Monday, 15 April 2013

PB ஸ்ரீநிவாஸ் பாடல்களுள் எனக்குப் பிடித்தவை...

பி பி சீனிவாஸின் பாடல்களை வானொலி,தொலைக்காட்சி என மட்டும் இல்லாமல் கம்பியூட்டரிலும்  அவ்வப்போது ரசிப்பவன் நான்....

நிலவே என்னிடம் நெருங்காதே...
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. (நிலவே)
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
(நிலவே)

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
(நிலவே)
அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...


என அவர் பாட அந்த குரலின் இனிமையில் மயங்கி செய்வதை நிறுத்தி அப்பாடலை முழுமையுமாக கேட்டு விட்டுத் தொடர்ந்த நாட்கள் பல.

அவர் குரலில் எனக்குப் பிடித்த எல்லாப் பாடல்களும் சீடிக்களில் நிறையவே என்னிடம் உண்டு. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பல பாடல்களுக்குச் சொந்தக்காரர் அவர். அதுமட்டுமல்ல வளரும் காலம் தொட்டு இப்போது வரை காலத்துக்கேற்ப பல பாடல்கள் அவர் குரலில் எனக்குப் பிடிக்கும்.
வயோதிகத்தில் மற்ற பாடகர்கள் போலில்லாமல் தலையில் தலைப்பகையின் கம்பீரம் கலந்த மிடுக்குடன் பல பொது நிகழ்ச்சிகளில் தோன்றியவர் பி பி சீனிவாஸ் அவர்கள். மற்றவர் வெறும் கையை வீசி வரும் அதே நேரம் தன்னுடன் ஒரு புத்தகத்தையும் பல பேனாக்களையும் கொண்டு வந்து நிகழ்ச்சியின் இடை இடையே பல கவிதைகள் எழுதி எல்லோரையும் அசத்தியவர் இந்த அற்புதக் கலைஞர்.

 நேரிடையாக பார்க்க கிடைக்காவிட்டாலும் தொலைகாட்சியில் அவர் தோன்றிய போதெல்லாம் அப்படி ஒரு சந்தோசத்தில் அவரின் பாடல்களை மனதில் அசைபோட்டதுண்டு.
'சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா... '
என்ன அழகான பாடல் அவர் குரலில்.

அவர் பாடிய பாடல்களில் பலருக்கும் பிடித்த பாடல்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்....

கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர
மருந்தொண்ட்று சொல்லம்மா


உன்னழகை கண்டு கொண்டால்
பெண்களுக்கெ ஆசை வரும்
பெண்களுக்கெ ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வென்

அஹா ஒடிவது போல் இடை இருக்கும்
இருக்கட்டுமே ஹொய்
அது ஒய்யார நடை நடக்கும்
நடக்கட்டுமே


நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே


மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு வாடியது இன்று...


நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது

மற்றும்,

நேற்றுவரை நீ யாரோ 
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
 ஒரே கேள்வி ஒரே கேள்வி

பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்
பால் வண்ணம் பருவம் கண்டு

பாட்டெழுதட்டும் பருவம்
போக போக தெரியும்

பொன் ஒன்று கண்டேன்
போன்னும் பொருளும் பெரிசல்ல

ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்
ரோஜா மலரே ராஜ குமாரி

சந்திப்போமா இன்று சந்திப்போமா
தாமரைக் கன்னங்கள்

தோள் கண்டேன் தோளே கண்டேன்
உன்னழகை கண்டு கொண்டால்

உங்கள் பொன்னான கைகள்
வாழ்ந்து பார்க்க வேண்டும்

வீசு தென்றலே வீசு
யார் சிரித்தால் என்ன

யார் யார் யார் அவள் யாரோ
எல்லாம் நாடக மேடை

ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்...

போன்ற எண்ணற்ற இனிமையான படைப்புகளை மெய்மறக்க பாடிச்சென்றவர் .... பி பி சீனிவாஸ் அவர்கள்...

இவை மட்டுமா,
காதல் தோல்வியின் சோகத்தை இதயத்தை தொடும் விதம் சொன்னார் இந்த பாடலில்..
" கதையை கேட்டதும் மறந்துவிடு
கண்ணீர் வந்தால்  துடைத்துவிடு
கதையை கேட்டதும் மறந்துவிடு...."

காதலி காதலிப்பதாக சொல்ல, 'அது ஞாயமா என சிந்தித்து சொல்' என பண்புடன் சொன்னவர்.
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன....காதல்...

பலரின் துண்பங்களின் போதும் ஓடிவந்து உதவியது இவரது பாடல்களே...." கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு"
என செய்யாத தவறுகளில் சிக்கியோருக்கு ஆறுதலும்,
'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...'
என தியாகத்தின் தன்மையையும் உணர்த்தினார்....

மேலும் சில பாடல்கள்:

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையைஅவள் பார்த்திருந்தாள்

காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊர் அறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும்

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவர் என்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறி விடும்
இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்


அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா... பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை...


வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா - வளர்ந்த

குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?


நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)


ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? (2)


கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு


பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
காணாத கண்களை காணவந்தாள்...
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
பெண்ப்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்...(2)

ஆண்: ரோஜா மலரே ராஜக்குமாரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா வருவதும் சரிதானா
உறவும் முறைதானா

பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே
காதல் சமமன்றோ பேதம் இல்லையன்றோ
காதல் நிலையன்றோ
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ
என்றும் நிலையென்றோ


பி.பி.சீனிவாஸ் மறைந்தார்...

 நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.சீனிவாஸ் நேற்று சென்னையில் மாரடைப்பினால் காலமானார்.  இவர்  தமிழ்த் திரை உலகின் புகழ் பெற்ற பல பாடல்களைப் பாடி நம்மை உள்ளம் குளிரச் செய்தவர்.

அவரின் மானுடப் பயணம் நேற்றுடன் முடிவுற்றது. காலமெனும் பெருவெள்ளத்தில் அவர் கலந்து விட்டார்.


தனது இருபதாவது வயதில் ஜாதகம் என்ற திரைப்படத்தில்  முதன் முதலில்  பாடினார். தொடர்ந்த பல வருடங்களில் தன்னுடைய இனிமையான குரலினால் தனது ரசிகர்களை மகிழ்சியடையச் செய்தார்.

இவரின் குரலில் வெளிவந்த பல பாடல்கள் இன்றும் டப் டென் வரிசையில் பலரின் விருப்பப் பாடல்களாக  நீங்கா புகழ் பெற்று ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

மயக்கமா கலக்கமா என நம்மை தட்டிக்கொடுத்தவர்....
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என நம்மை உணரவைத்தவர்...
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா என நம்மை சிந்திக்க வைத்தவர்....

அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் உலகிற்கே இவரது இழப்பு பெரும் சோகத்தை தந்து விட்டது இன்று. "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா" என்ற பாடலை நினைக்காதவர் இல்லை எனும் அளவு மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக அது விளங்குகிறது.
20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள இவர்  பிரபல பின்னணி பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பால முரளி கிருஷ்ணா போன்ற பாடகர்களின் வரிசையில் ஒருவராக பல வருட காலம் புகழின் உச்சியில் இருந்தவர்.

கடந்த சில வருடங்கள் வரை இவர் பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்ததை தொலைகாட்சியில் பார்த்து வந்திருக்கிறோம். 83 வயதில் நம்மை விட்டுச் சென்ற இவரின் பாடல்கள் என்றென்றும் நம்முடைய நினைவில் நிலைத்திருக்கும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

பி.பி.சிரினிவாஸ் உடலுக்கு எஸ்.ஜானகி அம்மா மலர் மாலை சாற்றி மரியாதை செய்த போது....

சந்தேகங்கள், வலைத்தளங்கள்.... நான் 2

பலரும்  சொல்வது " என்ன கொண்டு வந்தோம் இனி கொண்டு செல்ல' என்பது...
வேதாந்திகள் மற்றும் சொல்வேந்தர்கள் மட்டுமல்ல தமிழ்த்திரையிலும் இதே வசனங்கள் தாம் நாம் அடிக்கடி கேட்ட ஒன்றாக இருந்துவருகின்றன.

என்ன கொண்டுவந்தோம்.......என்ன கொண்டு செல்ல போகிறோம்???

ஆனால் உண்மையில் நாம் 'பல மூட்டைகளைக்  கொண்டு வந்திருக்கிறோம் நாம் பிறக்கையில்' என்பதை ஏனோ இந்தக் கேள்வியின் பதிலாக யாரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லக் காணோம்.
அப்படி அங்கும் இங்குமாக யாராவது சொல்லியிருப்பதும் வெகுச் சாதாரண ஒன்றாகவே ஒரு காதில் புகுந்து மறு காதில் வெளியாகி இருக்கின்றது.

அதுமட்டுமின்றி இந்தக் கேள்விக்கான  பதிலின் தாக்கத்துக்கு உள்ளாகி நேர்வழியில் சென்றோர் என குறிப்பிட்டுச் சொல்லும் படியிலான எண்ணிக்கையில் மக்கள் இல்லை.

ஒருவேளை, பலரும் பேசிட ஒரு சிலராவது அது பற்றி  சிந்திக்கத் தொடங்குவார்களோ... ?

எனது பங்குக்கு இங்கே அதைத் தருகிறேன். இயன்றவரை தவற்றினை நீக்கி, சீரிய சிந்தனையில் நமக்கும் பிறருக்கும் நன்மைகள் தரும் செயல்களில் ஆர்வம் கொள்வோம் இனி.

சில வேதாந்த நிஜங்களை தெரிந்து கொள்வோமா?

நாம் பிறக்கும் போது நம்மோடு வந்தவை நமது முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணிய மூட்டைகள். அதே போல நமது மரணத்திற்குப் பின்னும் நாம் கொண்டு செல்லவிருப்பது இது போன்ற பல மூட்டைகளைத்தான்...

நமக்கும் பிறருக்கும் தெரியாத மூட்டைகள் இவை. மற்றவரால் கவர்ந்து சென்று பயன் பெறவும் முடியாது, அதை அவர்கள் தெரிந்து கொண்டு நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ எதுவும் செய்யவும் முடியாது.   இந்த மூட்டைகளை நாமே முற்பிறவிகளில் தீர்மானித்திருக்கிறோம். நமக்கு மட்டும் நன்மை தீமைகளின் பலன்களைத் தர வல்ல இம்மூட்டைகளுக்கு நாமே முழுப்பொறுப்பு.

மகாமாயை எனும் நுண்ணிய திரைச் சீலையால்  மறைந்திருந்து நாம் பிறந்தவுடன் பல ஜென்மங்களில் நாம் பெற்ற பாவ புண்ணிய பலன்களை நாம் அடையச் செய்கின்ற  இதற்கு, " சஞ்சித கர்மா" எனப் பெயர்.

 நமது ஆயுட் காலம் முழுவதுமாக நின்று நிதானித்து இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நாம் அனுபவிக்கிறோம். பல ஜென்மங்களில் சேர்த்து வைத்து, அடுத்தடுத்த ஜென்மங்களில் இந்த மூட்டைகளில் இருந்த பாவ புண்ணியங்களை அடைந்து, மீதம் இருப்பவைகளோடு இன்னும் சில மூட்டைகளுடன் இப்பிறவியில் நாம் பிறந்திருக்கிறோம்.

இம்மூட்டைகளில் உள்ள பலன்கள் பிறந்தவுடன் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த ஜென்மத்தில் அப்படி நமக்கு பலன்களைக் கொடுக்கும் 'சஞ்சித  கர்மாவிற்கு "ப்ரார்த்த கர்மா' என்று பெயர். இதில் நல்லவைகளும் தீமைகளும் கலந்தே இருக்கும்.

 "என்னுடைய பிராப்தம் இப்படி ஆகிவிட்டது என முன்னோர்கள் சொன்னதன் உற்பொருள் இதுவே..."

முன்னே நமது ஜென்மங்களில் செய்ததை தவிர்த்து, இப்பிறவியில், இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு, "ஆகாமி கர்மா" எனப் பெயர்.

பிறந்தது முதல் நாம் கொன்டு வந்த பாவ புண்ணிய மூட்டைகள் காலியாகிக் கொண்டுவரும் வேளையில், இப்போது நாம் செய்கின்ற நன்மை தீமைகள் அந்தன் தரத்தின் படி  பாவங்கள் பாவ மூட்டையிலும், புண்ணியங்கள் புண்ணிய  மூட்டையிலும் போய் சேர்ந்துவிடுகின்றன.

 'பெர்ஸ்ட் காம் பெர்ஸ்ட் செர்வ்ட்' அடிப்படையில் பழையனவற்றை அனுபவித்த பின்னரே, இப்போது போய் சேரும் பாவ புண்ணியங்களை நாம் அனுபவிக்க முடியும் .

இதற்கு இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுக்கவேண்டுமோ... அது கொண்டுவந்த மூட்டைகளில் மீதம் இருப்பதையும் இப்போது சேரும் பாவ புண்ணியங்களையும் சேர்த்து வரும் கணக்கின் அடிப்படையில் தான் தெரியும்.

 நாம் இப்போது 'பிரார்த்த கர்மாவின்' பலன்களையே அனுபவித்து வருகிறோம். நாம் செய்யும் நல்ல காரியங்களின் பலன்கள் 'சஞ்சித கர்மாவோடு' சேர்ந்திருப்பதால் அவற்றை அடுத்தடுத்த ஜென்மங்களில்தான் நாம் அனுபவிக்க இயலும்.

சஞ்சித கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் தத்தம் பணிகளைச் செய்யும் போது, இன்று நாம்  செய்யும் கர்மாக்கள் குறுக்கிட்டு ஒன்றும் செய்ய முடியாது.

பக்திகரமாக, பல நல்லனவற்றை நாம் செய்து வரும் போதுகூட நமக்கு எதிர்மறையான பலன்கள் கிடைப்பதும், பல பாவங்களுக்கும் காரணமானோர் நமது கண் முன்னே பிரமாதமாக வாழ்வது போல தோன்றுவதற்கும்  இதுவேதான் காரணம்.  நாம் செய்யும் இப்போதைய எதுவும் உடனே நமக்கு பலனலிக்காது.

நாம் அனுபவிப்பது நமது முந்தைய பூர்வ ஜென்ம கர்மாவின் பலன்களையே.  பல ஜென்மங்களினால் மாசு பட்டிருக்கும் நமது ஜெனம பலன்களை நம்மால் உணரவும், உதறித்தள்ளவும் இயலாது. 

வேத நூல்களில் உள்ளது போல ஞானத்தால் மட்டுமே,
ஞானத்தை அடைந்தவரால் மட்டுமே,
அதில் லயிப்பவரால் மட்டுமே இந்தக் கர்ம வினைப்பயன்களில் இருந்து விடுபட்டு பிறவியறுக்க முடியும்.

-நம்பகத்தன்மை உள்ள வலைத்தளங்களில் இருந்து எடுத்து தொகுக்கப்படும் வாழ்க்கைக்குத் தேவையான "விதியும் மதியும்" விவாத மேடைக்குச் சில...

Saturday, 13 April 2013

சந்தேகங்கள், வலைத்தளங்கள்... நான்

நண்பர்களுடனான நமது உரையாடலின் போது சுவாரஸ்யமான பல விசயங்கள் வெளிப்படுவதை நாம் உணர்ந்திருப்போம்.

" அது என் தலையெழுத்து.." என்பார் சிலர்.
"எதையும் என்னால் மாற்ற முடியாது, அதுதான் என்னுடைய விதி.." என வேறு சிலர் சொல்வர்.

இப்படி இவர்கள் சொல்வதில் ஏதும் உண்மை உண்டாவென பல கேள்விகள், குளத்தில் எறிந்த கல் போல சிற்றலைகளாக சலனத்தை ஏற்படுத்தின.  விடை காண இணையத்தில் மூழ்கினேன் ஒரு நாள்.

மூழ்கும் பொழுதெல்லாம் முத்துக்கள் பல பெற்ற இனிய அனுபவம் எனக்கு இருந்திருக்கின்றது கடந்த ஆண்டுகளில்.
'இன்றைய சந்தேகங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ... என்பதே என் அப்போதைய மன நிலை.

கையில் புத்தகங்களை அணைத்தபடி, அவற்றின் ஸ்பரிஸத்தில்  குளிர்ந்து, புத்தகப்புழுவாக இருந்த   நான் இப்போது வலைத்தளங்களில் எனக்கெழும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நுழைவது, நின்று நிதானமாக நினைத்துப்பார்க்கும் போது என்னுள் புத்தம் புதிய  ராகங்கள்  தாமே  இசையமைக்கின்றது போல் ஒரு இனிமையான நினைவு.

அறிவியல் வளர்ச்சியின் பயனை நானும் பெறுகிறேன் என்பதே  மிகப்பெரிய மகிழ்ச்சியாகும்....

பதினைந்து வருடங்களுக்கு முன் வாழ்க்கையில் மறைந்தவர் யாருக்கும் இந்த முன்னேற்றம் தெரியாமலே போயிருக்கும். அதே போன்று நூறு வருடங்களுக்கு முன்பிருந்தோர் காகிதத்தையும் அச்சு இயந்திரங்களையும் கூட கண்டிருக்க மாட்டார்கள். ஆக இன்றைய உலகில் வாழ்வோர்  நாளைய வளர்ச்சியைக் காண கொடுத்துவைத்தவர்களே.

இந்த விஞ்ஞான வளர்ச்சியில் தகவல் பரிமாற்றத்தின் எல்லையில்லா வளங்களை  அள்ளிப் பருகும் அபரிமிதமான சந்தர்ப்பங்கள் நமக்குக் கிட்டுகின்றன இப்போது. 

இதில் நமக்கெழும் சந்தேகங்களுக்கு மட்டும் விடையில்லாது போகுமா....

ஆயினும், 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' எனும் மனப்பாங்கில்தான் வலைத்தளங்களில் இருப்பனவற்றை நாம் எதிர்கொள்ளவேண்டும். நூறு சதம் நல்லதுமில்லை தீயதுமில்லை.

தலைவலி, தலையெழுத்து என்றோ, ஊழ்வினைப் பயன் என்றோ நாம் சொல்வதன் நிஜங்களை 'நாம் தெரிந்து கொண்டுதான் பேசுகிறோமா அல்லது மற்றவர் சொல்லக்கேட்டு அதை அப்படியே ஒப்பிக்கிறோமா ...' எனும் மிகப்பெரிய கேள்வி பலருக்கும் தோன்றலாம். காரணம் சாதாரணமாக நாம் பேசிக்கொள்ளும் அனைத்தும் சமய நூல்களில் காணக் கிடைக்கும் அரிய கருத்துக்களாகும்.

அன்றைய காலந்தொட்டு இன்றுவரை பலருடனும் இந்த உண்மைகளை  நாம்  பகிர்ந்துகொண்டுதான் வந்திருக்கிறோம்.
அதே நேரம் , வாழ்க்கை நெறிக்கு அப்பாற்பட்ட பலவற்றை நாம் புறக்கணித்திருக்கிறோம்.... புறந்தள்ளியிருக்கிறோம். 

நம் மத நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துக்கள் சற்றே கரடு முரடாக இருந்தாலும், அவை நம் வாழ்வில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் நம் நலன் கருதி மெல்லமெல்ல ஏற்றுக்கொண்டு அதன்படியே வாழ்ந்து வந்திருக்கிறோம்.

இன்றைய நவீன உலகின் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள் புதிது, பார்க்கும் கோணங்கள் புதிது.
ஆயினும் எங்கிருந்து எப்படிப் பார்த்தாலும்  நம் வாழ்க்கை என்றென்றுமே சமைய அடிப்படை சாராம்சங்களை பிரதிபலிக்கின்ற ஒரே மாதிரியான வழ்க்கையாகவே இருந்து வந்திருக்கின்றது.

பழைய பிரச்சாரங்களை அப்படியே சொன்னால் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பன்மை மக்களிடையே இப்போது இல்லை. காப்புறுதி அட்டை விற்பனையில் பலரை சந்திக்கும் அனுபவத்தில் இருந்து இவற்றைச் சொல்கிறேன். எதையும் இன்றைய தலமுறையினருக்குச் சொல்லப்பட்டதைப்போல் அவர்களை முன்னிலைப்படுத்திச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள பலரும் தயாராக உள்ளார்கள்.

இந்த அரும் பெரும் கடப்பாடு , தன்முனைப்புத்தூண்டல் நிபுணர்களுக்கும், சமூக சமைய நெறிநிலை அறங்காவலர்களுக்கும்  நிறையவே உண்டு. புதுப் புது முறையில் மக்களுக்கு எழுச்சியினை ஏற்படுத்தி சமூக முன்னேற்றத்திற்கு அவர்களை தயார் செய்யும் தகுதியின் அடிப்படையிலான தார்மீகப் பொறுப்பு அவர்களுடையதே.

Friday, 12 April 2013

சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2013 . . .

உலக செஸ் சாம்பியன்ஷிப் இவ்வருட நவம்பர் 6ல் துவங்கி 256 வரை சென்னையில் நடைபெறும் என தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது சதுரங்கத்தில் தமிழர்களின் ஆர்வத்தையும் நமது பூர்வாங்க ஆதிக்கத்தையும்  காட்டுகிறது.

2013ம் ஆண்டின் போட்டியாளர்கள்...

ஆண்டு தோறும் நடைபெறும் இவ்விளையாட்டு போட்டியினை முதன் முதலாக தமிழ் நாடு ஏற்று நடத்துகிறது. தமிழக அரசு 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் சட்டமன்றத்தில் அன்மையில் தெரிவித்திருந்தார்...

உண்மையில் கடந்த ஆண்டே தமிழ் நாட்டில் சென்னையில் இது நடத்தப்பட இருந்தது. ஆயினும், ரஷ்யா ஏலத்தில் தமிழ் நாட்டை விட சற்று அதிகமாக கணித்திருந்ததால் அச்சந்தர்ப்பம் அதற்கே கிடைத்தது. 

தமிழ் நாட்டின் நல்லெண்ணத்தை மனதில் கொண்டும், உலகச் சாம்பியன் வி. ஆனந்த் தமிழ் நாட்டைச் சார்ந்தவரானதாலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பதையும் ஏற்று  இவ்வருட அங்கீகாரம் சர்வதேச அளவில் தமிழ் நாட்டை கௌரவ படுத்தும் வகையில் உலக செஸ் கூட்டமைப்பு (எப்.ஐ.டி.இ.,) சென்னைக்கு வழங்கி இருக்கிறது.

ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் 44 வயதுடைய நமது விஸ்வநாதன் ஆனந்த் ஆவார். அவரை எதிர்த்து போட்டியிட இருப்பவர்...
இளம் வயதில் தனது பிரமிக்கத்தக்கத் திறமையினால் உலகினரின் கவனத்தைக் கவர்ந்திருக்கும்  நார்வேயின் 22 வயது மேக்னஸ் கார்ல்சன். 2012-ல் ரஷ்யாவில் நடந்த இத்தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

"விஸ்வநாதன் ஆனந்த் மற்றும்  மேக்னஸ் கார்ல்சன்"

மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிபார்க்கப் படும் இவ்விளையாட்டு உலகமுழுவதும் உள்ள பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் செஸ் விளையாட்டிற்கு பல தரப்பட்ட நிலையில் ஆதரவு இருந்தாலும் அனைத்துலக ரீதியில் அதன் கௌரவத்தை உயர்த்திப்பிடிப்பவர்கள் ஒரு சிலரே...

ஆக இவ்வாண்டு நடைபெறவிருக்கும் இப்போட்டிகளினால் எப்படிப்பட்ட ஊக்கத்தைத்  இந்தியாவின் சர்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டர்களும் அவர்கள் கீழ் பயிற்சிபெறும் இதர விளையாட்டாளர்களும்  அடைவர் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை...

இவ்வாண்டு இறுதி போட்டியில் விளையாடும் ஆனந்த் நிச்சயம் நல்லதொரு விளையாட்டினை வெளிப்படுத்தி தனது சாம்பியன்ஷிப் பட்டத்தினை தற்காத்துக்கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. வழக்கமாக போட்டி விளையாட்டுகளுக்கு முன் கடும் தவம் போல தினமும் செஸ் பயிற்ச்சிகளில் மூழ்கிவிடுவார் என இவரின் பயிற்சியாளர்களும் குடும்பத்தினரும் சொல்வது நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. ஒரு சிறந்த வெற்றியாளர் பல தியாகங்களினாலும், அர்ப்பணிப்புகளினாலும் தான் தோன்றுகிறார் என்பார்கள். மற்றவர் உறங்கும் போது ஆனந்த் விளையாட்டு யுக்திகளை சிந்தித்துக்கொண்டிருப்பார் என அவர் குடும்பத்தினர் பத்திரிக்கை பேட்டிகளில் குறிப்பிட்டது அவரது கடுமையான தவத்திற்கு ஒரு உதாரணம் என நாம் கொள்ளலாம்.

மற்ற விளையாட்டுக்களைப் போல செஸ் பார்வையாளர்கள் போட்டி அன்று. ஆரவாரம் செய்யும் பெண்களும் ( சியர் லீடர்ஸ் )இப்போட்டியில் இல்லை. இருவர் மட்டுமே கலந்து கொள்ளும் விளையாட்டு இது.  ஒரு குறிப்பிட்ட சிலரின் முன்னரே இப்போட்டி விளையாட்டுகள் நடைபெறுகின்றன.  ஆயினும் நேரடியாக உலக முழுவதும் 'டெக்ஸ்ட்' எனப்படும் செஸ் குறியீடுகளில் இணையதளங்களில் வெளியிடுகின்றனர். இதனால் உலகமெங்கிலும் உள்ள செஸ் பிரியர்கள் இவ்விளையாட்டுக்களை  ஆர்வமுடன் அலசி கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

லைட்னிங் செஸ் என அதி வேகமாக விளையாடுவதும் இப்போது இவ்விளையாட்டின் முன்னோடிகளால் திட்டமிடப்பட்டு மற்றவர்களின் ஆர்வத்தை ஈர்க்க ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றது. அதோடு, ஒரு கிராண்ட் மாஸ்டர் ஒரே நேரத்தில் பத்து பேருடன் விளையாடுவதும் இவ்விளையாட்டுக்கு சக விளையாட்டாளர்களிடையே ஆர்வத்தை உண்டு பண்ணி இருக்கிறது.

இந்த முன்னேற்றங்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கேரி காஸ்பரோவ் எனும் ரஷ்ய விளையாட்டளரின் முற்போக்குச் சிந்தனையில் உதித்த மாற்றங்களாகும். விஸ்வநாதன் ஆனந்த் வெளி உலகுக்கு தெரியும் முன்னர் ரஷ்யாவின் அரசாங்க ஆதரவில் விளையாடிவந்த கர்போவ் போன்ற விளையாட்டளர்களின் பிடியில் இருந்து இப்போட்டிகளை சுவாரஸ்யமானதாக ஆக்கிய பெருமை மற்றொரு ரஷ்யரான  கஸ்பரோவ்வையே சேரும். இவரது பாணியில் செஸ் விளையாட பழகியோரில் நானும் ஒருவன்.

இப்போது இவ்விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பது மன மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தருகிறது.  கிரிக்கெட் போட்டியில் மயங்கிக் கிடக்கும் இந்தியர்களை இம்முடிவு இனி அறிவுக்கு வித்திடும் சதுரங்கம் பக்கம் திரும்பச் செய்யும். ஒரு காயை நகர்த்திவிட்ட பின் வேறு மாற்றங்களைச் செய்ய இயலாது இவ்விளையாட்டில். இதுவே நம் வாழ்வின் அடித்தளம் ஆகும். நாமெடுக்கும் எந்த முடிவும் மாற்றவியலாத சாதக பாதக பலன்களைத் தந்துவிடும் என்பது இதன் கருத்து. சிந்தித்து செயல் படுவதன் அவசியத்தை இவ்விளையாட்டு நமக்கு உணர்த்துகிறது. மனிதர்களின் புட்தி கூர்மையை அளக்கவல்லது சதுரங்க விளையாட்டு என பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது இவ்விளையாட்டு.  இதில் தங்களின் வலிமையை நிலை நிறுத்துவோர் வாழ்வின் ஏனைய அனைத்திலும் திறம்பட இருப்பார்கள் என்று பலருக்கும் அசைக்க முடியா நம்பிக்கை இருக்கிறது.

அது மட்டுமல்லாமல், "சர்வதேச அளவிலான இது போன்ற போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவதன் மூலம் இளைய சமுதாயத்தினர் இடையே சதுரங்க விளையாட்டினை பயில்வதற்கான ஆர்வம் மேலும் அதிகரிப்பதோடு, பல சதுரங்க விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் வழிவகுக்கும்" என்பதனை முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

உலகின் பார்வை சுமார் இருபது நாட்களுக்கு சென்னையின் மேல் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும். . .

அதிர்ச்சியூட்டும் பல கொந்தளிப்புக்களுக்கிடையே சுழன்றுகொண்டிருக்கும் இவ்வுலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறுக்கத்தின் கரங்களில் நாம் பாடாய்ப் படுகிறோம்.

அதில் இருந்து வெளிப்பட நல்ல இசை நமக்கு பேருதவி செய்கின்றது. ஒரு சில நிமிடங்களானாலும் மனதை இலகுவாக்கும் தன்மை இசைக்கு மட்டுமே உண்டு.

இன்றைய ஸ்பெஷல்...
மனிதன் மாறவில்லை திரையில் இருந்து.
" குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்
கோகுலக் கண்ணனின் முகமெங்கும்
குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்


குறு குறு பார்வை கோபம் கொண்டாலும்
குறு குறு பார்வை கோபம் கொண்டாலும்
குறு நகை இதழினில் விளையாடும்

குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்

இரவினில் வெண்ணையை திருடிடும் வேளையில்
இரு கால் சலங்கை கல கல கலவெனும்
இரவினில் வெண்ணையை திருடிடும் வேளையில்
இரு கால் சலங்கை கல கல கலவெனும்
அன்னை காதில் அந்த இன்னிசை கேட்பாள்
அன்னை காதில் அந்த இன்னிசை கேட்பாள்
அடிப்பாள் துடிப்பான் உடனே சிரிப்பான்

குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்
கோகுலக் கண்ணனின் முகமெங்கும்


புல்லாங்குழலின் இன்னிசை கேட்டு
பொன்னிற கோபியர் அருகினில் வருவார்
புல்லாங்குழலின் இன்னிசை கேட்டு
பொன்னிற கோபியர் அருகினில் வருவார்
கண் படும் என்றே அன்னை யசோதா
கண் படும் என்றே அன்னை யசோதா
கண்ணா வாவென்று தன் புறம் மறைப்பாள்

குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்
கோகுலக் கண்ணனின் முகமெங்கும்
குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்"

Thursday, 11 April 2013

சிலரை பலகாலம் ...

சிலரை பலகாலம் ஏமாற்றலாம்...
பலரை சில காலம் ஏமாற்றலாம்...
எல்லோரையும் எல்லா காலமும்
ஏமாற்ற முடியாது...

பொய்த்துப் போகும் பல பிரச்சினைகளுக்கு நிதர்சனமான உண்மை இதுதான்.

தற்போதைய கணினி யுகத்தில்  'மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூடக்கருத்துகளுக்கு இனி நாம் செவி சாய்க்கக்கூடாது' என  தீர்க்கமான முடிவெடுத்து அதனில் இருந்து மாறாமல் நம் நிலையை உறுதிப்படுத்துவதே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற நாம் எடுக்கும் மிகப் பெரிய திட்டமாகும்.

பக்தி என்பது அறிவியல் சார்ந்ததாக, விஞ்ஞான பூர்வமான உண்மைகளின் தொகுப்பாக, பல ஞானிகளால் விளக்கங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில் 'பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு உள்ளதா' எனும் கேள்விக்கு நாம் பதிலளிக்கத் தெரியாமல் திணரக் கூடாது.

மற்றவர்கள் மூலம் பெறப்படுகின்ற எந்தக் கருத்தானாலும், அது நம் அறிவின் ஆற்றல் கொண்டு அளவிடப்பட்டு, மெய்யானதா என தர நிர்ணயம் செய்யப்பட்டு, எண்ணத்திற்கும், எழுத்திற்கும், செயலுக்கும் உள்ள  உள் நோக்கம்  அறிந்து, விழிப்புணர்வுடன்  நடந்து கொள்வதே 'நாம் உயர்ந்தோர்' எனும் சிந்தனைச் செல்வத்திற்கு வித்திடும் வேத மந்திரமாகும்.

இதில் உறுதியுடன்  இருக்கும்  யாரையும் எக்காலத்திலும் யாராலும் ஏமாற்றிட முடியவே முடியாது....