” என்றார்.. 
சேக்கிழார் பெருமானும் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனாக இறைவன் இருந்தாலும்  அவனுடைய மலர்சிலம்படிகளை அவனுடைய திருவருள் துணையாலே ஒருவாறு வாழ்த்தி வணங்குவோமாக என்கிறார்.
“நிலவுலாவிய நீர்மலி வேணியன்”
“நீர் இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்

வானின்று அமையாது ஒழுக்கு”. 
என்பார் திருவள்ளுவர். வானத்திலிருந்து மழை பெய்யவில்லை என்றால் இந்த மண்ணுலகத்தில் எதுவுமே நடைபெறாது என்பது திண்ணம். திருக்குறளில் வான்சிறப்பு எனும் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருத்து இது. வான் சிறப்பு- ஆகாயத் தலமாகிய தில்லையின் சிறப்பும் இதுவேயன்றோ?

இன்று நம் நாட்டின் பிரச்சினையே தண்ணீர்தானே? மழை அறவே பொய்த்து விட்டது. குளங்கள், ஏரிகள், நதிகள் எல்லாம் வறண்டுபோய் பாலை நிலங்களாக ஆகிவிட்டன. நிலத்தடி நீரோ மிகவும் குறைந்துபோய் விட்டது. மாநிலத்திற்கு மாநிலம் (தண்ணீரை) விட்டேனா பார் என்று கொக்கரிப்பும் போராட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இப்படியே போனால் கடல்நீரும் குறைந்து நிலப் பகுதிகள் ஆகிவிடும்.

“நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான் நல்காதாகி விடின்”! என்பார் திருவள்ளுவர்.

கடல்நீரோ வெறும் உப்பு நீராகும்.பருக ஒண்ணாது. இன்றைக்கு நல்லநீர் இருக்கும் இடம் கங்கை நதி ஒன்றுதான். அதுவும் வானின்று மழை பொய்ப்பின் இல்லாமற்போய் விடும்.

என்றும் வற்றாத நீர் மிக அதிகமாக உள்ள ஒரே இடம் இறைவனின் சடாமுடி ஒன்றுதான்! அங்குதான் ஆகாய கங்கை அடக்கிவைக்கப் பட்டிருக்கிறது.

“நீர்மலி வேணியன்” என்கிறார் சேக்கிழார் பெருமான்.

(வேணி-சடை) அந்த கங்கைக்கரையின் ஓரமாகத்தான் சந்திரன் மெல்ல உலாவிக் கொண்டிருக்கிறானாம்! ஏன் தெரியுமா? தன்னுடைய கலைகளை எல்லாம் இழந்து குளிர்ச்சியையும் இழந்து களையிழந்து “அடைக்கலம்” என்று வந்தவனைச் சடையில் வைத்துத் தாங்கினவர்  சிவபெருமான். இப்பொழுது, தான் இழந்த குளிர்ச்சியைப் பெறுவதற்காக ஆற்றின் கரையில் உலாவிக் கொண்டிருக்கிறான்.

“அலகில் சோதியன்”

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய பெருமான் அளவிடற்கரிய ஒளிமயமாக, பெருஞ்சோதிப் பிழம்பாக  விளங்குகிறான். உலக  உயிர்களால் மட்டுமன்று மும்மூர்த்திகளுள் திருமால், பிரம்மனாலும்கூட உணர்ந்து ஒதற்கோ கண்டு தரிசிப்பதற்கோ அரிய பெரிய சோதி சிவபெருமான்! இந்த அலகில் சோதியின் திருவடியைத் திருமாலும் திருமுடியைப் பிரம தேவனும்  இன்னும்கூடத் தேடிக் கொண்டிருப்பதாக வேதங்கள் கூறுகின்றன! 
“பிரமனும் திருமாலும் கைதொழப் பேரழலாய பெம்மான்” என்பார் திருஞானசம்பந்தர். 
“தேச விளக்கெலாம் ஆனாய் நீயே!, 
திருவையா றமர்ந்த செம்பொற் சோதி!” என்பார் அப்பர் பெருமான். 
“சோதியே சுடரே சூழொளி விளக்கே!” என்பார் மணிவாசகர். 
“அருட்பெருஞ்சோதி” என்பார் வள்ளலார் பெருமான். 
கண்ணுக்குத் தெரிகின்ற சோதியாக இருந்தால் இவ்வளவு பெரிது என்று அளவிட்டுக் கூறலாம். ஆனால் இதுவோ, கற்பனை கடந்த சோதி! அளவிட்டு அறிய முடியாது. இறைவனைச் சோதி வடிவத்தில் கண்டு தொழுவது என்பது எல்லா மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

இந்த அலகில் சோதிதான்  கருணையே உருவமாகக் கொண்டு  தில்லைத் திருச்சிற்றம்பலத்தே வந்து நின்று அற்புதமாகப் பொற்புடன்  நடம் செய்கிறது.

“அலகில் சோதியன்” 

காணுதற்குரிய சோதியாக இருந்தால் அளவு கூற முடியும். இதுவோ கற்பனைக்கும் எட்டாத பேரொளி. “காண்பரிய பேரொளியே” என்பார் மணிவாசகர்.  
அளவில்லாத சோதி என்பது மட்டுமன்று, அழிவில்லாத சோதியுமாம்! 
“நொந்தா ஒண்சுடரே” என்பார் சுந்தரர். “தொடர்ந்திலங்கு சோதி நீ!” என்பார் சம்பந்தப் பெருமான். மேலும், “சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஓர் சோதியாய்” என்றார். இறைவனுக்குப் ‘பரஞ்சோதி’ (மேலான சோதி)  என்றே சிறப்பான திருநாமமும் உண்டு. சிவலிங்கத்தை சோதி வடிவமாகவே காண்பர் சிவ ஞானிகள். சிவலிங்கமும் அருவுருவே, சோதியும் அருவுருவே. 
உலகில் நாம் காணுகின்ற சோதி குற்றம்(மாசு) உடையதாக ,இருக்கலாம். ஆனால் இந்த சோதி-மாசிலாத மணி விளக்காம்! 
“மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச் சுடரே” –திருவாசகம். 
‘சுடர்’ என்ற பெயர் -அது சுடுதலாகிய குணத்தை உடையதால் உண்டாகிய பெயர். நாம் காணும் விளக்குகள்- தொட்டால் சுடும். ஆனால் இந்த இறைவனாகிய சுடரோ- குளிர்ச்சியாக இருக்கிறதாம்! ‘மலர்ச் சுடரே’ என்கிறார் மணிவாசகர்! 
“தீ மேவும் உருவா, திருவேகம்பா!” என்பார் அப்பர் பெருமான். திருமேனி முழுக்க தீ, அலகில் சோதி –ஆனால் திருவடி மட்டும் ‘மலர் சிலம்படி’ என்கிறார் சேக்கிழார் பெருமான். 
உலகில் காணப்படும் நெருப்பு சுடுதலாகிய கெடுதலை மட்டுமே செய்யும். ஆனால் இறைவனாகிய நெருப்பு - அடியார்களுக்குப் புனலினும் குளிர்ச்சியாகவும், அல்லாதார்க்குத் தீயினும் வெம்மையாகவும் இருக்கும்   என்பார் திருமூலர். 
“தீயினும் வெய்யன், புனலினும் தண்ணியன்”, என்பார். 
சுண்ணாம்புக் காளவாய் நெருப்பு அப்பர் பெருமானுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் சமணர்கள் வைத்த நெருப்பு அடியார்களை ஒன்றும் செய்யவில்லை. ஆனால், ”பையவே சென்று பாண்டியற்கு ஆகவே” என்று சம்பந்தப் பெருமான் திருப்பி அனுப்பிய நெருப்பு பாண்டியற்கு வெப்பு நோயாகச் சென்று  தகித்தது.

மலர் சிலம்படி

இறைவனுடைய திருவடிகள் இரண்டும் மலர்ந்த, மலர்கின்ற, மலரும் திருவடிகளாக விளங்குகின்றன. நாட்டிய இலக்கணத்திற்கேற்ற சிலம்பை அணிந்த சேவடிகளாகவும் திகழுகின்றன. 
திருமேனி முழுவதும் தீ வண்ணமாகத் திகழத் திருவடி மட்டும் மலர் போன்று குளிர்ந்திருக்கிறது. காரணம் அடியார்களுக்கு அடைக்கலமாக இருப்பவை அத்திருவடிகளே!  
இத்திருவடிகளாகிய மலர்களை வேதங்களாகிய வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கின்றனவாம். இந்த அழகிய மலர்கள் அடியார்களுடைய சிந்தையிலே செந்தாமரைப் பூக்களாக மலர்ந்த மலர்களாம்! 
“மன்பெரும் திரு மாமறை வண்டு சூழ்ந்து 
அன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரை” என்பார் சேக்கிழார். (பெ.பு.337) 
மலர்-கண்களுக்கு விருந்து, சிலம்பொலி செவிகளுக்கு விருந்து. 
மலர்- அழகிய ஒளியை உடையது, சிலம்பு- இனிய ஒலியை  உடையது. 
மலர்- மென்மை தன்மை உடையது, சிலம்பு= வண்மைத் தன்மை உடையது. சிலம்பை வீரக்கழல் எனவும் குறிப்பிடுவர். 
“மலர் சிலம்படி” என்பதையே மற்றோர் இடத்தில் “பூங்கழல்” என்று குறிப்பிடுவார் சேக்கிழார். (பெ.பு.351) 
இரண்டு திருவடிகளில் ஒன்று உயிர்களுக்குப் பந்தமாகிய பிறப்பைத் தருகிறது, மற்றொன்று வீடாகிய முத்தியை அளிக்கிறது. 
“பந்தம் வீடு தரும் பரமன் கழல்” என்பார் சேக்கிழார். (பெ.பு.3௦௦)

ஒன்று ஊன்றிய திருவடி. உயிர்களைப் பந்தத்தில் ஆழ்த்துகிறது. மற்றொன்று தூக்கிய திருவடி, உயிர்களைப் பந்தத்திலிருந்து மீட்டு முத்தியைத் தருகிறது.
வாழ்த்தி வணங்குவாம்
உலகெலாம் உணர்தற்கு அரியவனும் ஓதற்கு அரியவனும் ஆகிய பெருமானின் மலரடிகளை வாழ்த்தி வணங்குவாம். வாழ்த்துதல் என்பது வாயின் தொழில் (வாக்கின் பணி). 
“வாயே வாழ்த்து கண்டாய்” என்றும் “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை....” என்றும் அப்பர் பெருமான் பாடுவார். வாயின் தொழில்கள் இரண்டு. ஒன்று உணவுண்பது. மற்றொன்று பேசுவது. இந்த இரண்டாவது தொழில் மனிதப் பிறவிகளுக்கு மட்டுமே கிடைத்த அரியதொரு வாய்ப்பு. இறைவனை வாழ்த்துவதற்கும் வேதங்களை ஓதுவதற்கும் இசையோடு பாடி பரவுதற்கும் என்றே  நமக்கு இவ்வாய்ப்பினைத் தந்துள்ளான் இறைவன். 
“பேசுவதும் திருவாயால்-மறைபோலும் காணேடி“ என்பார் மணிவாசகர். 
வணங்குதலாவது உடலின் தொழில். இதுவும் மனிதப் பிறவிகளுக்கு மட்டுமே கிடைத்த அரியதொரு வாய்ப்பாகும். 
ஆக மனம், வாக்கு, உடல்  என்னும் முக்கரணங்களில் வாக்கு, உடல் ஆகிய இரண்டின் செய்கைகளைக் கூறுவதால் மனத்தின் செய்கையும்  இதில் உள்ளடங்கி இருப்பதை நாம் உணரலாம்.  
பொதுவாக நம்மைவிட வயதில் பெரியவர்கள் நம்மை வாழ்த்த வேண்டும். நாம் அவர்களை வணங்கவேண்டும். இதுதான் உலகியல் நியதி. இறைவனோ எல்லாரையும் விட மிகமிகப் பெரியவன். அவனை நாயினும் கடைப்பட்ட நாம் வாழ்த்துவதா?  என்றால் இந்த உலகியல் வாழ்த்து – ஆசீர்வாதம்   எனப் பொருள்படும். ஆனால் இறைவனை வாழ்த்துவதாவது ஏத்திப் புகழ்வது என்று பொருள்படும். 
அவ்வாறு இறைவனை நாம் வாழ்த்துவதால் நம்முடைய வாழ்வு வளம்பெறும். “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மிகவேண்டி” என்பார் மணிவாசகர்.

சேக்கிழார் பெருமானின் சிந்தனைகள் !
http://www.dheivasekkizhar.com/periyapurnamsinthanaigal/ulagelam.html